எப்போதும் தெளிவாய் யோசிக்கும் லாவண்யாவிற்கே அவர் எங்கே வருகிறார் என்று புரியவில்லை.
“என்ன சொல்றீங்க நர்மதா?…” என்றார் குழப்பத்துடன்.
“ருதி இன்னும் அந்த பையனை நினைக்கிறது எனக்கு தெரியும்…” என்றார் வெகு இலகுவாய்.
“என்ன? தெரிஞ்சுமா? தெரிஞ்சும் எப்படி நீங்க அமைதியா இருக்கீங்க? அதுவுமில்லாம மன்னிப்பு கேட்ட ஹரிகிட்டையும் அப்படி பேசிட்டு என்னங்க, என்னங்க இது?…” என்றார் ஆதங்கத்துடன்.
“மன்னிப்பு கேட்டுட்டா போதுமா? அடுத்து என்னன்னு யோசிக்கவே இல்லையே அந்த பையன். நான் சொன்னதை டிஃபென் பண்ணி பேசவே இல்லையே? குற்றவுணர்ச்சில தயங்கி விலகி நிக்கிறது எந்தவகையில ஏத்துக்க முடியும்?…” என்றார் நர்மதா இப்போது தீவிரமாக.
“நர்மதா…”
“நான் பேசுவேன். இதுக்கு மேலையும் பேசுவேன். தப்பு நடந்திருச்சு. அதையே சொல்லி காண்பிக்க கூடாது தான். ஆனா இனிமே நடக்காதுன்னு அவரும் எதுவும் சொல்லலையே? அந்த நம்பிக்கையை ஏன் தரலை?…” என்றார்.
லாவண்யாவிற்கு இவர் சம்மதம் என்கிறாரா இல்லை முடியாது என்கிறாரா என்கின்ற குழப்பம் வலுத்தது.
“இதை நான் ஹரிக்காக மட்டும் சொல்லலை. ருதிக்காகவும் தான் சொல்றேன். இத்தனை பிரச்சனைக்கும் மேல அவங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கன்னா அது அவங்களோட சொந்த முடிவா தான் இருக்கனும். அதை தான் நான் எதிர்பார்க்கறேன்…” என்றவர்,
“நான் சொல்லி மன்னிச்சு சரின்னு சம்மதம் சொன்ன பின்னாடி கல்யாணம் பண்ணிக்கிறதுன்றது எனக்கு பின்னாடி ஒளிஞ்சுக்கறது இல்லையா?…” என்றார்.
“என்ன எதிர்பார்க்கறீங்க நீங்க?…” என்று லாவண்யா கேட்க,
“இது என்னோட எதிர்பார்ப்பு எல்லாம் இல்லை. என் பொண்ணு அவளோட வாழ்க்கையை சுயமா தேர்ந்தெடுக்கனும்ன்னு சொல்றேன். அவ விருப்பம் என் விருப்பமா இருந்தாலும் அதெல்லாம் எதிர்கால வாழ்க்கைக்கு எப்படி ஒத்துவரும்?…”
“என் பொண்ணு அங்க வாழ போகும்போது எல்லாத்தையுமே எதிர்கொள்ளனும். ஒரு கசப்பான அனுபவத்துக்கு பின்னாடி திரும்பவும் அந்த வாழ்க்கை தான் வேணும்ன்னு தேர்ந்தெடுக்கறதா இருந்தா அவ முதல்ல தெளிவா இருக்கனும்….”
“ஏனா அங்க வாழறதுன்னா எல்லாத்தையுமே சகிக்கனும். எதையுமே சமாளிக்கனும். அந்த திடம் இருக்கனும். அதுக்கு வெறும் காதல் மட்டும் போதுமா? அவளால முடியனும். இல்லைன்னா சும்மா சரின்னு சொல்லி நானும் என் பொண்ணு, பாசம்ன்னு கண்ணை மூடி இதை சரின்னு சொன்னா கஷ்டப்படப்போறது அவங்க ரெண்டுபேர் மட்டுமில்லை. எல்லாருமே தான்….”
“அதான் அவங்க எல்லாம் கடந்து எதையும் பார்த்துப்போம்ன்னு ஒண்ணா முடிவுக்கு வரட்டும். அந்த ஸ்டபர்ன் இல்லைன்னா காதலை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது. வாழ்க்கையோட அஸ்திவாரமே ஆட்டம் கண்டுட்ட மாதிரி தான்….”
