இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை கமலன். சுகன்யா பாவம் போல என்ன நடந்தது என்று மீண்டும் மீண்டும் கேட்க, அவரிடம் சொல்லவே அத்தனை அவமானமாய் உணர்ந்தார்.
ஒருவேளை நிஜமாகவே ஞாபகம் இல்லையோ? என யோசித்தவருக்கு சுகன்யா கண்ணை திறவாமல் தான் அத்தனை கலாட்டாவையும் செய்தார் என்பதும் ஞாபகம் வந்தது.
அதனை சொல்லி நான்கு வாங்கு வாங்கினால் என்ன என்று அத்தனை கோபம் ஒருபுறம்.
இன்னொருபக்கம் சொல்லிவிடாதே என மனது முரண்டியது. ‘சொன்னா இவ மதிக்கவே மாட்டா. நானே இவளுக்கு ஐடியா குடுத்த மாதிரி ஆகிரும்’ என்று வாயை மூடிக்கொண்டார் கமலன்.
“முடியெல்லாம் இப்பிடி பின்னாடி நட்டுக்க நிக்குது. என்னமும் கனவாங்க உங்களுக்கு?…” என்று கேட்டு,
“எனக்கும் இந்த கனவு தான் ஒரே இம்சை. கொஞ்சநாளா பாடா படுத்துது…” எனவும் சொல்லி,
“தப்பா எடுத்துக்காதீங்க. உங்கம்மா கொஞ்சநாளா கனவுல வந்து ஒரே அழுகை. என்னை பாடா படுத்தறாங்க. அந்த கோவத்துல தான் இம்சைன்னு சொல்லிட்டேன். தப்பா நினைக்காதீங்க…” என்று வேறு பேச கமலன் கேட்டுக்கொண்டே தன் தலையை பிடித்தார்.
நடுராத்திரியில் இத்தனை நடந்த பின்னரும் எப்படி சுகன்யா சொல்வதை நம்பாமல் இருப்பது என்று நினைத்தவர்,
“என்ன தப்பு? யார் பண்ணிட்டா? என்னயா சொன்னாங்க?…” என்று கேட்க,
“இருங்க, காதெல்லாம் வீங்கி போயிருக்கு. எங்க போய் விழுந்து வச்சீங்க. நான் போய் ஐஸ் கொண்டுவந்து ஐஸ் வைக்கறேன்…” என்றதும் கமலன் முறைக்க,
“அட காதுக்குங்க. உங்களுக்கு ஐஸ் வச்சு என்னாக போகுது? அதுக்கெல்லாம் நீங்க ஏமாறுவீங்களா? இல்ல எனக்கு தான் அம்புட்டு துணிச்சல் இருக்கா? என்னமோ வாய்க்கு வந்தபடி பேசினாலும் உங்களுக்கு மீறி நான் என்னைக்கு என்ன செஞ்சிருக்கேன்?…” என்று கேட்டுக்கொண்டே எழுந்து சென்றார் அவர்.
“இவள புரிஞ்சுக்கவே முடியலையே. ஆனாலும் என்னை மீறி எதுவும் செய்யமாட்டா தான். இல்லைன்னா வகுந்துடமாட்டேன்…” என்று மீசையை வேறு தடவிவிட்டுக்கொண்டார் கமலன்.
நிஜமாகவே தன் தாய் அமுதரசி தான் கனவில் வந்திருப்பார், என்னவாக இருக்கும் என்று ஒருபக்கம் யோசனை.
இருநாட்களுக்கு முன் நடந்த விஷயம் அவரின் ரத்தத்தை இப்போதும் கொதிப்படைய செய்தது.
பல்லை கடித்துக்கொண்டு எப்படி நடக்கிறது என்று பார்ப்போம் என நினைக்க காதில் சில்லென்ற குளுமை ஊசியாய் துளைத்ததோடு வலியையும் தர,
“ஆஹ்…” என்று அலறிவிட்டார் கமலன்.
