நர்மதாவிற்கு இது என்ன தொடர்ந்து ஒவ்வொன்றாய் என்று தான் தோன்றியது.
அதற்காக வீடு தேடி மனம் மருகி வந்திருப்பவர்களை வெளியேற்றும் அளவிற்கு மனதில் ஈரமில்லாமலும், நாகரீகம் தெரியாமலும் இல்லை.
அதற்கென்றே அவர் மௌனம் காத்திருக்க சந்தனநம்பி தலை நிமிர முடியாமல் மனம் குன்றி அமர்ந்திருந்தார்.
“தண்ணி எடுக்கோங்க….” சம்ருதிக்ஷா அவரிடம் தண்ணீர் தம்ளரை நீட்டவும் அவள் குரலில் நிமிர்ந்தவருக்கு இன்னுமே சங்கடம்.
“எடுத்துக்கோங்க….” என்றார் நர்மதாவும்.
தலையசைத்து அதனை எடுத்துக்கொண்டவருக்கு ஒருமிடறு கூட விழுங்க முடியவில்லை.
நடு கூடத்தில் மாட்டப்பட்டிருந்த தீக்ஷாவின் தகப்பனார் புகைப்படத்தை பார்த்தவருக்கும் மனமெல்லாம் இப்போதும் பதறியது.
“தண்ணியை குடிங்க…” என்றார் நர்மதா.
தீக்ஷாவிற்கு பேசவே விருப்பமில்லை. அன்றைக்கு அவள் விடுமுறை எடுத்திருந்தாள் முக்கியமான விஷயம் பேசவேண்டும் என்பதற்காக.
இப்படி திடீரென நம்பியும், புவனாவும், தணிகைவேலும் அவர்களுடன் சுகன்யாவும் வருவார்கள் என நினைக்கவே இல்லை.
“என்னம்மா, உள்ள கூப்பிடமாட்டியா?…” என புவனா கேட்கவும் செய்வதறியாமல் நின்றவளுக்கு தன் தகப்பனை அவர்கள் நடத்தியவிதம் தான் ஞாபகத்தில் வந்தது.
“வீட்டுக்கு வந்தவங்களை எப்படி வரவேற்கனும்ன்னு அம்மாவும், அப்பாவும் சொல்லிக்குடுத்திருக்காங்க. உள்ள வாங்க…” என்று பளிச்சென்ற பதிலோடு அவர்களை அழைக்க அங்கேயே நம்பி நொறுங்கி போனார்.
இத்தனைவருடம் இறுமாந்திருந்த தன் கர்வத்தை சாய்த்துவிட்டதை போலிருந்தது தீக்ஷாவின் பதில்.
“இது அழகு, இப்படித்தான் பேசனும். சும்மா மருகி மருகி நிக்காம…” என சில்லாகிப்புடன் உள்ளே நுழைந்தார் சுகன்யா.
புவனா, சுகன்யாவை போல நம்பியால் அத்தனை இலகுவாய் இருக்க முடியவில்லை.
வந்ததில் இருந்து சங்கடத்துடன் குறுகி தான் அமர்ந்திருந்தார். அதுவும் நர்மதாவின் தீட்சண்யமான பார்வை.
அவரால் அதனை எதிர்கொள்ள முடியவில்லை என்பது தான் நிதர்சனம். இரண்டுவார்த்தை திட்டி பேசியோ, முறைத்தோ, பிடித்தமின்மையையோ ஏதாவது ஒன்றை காண்பித்தால் கூட மனது சமன்படும் போலிருந்தது.
இன்னும் மகனிடம் கூட சொல்லவில்லை. கிளம்புகிறோம் என்றோ, கிளம்பி வந்திருக்கிறோம் என்றோ எதுவும் கூறவில்லை.
கங்கா வந்து சென்றபின்னர் வீடு திரும்பிய ஹரித்திரன் தீக்ஷாவின் வீட்டிற்கு சென்று பேசிவிட்டு வந்ததை பற்றி சொல்லியிருக்க சுகன்யா அத்தனை பேச்சுக்கள்.
“இப்படி பிள்ளைக்கு எப்படி இருக்கனும் நீங்க? பெத்த மனசுன்னு ஒன்னு வேண்டாமா? அவனை நீங்க யோசிக்காம வேற யாரு யோசிப்பா? உங்களோட சம்பந்திக்கு இருக்கற அக்கறை கூட உங்களுக்கு இல்லைன்னா பிள்ளை மனசு என்ன பாடுபடும்?….” என்ற சுகன்யா,
“இல்ல காலம் பூரா அவன் உங்க மகனா மட்டுமே இருந்துடட்டும், மிச்சம்ன்னு நினைச்சிட்டீங்களா? ஏனா உங்களை நம்பமுடியாது. உங்க பையன் சம்பாத்தியமும் கேட்க ஆளில்லாம இருந்தா அதையும் தூக்கி மூத்தமகளுக்கு செலுத்தலாம் பாருங்க? ஏனா ஹரிணி மாமியா எல்லாம் ஒத்த வார்த்த கேட்டாலும் நாம சுருக்குன்னு விழுந்துடனும். அது மனுஷி…” என்றிருந்தார்.
