அவரை அங்கே பார்த்த பதட்டம் எல்லாம் எதயுவுமே இல்லாமல் இலகுவாய் அவன் கேட்டவிதமே அவர் அங்கே வந்திருப்பதை முன்கூட்டியே அறிந்திருக்கிறான் என்று புரிந்தது.
இது எந்தவகையில் என்று தான் அவருக்கு விளங்கவில்லை. ஒருபக்கம் நர்மதா தன் பெண்ணின் விருப்பமும், ஹரித்திரனின் உறுதியும் மட்டுமே இந்த உறவை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்லும் என்று கூறி இருந்தார்.
இப்போது தீக்ஷாவுடன் ஹரித்திரனும், சுகன்யாவும் சேர்ந்தே வந்திருக்க குழப்பம் தான் மிஞ்சியது.
‘நீ தான் உன் அண்ணனுக்கு சொன்னியா?’ என்பதை போல மருமகளை தான் பார்த்தார் லாவண்யா.
ஹரிணி இல்லை என்று தலையசைக்க பார்த்தவர் மீண்டும் சுகன்யாவை பார்க்க,
“உள்ள போவலாமா? இல்ல இங்கினவே பார்த்துட்டு திரும்பறதா?…” என கேட்க,
“பேச தானே வந்திருக்கீங்க? வாங்க…” என்றுவிட்டு லாவண்யாவும் உள்ளே செல்ல ஹரிணியும் அங்கே அவர்களுடன் சென்றாள்.
அதற்குள் நர்மதாவிடம் மருத்துவமனையில் இருந்து ஹரித்திரனும், அவன் சித்தியும் தன்னை அழைத்து வந்துவிட்டதாக சொல்லிக்கொண்டிருந்தாள் தீக்ஷா.
என்ன நடந்ததென்று முழுதாய் கூறமுடியவில்லை. படபடப்புடன் வேகமாய் மயங்கி விழுந்ததாய் சொல்ல,
“முதல்ல நீ அமைதியா இரு. எதுக்கு பதட்டம்?…” என்ற நர்மதா சுகன்யாவையும், ஹரித்திரனையும் பார்த்தார்.
அப்போதுதான் அவர்களுமே உள்ளே நுழைந்தனர். அழைப்பாரோ இல்லையோ என்ற எதிர்பார்ப்பெல்லாம் இல்லை.
வெளியே செல்லும் படி பேசினாலும் கூட தான் பொறுமையாய் பேசவேண்டும் என்று திடமாய் பார்க்க,
“வாங்க…” என்றார் நர்மதா.
“ஆமா, வந்துட்டோம். வாடா ஹரி…” என்று அதிலேயே சந்தோஷப்பட்டு போனார் சுகன்யா.
“நாங்க…” என்று சுகன்யா ஆரம்பிக்க,
“இருங்க சித்தி…” என்ற ஹரித்திரன் நர்மதாவின் பக்கம் பார்த்தான்.
“உங்ககிட்ட பேசனும். அதுக்காக தான் தீக்ஷா வேண்டாம்ன்னு சொல்லியும் நான் கிளம்பி வந்தேன்…” என்றான் அவரிடம்.
“நல்லது, நன்றி…” அவ்வளவே நர்மதா சொல்லியது.
பார்வையில் சிநேகமும் இல்லை. வெறுப்பும் இல்லை. சாதாரணமான ஒரு பார்வை தான்.
அந்த நன்றி கூட அதிகபட்ச மகில்சிச்யோ, உணர்ச்சியோ இல்லாது இருக்க சுகன்யாவிற்கு நம்பிக்கையே போயிற்று.
“ஓஹ், ஓகே. நன்றிக்கு நன்றி…” என்றவன்,
“அப்பறம் இன்னொரு முக்கியமான விஷயம். நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன்….” என்றான் நர்மதாவிடம்.
அது எதற்கு என சுகன்யா, லாவண்யாவிற்குமே புரியவில்லை. தீக்ஷா என்ன பேசுகிறான் இவன் என்று பார்த்துக்கொண்டு நின்றாள்.
“நீங்க சொன்ன வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு சிலநாட்கள் இருந்துட்டேன். ஆனா அப்படியே இருக்க முடியாது என்னால…” என்றவன்,
“உங்க பொண்ணுக்கு நெருப்புல நிக்கிற வாழ்க்கையை தர போறீங்களான்னு கேட்டீங்க. இருக்கலாம். வாழ்க்கைல எல்லாமே நாம நினைக்கிற பாதையாவா இருந்திடும். அவ நெருப்புல நின்னா கூட நானும் நிக்கிறேன். ஆனா எந்த காலத்துலையும் நீ மட்டும் நின்னு கஷ்டப்படுன்ற மாதிரி என்னைக்கும் விடு விலகமாட்டேன்…” என்றான் உறுதியாய்.