“ஐஸு ஐஸுங்க. பயந்துட்டீங்களா?…” என்று அவரின் அருகில் அமர்ந்தவர்,
“விடேன். இப்ப நீ சொல்லு, என்னவாம் எங்கம்மாவுக்கு? உன் கனவுல எல்லாம் வந்திருக்கு. அதுவும் இத்தனை வருஷம் இல்லாம….” என்றதும் சுகன்யா தடுமாற்றமே இன்றி பதிலளித்தார்.
“இத்தனை வருஷம் இல்லாமன்னு இல்ல. அப்பப்ப வருவாங்க. என்னமாச்சும் குடும்ப சண்டைய சொல்லி புலம்புவாங்க. போவாங்க. ஆனா இந்தவாட்டி தான் என்னை புடிச்சு ஆட்டிட்டாங்க…” என்று டக்கென்று கண்ணீரை பொலபொலவென்று வடித்தார்.
“அதான் உங்க அண்ணன், உங்களை மதிக்காம பேசின உங்கண்ணன் மகனை பத்தி நம்மக்கிட்ட வந்து புலம்பினா ஆச்சா?…” என்று நேக்காய் கமலனிடம் கூற,
“அவன்லாம் கூட பொறந்தவனா? நான் இல்லன்னாலும் அவன் மகன் கல்யாணம் நடக்குமாமே? மான, ரோஷம் இல்லாம திரும்ப அந்த குடும்பத்தை தேடி போய் மன்னிப்பு கேட்டு பொண்ணு தாங்கன்னு கேட்டிருக்கானே? அறிவுகெட்டவன்…” என்று சந்தனநம்பியை அத்தனை பேசினார் கமலன்.
“நாம என்னங்க செய்யறது?…”
“என்ன செய்யறதா? அவனை இனிமே அண்ணன்னு சொல்லவேமாட்டேன். கல்யாணமா நடத்தறாங்க கல்யாணம்…” என்று பல்லை கடித்தார் கமலன்.
இரண்டுநாட்களுக்கு முன்புதான் கமலனுக்கு விஷயமே தெரியவந்தது. அதுவும் ஒரு வரனை கமலன் கொண்டுவந்த பொழுது சந்தனநம்பியே சொல்லியதனால்.
“நீ ஹரிக்கு வேற பொண்ணெல்லாம் பார்க்க வேண்டாம் கமலா…” என்றதும்,
“ஏன்? அவன் வேலை விஷயமா போய்ட்டு வரட்டும். அதுக்குள்ள இங்க ஏற்பாடு செஞ்சு வைச்சிடுவோம். கட்டக்கட்டைசில ஒரு பாட்டில வச்சிக்கிட்டு தாலிய கட்டலைன்னா குடிச்சிடுவேன்னு ஒரு போடு போடு. தன்னப்போல கட்டிட்டு போறான். கழுத அதுக்குமேல முட்டி மோதி வாழட்டும்…” என்று கமலன் சொல்ல,
“முட்டி மோதியா? அவன் ஏற்கனவே நிம்மதி இல்லாம இருக்கான். அவன் வாழ்க்கையை இன்னும் நான் பாழாக்கனுமா? அதெல்லாம் வேண்டாம்…”
“என்ன வேண்டாம்? என்ன நம்பி பேசற நீ? நீயும் அவனை வழிக்கு கொண்டுவர மாட்ட. நான் சொல்றதையும் கேட்கமாட்டனா அவன் எப்பத்தான் குடும்பம், குட்டின்னு ஆக?…” என்று கேட்க,
“அதெல்லாம் பார்த்துக்கலாம்…” என சந்தனநம்பி அமைதியாக பார்க்க முடியவில்லை.
“என்ன பார்க்க? எம்புட்டு நாளைக்கு நாம இருக்க?…” என்று பேசவும்,
“அதான் வேண்டாம்ன்னு சொல்றேன்ல….” என்ற நம்பி,
“நான் அந்த கும்பகோணத்து பொண்ணையே ஹரிக்கு முடிக்கலாம்ன்னு இருக்கேன்…”
“என்ன? சுத்த வெவரங்கெட்டதனமா பேசற நீ?…” என்று கொதித்துவிட்டார் கமலன்.
