ஹரித்திரன் சொல்லியும் கூட சம்ருதிக்ஷா அங்கிருந்து எழுந்தபாடில்லை.
அத்தனை பிடிவாதம். கூடவே அவள் செய்து வைத்த செயலின் வீரியம் அவளை நிலைகுலைய செய்திருந்தது.
இந்தளவிற்கு நிதானம் தவறியதில்லை அவள். இன்று எல்லாவற்றிற்கும் மேல் ஹரித்திரனிடம் தன்னை வெளிப்படுத்தவே கூடாதென்னும் முடிவு மொத்தமாய் சிதறியிருந்தது.
வினோதாவிடம் பேசியவற்றையும் அவள் ஹரித்திரனிடம் பகிர்ந்திருப்பதை அவனின் பேச்சுக்களில் புரிந்துகொள்ள முடிந்தது.
“தீக்ஷா ப்ளீஸ், எழுந்திரு. போகலாம்…” என்றான் மிக மிக பொறுமையுடன்.
“உங்களோட வரமுடியாதுன்னு திரும்ப திரும்ப சொல்றேன். அது ஏன் புரியலை?…” என்றவள்,
“அதுவுமில்லாம எங்கம்மா உங்களை பார்த்தா இன்னும் கஷ்டப்படுவாங்க….” என்றாள் அவனிடம்.
தீக்ஷாவின் வார்த்தைகளில் இன்னுமே அவளை கனிந்த பார்வை பார்த்தான் ஹரித்திரன்.
“என்ன? என்ன பார்வை? இதுக்கெல்லாம் நான் மயங்கமாட்டேன்…” என அவள் முறைக்க அதுவரை மென்மையாக சிரித்துக்கொண்டிருந்தவன் சட்டென்று வாய்விட்டு சிரிக்க என்னமுயன்றும் அவனிடமிருந்து பார்வையை திருப்ப முடியவில்லை தீக்ஷாவிற்கு.
“இடியட்…” என்று பல்லை கடித்தாள்.
“ஹேய் எக்பப்ஸ். உன்னை என்ன பன்றதுன்னே புரியலை…” என்றவன் தன் கைகளை அவளின் கன்னம் நோக்கி கொண்டுவர,
“டோன்ட் டச்…” என பின்னுக்கு நகர்ந்தாள் தீக்ஷா.
அதற்குமே சத்தமிட்டு சிரித்தவன் புன்னகையில் முன்பை போல் ஏமாற்றமோ, வலி மறைக்கும் உணர்வோ இன்றிய இலகுவான, சந்தோஷமான புன்னகை.
“இப்ப நானும் கேட்கலாமே, என்ன பார்வை இது?…” என்றவன்,
“ஆனா நான் கேட்கமாட்டேன். நீ பார்க்க தான் நான். இன்னும் நல்லா பார்க்கலாம். நீ மட்டுமே பார்க்க கூடிய விதமா பார்க்கலாம்…” என்று கண்சிமிட்டி புன்னகைக்க,
“யூ,, யூ…” என்றவள் கோபத்தில் முகம் சிவக்க கட்டிலில் இருந்த தலையணைகளை அவன் மீது வீசினாள்.
“உனக்கு இவ்வளோ கோவம் வருமா? முதல்தடவை பார்த்தப்போ என்னை பார்க்க கூட அத்தனை கூச்சப்பட்ட பொண்ணா நீ?…” என்றான் இன்னுமே சந்தோஷ மனநிலையில்.
ஆனால் தீக்ஷாவின் மனநிலை தான் அதற்கு எதிர்மறையாய் முற்றிலும் மாறிவிட்டது.
அவன் சொல்லிய நாளுக்கு பின்னாலான தங்களின் வாழ்க்கையும், வதைகளும் வரிசையாய் நினைவடுக்கில் அடுத்தடுத்ததாய் வலம் வர,
“காலம் எல்லாத்தையுமே மாத்திடும் இல்லையா? எங்கம்மா என்னை விட சாஃப்ட். அவங்களை இவ்வளோ தைரியமா மாத்தினதும் இந்த காலம் தான். அதுக்கு நான் ஒரு பெரிய காரணம்….” என்றாள் மனமுடைந்து.
“இதுக்கு நீ எந்தவகையிலையும் காரணமாக முடியாது தீக்ஷா….”
