“நீ தான் சொன்னியே, வயசாகிருச்சு. வேற பொண்ணு கிடைக்கலைன்னு என்னை மயக்க பார்க்கறீங்களான்னு. அதே தான். வேற எந்த பொண்ணும் வேண்டாம். உன்னையே மயக்கி உன்னையே கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு இருக்கேன்…” என்றவன்,
“சொல்லுவாங்களே, தெரியாத பேயை விட தெரிஞ்ச பிசாசே மேல்ன்னு. அதான் இந்த பிசாசுக்காக வெய்ட் பண்ணேன்…” என்று சொல்ல,
“நான் பிசாசா?…” என்றாள் ஆவேசமாய். அதற்கும் புன்னகைத்து,
“முகம் கழுவிட்டு ரெடியா இரு. இப்ப வந்திடறேன்…” என்று சொல்லி வெளியேறினான் ஹரித்திரன்.
அவன் மீண்டும் வருவதற்குள் தானே அங்கிருந்து கிளம்பிவிடவேண்டும் என்று நினைத்திருந்தவள் வந்து கதவை திறக்க ஹரித்திரன் அங்கே தான் நின்றிருந்தான்.
“நீங்களா?…”
“நானே தான். இங்க தான் இருந்தேன். உள்ள போ…” என்று அவளை இடித்துக்கொண்டு உள்ளே நுழைய,
“இம்சை…” என்றாள் தீக்ஷா.
வாயெல்லாம் சிரிப்புடன் அவன் வந்தமர பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது தீக்ஷாவிற்கு.
“வெய்ட்….” என்று சொல்லியவன் அதன்பின்னர் அலுவலகத்திற்கு அழைத்து பேச துவங்கிவிட்டான்.
அதை தொந்தரவு செய்யாமல் பார்த்துக்கொண்டிருந்தவள் மனதில் அவன் மீதான ஆராய்ச்சி அதிகத்திற்கும் மேலோங்கியது.
சற்று நேரத்திற்கெல்லாம் கதவு தட்டப்பட பேசிக்கொண்டே எழுந்து சென்றவன் வெளியில் நின்றவரிடம் பேசிவிட்டு மீண்டும் உள்ளே வர கையில் என்னவோ பார்சல்.
“செம்ம பசி. பசிச்சா இன்னுமே கோவம் வருமாமே? முதல்ல சாப்பிட்டுடுவோம். அப்போ தான் உங்க வீட்டுக்கு போய் டென்ஷன் இல்லாம பேச முடியும்…” என்று எடுத்து வைத்தான்.
இரண்டு பேப்பர் கப், பிளாஸ்க்கில் டீ, இருவருக்கும் முட்டை பப்ஸ் எல்லாம் எடுத்து வைத்து அவளிடம் தர வாங்காமல் பார்த்தாள் அவனை.
“சாப்பிட்டா கிளம்புவோம். இல்லைன்னா அவங்களை வர சொல்லிடுவோம். ஆபீஸ்ல வேற சும்மா சும்மா குணால் கூப்பிடறார். ஏன் நீங்க அங்க இருக்கீங்கன்னு கேட்டு ஒரே டார்ச்சர்…” என்றபடி அவளின் அருகில் பிளேட்டை வைத்தவன் தானும் இருக்கையில் அமர்ந்தான்.
“எத்தனைதடவை பதில் சொல்ல? வர்ற கோவத்துக்கு என்னோட பொண்டாட்டியை நான் பார்க்காம வேற யார் பார்ப்பான்னு கேட்டுடலாம்ன்னு தோணுது…” என்று சொல்ல,
“என்ன?…” என்று பல்லை கடித்தாள் தீக்ஷா.
“சொல்லிடவா? நீதான் தாம்பூலம் எல்லாம் குடுத்து என்னை நிச்சயம் பண்ணிட்டியே? பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தான்…” என்றான் சிரிப்புடன்.