“என் வாழ்க்கை எனக்கு நிறையவே அனுபவத்தையும், பாடத்தையும் கத்து கொடுத்திருக்கு. வீட்டுல சொல்லிட்டாங்கன்னு கண்மூடித்தனமா ஒரு விஷயத்தை நம்பின ஹரியும், தன் அண்ணன் தானேன்னு எங்களை யோசிக்காம விட்டுகொடுத்து எங்களை விட்டுட்டு போன என் புருஷனும் ஒன்னு தான்னு நினைச்சேன்…”
“சாகும்போது சொல்லிட்டு போனார். நீ நம்ம பொண்ணுங்களை நல்லா பார்த்துப்பன்னு நம்பிக்கை இருக்குன்னு. அதுக்கு எதுக்கு கல்யாணம்? அத்தனை வருஷ வாழ்க்கை? பரஸ்பர புரிதல்? எல்லாமே பொய்யா போச்சு. என்னோட வாழ்க்கை மாதிரி என் பொண்ணும் நின்னுட கூடாது இல்லையா?…”
“என்னையுமே அவ நம்ப வேண்டாம். மாரல் சப்போர்ட்டா இருக்கறது வேற. இது முழுக்க முழுக்க அவங்க மட்டுமே எடுக்க கூடிய முடிவு. என் பொண்ணே இரு மனசா இருக்கும்போது இதுல நான் என்ன சொல்லமுடியும்? அதுவுமும் அன்னைக்கு ஹரி அப்படி கிளம்பி போனதுக்கு பின்னாடியும்?…”
“நான் நினைச்சிட்டே இருக்கேன். மனசால வாழ்ந்துட்டு இருக்கன்னு இருக்கேன்னா அப்படி மட்டும் தான் இருக்க முடியும். அவங்கவங்க வாழ்க்கைக்கு அடுத்தவங்க எட்டு எடுத்து வைக்க முடியாது. தானா உணர்ந்து வரனும்…” என்றார் நர்மதா.
இது இனி ஹரித்திரன், தீக்ஷா கையில் மட்டுமே என்று. அவர்கள் இருவரும் தான் அடுத்தகட்டத்திற்கு செல்லவேண்டும் என யோசித்தார்.
“ஆனா எனக்கு ஒன்னு தோணுது நர்மதா. ருதி அவங்கப்பாவோட இறப்புக்கும், இப்ப இருக்கற சூழ்நிலைக்கும் காரணம்னு ஹரியை நினைச்சு ஒதுக்கினா?…” என்றார்.
“இதை தான் சொல்றேன், அவ தெளிஞ்சு வரனும்ன்னு. என்னோட சம்மத்தத்துல என் பொண்ணும் சம்மதிச்சு பின்னாடி கல்யாணமானதும் ஒவ்வொரு பிரச்சனையிலையும், பூசல்லையும் இந்த காரணம் அவங்களுக்குள்ள இருக்கிற காதலை கொன்னுடும். அதுக்கப்பறம் வாழறது வாழ்க்கையா?…” என்ற நர்மதா,
“எதையுமே பிரிச்சு பார்க்க தெரியனும் என் பொண்ணுக்கு. அவளுமே இப்ப ரொம்ப மனசு நொந்து தான் இருக்கா. அவளே சரியாகி வரட்டும்…” என கூறியவர்,
“இந்த விஷயம்…” என்றதும்,
“கண்டிப்பா யாருக்கும் சொல்ல போறதில்லை. நான் இன்னைக்கு அவங்க ரெண்டுபேரும் சேர்ந்தா போதும்ன்னு நினைச்சு உங்ககிட்ட பேச வந்தேன். ஆனா நீங்க அவங்க சேர்ந்த பின்னாடியான வாழ்க்கை எப்படி இருக்கனும்ன்னு யோசிக்கிறீங்க. கிரேட்…” என்றார் லாவண்யா.
“அப்படியெல்லாம் இல்லை. இவங்களால தான் இது நடக்கனும்ன்னு இருக்கற விஷயங்களை மாத்த முடியாது இல்லையா? நடந்திருச்சு. எனக்கு என் பொண்ணோட எதிர்காலம் எப்படி இருக்கும்ன்ற நம்பிக்கை வேணும். ஏனா அவங்க வீட்டுல பேசின பேச்சுக்கள் அப்படி….” என்றார் நர்மதா.