நர்மதாவின் கண்களை புதிதாய் ஒரு வெளிச்சம் எட்டுவதை போலிருந்தது. ஹரித்திரன் வார்த்தைகள் அவரின் மனதை அடைய துவங்கியது.
“இப்போ எதுக்கு இந்த அனாவசிய பேச்சு?…” என்றார் நர்மதா அமைதியாக.
“என்னோட வாழ்க்கைக்கு அத்தியாவசியமான பேச்சு. இப்பவும் நான் தீக்ஷாவை விரும்பறேன். உங்க பொண்ணை தான் கல்யாணமும் பண்ணிப்பேன்…” என்றான் ஹரித்திரன்.
“நீங்க சொன்னதுதான் மன்னிப்பு இழந்தது எதையும் மீட்டு தராது. ஆனா அதையே நினைச்சிட்டு இருக்கறதையும் இழந்துட கூடாது பாருங்க. நான் இழக்க விரும்பலை….” என்றவன் நர்மதாவையும், தீக்ஷாவையும் பார்த்துவிட்டு,
“அப்படி போடு…” என்ற சுகன்யா அருகே லாவண்யா இருப்பதை கவனியாமல் ஹரிணி என நினைத்துக்கொண்டு,
“உன் அண்ணனுக்கு இப்பத்தான் பின் மண்டையில சூரியன் பொடீர்ன்னு வச்சிருக்காரு போல. என்னம்மா பேசறான்? இந்த பேச்சை நாலு வருஷம் முன்ன பேசிருந்தா இந்நேரம் புள்ளகுட்டிய விட்டு உன் சித்தப்பன் மண்டையில நாலு தட்டு தட்ட வச்சிருப்பேன்…” என்று கவலைப்பட,
“இந்த கல்யாணத்துக்கு மட்டும் என்னமாச்சும் பேசட்டும், ஓங்கி அடிச்சா ஒன்றரை தன் இல்லைன்னாலும் ஒரு அரை டன் வெய்ட்லை எதையாச்சும் போட்டுடுவோம்…” அலட்டிக்கொள்ளாமல் கூற,
“கொலை முயற்சி…” ஹரிணி வாய் பொத்தி சிரிக்க,
“உசுருக்கு உத்திரவாதம். நாங்க இருக்கோம்னு நான் சொல்லிடமாட்டேன்…”
“அங்க பாருங்க. இந்த ப்ளான் எப்பாலப்பரமா போட்டு எப்படி எக்ஸிக்யூட் பன்றதுன்னு பொறுமையா பேசுவோம்…” என்றார் லாவண்யா.
“என்னடி உன் மாமியார் இப்படி இறங்கிட்டாங்க?…” என்ற சுகன்யா ஹரித்திரனை கவனிக்க ஆரம்பித்தார்.
“நான் ஏற்கனவே சொல்லிட்டேன், காலவிரயம்ன்னு. அதுவுமில்லாம நம்பிக்கை…” என்ற நர்மதாவின் முன் கை நீட்டியவன்,
“இருங்க த்தை. நம்பிக்கை நம்பிக்கை. சும்மா கண்ணு முன்னாடி வச்சிக்கிட்டு இதை நமப்றதா வேண்டாமான்னா? எதை வச்சு நம்பிக்கை இல்லைன்னு சொல்றீங்க?…” சத்தம் கூடிவிட்டது ஹரித்திரனுக்கு.
“என்ன பேசறீங்க நீங்க? எங்கம்மா முன்னாடி….” என தீக்ஷா வர,
“நீ வாயை மூடு. அவ்வளோ ஈகோ. ஆமா தப்பு பண்ணிட்டேன். ஓடி போய்ட்டேன். ஒவ்வொருதடவையும் ஒவ்வொருத்தருக்காக யோசிச்சிட்டேன். அது எவ்வளோ பெரிய முட்டாள்த்தனம்ன்னு இப்ப புரியுது…”
“யாரும் யாருக்காகவும் அவங்க வாழ்க்கையை வாழாம இல்லை. யாருக்கா எதை செய்யறோம்ன்னு இருக்கு. உங்கப்பாவும் பெரியப்பாவும் எங்க வீட்டுக்கு வந்தப்போ அங்க நடந்தது மிகப்பெரிய தவறு தான். மன்னிக்க முடியாத விஷயம் தான்…”
“நாங்களுமே தீர விசாரிக்கலை தான். அதுக்காக நான் எவ்வளோ வேணும்னாலும், எத்தனை வருஷம் வேணும்னாலும் மன்னிப்பு கேட்கறேன். காலத்துக்கும் அந்த பாவம் எங்க தலைமேல இருக்கத்தான் செய்யும்…”
“ஆனா ஒரு நிமிஷம் யோசிங்க, அன்னைக்கு தீர விசாரிக்கலைன்னு சொல்றீங்க. இதே உங்க வீட்டுக்கு வந்தப்போ எங்க வீட்டாளுங்களுக்கு இப்படி நடந்திருந்தா நீங்களும் பொறுமையா விசாரிச்சிருப்பீங்களா?…” என்றான் ஹரித்திரன்.
