“அட இங்க இருக்கீங்களா?…” என்ற வினோதாவின் குரலில் இருவருமே திடுக்கிட்டு திரும்பி பார்த்தனர்.
மெல்லிய விளக்கொளியில் தீக்ஷாவின் கண்ணீர் வினோதாவின் பார்வைக்கு புலப்படவில்லை.
அதைவிட வினோதா அதனை கவனிக்கவில்லை. வெளியே சென்று வந்ததில் அத்தனை உற்சாகத்தில் இருந்தாள்.
“நீங்க மட்டும் என்ன தனியா வர்றீங்க?…” என ஹரித்திரன் அவர்களுடன் சென்றவர்கள் வருகிறார்களா என வினோதா வந்த திசையில் திரும்பி பார்த்தான்.
“அவங்க அந்த ஷாப்க்குள்ள போயிருக்காங்க. நான் தான் ரூம் பக்கம் தானேன்னு வந்துட்டேன்…” என்ற வினோதா,
“என்கூட வரமாட்டேன்னு சொன்ன? இப்ப பாஸ் கூட மட்டும் வந்திருக்க? என்னை விட பாஸ் உனக்கு முக்கியமா போய்ட்டாங்க…” என வேண்டுமென்றே கேட்க,
“ப்ச், வினோ…” என்றவள் குரலில் தெளிவில்லை.
“என்னாச்சு, ஒருமாதிரி இருக்கு உன் வாய்ஸ்…” என்று அங்கேயே மீண்டும் கேட்க,
“கிளைமேட் சேஞ்ச்…” என்று ஹரித்திரன் சொல்லவும்,
“அப்போ அது சரியா தான் இருக்கும்…” என்றவளை அவன் முறைத்தான்.
“ஓகே, ஓகே பாஸ்…” என்றவள்,
“சரி, நீங்க பேசிட்டிருங்க. நான் ரூம்க்கு போறேன்…” என வினோதா கிளம்ப,
“இரு வினோ, நானும் வர்றேன்…” என்ற தீக்ஷாவும் ஹரித்திரனை ஒரு பார்வை பார்த்தாள்.
“போ…” என்று மெல்லிய சத்தத்துடன் அவன் தலையசைத்து புன்னகைக்க, தீக்ஷாவிற்கு அவன் பேசிய வார்த்தைகளும் இந்த புன்னகை முகமும் தான் மனதில் நின்றது.
அப்போதும் வினோதா கடுகடுவென்று தான் பார்த்தபடி என்னென்னவோ பேசிக்கொண்டே வர எல்லாவற்றிற்கும் தீக்ஷா தலையசைத்து ம்ம் சொல்லியதோடு சரி.
பெரிதாய் சிரத்தையாக எல்லாம் அதனை அவள் காது கொடுத்து கேட்டுக்கொண்டதாகவோ, உள்வாங்கியதாகவோ தெரியவில்லை.
‘ஊடல் போல?’ என்று நினைத்துக்கொண்ட வினோதாவிற்கு அறைக்கு பொறுமை இல்லை.
“ஆமா என்ன திடீர்ன்னு பாஸ் கூட அவுட்டிங்? நாங்க கூப்பிட்டா எல்லாம் வரமாட்டேன்னு சொன்ன…” என்றாள் சற்றே கிண்டலுடன்.
“ஹாங், என்ன?…” தீக்ஷா திகைக்க,
“வரலை, வர தோணலை அப்படி இப்படின்னு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லாம இந்த ஒத்தை காரணத்தை மட்டும் வச்சுக்கிட்டு என்னை வெளிய போன்னு சொன்னியே அதை கேட்டேன்…” என்றதும் பெருமூச்சுடன் தலையசைத்த தீக்ஷா,
“இது ஒரு விஷயமா? சும்மா வெளில நின்னுட்டு இருந்தேன். பாஸ் வந்தார்….”
“ஹ்ம்ம், சரி…”
“பார்த்ததும் நீங்க போகலையான்னு என்னை கேட்டார்…”
“அப்படியா?…” அதிசயம் போல வினோதா புருவம் உயர்த்த,
“ஆமா, நான் போகலன்னு சொன்னதும் சரி வாங்க ஒரு வாக் போகலாம்ன்னு சொல்லவும் வேற வழி இல்லாம கிளம்பவேண்டியதா போயிருச்சு…”
“அட பாரேன். நான் கூட என்னவோன்னு நினைச்சுட்டேன்…” என்று வினோதா சொல்லவும் தீக்ஷா அவளின் பார்வையை சந்திப்பதை தவிர்த்தாள்.
