“நான் கிளம்பி ரெடியா இருந்தேன். பாஸும் வந்துட்டார். அப்படியே சேர்ந்து வந்தோம். இது ஒரு விஷயமா?…” என தீக்ஷாவும் கேட்க, குணால் வந்துவிட்டான் கிளம்பலாம் என்று.
அனைவரும் கிளம்பி விமானநிலையம் வந்துவிடவும் அனைவரும் உள்ளே செல்ல தீக்ஷாவின் பார்வை அவனிடம் செல்ல முயல, திரும்பாதே என்று மனதை அடக்கினாள்.
கிளம்பும்நேரம் எத்தனை தன்னை கலாட்டா செய்துவிட்டான் என்று வேண்டுமென்றே வீம்பு பிடிக்க அவர்கள் குழுவில் மற்றவர்கள் பேசினாலும் அமைதியாய் நின்றவளுக்கு நிமிடங்கள் கரைய உயிரும் கரைவதை போலிருந்தது.
‘இது என்ன புதிதாய்?’ என தன்னை அதட்டி அடக்கி வைக்க முயன்றிருக்க அவர்கள் உள்ளே செல்லும் அறிவிப்பும் வந்துவிட்டது.
“ஓகே, பை. சேஃப் ஜர்னி…” என்று அனைவருக்கும் கையசைத்தவன் பார்வை நொடிக்கொருமுறை அவளிடம் படிந்து மீள தீக்ஷாவின் கண்களில் மீண்டும் நீர் கோர்த்தது.
வினோதாவிற்குமே பார்க்க அத்தனை வருத்தம். எதுவுமே பேசாமல் அவள் நின்றவிதம் மனதை உருக்க,
“கிளம்பறேன் பாஸ். டேக் கேர்…” என்று தொண்டை அடைக்க கூற,
“ஹ்ம்ம், பார்த்துக்கறேன்…” என ஹரித்திரனும் அமர்த்தலாய் கூறினான்.
“லெட்ஸ் மூவ்…” என்ற குணால் முன்னே நடக்க மற்றவர்களும் பின் தொடர வினோவிற்கு முன் சென்ற தீக்ஷாவின் கையை எட்டி பிடித்து நிறுத்திய ஹரித்திரனை தீக்ஷா மட்டுமின்றி, வினோதாவும் என்னவோ என திகைத்து பார்த்தாள்.
அவன் பிடித்ததுமே வினோதா பின் சென்று தீக்ஷாவை முன் விட்டதும், அவனின் கைப்பிடியில் தீக்ஷாவின் கண்கள் நிறைந்து கண்ணீர் உருள,
“ப்ச், எதுக்கு இந்த அழுகை?…” என அதட்டியவன் மற்றவர்களை கருத்தில் கொள்ளவே இல்லை.
“போயும் போயும் வயசான உங்களை போய் தேடறேன்னு என்னை நினைச்சே அழறேன். போதுமா?…” என்றாள் மூக்கை உறிஞ்சிக்கொண்டு.