“ஆத்தீ சொதப்பறானே?…” என சுகன்யா அவனை தடுக்க நினைக்க,
“ப்ச், சும்மா நல்லதை மட்டுமே பேசியா பிரச்சனையை முடிக்க முடியும்? எல்லாஎ பேசட்டும். எல்லா பக்கமும் ஆராயட்டும். அவங்களுக்கும் புரியட்டும். பேசாம நில்லுங்க….” என்று லாவண்யா சுகன்யாவை பிடித்துக்கொண்டார்.
ஹரிணிக்கும் அண்ணனின் பேச்சில் அத்தனை அதிர்ச்சி. என்ன இப்படி கேட்டுவிட்டான் என்று.
பதட்டத்துடன் அவனை பார்க்க நர்மதாவும், தீக்ஷாவும் இன்னும் அழுத்தமாய் பார்த்தனர் ஹரித்திரனை.
“என்னையும், என் வீட்டுல நடந்தடதையும் நியாயப்படுத்த இதை நான் பேசலை. ஆனா கொஞ்சம் யோசிங்கன்னு தான் சொல்றேன். அன்னைக்கு நடந்ததை என்னன்னு விசாரிக்க கூடிய சூழ்நிலை இல்லை. என் அக்கா புருஷன் அவர் செஞ்ச தப்பை கண்டுபிடிச்சிடக்கூடாதுன்றதுக்காக அசிங்கமா நடந்துக்கிட்டார்…”
“அதுக்கு துணையா என்னோட சித்தப்பாவும், மாமாவும் பேச கைகலப்பா மாறிடுச்சு. அந்த நிமிஷம் என் அக்கா சொல்லவும் அது உண்மையன்ற மாதிரி தான் நாங்களும் நம்பவேண்டிய சூழ்நிலை. ஏனா அதுவரைக்கும் உங்க வீட்டுல யாரை பத்தியும், எதுவுமே தெரியாது. சித்தப்பா வீட்டுல இருந்து கிளம்பி ஏன் அத்தை வீட்டுக்கு போகலைன்னு தான் யோசிச்சோம்….”
“மதி மாமா அப்படி சொல்லவே இல்லைன்னு சொன்னதோட, என் அக்காவும் ஆமான்னதும் நம்பிட்டோம். பெரிய தப்பு தான். ஆனா அதைவிட நாங்க பண்ணின தப்பு வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்பினது. எனக்கு உண்மை தெரிஞ்ச அப்பவும் கூட தேடி வந்து மன்னிப்பு கேட்க தோணலை…”
“அது ஈகோ காரணம் இல்லை. எல்லாருக்கும் அந்த உண்மையும் தெரியலை. ஒரு வெறுப்பு. கூட பிறந்த அக்காவே இப்படி பண்ணிட்டாளேன்னு கோவம். அதைவிட இதை சொல்லிட்டு உங்க வீட்டு வாசல்ல வண்டு எப்படி நிக்கன்னு அசிங்கமா இருந்துச்சு. எந்த முகத்தை வச்சிட்டு வந்து பேச முடியும்?…”
“வேண்டாம்ன்னு தூக்கி எறிஞ்சிட்டு என்னை ஏத்துக்கோன்னு சொல்றதுக்கு வெட்கமா இருந்துச்சு. மனசுக்குள்ள இப்படி கண்ணிருந்தும் குருடா இருந்துட்டோமேன்னு நானே என்னை அத்தனை அடிச்சிக்கிட்டேன். இங்க இருக்கவே வேண்டாம்ன்னு தான் எல்லாத்தையும் உதறிட்டு நான் போனதும்…”
“சொல்லப்போனா காலப்போக்குல உங்க பொண்ணோட நினைப்பு என்கிட்டே இருந்து மறைஞ்சிடும்ன்னு தான் நான் நினைச்சது. ஆனா அப்படி இல்லை. என்னால மறக்கவும் முடியலை. என்னையே மன்னிக்கவும் முடியலை. இவ்வளோ நாள் போயிருச்சு. இனிமே என்னன்னு நாளை தள்ளி போட்டுட்டே இருந்துட்டேன்…”