தன் தாயை பார்க்க, அவரின் முகத்திலேயே அவனால் கண்டுகொள்ள முடிந்தது அவருக்குமே விஷயம் தெரியவில்லை என்று.
கசப்பாய் மனதுக்குள் என்னவோ அழுந்த தன் உணர்வுகளை அடக்கிக்கொண்டவன்,
“சித்தி. இது அவங்க குடும்ப விஷயம். நீங்க ஏன் கேள்வி கேட்கறீங்க?….” என்றுவிட்டான் பட்டென்று.
“ஹரி…” என கங்காவும், நம்பியும் அலற,
“என்னப்பா?…” என்றார் புவனா.
“இன்னுமாம்மா புரியலை. உங்களுக்கு கூட இது எதுக்குன்னு தெரியலை தான?…” என்று கேட்க,
“தெரியாது. அரைமணிநேரத்துக்கு முன்னாடி தான் வந்தா. வந்ததும் உங்கப்பாவோட உள்ள போய்ட்டா என்னவோ தொழில் விஷயமா பேசனும்ன்னு. நான் வேலையா இருந்தேன்…” என்றார் பரிதாபமாய்.
“அவசியம் இனிமே இந்த வீட்டுல நீ இருக்கனுமா என்ன? பொண்ணு மதிக்கலை. எப்படியும் போகட்டும். கட்டின புருஷன் மதிக்கலைன்னா. ரொம்ப நல்லா இருக்கு…” என்ற சுகன்யா,
“பரவாயில்ல மாமா. நான் கூட என் புருசன் தான் விஷம்ன்னு நினைச்சேன். இந்தா நீங்களும் அவருக்கு ஒட்டி பிறந்த பிறப்புன்னு காமிச்சிட்டீங்க இல்ல?…” என்றார் ஆற்றமாட்டாமல்.
“சுகன்யா…” என்றார் நம்பி அதட்டலுடன்.
“என்கிட்ட தான் இந்த சத்தம் எல்லாம் போட முடியும். சும்மா கத்தாதீங்க. இப்ப இவளுக்கு என்னத்துக்கு இவ்வளோ பணம்? அதுவும் அக்காக்கிட்ட கூட சொல்லாம….” என்றவர்,
“ஏன் கங்கா, இந்த நேரம் நாங்க வரலைனா உங்கம்மாக்கிட்ட சொல்லாமலே இதை வாங்கிட்டு கிளம்பிருப்ப. அதான?…” என்றதும் தலை குனிந்தாள் கங்கா.
“ச்சீ, நீயெல்லாம் பொண்ணு. என்னத்த சொல்ல? உன்னைய பேசி பேசி எங்களுக்கு தான் சலிப்பா இருக்கு…” என்றார்.
“சுகன்யா தேவையில்லாம பேசாத…” என்றார் நம்பி இறைஞ்சுதலுடன்.
“தேவையில்லாததை செய்யும்போது உங்களுக்கு பண்ணையம் பார்க்க பொண்டாட்டி வேணும், ஊர் மெச்ச சொல்லிக்க புள்ளை வேணும். ஆனா அவங்கக்கிட்ட எதையும் பேசிக்கவோ, கலந்துக்கவோ மாட்டீங்க. அதுவும் புவிக்கா வீட்டுல இருக்கும்போதே?…” என்றார் சுகன்யா.
“சித்தி, நீங்க அமைதியா இருக்க மாட்டீங்களா? அதான் சொல்லலையே. அதோடவே முடிஞ்சது. இதுல ஏன் சொல்லலைன்னு கேள்வி கேட்டு எங்களையும் குடும்பமா ஏத்துக்கோங்கன்னு கெஞ்ச சொல்றீங்களா? பேசாம இருங்க…” என்றான் மீண்டும் ஹரித்திரன்.
அவன் பேசவுமே நம்பியின் முகம் விழுந்துவிட கங்கா செய்வதறியாமல் பார்க்க, புவனா அழுதுவிட்டார்.
தான் வீட்டில் இருக்கையில் இப்படி தன்னை ஒதுக்குவதை போல் இருவரும் செய்ததை அவரால் ஜீரணிக்க முடியவில்லை.
