முழுதாய் இரண்டுநாட்கள் வேலை காரணமாய் அவனுடன் நாடு கடந்து வந்தாகிவிட்டது.
வந்த இடம் முன்பே ஹரித்திரனுக்கு பரிட்சயம் என்பதனால் அவனால் அத்தனை இலகுவாய் அங்கே செயல்பட முடிந்தது.
அவர்கள் குழுவில் ஹரித்திரனுடன் வந்திருந்தது தீக்ஷா, வினோதா, குணால் மேலும் இருவரும் சேர்ந்திருக்க வினோதா உடன் இருப்பதனால் தீக்ஷாவிற்கு இன்னும் தைரியமாக இருந்தது.
“உன்னை கூட்டிட்டு வந்து தான் தான் அல்லல் படறேன். வேலை, வேலை விட்டா ரூம்ன்னு இருக்கறதுக்கு எதுக்கு வரனும்? என்னையும் விடமாட்டேன்ற….” என வினோதா ஒரு நாளிலேயே நொந்துகொண்டாள்.
அங்கே சென்னையில் இதெல்லாம் தெரிந்திருக்கவில்லை வினோதாவிற்கு. அங்கே தீக்ஷா வரவேண்டும் என்றெல்லாம் இல்லை.
வெளியே தங்கி இருப்பதனால் அவளே நினைத்தவிதமாய் சென்று வந்துவிடுவாள்.
மற்ற நிகழ்ச்சிகள், அலுவலக ஒருநாள் பயணங்கள் இப்படி எனும்பொழுதும் வினோதாவிற்கு பெரிதாய் எதுவும் தீக்ஷாவை பற்றி தெரிந்திக்கவில்லை.
வீடு, வீடு விட்டால் ஆபீஸ், மற்றபடி அங்கே என்றாவது அவளுடன் வெளியே. அதுவும் தங்கையை அழைத்துக்கொண்டு வருவாள் என்பது வரை மட்டுமே தெரிந்திருந்தது.
இங்கே வந்ததில் இருந்து தலையை பிய்த்துக்கொள்ளாத குறை தான் வினோதாவிற்கு.
“இப்ப வரைக்கும் இவ லவ் மேட்டரை என்கிட்ட பேசினதோ, சொன்னதோ ஏன் ஹரி பாஸை முன்னாடியே தெரியும்ன்னு கூட சொன்னதில்லை. ஆனா நான் மட்டும் எல்லாம் சொல்லனும்…” என்று பல்லை கடித்து புலம்ப தான் முடிந்தது.
இன்னும் நான்கே நாட்கள். கிளம்பிவிடவேண்டும். மீண்டும் இப்படி ஒரு வாய்ப்பு அமையுமா என்பது தெரியாது.
அதுவே வினோதாவை கோபப்படுத்த அன்று அலுவலக பணி முடிந்து அனைவரும் அறைக்கு திரும்பியிருக்க குணாலும், மற்ற இரு பெண்களும் வெளியே கிளம்பினார்கள்.
“ருதி, நானும் அந்த பொண்ணுங்களோட போய்ட்டு வரேன்…” என்று வினோதா கிளம்ப,
“அப்ப நான்?…” என்றாள் தீக்ஷா.
“வர்றதுன்னா வா. என்னால முடியாது. நான் போறேன்….” என்று படக்கென்று சொல்ல தீக்ஷாவின் முகம் மாறிவிட்டது.
“ஏன்டி இப்படி இருக்க? ஏன் எங்களோட வந்தா என்ன?…” என வினோதா விட்டு செல்லவும் முடியாமல் கேட்க,
“என்ன பேசற ருதி? சொந்த ஊரை விட்டுட்டு இங்க வர போறியா?…” என்றதும் தலையசைத்தவள்,
“அதுமட்டும் எங்க சொந்தஊரா என்ன? அதையே வெறுத்து வேண்டாம்ன்னு தான விலகி வந்துட்டோம். பிழைக்க, வாழ எந்த ஊரா இருந்தா என்ன? எந்த நாடா இருந்தா என்ன?…” என தீக்ஷா சொல்லவும் வினோதாவிற்கு வருத்தமானது.