“இப்படியெல்லாம் பேச உங்களுக்கு வெக்கமாயில்லையா?…”
“வெட்கப்பட்டா நான் இத்தனை வருஷம் எனக்குள்ளவே முடங்கி கிடந்தேன் பாரு, அப்படித்தான் இருக்கனும்…”
“நல்லது, அதையே தொடர்ந்து பண்ணுங்க…”
“எனக்குன்னு ஒருத்தி இங்க காத்துக்கிட்டு இருக்கும்போது திரும்பவும் அந்த மடத்தனத்தை செய்வேனா நான்?…” என்றான் பப்ஸை சாப்பிட்டுக்கொண்டே.
“என்னை டென்ஷன் பன்றீங்க இப்போ….” தீக்ஷாவிற்கு கண்கள் கலங்கியது.
“உன்னை இனிமே எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன். ப்ராமிஸ். ஆனா இந்த விஷயத்துலையும் மாற்றமில்லை. சாப்பிட்டு முடி, கிளம்புவோம்….” என்று சொல்லிவிட்டு அடுத்து அவள் பேசிய எதற்கும் அவன் பதிலளிக்கவில்லை.
மன்னிப்பை கேட்டாகிற்று. வருத்தமும் தெரிவித்தாகிற்று. எதுவும் மாறிவிடாது. ஆனால் அதனையே நினைத்து இனிவரும் வாழ்வை புண்ணாக்கிக்கொள்ள அவன் தயாராக இல்லை.
சாப்பிட்டு முடித்து டீயை கப்பில் ஊற்றி பருக ஆரம்பித்தான். தீக்ஷா எத்தனை பேசியும், திட்டியும் அனைத்தையும் பார்த்தபடி கேட்டபடி முகம் மாறாமல் இருந்தான்.
“இவ்வளோ சொல்றேன், கொஞ்சம் கூட ரோஷமே இல்லையா?…”
“பொண்டாட்டிக்கிட்ட ரோஷப்பட்டா வாழ முடியாதும்மா. இப்ப இருந்தே ப்ராக்டிஸ் பண்ணிக்கறேன். நான் தப்பு பண்ணிருக்கேன். நீ பேசற. நியாயம் தானே?…” என்றான் அப்போதும் அலட்டிக்கொள்ளாமல்.
அவனை எந்தவிதத்திலும் கோபப்படுத்தவும் முடியவில்லை. வருந்த செய்யவும் முடியவில்லை.
விடமாட்டான் என்று தெரிந்துபோக சில நொடிகள் தலையை பிடித்தபடி அமர்ந்திருந்தாள்.
“சாப்பிடலையா?…” என்றான் ஹரித்திரன் தான் உண்டுமுடித்து.
“பசிக்கலை. வீட்டுக்கு போகலாம்…” என அவள் குரல் கடினமாக வந்தது.
“போகலாம். ஆனா சாப்பிட்டா தான் போகமுடியும்…”
“என்னை வாழவும் விடமாட்ட. இப்படியும் இருக்க விடமாட்டியா? உயிரை வாங்கற நீ. உன்னை கொன்னுட்டா என்னன்ற அளவுக்கு ஆத்திரப்பட வைக்கிற. உன்னை மொத்தமா வெறுத்தும் தொலைய முடியலை. என்னை விட்டு போய் தொலையேன்…” என்று கோபத்தில் வார்த்தைகளை விட்டவளுக்கு அதனுடன் தன் மனதையும் அவனிடம் விட்டுவிட்டிருப்பதை உணரமுடியவில்லை.
“பப்ஸ் சாப்பிடும் போதே டீ குடிப்ப தான?…” என்று கப்பில் அவளுக்கு பாதி டீயை ஊற்றியவன்,
“சாப்பிட்டு முடிச்சு குடிக்க ப்ளாஸ்க்ல சூடா இருக்கட்டும்…” என்று அதையும் அவள் புறம் நகர்த்தினான்.
“உன்னோட சேர்ந்து இன்னைக்கு நானும் டீ குடிச்சிட்டேன்…” என்றான்.
எதற்கும் பதில் கூறாமல் தீக்ஷா பப்ஸை சாப்பிட ஆரம்பிக்க, அவளுடைய மருந்து மாத்திரைகளை என்னவென்று பார்வையிட்டவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டான்.
“பில் கட்டனும்…” தீக்ஷா சொல்ல,
“எல்லாம் முடிச்சாச்சு. நீ வா…”
“அதை நீங்க ஏன் கட்டனும்? எவ்வளோன்னு சொல்லுங்க…”
“உன்னையே கட்டிக்க போறேன். பேசாம வருவியா…” என்று அவளோடு வெளியே வர எதிரே சுகன்யா.