அதிலேயே, அந்த வார்த்தைகளில் மடிந்து போகாத குறையாக தளர்ந்துவிட்டார் சந்தனநம்பி.
அதற்குமேல் மகனின் அளவான பேச்சும், மனைவியின் பாராமுகமும் அவரை வெகுவாய் பாதித்தது.
“மன்னிச்சிக்க புவனா. நிஜமா இப்படி நடக்கும்ன்னு நான் நினைக்கலை. தப்பு தான். நான் சொல்லனும்ன்னு நினைச்சாலும் கங்கா விடலை. ஆனாலும் நான் சொல்லியிருக்கனும்…” என்று எத்தனையோ விதமாய் பேசி பார்த்துவிட்டார் இந்த ஒருவாரத்தில்.
புவனாவிடம் பெரிதாய் அதற்கான பிரதிபலிப்பு எதுவுமில்லை. நம்பிக்கு முகம் கொடுக்கவே இல்லை.
மனதெல்லாம் அந்த ஒற்றை செயலில் ரணமாகி இருந்தது அவருக்கு. ஜீரணிக்க முடியாத பாரம்.
பத்துமுறைக்கு ஒருமுறை மட்டுமே ஒற்றை வார்த்தையில் பதில் வரும். அதுவும் அவரின் நிழலை கூட நெருங்காமல்.
முகம் பார்த்து பேசாமல், அவரிருக்கும் இடத்தில் இல்லாமல் என்று தவிர்த்தவரை சுகன்யா அழைக்க வந்திருக்க அப்போதுதான் அவருக்கே தெரிந்தது நர்மதாவின் வீட்டிற்கு செல்கிறார்கள் என்று.
“ஏம்மா நான் வரவேண்டாமா? என்னம்மா நீயும்? அவ தான் கோவமா இருக்கான்னா நீ சொல்லவேண்டாமா?…” என்றார் சுகன்யாவிடம்.
“எதுக்கு? உங்க மக என்னை பேசினதே கல்யாண விருந்து வச்ச மாதிரி குளிர்ந்து போச்சு. நான் உங்ககிட்ட பேசி அதுக்கும் என்னை நீங்க ஏசி, எனக்கு வாங்கி கட்ட தெம்பில்லை. என்னமோ என் உசுருல தெம்பிருக்கறதுக்குள்ள ஹரிக்கு ஒரு நல்லதை பார்த்துடமாட்டோமான்னு தான் இம்புட்டும்…” என்றிருந்தார் சுகன்யா.
“நீயுமாம்மா இப்படி பேசற? அவ தான் அறிவுகெட்டத்தனமா பேசினா நீ எங்களுக்கு யாருமில்லைன்னு ஆகிடுமா?…” என நம்பி கேட்டிருக்க,
“ஏன் சொல்லித்தான் பாருங்களேன்….” என்றவர்,
“சரி, சொல்லிக்கோங்க. எனக்கு நீங்க சொல்றது எல்லாம் பொருட்டே இல்லை. புவனாக்காவும், ஹரி, ஹரிணியும் சொல்லட்டும். ஆனா எம்புள்ளையும், எங்கக்காவும் சொல்லமாட்டாங்களே…” என்றார் நிமிர்வுடன் சுகன்யா.
“அம்மாடி, என்னம்மா நீ. புரிஞ்சுக்கோம்மா. அன்னைக்கு நடந்தது முடிஞ்சு போனது. இப்ப நானும் வர்றேன். அவங்க வீட்டுக்கு வந்து பேசறேன்…” என்று சொல்ல,
“என்ன மாமா, சம்பந்தியம்மா வேற அங்க போய் பேசிருக்காங்க. நீங்க பேசாம இருந்தா மதிப்பில்லாம போகும்ன்னு கண்டும் வரீங்களா?…” என்று கேட்டுவிட துடித்து போனார் நம்பி.
“ஏன்ம்மா இப்படி எல்லாம் பேசற? அப்படியா நான் என் பையன் மேல அக்கறை இல்லாம இருப்பேன்?…” என்றதும்,
“இருக்கீங்களே? எம்புட்டு பிரச்சனை இருக்கட்டும். நீங்க என்ன செஞ்சிருக்கனும்? மண்டபத்துல அந்தம்மாவை பார்த்ததும் எங்க என்னன்னு விசாரிச்சு நீங்க போகாட்டியும் பொம்பளைங்க எங்களை அனுப்பி நிலவரத்தை பார்த்துட்டு வர சொல்லிருக்கலாம்ல?…” என்றார் சுகன்யா.
அந்த கேள்வியில் நம்பி திணறித்தான் போனார். இதற்கு பதில் சொல்ல முடியாமல் பேந்த விழிந்தவரை பார்த்த சுகன்யா,
“சரி அப்பைக்கும் இல்ல. ஹரி சொன்னப்பையாச்சும் மறுநாத்தே போவனும்ன்னு ஏன் சொல்ல தோணலை? ஒருவார்த்தை கேட்டீங்களா என்ன? இல்லைல?…” என்றார் அடுத்ததாய்.
