அவள் கூறியதில் பக்கென்று சிரித்தவன் மீண்டும் மீண்டும் கண்ணில் வழியும் நீரை துடைத்துவிட்டு அவளின் நெற்றியில் இதழ் பதிக்க, ஹரித்திரனின் கரங்களை இறுக்க பற்றிக்கொண்டாள் தீக்ஷா.
“காட்…” என்று மற்றவர்கள் வாயில் கைவைக்காத குறையாக இந்நிகழ்வை விழிவிரித்து பார்த்தனர்.
“அடப்பாவிங்களா? என் பிஞ்சு நெஞ்சை இப்படி உடைச்சிட்டீங்களே? இனிமே இவ கதை சொல்லாமா இருந்தாலுமே என்னால கேட்காம இருக்க முடியாதே?…” என்றாள் வினோதா.
அவளின் சத்தத்தில் தீக்ஷா திடுக்கிட்டு திரும்பி பார்க்கவும் தான் என்ன செய்தோம் என்றே நினைவில் வந்தது.
“போச்சு…” என்றவள் அதிர்ச்சியில் கண்ணீர் கூட நின்றுவிட,
“அழுகை போயே போச்சு. இப்ப நீ போய்ட்டு வீட்டுல பேசுவியாம். நான் வருவேன். உன்னை தேடி…” என்றவன் சிரிப்பில், கண்களில் கண்ணீர் மின்ன தானுமே முறைப்புடன் இதழ் விரித்தாள்.
“கங்க்ராட்ஸ்…” என்று குணால் இருவருக்கும் வாழ்த்தை தெரிவிக்க மற்ற பெண்களும் தாங்களுமே வாழ்த்த,
“மத்த விஷயம் எல்லாம் ஊர்ல வந்து பேசிக்கலாம். ஆனா…” என்ற குணால்,
“உங்க லவ் ஸ்டோரி பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன் ஹரித்திரன்…” என்றதற்கு அவன் பார்வை தீக்ஷாவிடம் திரும்பியது.
“என் லவ் ஸ்டோரியா?…” என்றான் மெல்லிய முறுவலுடன்.
“எஸ், சொல்லுங்க…” என்று மற்ற பெண்களும் கூற,
“ம்க்கும், கூடவே இருக்கேன் செவ்வாழை. வெறும் தோலுக்கும் மதிக்கலை என் ப்ரெண்டு…” என்றாள் வினோதா நக்கலாய்.
“அப்போ உனக்கும் தெரியாதா?…” என்றொருவர் கேட்க,
“எல்லாம் தெரியும் தெரியும். ஆனா பாஸ் சொல்லி தான் தெரியும். இந்தம்மா பெபிகால் கடை ஓனர்டா நானுன்னு வாயை திறக்கலையே…” வினோதா அதற்கும் கொதித்தாள். தீக்ஷா சிரித்துவிட,
“ஷட்அப். எனக்கு அசிங்கமா இருக்கு, உன் ப்ரென்ட் எனக்கே தெரியலையான்னு கேட்காங்க. எவ்வளோ பெரிய அவமானம் எனக்கு…” வினோ கோபமாய் தீக்ஷாவிடம் பேச,
“உனக்கு தெரியாதுன்னு நான் சொல்லலையே. நீயா தான் சொன்ன. நான் என்ன பண்ணுவேன் வினோ…”
“ஆஹா, நம்பிட்டேன் நீ அப்பாவி. ஊருக்கு வா. பேசிக்கறேன்…” என்றவள்,
“நீங்களே கேளுங்க ஸார் அந்த கதையை…” என்றாள் வினோதா பாவம் போல குணாலிடம்.
“அட மாட்டேன் மாட்டேன் மாட்டேன்…” என்று கமலன் பயந்து பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே,
“உங்கள நான் அவரை எதுவும் செய்யவிடமாட்டேன். என்னை தாண்டித்தான் அவங்கள நீங்க தொடனும்…” என்று ஆக்ரோஷமானார் சுகன்யா.
“மாமியான்னு பாக்கமாட்டேன். இனிமே மருவாதி இல்ல. உங்கள…” என்றவர் சட்டென கமலனின் இரு காதுகளையும் பிடித்து பிரித்துவிட ‘ஆ’வென்று உள்நாக்கே வெளிவந்துவிடுமாறு அலறிவிட்டார் கமலன்.
“ஏய் லூசு, நான்தான்டி உன் புருஷன்…” என்று திக்கி திணறி வலியில் விடுபடமுடியாமல் அலறிக்கொண்டே கமலன் கத்த,
“எம்புருசன் குரல்ல பேசுனா மட்டும் உன்னிய விட்டுருவேனா மாமியா…” என்ற சுகன்யா காதோடு பக்கத்தில் இருந்த முடியையும் சேர்த்தே பிய்க்க,
“ஆத்தீ கொன்னுட்டா என்னிய. கூமுட்ட, கண்ணா திறந்து பார்த்து தொலைடி…” என்ற கமலன் கண்ணீரும், கம்பலையுமாய் கதற சுகன்யாவின் பிடியிலிருந்து தப்ப முடியவில்லை.
“என் புருசன நான்தான் காப்பாத்துவேன்…”
“ஆத்தீ…” கமலன் அலற,
“என் புருஷன் தான் எனக்கு சாமி…”
“அய்யய்யோ…” கமலன் பதற,
“என் புருஷன் குழந்த மாதிரி…”
“யம்மா…” பயந்தே விட்டார்.
“எம்புருஷன்…”
“அடி போடி…” என பலங்கொண்ட மட்டும் கமலன் சுகன்யாவிடமிருந்து விடுபட முயன்று பொத்தென கட்டிலிலிருந்து கீழே விழுந்தார்.
அவர் விழுந்தும் சுகன்யா எங்கே என்று கமலனை கண்ணை மூடிக்கொண்டு கட்டிலில் துழாவ,
“சிக்கினா எங்கம்மாட்டையே அனுப்பிருவா இவ…” என்றவர் எழுந்து சென்று தண்ணீரை கொண்டுவந்து சுகன்யாவின் முகத்தில் விசிற,
“ப்ச், யாரு இது?…” என்று அப்போது தான் உறக்கத்தில் இருந்து விழிப்பதை போல கண்ணை கசக்கிக்கொண்டு பார்க்க, அது அவர் கணவர்.
இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து கோபத்தில் வெறிகொண்ட பார்வையுடன், காதுமடல்கள் முன்பக்கம் விடைத்து நிற்க, பின்மண்டை முடி இரண்டு காதின் பின்புறம் நட்டுக்கொண்டு நின்றது.
“என்னாச்சுங்க?…” என்று குழந்தை போல கேட்ட சுகன்யா,
“ஆமா என்ன இந்நேரமே எழுப்பிட்டீங்க? அதுவும் உங்க தலையில உள்ள மொத்த முடியும் ஏன் ரெண்டு காதுக்கு பின்னாடி தூக்கிட்டு நிக்குது. கரண்டுல கண்டும் கைய கிய வச்சிடீங்களா?…” என்ற சுகன்யா,
“ஆத்தீ, என்ன கெட்ட கனவா அவருது. நீங்க இப்படி இருக்கீங்க. கடவுளே…” என்று உடனே தன் மாங்கல்யத்தை எடுத்து கண்ணில் ஒற்றிக்கொண்டவர்,