அவரின் அழுகையை கண்ட சுகன்யாவிற்கு கோபம் தான் இன்னும் கூடியது. அவர் மீண்டும் பேசும்முன்,
“ம்மா, ஒரு முக்கியமான விஷயம் பேசலாம்ன்னு வந்தேன். இப்ப சூழ்நிலை சரியில்லை. அதுவும் இனிமே இந்த வீட்டுல வச்சு பேசற மாதிரி எனக்கும் ஐடியா இல்லை. முகம் கழுவிட்டு வாங்க. வெளில போவோம்…” என்று சொல்லியவன் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்துகொண்டான்.
“ஹரி, நான் என்ன பேசறேன்னு…” என்று வந்த தகப்பனை ஒரு பார்வை பார்த்தவன்,
“என்கிட்ட பேச என்ன இருக்கு? பெத்த தகப்பன்னு நான் நினைச்சா மட்டும் போதுமா என்ன? நீங்களும் மகன்னு நினைக்கனுமே?…” என்றவன்,
“அதோட இது உங்க சம்பாத்தியம். யாருக்கு குடுக்கனும், என்ன காரணத்துக்கு குடுக்கணும்ன்னு எங்கிட்ட சொல்லவேண்டிய அவசியம் இல்லை. அதனால நான் கேட்க விருப்பப்படவும் இல்லை…” என்று சொல்ல,
“ஹரி அப்பா பாவம். அவங்களை எதுவும் சொல்லாத…” என்றாள் கங்கா.
“இங்க பாவம் பார்த்து, உறவு பார்த்து இன்னைக்கு நானும் என் அம்மாவும் தான் அனாதையா நிக்கறோம். போதும், நீ வந்த வேலை முடிஞ்சதுல…” என்று அவளை பார்க்க கூட இல்லை ஹரித்திரன்.
“ஏன்டா இப்படி பேசற? நான் எங்கன்னு போய் சொல்ல? எனக்கு கஷ்டம்ன்னா இங்க தான வருவேன்?…” என்றாள் அழுகையுடன் கங்கா.
“ஏன், உனக்கென்ன கஷ்டம்? உன் புருஷன் பேங்க்ல தான வேலை பார்க்கான். நல்லா சொத்துபத்துன்னு இருக்கு தான? இதுல அப்பா வீட்டுல இருந்து வாங்கிட்டு போய் தான் உன் வீட்டுக்கு நிறையுது. இதை நாங்க நம்பனுமா?…” என்ற சுகன்யா,
“சரிம்மா அப்படியே இருக்கட்டும். அதை ஏன் ஒளிச்சு மறைச்சு செய்யனும்? உன்னை பெத்தவ தான இவங்க. நீ கஷ்டப்பட்டா பார்த்துட்டா இருக்க போறாங்க உன் அம்மா? இல்ல உன் தம்பி தான் விட்டுடுவானா? பணக்கஷ்டம்ன்னு யாரை ஏமாத்தற?…” என்றார் சுகன்யா கோபத்துடன்.
கங்காவிற்கு விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்ற பயம். அதனை வீட்டில் சொல்லவேண்டாம் என்று நம்பியிடம் அத்தனை கெஞ்சியதும் அவள் தான்.
இப்போது இப்படி அனைவரின் முன்பும் தான் செய்திருக்கும் காரியத்தில் நடுக்கத்துடன் நின்றாள்.
எதுவென்றாலும் முதலில் தாயிடம் தான் அவள் தலை சாய்ப்பதுண்டு. இன்று அவளால் அவர் முகம் காணவே முடியவில்லை.
புவனாவின் விசும்பலில் நம்பி அத்தனை தூரம் துடிதுடித்து போனார். மகள் வேண்டாம் என்று சொல்லிய பின் இதை எப்படி சொல்லியிருக்க கூடும்.
அதுவும் சிறிதுநாட்கள் சென்று என்றாவது நிச்சயம் பகிர்ந்திருப்பார் தான். ஆனால் அன்று முடியவில்லை.
குற்றவுணர்வுடன் மனைவியையும், மகனையும் மாறி மாறி பார்த்தவருக்கு அந்த நிலையை எப்படி கையாள்வது என்று தெரியவில்லை.
“என்னமோ அன்னைக்கு சொன்னீங்க, இப்படி அமைதியா இருந்து மகன் வாழ்க்கை போச்சுன்னு புலம்பினீங்க. இப்ப நீங்க என்ன பண்ணியிருக்கீங்க?…” என்றார் சுகன்யா மீண்டும்.