“இது தான் சரி. ஹரிக்கு அந்த பொண்ணை தான் பிடிச்சிருக்கு…” என்றவர்,
“நானும் அவங்க வீட்டுக்கு போயிருந்தேன். அவங்கக்கிட்ட நடந்ததுக்கு மன்னிப்பு கேட்க…” என்றதும் அவ்வளவு தான் கமலன் ஆடிவிட்டார்.
“யார கேட்டு அங்க போன நீ?…” என்று கமலன் கொதிக்க,
“யாரை கேட்கனும். தப்பு நடந்தது இங்க என் வீட்டுல. அப்ப நான் தான போய் மன்னிப்பு கேட்கனும்…” என்று நம்பி பேச,
“என்னவா? வெக்கமாயில்ல உனக்கு? என்ன பேசற?அதெல்லாம் ஒரு குடும்பம். அவளோட அண்ணனும், பெரியப்பாவும் என்னை அறைஞ்சானுங்களே? ஏன் உன்னோட மூத்த மருமகனையும் தான் அறைஞ்சானுங்க. எப்படி நீ அந்த பொண்ணை திரும்ப எடுக்க போறேன்னு நிக்கற?…” என்றவர் பார்வதிக்கும் அழைப்பு விடுக்க வந்துவிட்டனர் மொத்த குடும்பமும்.
சந்தைக்கடையென சண்டையான சண்டை. பார்வதியிடமிருந்து அவ்வளவு வார்த்தைகள்.
“இங்க பாருடா, நீ மட்டும் அவளை உன் மகனுக்கு எடுத்த உன் மகளை இங்க அனுப்பிருவேன்…” என்று பார்வதி சொல்ல அனைவரின் பார்வையும் மதியையும், கங்காவையும் தான் பார்த்தது.
அப்போதாவது மகள் எதுவும் மறுத்து தன் மாமியாரை பேசுவாளா என்று பார்த்தார் நம்பி.
“எங்கம்மா சொல்றது தான்…” என்று பார்வதி பார்த்த பார்வையில் மதியும் சொல்ல கங்கா உடனே அழுகை.
“அப்பா என் வாழ்க்கை…” என்று அழுது கூட்ட,
“ஏன்டி கொஞ்சநாள் முன்னாடி எப்படியாச்சும் உன் வாழ்க்கையை சரி பண்ணிடறேன்னு உன் தம்பிக்கிட்ட பேசினியே? அப்போ அதெல்லாம் சும்மா தான் இல்ல?…” என்று புவனா கேட்டேவிட்டார் மகளிடம்.
இன்னும் சந்தனநம்பியிடம் புவனா பேச்சுக்களை வைத்துக்கொள்ளவில்லை. அதுவே அவரை மனதளவில் தளர செய்திருக்க இப்போது இந்த பிரச்சனை வேறு.
“பார்த்துக்க நம்பி, மக வாழ்க்கையா இல்ல அந்த குடும்பமா?…” என்ற கமலன் நம்பியின் மௌனம் கண்டு,
“அவனே வாயடைச்சு நின்னுட்டான். இனிமே அந்த மாதிரி கிறுக்குத்தனமா யோசிக்கமாட்டான். நீ விடுக்கா. கிளம்புவோம்…” என்று கமலன் அவர்களை கிளப்பிக்கொண்டு இறுமாப்பாய் செல்ல திரும்பினார்.
புவனா, சுகன்யா, குமரன், சிற்பி என அனைவருக்கும் பற்றிக்கொண்டு வந்தது இந்தாட்டம் ஆடுகிறார்களே என்று.
“டேய் நில்லுடா…” என்றார் சந்தனநம்பி கமலனிடம்.