“எனக்காகன்னும் போது அது என்னாலன்னு தான் தோணுது…” என்றவள்,
“என்னால அம்மா இன்னும் கஷ்டப்பட்டுட கூடாது…” என்றவள்,
“எவ்வளோ ஈஸியா சொல்றீங்க, திரும்ப கல்யாணம் பத்தி பேசறீங்க? தப்பே செய்யாத எங்கப்பாவை அவமானப்படுத்தி அடிச்சு வெளியேத்திருக்கீங்க. அதை தொடர்ந்து எங்க குடும்பத்துல எவ்வளவோ பிரச்சனைகள்…”
“தீக்ஷா…”
“பேசாதீங்க. இதுக்கு மேலையும் எனக்கு பிடிக்கும்ன்னு என்னால எங்கம்மாவை அந்த வீட்டு மனுஷங்களோட முன்னாடி நிறுத்த முடியுமா? அது எங்கம்மாவுக்கும், எங்கப்பாவுக்கும் நான் செய்யற துரோகம் இல்லையா?…” என்றாள் தீக்ஷா.
“நடந்தது மிகப்பெரிய தப்பு தான். ஆனா அதை சரிபண்ண எனக்கு ஒரு வாய்ப்பு குடு…” என்றான் அவளுக்கருகே அமர்ந்து.
“தெரியாம நடந்த தப்புக்கு மறுபரிசீலனை உண்டு. தெரிஞ்சே நடந்ததுக்கு?…”
“தீக்ஷா…”
“எங்கப்பா அப்படி செய்யலைன்னு உங்களுக்கு தெரியுமா?…” என்றாள்.
“ஹ்ம்ம், தெரியும், அதுக்காக தான் உன்கிட்ட நான் மன்னிப்பு கேட்டேன். இப்பவும் கேட்கறேன்…”
“எப்போ தெரியும்?…”
“தீக்ஷா ப்ளீஸ்…”
“இதுக்கும் கூடவா பதில் சொல்ல முடியலை?…” என்றாள் வேதனை சுமந்த முகத்துடன்.
“முன்னாடியே தெரியும்…”
“முன்னாடின்னா? எப்போன்னு சொல்லுங்க பாஸ். யார் என்ன பண்ணினாங்கன்னாவது தெரியுமா?…” என்றாள் சிறிது நக்கல் கலந்த குரல்.
“ஹ்ம்ம்…” என்றவனால் அவளை எதிர்கொள்ள முடியவில்லை.
ஒரு கையினால் முகத்தை மூடியபடி பதில் சொல்லியவன் குரலே உள்ளடங்கி இருந்தது.
“சொல்லுங்க பாஸ். யார் சொல்லி தெரியும்? இல்லை நீங்களா தெரிஞ்சுக்கிட்டீங்களா?…”
“இப்ப இது எதுக்கு? பெரிய தப்பு. நடந்த எல்லாமே என் வீட்டை சேர்ந்தவங்க பண்ணின தப்பு தான். என் அத்தையும், என் சித்தப்பாவும் செஞ்சதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். அதோட அவங்களுக்காக நீ நம்மளோட எதிர்காலத்தை ஏன் பாழ் பன்ற?…”
“வாட், நான் ஸ்பாயில் பன்றேனா? இப்ப கூட உண்மையை சொல்ல முடியலையே உங்களால….” என்றவள்,
“அவங்கன்னா அவங்களும் உங்க குடும்பம் தானே? உங்களை சேர்ந்தவங்க தானே?…” என்று கூர்மையான பார்வையுடன் கேட்க,
“அவங்க நமக்கு சொந்தம். அவங்க எப்படி ஒரே குடும்பமாவாங்க?…” என்றான் ஹரித்திரன் ஆயாசத்துடன்.
“ஹ்ம்ம், சொல்லுங்க. அவங்க உங்க குடும்பம் இல்லையா? அவங்களோட வார்த்தை தானே இத்தனைக்கும் காரணம்….” என்பதற்கு அவனிடம் பதிலில்லை.
“எதுவுமே சரியாகாம கல்யாணம் மட்டும் வேணும்? இந்த வயசுல எவன் பொண்ணை குடுப்பான்னு என்னை திரும்ப பிடிச்சுக்க பார்க்கறீங்க, அதானே?…” என்று பல்லை கடித்தாள் தீக்ஷா.
“ஆமா, தெரியும். என் அக்காவால தான் பிரச்சனை. அவ மேல தான் தப்புன்னு பிரச்சனை நடந்த ஒரு மாசத்துலயே எனக்கு தெரிஞ்சிடுச்சு…” என்றவனை விழியகற்றாமல் அவள் பார்க்க,
“அதுக்கப்பறம் எப்படி உன் முகத்துல என்னால முழிக்க முடியும் சொல்லு? என் வீட்டுக்கு வந்தவங்களை அவ்வளோ அசிங்கப்படுத்தி அனுப்பிருக்காங்க. என்னால உங்ககிட்ட வந்து நிக்க முடியாதுன்னு தோணுச்சு. அதுமட்டுமில்லாம, அப்ப அவங்க மேலையுமே அத்தனை கோபம். என் கோபத்தை எப்படி காட்டன்னு தெரியாம பாரின் கிளம்பிட்டேன்…” என்று கடகடவென்று அவன் ஒப்புவிக்க,
“வாவ், குட்…” என்றாள் தீக்ஷா.
