“ஏற்கனவே ஹரி அவர் மேலையும், கங்கா மேலையும் கோவமா இருக்கான். தெரிஞ்சா செய்யவிடமாட்டான். புவனாவுக்கு தெரிஞ்சா மக வாழ்க்கைல இந்த மாதிரி பிரச்சனைன்னு நினைச்சு கவலைப்படுவா. அதான் நான் சொல்லலை…” என்றார் நம்பி.
“ஹரிணி கல்யாண பேச்சவார்த்தை முடிஞ்சதுல இருந்தே வீட்டுல அத்தை ஒரே கரைச்சல். எனக்கும் வேற வழி தெரியலை. அம்மாவுக்கு தெரிஞ்சா ஹரிக்கு விஷயம் தெரியும். அவன் செய்ய கூடாதுன்னு சொல்லி சத்தம் போட்டுடுவானோன்னு தான் சொல்லவேண்டாம்ன்னு சொன்னேன்…” என்றாள் கங்கா.
“இவளை…” என்று சுகன்யா மேலும் பேச வர,
“சித்தி, இந்த விஷயத்துல நீங்க தலையிட்டீங்க. அப்பறம் என்னை மறந்திருங்க…” என்றுவிட்டான் ஹரித்திரன்.
“ஹரி…”
“பின்ன என்ன சித்தி? அதான் சொல்றாங்களே நமக்கு தெரிஞ்சா பிரச்சனைன்னு…” என்றவன்,
“நாளைக்கே ஹரிணி மாப்பிள்ளைக்கு பொங்கல் சீர், தீபாவளி சீர், ஆடி சீர், அவ பிள்ளைகளுக்கான செய்முறைன்னு எல்லாம் இருக்கும். இவ புருஷன் இன்னும் புதுமாப்பிள்ளைன்னு போட்டிக்கு நிப்பான். இவளும் இங்க வந்து கேட்பா. அவளை பெத்தவர் செய்ய போறார். அதுவும் அவரோட சுயசம்பாத்தியம். நாம ஏன் கேட்கனும்?…” என்றான் ஹரித்திரன்.
“பேசாம? என்ன செய்ய நான்? இன்னும் என்னல்லாம் நீங்க செய்வீங்க? எனக்கு தெரியக்கூடாதுன்னு நினைச்சீங்க சரி. இதையே சாக்கா வச்சு இவளை அங்க கொடுமைப்படுத்தினா குடுத்துக்கிட்டே இருப்பீங்களா?…” என்றான் சுள்ளென்று.
“இல்லப்பா…” நம்பி தடுமாற,
“அவ தான் அங்க பேச துணிச்சல் இல்லாம இங்க வந்து வாங்க நிக்கிறா. ஏன் இவளுக்கு நீங்க எதுவுமே செய்யலையா என்ன?…” என்றவன்,
“நீ சொல்லுக்கா. உனக்கு அப்பா எதுவுமே செய்யலையா? இந்த வீட்டோட சொத்தை பிரிச்சா உன் பங்குக்கு எவ்வளோ மதிப்பு வருமோ அதையும் உன் பிள்ளைங்க பேர்ல பேங்க்ல போட்டு வச்சிருக்கார் தான உன்னை பெத்தவர்?…” என்று கேட்க கங்கா தடுமாற்றத்துடன் பார்த்தாள்.
“அவங்க கேட்கும் போது நான் என்ன செய்யட்டும் ஹரி?…” என்று கங்கா கண்ணீர் வடிக்க,
“ஹரி அப்பா மேல கோவப்படாதப்பா. அவ கண்ணை கசக்கிட்டு வந்து நிக்கும் போது என்னால இல்லைன்னு சொல்ல முடியலை….” என்று நம்பி கூற,
“ஆமாமா, பெத்த மக போதும். ஆனா மகன் இப்படி மொட்டையா நின்னாலும் அக்கறையோ, கவலையோ இல்லை. அதான? அங்க நீங்க பெத்த மகனுக்காக அந்த பொண்ணோட வீட்டுக்கு போய் பேசிருக்காங்க ஹரிணி மாமியார். ஆனா நீங்க இன்னும் வீம்போட இருக்கீங்க? அதான் மக ரூபத்துல பிடிச்சு ஆட்டுது போல?….” என்று சுகன்யா நம்பியை பேச அவர் திகைத்து போனார்.