“அது நம்மோட டீம் மேனேஜ். அவர் சொல்லி வேண்டாம்ன்னு சொன்னா மரியாதையா இருக்காதுல…”
“உன்னை பத்தி தெரியும்டி என் செல்லாக்குட்டி…” என்ற வினோதா தீக்ஷாவின் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு,
“ஆனா இந்த பாஸ் என்னமோ நீ எங்களோட வராதது தெரியாத மாதிரியே உன்கிட்டயும் நாங்க விட்டுட்டு போய்ட்டோமான்ற டோன்ல கேட்டிருக்கார் பாரு…” என்றதும் தீக்ஷா திடுக்கிட,
“ஆமா ருதி. நாங்க கிளம்பும்போது அவரும் பார்த்துட்டு தான் நின்னார். அப்பறம் என்ன உன்கிட்ட வேற தனியா கேள்வி. ஒன்னும் சரியில்லை. நீ கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெய்ண்டெய்ன் பன்றது பெட்டர்…” என்றாள் வேண்டுமென்றே.
“ஹ்ம்ம்…” என்று ஒன்றும் சொல்லமுடியாமல் தீக்ஷா இங்குமங்கும் தலையை ஒருவிதமாய் ஆட்டி வைக்க,
“அப்பறம் இன்னொரு விஷயம் ருதி. உன்கிட்ட சொல்லனும்ன்னு தான் வேகமா ஓடி வந்தேன்…” என ரகசியம் போல குரலை கிசுகிசுப்பாய் மாற்ற,
“ரூம்ல நாம ரெண்டுபேர் தானே? அப்பறம் என்ன ரகசியம்?…” என்றாள் தீக்ஷா.
“சொல்ற விஷயம் அப்படியானது. இதெல்லாம் ரகசியமா இந்த டோன்ல சொன்னா தான் கிக்…” என்று சொல்லிவிட்டு,
“நம்மளோட வந்திருக்காங்களே குணால் ஸார் டீம் கேர்ள்ஸ். அவங்க ரெண்டுபேர்ல ஒரு பொண்ணு நம்ம பாஸ் மேல செம்ம லவ் போல….” என்று கூறி தீக்ஷாவின் முகத்தையே அத்தனை ஆவலாய் பார்க்க,
“ஓஹ்…” என்றுமட்டுமே தீக்ஷாவின் பிரதிபலிப்பாய் இருந்தது ஏமாற்றத்தை விளைவித்தது வினோதாவிற்கு.
“என்ன நீ? கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் இல்லாத மாதிரி ஓஹ் மட்டும் சொல்ற?…”
“இன்ட்ரெஸ்ட் தான். ஆனா வேற என்ன செய்யனும்? அவங்களுக்கு பாஸை பிடிச்சிருக்கு போல?…”
“பொறுப்பே இல்லாம பேசாத நீ. இங்க இருந்து கிளம்பறதுக்குள்ள ப்ரப்போஸ் பண்ணி மோதிரம் மாத்திட்டு தான் கிளம்புவாங்கலாம். எப்பவேணா என்ன வேணா நடக்கலாம். நீ என்னடான்னா செத்தவன் கையில வெத்தலை பாக்கு குடுத்ததாட்டம் இருக்க?…” என்று பொரிய தீக்ஷா சத்தமாய் சிரித்துவிட்டாள்.
“சரி, ப்ரப்போஸ் பண்ணட்டும். அதுல என்ன வந்துச்சு?…” என அதையுமே சாதாரணம் போல கூற,
“நீயெல்லாம் இருக்க பாரு. அவ்வ்வ்வ்…” என்றவள் தானே அவர்களின் காதலை பற்றி கேட்க கூடாதென்று தன் விரல்களை கொண்டு வாயை அடைத்துக்கொண்டாள்.