கங்காவிடம் தான் கேட்ட கேள்விகள் எல்லாம் இப்போது அவருக்கே திரும்ப இன்னுமே தளர்ந்து போய் புவனாவை பார்த்தார்.
“நீங்க ஒன்னும் பண்ணமாட்டீங்கன்னு தான் நானே அக்காவை கிளம்ப சொல்லி வந்துட்டேன். நாங்க போய்ட்டு வர்றோம்…” என்றதும் பதறி போனவர்,
“இல்லம்மா, இல்ல. நான் வேணும்ன்னு இல்லை. முதல்ல இங்க புவனாவை சமாதானம் செய்யலாமேன்னு பார்த்தேன்…”
“நீங்க என்ன கல்யாணத்துக்கா அழைக்க போறீங்க ரெண்டுபேரும் சகஜமானதும் சந்தோஷமா போய் பார்த்து பேசறதுக்கு? உங்க பொண்டாட்டிக்கு வருத்தமே புள்ளையை நீங்க பார்க்கலையேன்னு தான். முதல்ல எது முக்கியமான விஷயம்ன்னு பாருங்க. பொறவு நீங்க சமாதானம் ஆகிக்கலாம்…” என்றவர்,
“பையனுக்கு தாய்மாமா தான இந்த வரனை பேசினது. அவருக்கு போன் போட்டு வர சொல்லுங்க. கொஞ்சம் பேச்சு வாங்காமையாச்சும் தப்பிப்பீங்க…” என்று சொல்லி தணிகைவேலையும் அங்கே வரும்படி சொல்லி வரவழைத்தனர்.
இப்போது அனைவரும் அமர்ந்திருக்க தணிகைவேல் தான் நர்மதாவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
சுகன்யாவும், புவனாவும் தீக்ஷாவிடமும், நர்மதாவிடமும் மாறி மாறி பேச நம்பிக்கு தன்னை அம்போவென்று விட்டுவிட்டதை போல் உணர்வு.
வந்ததும் தான் கேட்ட மன்னிப்பிற்கு நர்மதாவின் ஒற்றை பார்வை ஆயிரம் அர்த்தத்துடன் அவரை கிழித்தது.
கேட்க அத்தனை கேள்விகள் இருந்தது. அன்றை போல தங்களாலும் கேட்டுவிட முடியும் தான்.
ஆனால் முதுகொடிந்து தள்ளாத வயதில் வந்தவரை போல குற்றவுணர்வில் தலை தூக்க முடியாமல் அமர்ந்திருப்பவரை வார்த்தைகளால் வகுந்தாட முடியவில்லை.
அமைதியாய் இருந்தார் நர்மதா. தீக்ஷாவின் முகம் தான் இவர்கள் ஏன் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறார்கள் என்றிருந்தது.
“அப்பறம், நாங்க எதுக்கு வந்திருக்கோம்ன்னா…” என தணிகைவேல் ஆரம்பிக்க,
“இது என் பொண்ணோட வாழ்க்கை. அவளோட முடிவு…”என்ற நர்மதா,
“இப்ப வந்து இப்படி பேசினா மட்டும் என்ன மாறிடும்? அதனால திரும்ப பழசை பேசவேண்டாம்…” என்று சொல்லிவிட,
“அது உங்க பெருந்தன்மைங்க. தப்பு எங்க மேலன்னு தெரிஞ்சப்பவே நாங்க வந்து பேசியிருக்கனும். அப்போ இருந்த சூழ்நிலை…” என்ற புவனா,
“மன்னிச்சிடும்மா…” என்றார் தீக்ஷாவிடமும்.
“ப்ளீஸ், திரும்ப திரும்ப இதையே கேட்காதீங்க. சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. ரொம்ப சங்கடமா இருக்கு எங்களுக்கு….” என்றவள்,
“சொல்லபோனா நீங்க எல்லாம் இப்படி வந்து கேட்கனும்ன்னு நாங்க நினைச்சதே இல்லை. இதனால எங்களுக்கு எதுவும் திரும்ப கிடைச்சிடாது. வருத்தப்பட்டு பேசறீங்க. விட்டுடுங்க. ஏற்கனவே என்னவோ பாவம் பண்ணிட்டோம் போல. அதான் அனுபவிச்சிட்டோம். திரும்பவும் உங்க கண்ணீர் எங்களோட பாவத்தை கூட்டாம இருந்தா போதும்…” என்று சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்துகொண்டாள்.
ஹரித்திரனிடம் கோபம் கொண்டு பேசியவளால் புவனாவின் கண்ணீரை எதிர்கொள்ளமுடியவில்லை. மனதெல்லாம் பாரமாகிவிட்டது அவரின் அழுகையை கண்டு.
மீண்டும் மீண்டும் இந்த வருகை எதை நோக்கி தங்களை செலுத்துகிறது என்று புரிந்தது.
ஆழ்ந்த பெருமூச்சுடன் அந்தநொடி தன்னை சமநிலைக்கு கொண்டுவர நினைத்தாள் தீக்ஷா.