“என்ன? ஹரிணி மாமியாரா? அந்த பொண்ணு வீடுன்னா கும்பகோணத்து பொண்ணா?…” என்றார் நம்பி நம்பமுடியாமல்.
“ஆமா, அங்க போய் அந்த பொண்ணோட அம்மாக்கிட்ட மல்லுக்கட்டி, கெஞ்சிக்கிட்டு நிக்கிறாங்க. நீங்கல்லாம் அப்பான்னு சொல்லாதீங்க…” என்று சுகன்யா கூற,
“என்ன சுகா சொல்ற? அவங்களுக்கு எப்படி தெரியும்?…” என்றார் புவனா.
என்ன நடக்கிறதென அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் கங்காவும் பார்த்து நின்றாள் அங்கே.
“இன்னைக்கு…” என்று சுகன்யா ஆரம்பிக்க,
“இருங்க சித்தி. இது நம்ம குடும்ப விஷயம். இப்ப பேசவேண்டாம்….” என்ற ஹரித்திரன்,
“உங்களுக்கு விருப்பம் இருந்தா வீட்டுல இருங்க. நாங்க ஒருமணி நேரம் கழிச்சு வர்றோம்…” என்று நம்பியிடம் சொல்லிவிட்டு ஹரித்திரன் புவனாவையும், சுகன்யாவையும் அழைத்துக்கொண்டு கிளம்பிவிட, கங்காவிற்கு சாட்டையடியாக இருந்தது.
“அவங்க குடும்பம்ன்னா அப்ப நான்?…” என்ற கங்கா,
“அப்பா நான் யாருப்பா?…” என்றாள் அழுகையுடன்.
“இந்த மாதிரியான சின்ன சின்ன கேள்வியையாவது உன் புருஷன் வீட்டுல கேளும்மா. நாளைப்பின்ன நீயும் நல்லா இருப்ப. உன் பிள்ளைங்களும் நல்லா இருப்பாங்க. நாங்களும் நிம்மதியா இருப்போம்…”
“அப்பா…” கங்கா அதிர்ந்து பார்க்க,
“நான் எவ்வளோ சொன்னேன். அம்மாக்கிட்ட, தம்பிக்கிட்ட பேசிடுவோம்ன்னு. கேட்டியா நீ? இப்ப பாரு, எத்தனை பெரிய பிரச்சனையில கொண்டுவந்து விட்டுட்ட?…” என்றவர்,
“அதுமட்டுமா நீ செஞ்சது? சுகன்யாவை பேச உனக்கு எப்படிம்மா மனசு வந்துச்சு? அந்த புள்ளை கலங்கி போய் நின்னு கண்ணீர் சிந்தினதை பார்க்கவே முடியலை. உனக்குள்ள இப்படி ஒரு குணமா கங்கா? இதை நான் எதிர்பார்க்கவே இல்லை….” என்றார்.
“இங்க பாரும்மா. எனக்கு நீ மட்டும் பிள்ளை இல்லை. இன்னும் ரெண்டு பசங்க இருக்காங்க. அவங்களையும் பார்க்கனும். அதோட இப்ப இந்த காசை குடுக்க முடிஞ்சதால குடுத்துட்டேன். நாளைக்கே ஹரி அவளுக்கு தான் செஞ்சாச்சுல. குடுக்காதீங்கன்னு சொன்னா நான் என் பையன் பேச்சுக்கு தான் மதிப்பு குடுப்பேன்….”
“அப்பா நீங்களா இப்படி சொல்றீங்க?…”
“ஆமாம்மா, பிழைக்க தெரியாத பொண்ணுன்னா பாவம் பார்த்து செய்யலாம். நீ உன் புருஷன்கிட்ட, மாமியார்கிட்ட நல்லபிள்ளையாக பெத்தவங்க கழுத்தை பிடிக்கிறது எந்த வகையில நியாயம்?…” என்றார் நம்பி.