“ஹேய் வினோ, என்னன்னு கேட்கறேன்ல…”
“பின்ன என்ன? ஒண்ணுமில்ல. நான் அவுட். இந்த ட்ரிப்க்கு நான் வந்திருக்கவே கூடாது. அதுவும் எவ்வளோ பெரிய விஷயம் சொல்றேன். நீ ரொம்ப சாதாரணமா பேசற, கேட்கற?…” என்று பொறுக்கமாட்டாமல் பேசிவைக்க,
“அடடா, இப்ப இது ஒரு பெரிய விஷயமா? அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கு. ஒருத்தருக்கு பிடிச்சா மட்டும் போதுமா?…” என தீக்ஷா சொல்லவும்,
“அப்படி சொல்லு. அப்பறம்…” என்று கன்னத்தில் கைவைத்து ஆவலாய் வினோதா கேட்க ஆரம்பித்தாள்.
“என்ன அப்பறம்?…” என வினோதாவின் மூக்கை நிமிண்டிய தீக்ஷா,
“ச்சீ போடி, இது ஒரு விஷயமா? நான் என்னவோன்னு நினைச்சேன்…” என்ற வினோதா,
“ஆமா அவர் ஒத்துக்கமாட்டார், சரிப்பட்டு வரமாட்டார்ன்னு உனக்கு எப்படி தெரியும்?…” என்று மடக்க, தீக்ஷா மாட்டிக்கொண்ட விதமாய் பார்த்தாள்.
“சொல்லு, நீ என்னமோ பாஸ் கூட பலகாலம் பழகின மாதிரி இவ்வளோ உறுதியா சொல்ற?…”
“அது,,, அது…” என திணறியவள்,
“வந்து,, ஒருத்தர் மூஞ்சியை பார்த்தாலே தெரியாதா? அப்படிதான். அவர் மூஞ்சி அந்த மாதிரி. இன்னொரு லவ் எல்லாம் செட்டாக மாட்டார்…”
“இன்னொரு லவ்வா?…”
“ப்ச், என்ன நீ? கூட கூட பேசிட்டு? இப்ப இந்த டாப்பிக் முக்கியமா?…” என்று பேச்சை மாற்றிவிட்டாள் தீக்ஷா.
“எம்புட்டு முக்கினாலும் சிக்க மாட்டேன்றாளே? கல்யாணம்ன்னு பத்திரிக்கை வைக்கட்டும், போய் பாஸ்க்கு மட்டும் விஷ் பண்ணிட்டு கிப்ட் குடுத்து சாப்பிட்டுட்டு வந்துடனும்…” என்று சத்தமின்றி புலம்பத்தான் முடிந்தது வினோதாவிற்கு.
அவளே சொல்லவில்லை. தானாகவும் இப்படி நடந்தது என்று போட்டுடைக்க விருப்பமில்லை வினோதாவிற்கு.
இத்தனை பழகியும், அன்றைக்கு அப்படி நடந்தும் ஒரு வார்த்தை தன்னிடம் கூற தோன்றவில்லையே என்று சிறுபிள்ளைத்தனமாய் ஆரம்பித்த எண்ணம், போக போக அவளாக சொல்லாமல் தானாய் கேட்கவே கூடாதென்ற பிடிவாதத்தில் வந்து நின்றது.
அடுத்த மூன்றுநாட்களும் சென்ற வேகம் தெரியவில்லை. கலகலப்பாகவும், சந்தோஷமாகவுமே கழிந்தது.
மறுநாள் சென்னை கிளம்பவேண்டும். அவர்களின் விமானம் காலையே. அன்றையநாள் விடுமுறை என்பதனால் அனைவரும் மீண்டும் அன்றைக்கு முழுவதும் வெளியே சுற்றவேண்டும் என்று தீர்மானித்திருக்க பிற்பகல் வரை ஹரித்திரனும் அவர்களுடன் தான் சுற்றி திரிந்தான்.
அதன்பின்னர் வேறு அலுவல் காரணமாக அவன் பாதியில் கிளம்ப தீக்ஷாவிற்கும் தொடர மனமில்லை.
“நானும் வர்றேன். கூட்டிட்டு போக முடியுமா?…” என்று ஹரித்திரனிடம் கேட்க மற்றவர்கள் மீது பார்வையை பதித்தவன்,
“எல்லாரும் இருக்கும்போது நாம மட்டும் கிளம்பினா சரியா இருக்காது தீக்ஷா. நீ இவங்களோடவே வா…”
“அப்போ நீங்க மட்டும் ஏன் நாளைக்கு எங்களோட கிளம்பாம இன்னும் ஒருவாரம் கழிச்சு வர்றீங்க? அதுமட்டும் சரியா?…” என்ற கேள்வியில் புருவம் உயர்த்தியவன் முகத்தில் அடக்கப்பட்ட புன்னகை.