“நான் என்ன சொல்றேன்னு…” என்ற நம்பி பேசும்முன்,
“சித்தி, நீங்க நிறுத்தமாட்டீங்க….” என்று ஹரித்திரன் அவரை அதட்டவும் திடீரென்ற அந்த சத்தத்தில் தூக்கிவாரிபோட்டது சுகன்யாவிற்கு.
பயத்தில் உடல் உதறி ஹரித்திரனை குழந்தையென பாவமாய் பார்த்தவரின் கண்கள் நிறைய,
“அதான் சொல்றேன்ல, ஏன் சித்தி நீங்களும் திரும்ப திரும்ப பேசறீங்க?…” என்றவன் சுகன்யாவை தன் தோளில் சாய்ந்துக்கொண்டான் அவர் நின்ற விதம் கண்டு.
“எப்படிடா முடியுது உன்னால? என் மனசே ஆறலை. உன் வாழ்க்கை இப்படி இருக்கே? எதாச்சும் கவலை இருக்கா இந்த மனுஷனுக்கு? பேருக்கு பிள்ளை பெத்து வச்சிருக்கற மாதிரி, இப்படி இருக்காரே? நீ என்னடா பண்ண போற ஹரி?…” என்று அவர் விம்ம,
“ஏன், எனக்கு நீங்க, அம்மா, ஹரிணி எல்லாம் இல்லையா? விடுங்க. வேண்டாம்ன்னு விலக்கி வச்சா கெஞ்சக்கூடாது. சும்மா சும்மா அதையே பேசாதீங்க…”
“ஏன்டா பேச கூடாது? இத்தனைவருஷம் உங்கம்மா இங்க எப்படி வாழ்ந்தாங்க. உன்னை விடு. உன்கிட்ட சொல்லல. நீ சொன்ன மாதிரி அது உங்கப்பா சம்பாத்தியம். அவரோட பினான்ஸ் கம்பெனில இருந்து எடுத்து குடுத்துட்டார். செய்யட்டும். தாராளமா. ஆனா கட்டின பொண்டாட்டிக்கிட்ட சொல்லனுமா இல்லையா?…” என்றவர்,
“அதுவும் நடுவீட்டுக்குள்ள அந்த மனுஷி குத்துக்கல்லாட்டம் இருக்கும் போதே பணத்தை மறைச்சி எடுத்துட்டு போறான்னா இவளாம் என்ன மக?…” என்றார் ஆவேசத்துடன்.
சுகன்யாவின் பேச்சில் அதுவரை மருகி, தாயின் கண்ணீரில் நடுங்கிக்கொண்டு நின்ற கங்கா சட்டென,
“சித்தி இதுல நீங்க ஒன்னும் தலையிடவேண்டாம். என் அப்பாக்கிட்ட நான் வாங்கிட்டு போறேன். இதென்ன உங்க வீட்டு காசா என்ன?…” என்று வெடுக்கென்று கேட்டுவிட புவனா அதிர்ந்து பார்த்தார்.
“என்ன?…” என்று சுகன்யா நெஞ்சில் கை வைத்து நிற்க,
“கங்கா…” என்று அதட்டினார் நம்பி.
“இருங்கப்பா, எனக்கு என்னவும் தேவை இருக்கு, இல்லை. அது எதுக்கு இவங்களுக்கு? சித்தப்பா செய்யறது தப்புன்னு சொன்னா, இப்ப சித்தியும் நாட்டாமைத்தனம் தான பன்றாங்க. நான் உங்ககிட்ட தான வாங்கறேன். இது நம்ம குடும்ப விஷயம். இவங்க ஏன்?…” என்று சொல்லிக்கொண்டிருந்தவளை இழுத்து அறைந்திருந்தார் புவனா.
“ம்மா…” என அதிர்ந்துபோய் கன்னத்தில் கை வைத்து கங்கா நிற்க,
“உனக்கெல்லாம் மனசுன்றதே இல்லைல….” என்றவர் மீண்டும் இரண்டு அறை விட்டு,
“நீ ஹரி விஷயத்துல பண்ணின தப்பு தெரிஞ்ச அன்னைக்கே இந்த அறையை நான் குடுத்திருந்தா இன்னைக்கு எனக்கும் மேல உனக்கு அம்மா மாதிரி இருந்தவளை நீ இப்படி பேசியிருக்கமாட்ட….” என்ற புவனா,