“அப்பா நான் உங்க கழுத்தையா பிடிக்கறேன்….” கங்கா இன்னும் சத்தமிட்டு அழ,
“ஆமா, உனக்கு தெரியும் தான ஹரி வாழ்க்கைல எவ்வளோ பிரச்சனைன்னு. அதுவும் உன்னால பிரச்சனை. ஹரிணி கல்யாணத்துல அவங்க வந்தாங்கன்னு தெரியும்ல உனக்கு? இப்பவரைக்கும் ஒருவார்த்தை என்கிட்டையோ, அம்மாக்கிட்டையோ வாங்க அவங்களை பார்த்து பேசுவோம்ன்னு சொல்ல உனக்கு தோணுச்சா?…” என்றார் மகளிடம்.
கங்கா வாயடைத்து போய் தன் தந்தையை பார்த்து நின்றாள். உண்மை தானே தான் அப்படி எந்த முயற்சியும் எடுக்கவில்லையே என்று நினைத்து பார்க்க,
“ஆனா இப்ப இந்த குடும்பத்துக்குள்ள வந்த சம்பந்தியம்மா அந்த முயற்சி எடுத்திருக்காங்க. நல்ல அக்கான்னா நீ என்ன செஞ்சிருக்கனும்? இந்த பணத்தை இப்ப அம்மா, தம்பிக்கு மட்டுமில்ல, வேற யாருக்கும் தெரியாம என்கிட்ட பேசி வாங்க முடிஞ்ச உன்னால தனியா வந்து தப்பு யார் பேர்லன்னு சொல்லிருக்க முடியாதா கங்கா?….” என்றார்.
“அப்பா…”
“அப்பா தான். நீ தப்பு பண்ணினாலும் என்கிட்ட வந்து இப்படி தெரியாம நடந்திருச்சுன்னு சொல்லியிருந்தா அப்பவே அந்த பிரச்சனையை சரி பண்ணிருப்பேனே? அவங்க வீடு தேடி போய் சமாதானம் செஞ்சிருப்பேன். சுகன்யா சொல்ற மாதிரி இப்பவும் நான் உன்னை நினைச்சு என் பையனை விட்டுட்டேன் தான?…”
“அப்படியெல்லாம் இல்லைப்பா…” என்றவள்,
“எனக்கு இந்த பணமே வேண்டாம். இதனால தான இவ்வளோ பிரச்சனையும்….” என்று அங்கிருந்த டீப்பாயில் பணத்தை வைத்துவிட்டு கங்கா நம்பியை பார்க்க,
“அது உன் விருப்பம் கங்கா. வேண்டாம்ன்னா அதுவும் உன் முடிவு தான். நான் எதுவும் சொல்லமாட்டேன்….” என்றுவிட கங்காவின் முகமே மாறிவிட்டது.
“நீங்களும் என்னை தள்ளி வச்சிட்டீங்களா ப்பா…” என அழ,
“சிலநேரம் சில உறவுகள் விலகி நிக்கிறது கூட நல்லதும்மா. உனக்கு இப்ப புரியாது. உன்னோட சேர்ந்து காலத்துக்கும் தீரா சுமையை என் பொண்டாட்டி மனசுல நான் ஏத்திட்டேன். அது தான் என்னை இப்ப வரை அழுத்துது…” என்றவர்,
“நீ கிளம்பு. நான் இனி என் பையனோட விஷயத்தை பார்க்கனும். அவன் நல்லா வாழறதை பார்க்கவாச்சும் நான் இருக்கனும். கிளம்பும்மா…” என்று சொல்லிவிட்டு தளர்ந்துபோய் தானும் தன்னுடைய அறைக்குள் நுழைந்துகொண்டார்.
நம்பியின் மனதில் புவனாவின் பாராமுகமே மீண்டும் மீண்டும் வலம் வர தாங்கவியலா துயரத்தில் தவித்தார் மனிதர்.
மீண்டும் சிலநிமிடங்கள் கழித்து வெளியே வர அங்கே கங்காவும் இல்லை. அவள் வைத்த பணமும் இல்லை.
இகழ்ச்சியான புன்னகையுடன் மனம் வலிக்க தன் குடும்பம் வர காத்திருந்தார் சந்தனநம்பி.