அதனை சொல்லும்பொழுது அவரின் குரல் உடைந்துவிட்டது. கீழுதட்டை கடித்து உணர்வுகளை அடக்க நினைத்தவர் கண்களில் நீர் கொட்ட,
“என்ன நர்மதா? உங்களோட தாட்ஸ் பார்த்து நான் பிரமிச்சு போய் இருக்கேன். நீங்க என்னடான்னா?…” என்று அவரை நெருங்கி கையை பிடிக்க,
“நானும் அம்மா தானுங்க?…” என்கையில் இன்னுமே குரல் தழுதழுத்தது.
“ஒவ்வொரு நாளும் என் பொண்ணு ஆபீஸ் பத்தி பேசறப்போ சிலவிஷயங்களை மறைக்கிறான்னு எனக்கு தெரியும். ஆனாலும் நான் கேட்டுக்கமாட்டேன். அதுவே ருதியோட குற்றவுணர்வை அதிகப்படுத்துது…” என்றவர்,
“எல்லாமே பெருசாகிட்டே வருது. என்னைக்கு அவ வெடிச்சு மொத்த உணர்வையும் கொட்ட போறான்னு பார்க்கனும். அவ வெளிப்படையா பேசின பின்னாடி தான் நான் முடிவுக்கு வர்றது எல்லாம். ஆனா என் பொண்ணுங்க நல்லா இருக்கனும். என் மாதிரியான ஒரு வாழ்க்கை ம்ஹூம்….” என்று தலையசைத்தார்.
“நீங்களாவது சொத்து பிரிக்கும்போது பேசியிருக்கலாமே? அட்லீஸ்ட் உங்க வீட்டுக்காரரை கன்வின்ஸ் பண்ணியிருக்கலாமே?…” என்றார் லாவண்யா மனம் பொறுக்கமுடியாமல்.
“கன்வின்ஸ் பண்ணனுமா? நான் என் பொண்ணுங்களுக்கு அம்மான்னா அவர் அப்பா இல்லையா? ஈஸியா சொல்றார் வச்சுட்டு போன்னு. அதுக்கப்பறம் சண்டை போட்டு அதை நான் கேட்டு? உணர்வால தனக்கு தோணனும். அப்பான்ற இடத்துல அவர் நின்னு பிள்ளைங்களை யோசிச்சிருக்கனும்…” என்றவர்,
“என்ன கிடைச்சது? நல்லபேரா? இல்லையே. சொத்து போச்சு, பஞ்சாலை எரிஞ்சது. நான் எப்படிடா காரணமாவேன்னு கேட்க தோணலையே? சரின்னு போனா எல்லாமே சரியாகிடுமா? வெறுத்து தான் அங்க இருந்து கிளம்பினேன். என்ன வாழ்ந்தோம்ன்ற அளவுக்கு தோணிருச்சு….”
“என் பொண்ணுங்க அப்படி இருக்க கூடாது. அவங்க எதிர்காலம் அப்படி ஆகிட கூடாதுன்னு நினைக்கறேன். பிடிச்சா மட்டும் போதுமா? கல்யாணத்துக்கு பிடிச்சா போதும். அதுக்கப்பறமான வாழ்க்கைக்கு ஒருத்தரை ஒருத்தர் உறுதுணையா இருக்கனுமே?…”
“என் புருஷன் இதென்னடா காசு, வச்சிட்டு போன்னு வீசி எரிஞ்சிருந்தா கூட இவ்வளோ வேதனை இருக்காது எனக்கு. ஏமாளியா இருந்ததுக்கு பேர் விட்டுகுடுக்கறதா? என்ன தான் சொந்தமா இருந்தாலும் அவங்க ஏமாத்த இடம் கொடுத்தாங்களே? அமைதியா போறதுக்கு பேருமே கோழைத்தனம், ஏமாளித்தனம் தான்…”
“இங்க எனக்கு என் வீட்டுக்காரரை மட்டுமே சொல்ல உரிமை இருக்கு. அவருக்கு தோணலை குடும்பம் என்னவாகும்ன்னு. சமயம் பார்த்து தட்டி பறிச்சிக்கிட்டவங்களை குறை சொல்லி என்ன பிரயோஜனம்?…” என்றார்.
“நர்மதா….” என்று லாவண்யா அவரின் தோளில் கை வைத்ததுமே விழிகளில் திரண்டிருந்த நீர் கடகடவென்று உருண்டுவிட்டது.
வார்த்தைகளின்றிய விசும்பலும் அதனை எங்கே வெளியே இருக்கும் மகள் கேட்டுவிடுவாளோ என்னும் அச்சமும்.