“சொந்தமா? அப்படி யார் இருக்கா?…” எனும்பொழுதே தீக்ஷாவின் விழிகள் கலங்கியது.
“அதுவும் இல்லை. யாருமே இல்லாம அங்க ஏன் இருக்கனும்? அதோட நாங்க இருந்தா நிறையபேருக்கு மனசுக்கு கஷ்டமா இருக்கும். வருத்தப்பட்டு எங்க நிலைமைக்கு அவங்க காரணம்ன்னு வந்து வருந்திட்டு போறது இன்னுமே எங்களை கஷ்டப்படுத்துது…” என்று சொல்ல வினோதாவிற்கு புரியவில்லை.
“யார் வந்தா? உன் பெரிப்பா வீட்டுலையா?…”
“ம்ஹூம். அவங்களோட இப்ப எந்த டச்சுமே இல்லை. இது வேற. புதுசா பழசை புதுப்பிக்க பார்க்காங்க…” என்றவள்,
“சிலநேரம் அவங்க கேட்கிற மன்னிப்பும், கண்ணீரும் கூட பலமிழக்க செய்யறதும் இல்லாம அவங்களை அப்படி பார்க்கவும் கஷ்டமா இருக்கு…” என்று சொல்ல,
“தலையே சுத்துது. முழுசா தான் சொல்லேன்…” என்ற வினோவின் சத்தத்தில் தீக்ஷா தெளிந்தாள்.
“வாட்?…” என்ற ஹரித்திரன் கேள்வியோடு, புருவங்க இடுங்க வினோதாவை அழுத்தமாய் பார்த்தான்.
“சம்ருதிக்ஷாவுக்கு இங்க வேற யாரும் இருக்காங்களா என்ன? ப்ரெண்ட்ஸ், ரிலேட்டிவ்ஸ் இப்படி?…” என்று குணால் கேட்க,
“இருக்கலாம் ஸார். அதெல்லாம் சொல்லுவாங்கா? பர்சனல்…” என வினோதா வாய் அடங்கவில்லை.
அவளை முறைத்த ஹரித்திரன் குணாலிடம் பார்த்து போய்விட்டு வரும்படி சொல்ல மற்ற இரு பெண்களும் ஹரித்திரனை அழைத்தனர்.
‘இதென்ன ட்ராக் புதுசா?’ என்று தான் தோன்றியது அவர்கள் அவனை அழைத்த விதம் கண்டு.
ஹரித்திரன் பிடிகொடுக்காமல் பேச அந்த பெண்களும் குழைந்து அழைத்து பார்த்துவிட்டு வேறு வழியின்றி கிளம்ப வினோதாவிற்கு இத்தனைநாட்கள் இதனை எப்படி கவனிக்காமல் விட்டோம் என்றிருந்தது.
அப்படி ஒரு உற்சாகம். தீக்ஷாவை வெறுப்பேற்ற புதிதாய் ஒரு விஷயம் சிக்கிவிட்ட திருப்தியோடு நிம்மதியாய் அவர்களுடன் சென்றாள்.
அவர்கள் கிளம்பியதும் தானும் அங்கிருந்த ரூப்டாப் கார்டனுக்கு சென்றமர்ந்தான் ஹரித்திரன்.
மனது தீக்ஷாவை தேடி செல்ல சிலநொடிகளில் அவளை பார்ப்பதென்ற முடிவிற்கு வந்தவன் அவளை அழைக்கும்முன் தானே அவ்விடம் வந்து சேர்ந்தாள் தீக்ஷா.
அத்தனை உயரத்தில் கட்டப்பட்டிருந்த தோட்டத்தில் உணவகமும் அடங்கி இருக்க கொள்ளை அழகாய் இருந்தது வடிவமைப்பு.
தீக்ஷாவின் பார்வை அங்கிருந்தவர்களை சுற்றி வட்டமிட ஹரித்திரனும் அவ்வட்டத்துனுள் அடைபட்டான்.
செல்லவேண்டாம் என்று மனது மறுக்க கால்கள் புத்தியின் வழி செயல்பட்டு அவனுக்கருகில் சென்று, சட்டென்று சுயம்பெற்று தள்ளி வேறிடத்தில் அமர்ந்துகொள்ள செய்தது.