“தீக்ஷா…”
“இப்பவும் எங்க முகத்துல முழிக்கவே வேண்டாம். அன்னைக்கான தப்பு நாலுவருஷம் ஆனதும் நீங்க வெய்ட் பண்ணினதும் மறைஞ்சிடவோ மாறிடவோ இல்லை. அதோட கனம் இன்னும் வலியை குடுத்துட்டே தான் இருக்கு. எந்த மாற்றத்தையும் தரலை. ஆறவும் விடலை…” என்றவள்,
“ஸோ, இப்பவும் அப்படியே நினைச்சிட்டு விலகியே இருங்க. அதுதான் ரெண்டுபேருக்குமே நல்லது…” என்றாள்.
“ஏன் புரிஞ்சுக்க மாட்டேன்ற தீக்ஷா?…” என்று நெற்றியை பிடிக்க,
“என்னால காலத்துக்கும் மறக்க முடியாத விஷயங்கள் நம்ம வாழ்க்கைல நிறைய இருக்கு. அது நமக்கு சந்தோஷத்தை தராது. கொஞ்ச நேர பேச்சுக்கள்ல கூட என்னால உங்களை இரிட்டேட் தான் பண்ண முடியுது. அதை நீங்க புரிஞ்சுக்கோங்க…” என்றவள்,
“உங்களோட எந்த விஷயத்தையும் என்னால எங்கம்மாக்கிட்ட ஷேர் பண்ண முடியலை. இத்தனை வருஷத்துல நான் அவங்ககிட்ட மறைக்கிறதுன்னா அது நீங்க சம்பந்தப்பட்ட விஷயமா தான் இருக்கும். அதுவுமே அவங்களை வருத்தப்பட வைக்க கூடாதுன்னு தான்….”
“அம்மாவோட நிம்மதிக்காகன்னு இருந்தாலும் எனக்கு நான் மறைக்கிறதும், மனசுக்குள்ள வச்சு தவிக்கிறதும் எத்தனை குற்றவுணர்ச்சி. என் மனசால சந்தோஷம்ன்ற ஒன்னு யாருக்கும் முழுமையா குடுக்க முடியாது. அட்லீஸ்ட் எங்கம்மாவுக்கு மட்டுமாவது நான் இருந்துட்டு போறேனே?…” என்றாள் தீக்ஷா.
“இப்போ நீ பன்றதுக்கு பேர் என்னவாம்? நீ உங்கம்மாவுக்காக பார்த்த. நான் உன்னை விட்டு விலகனும்ன்னு நினைச்சதுக்கு காரணமும் அதுதானே? அதை மட்டும் அத்தனை குற்றம் சொன்ன?…” என்றவன் அவளின் பார்வையில்,
“ஓகே, ஓகே, ரிலாக்ஸ். இப்ப எதுவும் பேச வேண்டாம். நாம கிளம்புவோம்…” கிளம்பறோம். நான் தான் கூட வருவேன். நீ வா…” என்று சொல்லிவிட்டு,
“இப்பவும் நீ மாட்டேன்னு சொன்னா உங்கம்மா மட்டுமில்லை, என் அப்பாம்மாவையும் இங்க வரவழைப்பேன். என்ன பன்றதா இருக்க?…”
“மிரட்டறீங்களா?…”
“இருக்கலாம். ஆனா எனக்கு வேற வழி இல்லை. உன்னை தனியாவோ, வேற யாரோடையுமோ அனுப்ப நான் தயாரா இல்லை. போதும், எதெதுக்காகவோ, யார் யாருக்காகவோ நான் விலகி ஓடினது….” இறுக்கம் கலந்த குரலில் அவன் சொல்ல,
“முடிஞ்சு போனதை நியாயப்படுத்தி திரும்ப பழசை புதுப்பிக்க பார்க்கறீங்க…” என்றாள் முறைப்புடன்.
“வச்சுக்க…”
“என்ன?…”
“அப்படியே வச்சுக்கன்னு சொன்னேன். நீ என்ன நினைச்ச?….” என்றவன் முகத்தில் மீண்டும் புன்னகை மீண்டிருந்தது.