இருவரையும் சேர்ந்து அங்கே எதிர்பார்க்காதவர் என்னவோ என்று அருகே வர,
“போச்சுடா…” என்று கண்ணை மூடி திறந்தவன்,
“என் சித்தி…” என்றான் தீக்ஷாவிடம்.
“உங்க வீட்டு ஆளுங்க ஒருத்தரையும் நான் மறக்கவே மாட்டேன்….” என்றாள் அவனிடம் கோபமாய்.
“ஞாபகம் இருந்ததே போதும்…” என்று சொல்லிவிட்டு சுகன்யாவிடம் திரும்ப,
“யாருக்கு என்னாச்சு?…” என்றவர்,
“எப்படிம்மா இருக்க?…” என்றார் சுகன்யா தீக்ஷாவின் கன்னம் தொட்டு அவளின் கையை பிடித்து.
“நல்லாயில்லை…” என்றாள் அவள் படக்கென்று.
“எல்லாரும் அப்படித்தான். நான் மட்டும் என்ன நல்லவா இருக்கேன்? முள்ளுக்காட்டுல பாதயாத்திரை பன்ற மாதிரி தான். என் நேரம். அதை விடு, என்னாச்சு உடம்பு எதுவும் சரியில்லையா?…” என்றார் அவர் தீக்ஷாவின் பாராமுகத்தை கண்டுகொள்ளாததை போல.
தீக்ஷா தான் அவரின் இயல்பான பேச்சிலும், அனுசரணையிலும் திகைத்து போய் பார்த்தாள்.
“தீக்ஷாவுக்கு தான் சித்தி முடியலை. அதான் ஹாஸ்பிட்டல் வந்தோம்…” ஹரித்திரன் சிரிப்புடன் கூற,
“அப்படியா என்னாச்சு?…” என்றார் சுகன்யா இன்னும் பதட்டமாய்.
“வா போய்ட்டே பேசுவோம்…” என்று தீக்ஷாவின் மறுபக்கம் சுகன்யா நின்றுகொள்ள இருவரும் அவளை நகர்த்திக்கொண்டே காருக்கு வந்துவிட்டனர்.
“ப்ரெண்டுக்கு குடலிறக்க ஆப்பரேஷன்னு பார்க்க வந்தேன். பார்த்துட்டு கிளம்பும் போது தான் உன்னை பார்த்தேன். அப்படியே இப்படி வந்துட்டேன்…” என்று பேசியபடியே அவளையும் காரில் ஏற்றிவிட்டனர்.
‘என்னடா நடக்கிறதென?’ உணர கூட முடியவில்லை தீக்ஷாவிற்கு. சுகன்யா கதை பேசுகிறேன் என்று அவளை பேசவே விடவில்லை.
‘இவருமா தன் வீட்டிற்கு?’ என்று யோசித்தாலும் அவளால் சுகன்யாவை மறுக்கவும் முடியவில்லை.
“வந்திருந்தா எங்க அந்த மனுஷனுக்கு ஒரு பெட்டை போட்ருப்பேனோனு எஸ்கேப் ஆகிட்டார். இப்பலாம் என் மைன்ட்வாய்ஸ வேற கேட்ச் பண்ண ஆரம்பிச்சிட்டார்டா ஹரி. இருக்கு அவருக்கு ஒரு நாள்…” என்ற சுகன்யா,
“அவரெல்லாம் ஒரு ஆளுன்னு அவர் சொன்னதுக்கு உங்கப்பாவும் தலையாட்டறார் பாரு. தலையெழுத்து…” என்று சொல்லி தீக்ஷாவை பார்த்தவர்,
“ஒருநாள் இல்ல ஒருநாள் அவர் தலையில பெரிய கல்லை தூக்கி போட போறேன்…” என்று சொல்ல அவள் விழிவிரித்து பார்த்தாள் சுகன்யாவை.
விரைவில் அதுதான் நடக்கவும் இருக்கிறதென்றும், அதுவும் தன் கண்ணெதிரே என்றும் தீக்ஷா உணரவில்லை.