“ஊஃப், இவளை…” என பல்லை கடித்தவன் அவள் வரவில்லை என்றால் என்ன தானே செல்வோம் என எழுந்து செல்ல அவன் அருகாமையை தீக்ஷா உணர்ந்தாலும் முகத்தில் காண்பித்துக்கொள்ளவில்லை.
“நீ ஏன் வினோதா கூட போகலை தீக்ஷா?…” என்றான் அவளிடம்.
“போக விருப்பம் இல்லை. அதான் போகலை….” பட்டென்று பதில்.
“இன்னொரு சான்ஸ் எப்போ கிடைக்குமோ? பார்க்க முடியற நேரம் பார்க்கலாம் தானே?…”
ஹரித்திரன் சொல்லவுமே அவன் புறம் தீர்க்கமாய் புன்னகையுடன் திரும்பி பார்த்தாள் தீக்ஷா.
“ஏன் கிடைக்காது? நான் உருவாக்கிப்பேன். இங்க இல்லைன்னாலும் ஏதோ ஒரு நாடு. கண்டிப்பா என் குடும்பத்தோட வந்து செட்டிலாவேன்…” என்றாள் உறுதியாய்.
“ஓஹ், வாவ்…” என்று கைதட்டியவன் முகத்தில் உண்மைக்கும் கேலி, கிண்டல் என்பது இல்லவே இல்லை.
“என்ன பார்க்கற? உன்னோட முயற்சிக்கு வாழ்த்துக்கள்…” என்றவனை நம்பமுடியாமல் அவள் பார்க்க,
“எனக்கும் ஒன்னும் பிரச்சனை இல்லை. ரெண்டுபேரும் ஒரே மாதிரி வொர்க். ஸோ, நானும் வந்திடுவேன்…” என சொல்லி புன்முறுவல் பூக்க,
“வாட், நீங்களா? நீங்க எதுக்கு?….” என்று முறைத்தவளை கண்டுகொள்ளவே இல்லை.
“வீட்டோட மாப்பிள்ளைன்னு தலையில எழுதியிருந்தா மாத்த முடியாது பாரு. அதான்…” என்றவன்,
“நான் ஏற்கனவே என் பக்க விளக்கம் எல்லாம் குடுத்துட்டேன். இதுக்கு மேலையும் என்ன பிடிவாதம் உனக்கு?…” என விளையாட்டை கைவிட்டு அவளிடம் நேரடியாக கேட்க சட்டென்று மௌனமானாள் தீக்ஷா.
“என்ன நினைக்கிற நீ? உங்கம்மா உன்னோட விருப்பம்னு சொல்லியிருக்காங்க. என் மாமாவும், அம்மாவும் என்கிட்ட கேட்கிறாங்க. என்ன செய்யலாம் சொல்லு….”
“எதுவும் செய்யவேண்டாம். முக்கியமா உங்க வீட்டுல இருந்து மன்னிப்புன்னு கேட்டு யாரும் வரவேண்டாம். இதுல நீங்க என்ன பண்ணுனீங்கன்னு எதுக்கு இத்தனை மன்னிப்பு? தவறுதலா புரிஞ்ச காரணத்தால கல்யாணம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்க…”
“அதுக்கு உங்க பக்க விளக்கம் ரொம்பவே யோசிக்கற மாதிரி தான் இருந்துச்சு. இதுவே உங்க வீட்டுல அப்படி நடந்திருந்தா யோசிங்கன்னு சொன்னீங்க. அப்படி யோசிச்சதால தான் உங்களை எதுவுமே யாரும் சொல்லலை…” என்றவள்,
“எங்கம்மாவும், நானும் யோசிச்சதெல்லாம் என்ன விஷயம்ன்னு தீர விசாரிக்காம நீங்க, உங்க வீட்டுல சொல்லவும் வீட்டுக்கு வந்தவங்ககிட்ட அப்படி நடந்துக்கிட்டது போல மறுபடியும் நடந்தா அப்படின்ற ஒரு கேள்வியை மட்டும் தான். அது அதோட முடிஞ்சது….”