“என் பொண்ணுங்களுக்கு நான் நிழலா, துணையா, தைரியமா இருக்கனும்ன்னு மட்டும் தான் நினைக்கறேன். அவங்க ஒருவிஷயம் வேணும்ன்னு சொன்னா உடனே சரின்னு சொல்ல முடியாது. அதுல இருக்கற கஷ்டநஷ்டம், நல்லதுகெட்டது எல்லாம் தான் சொல்லுவேன். அதுக்குமேல அதை தேர்ந்தெடுக்கறதும், கையாளறதும் அவங்களோட தன்னம்பிக்கையில் தான்…” என்றார் கண்ணீரை துடைத்துவிட்டு.
“நர்மதா, எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலை. நீங்க உண்மையிலையே இரும்பு மனுஷி தான்…” என்றார் லாவண்யா.
—————————————————
மருத்துவமனையில் சாய்ந்து அமர்ந்திருந்த சம்ருதிக்ஷாவின் எதிரே மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி பார்த்திருந்தான் ஹரித்திரன்.
“நானே கிளம்பிப்பேன். வினோதாவை வர சொல்லுங்க பாஸ். ப்ளீஸ்…” என்றாள் மீண்டும் பிடிவாதமாக தீக்ஷா.
“நான் வர்றேன். கிளம்பு…” தானும் சொல்லியதையே தான் ஹரித்திரனும் கூற,
“ஆஆ…” என்று ஆவேசத்தை அடக்கமுடியாமல் கத்திவிட்டவள்,
“ஷிட்…” என தலையை பிடித்தாள்.
பார்த்திருந்தவன் மனதினுள் வேதனை சுழல்கள் அவனின் கழுத்தை இறுக்கியது அவளின் நிலை கண்டு.
“சொல்ல சொல்ல கேட்கமாட்டேன்னு ஏன் இப்படி பன்றீங்க? தெரியாம பேசிட்டேன். எரிச்சல், கோபம். கொட்டிட்டேன். அது ஒரு ஆத்திரத்துல. அதுக்காக எல்லாம் நீங்க அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க சொல்லிட்டேன்…”
“அட்வான்டேஜ்?…” என கேள்வியாய் கேட்டவன் நிதானமாய் எழுந்து தீக்ஷாவின் முகத்தினருகே நெருக்கமாய் குனிந்து நின்றான்.
“உனக்கே புரியுமே? நான் சொல்லனுமா என்ன?…” என்ற ஹரித்திரன்,
“உங்கம்மாக்கிட்ட பேச போறேன். உன்னை தான் கல்யாணம் பண்ணுவேன்னு உறுதியா சொல்லுவேன். இனி அவங்க மறுப்பான வார்த்தைக்கு என்கிட்ட பதில் கிடையாது. சொல்லவும் போறதில்லை…”
“வெட்கமாயில்லையா இப்படி பேச? இப்பவுமே நான் சொன்னப்பறம் தான் ஞானோதயம் தோணுது ஸார்க்கு. என்ன?…” என்று சொல்லியவளுக்கு அவன் மேல் ஆத்திரமான ஆத்திரம்.
“நிஜம் தான் தீக்ஷா. தப்பு செஞ்சவங்களோட தப்பை தானா உணராதப்போ யாராச்சும் புத்தில உரைக்கிற மாதிரி சொல்லும்போது உணருவாங்க தானே? அதுமாதிரி தான். நான் ஒன்னு நினைச்சு விலகினேன். ஆனா அது எவ்வளோ பெரிய தப்புன்னு புரியுது….” என்றவன்,
“மன்னிப்பு. இந்த வார்த்தை நீ இழந்த எதையுமே மீட்டு தராது. ஆனா மன்னிப்பாவது கேட்டானேன்னு ஒரு நிம்மதியை தரும் இல்லையா?…” என்று சொல்லியவன்,
“வா கிளம்பலாம்…” என்றான் ஹரித்திரன் தீக்ஷாவிடம்.
“உங்களை எந்த காலத்துலயும் என்னால மன்னிக்கவே முடியாது…” என்றாள் கோபமாய்.
“மன்னிச்சு எனக்கு வாழ்க்கை தரனும்ன்னு இல்லை. தண்டிக்க கூட தரலாம். என்ன தண்டனை குடுத்தாலும் என் மனைவியா என் பக்கமிருந்து நீ குடு…” என்று மொத்தமாய் அவளிடம் சரணடைந்தான் ஹரித்திரன்.