“என்ன? அதான் சொல்லியாச்சே. முதல்ல கட்டிக்குடுத்த மக வாழ்க்கையை பாரு. அவ நல்லா இருக்கனும்ன்னு நினைக்க சொல்லி உன் மகன் கிட்ட சொல்லு. அக்கா, தங்கச்சிங்க எதிர்காலம் என்னாகும்ன்னு நீ தான் அவன் மனசுல படறமாதிரி பேசனும்…” என்ற கமலன்,
“அக்கா, தங்கச்சிங்க கூட பொறந்தவனுங்க மனசுல கொஞ்சமாச்சும் அவங்க வாழ்ககைய நினைச்சு பயம் இருக்கனும். அப்பத்தான் நாளைப்பின்ன எவளை கட்டினாலும் அவ பேச்சுக்கு ஆடாம கூட பொறந்தவங்க பத்தி யோசிப்பானுங்க. நான் எப்படி என் பொண்டாட்டியை வச்சிருக்கேன் பார்த்தியா?…” என்று சொல்ல,
“இந்தாளுக்கு இந்த பெருமை இப்ப அவசியமா?…” குமரனுக்கு அத்தனை கோபம்.
“இப்ப வரைக்கும் வாய திறந்து ஒத்தவார்த்தை அக்காவையோ, உன்னையோ பேசிருப்பாளா? பேச தான் விட்டிருக்கேனா? ஆனா இங்க என்னன்னா பெத்த மக கண்ணீர் விடறா. உங்க வீட்டுல மகனை தான் உசத்தி வச்சு பேசறீங்க…” என்று புவனாவையும் பார்த்துக்கொண்டே கமலன் பேச,
“ப்ச், கொஞ்சம் அமைதியா இருக்கியா?…” என்ற நம்பி கங்காவை பார்த்தார்.
“நீ என்னமா சொல்ற?…” என கேட்க,
“அப்பா என் வாழ்க்கையை நீங்க தான் காப்பாத்தி குடுக்கனும்…” என்று சொல்ல,
“காப்பாத்தி தான ஆகனும். என் மகனை அடிச்சவன் வீட்டு பொண்ணை மகனுக்கு என் தம்பி எடுப்பானா என்ன?…” பார்வதி அத்தனை அகம்பாவமாய் பேச, சுகன்யாவுக்கும், புவனாவுக்கு தான் பயந்து வந்தது.
எங்கே சந்தனநம்பி அக்கா, தம்பி பேச்சை கேட்டுக்கொண்டு தலையாட்டி மகளுக்காக மகனை விட்டுவிடுவாரோ என்று பதறி பார்த்தனர்.
“இதுதான் உங்க முடிவா?…” என்று நம்பி கேட்க,
“அப்பா நீங்க பேசுங்கப்பா ஹரிக்கிட்ட. நம்ம நிலைமையை எடுத்து சொல்லுங்க…” கங்கா கூற,
“நம்ம நிலைமையா?…” என்றார் நம்பி.
“சரி, என் நிலைமை. இப்ப என் வாழ்க்கைல இங்க நிக்குது…” என்று அழ,
“அழாம பேசும்மா. இவ்வளோ தேம்பி அழற அளவுக்கு எதுவும் ஆகிடலை…” என நம்பி பல்லை கடித்துக்கொண்டு கேட்டு,
“சரி உனக்காக உன் தம்பிக்கிட்ட பேசறேன். அவன் கல்யாணமே வேண்டாம்ன்னு இருந்துட்டான்னா என்னம்மா செய்யலாம்?…” என்ற கேள்வியில் கங்கா விழிக்க,
“உனக்காக உன் தம்பி அந்த பொண்ணை வேண்டாம்ன்னு சொல்றான்னே வச்சுக்கோ. உன் தம்பிக்காக நீ என்ன செய்ய போற? நீயும் அவனுக்கு செய்யவேண்டிய கடமை இருக்குல…” என்று கேட்க கங்கா திகைத்து பார்த்தாள்.
“என்னடா நம்பி நீ என்ன?…” என்று பார்வதி ஆரம்பிக்க,
“நீ பேசவேண்டாம்க்கா. நான் என் மகக்கிட்ட பேசிட்டிருக்கேன்…” என்றவரின் பேச்சின் தினுசில் அனைவரும் அதிர்ந்து பார்த்தனர்.
“நீ சொல்லும்மா…” என்று மீண்டும் கங்காவிடம் கேட்க அவளால் பதில் கூற முடியவில்லை.
மதியின் முகத்தையும், தன் மாமியாரின் முகத்தையும் பார்த்தவள் இதனை எதிர்பார்க்கவில்லை.