கோவில் குளத்துப்படியில் அமர்ந்திருந்தாள் சம்ருதிக்ஷா. மணப்பெண் அலங்காரத்தில் எளிமையாக இருந்தது அவள் தோற்றம்.
பெரிதாய் ஆடம்பரம் இல்லாத வகையில் சின்னதாய் ஒரு ஆரம், கழுத்தில், கையில் சிறு நகைகள் என்று வெகு எளிமை.
ஹரித்திரன் சொல்லியதை போல ஆஷ் கலர் புடவையில் தான் அமர்ந்திருந்தாள்.
தேர்வு அவனதாக இருந்தாலும் விருப்பம் அவளதாக இருந்தது. புடவையில் மட்டுமல்லாது, திருமணத்திற்கும்.
சொல்லியதை போல வேலையை முடித்துவிட்டு மறுவாரம் வந்து சேர்ந்தவன் அவளை எவ்விதத்திலும் நெருக்கவில்லை.
“உன் விருப்பம். எப்போ நீ சரின்னு சொல்றியோ பண்ணிக்கலாம். இல்லை வேண்டவே வேண்டாம்ன்னு நீ முடிவுக்கு வந்தாலும் எனக்கு சம்மதம்….” என்றிருந்த ஹரித்திரன்,
“எனக்கு உன்னோட மனசு தெரிஞ்சிருச்சு. அதைவிட வேற என்ன வேணும்?…” என்று சொல்லிவிட அது தீக்ஷாவை இன்னுமே அல்லாட செய்தது.
சரி என்று அவனிடம் சம்மதம் போல பேசிவிட்டு வந்து இப்போது மீண்டும் மனம் அலையில் மிதக்கும் படகாய் இங்குமங்கும் தடுமாற நர்மதா மகளிடம் கேட்கவே செய்துவிட்டார்.
“என்ன முடிவு பண்ணியிருக்க ருதி?…” என்று கேட்டவரிடம் என்ன சொல்லிவிட முடியும்?
அவளுக்கு தான் செய்வதில் எங்கேயோ ஒரு குற்றவுணர்ச்சி. அதன் அலைகழிப்பை அவளால் உணர முடிந்தது.
நர்மதா கேட்ட பின்பும் அவளால் வெளிப்படுத்தாமல் இருக்கமுடியவில்லை தாயிடம்.
அத்தனையும் தடுமாறி சொல்லி முடித்துவிட நர்மதாவிற்கு மகளின் பாசத்தில் கலங்க கூட முடியவில்லை.
“இத்தனை தடுமாற்றத்தோட அந்த பையனுக்கும் நீ சம்மதம் சொல்லியிருக்கியே ருதி. இது எப்படிம்மா?…” என்றவர்,
“எல்லா விஷயத்துக்கும் ஒன்னோடு ஒன்னு தொடர்பு பண்ணி குழப்பிக்கற நீ. முதல்ல அதை நிப்பாடிக்கோ…”
“ம்மா, அப்போ உங்களுக்கு…”
“நான் ஏற்கனவே சொன்னது தான். உன் முடிவு தான் என் விருப்பமும். ஆனா எடுக்கற முடிவை உறுதியா எடுக்கனும். இது ஒன்னும் வேலை இல்லை. இது இல்லைன்னா இன்னொன்னுனு. உன்னோட வாழ்க்கைன்னா அதுல அந்த பையனுக்கும் பங்கு இருக்கு. உங்க ரெண்டுபேரோட எதிர்காலம், ரெண்டு குடும்பத்தோட நிம்மதி. இதை எல்லாம் யோசனை பண்ணி முடிவுக்கு வா…”
“ம்மா, உங்களால அந்த வீட்டுல வந்து நிக்க முடியுமா? எனக்கே கஷ்டமா இருக்கே?…” தீக்ஷா அப்போதும் தாயை தான் யோசித்தாள்.
“அப்போ விருப்பமில்லைன்னு அந்த ஸ்டேன்ட்ல நீ நின்னிருக்க வேண்டாமா?…” என்றார் நர்மதா.
“என்னால முடியலை. நிஜமாவே நான் ரொம்பவே தடுமாறிட்டு இருக்கேன்…” என்றவள் தாய் முகம் பார்க்க,
“உங்கப்பா சாவுக்கு அவங்க காரணமில்லை. முதல்ல ஒருத்தரோட உழைப்புக்கும், இழப்புக்கும் அடுத்தவங்களை காரணம் காட்டாம இருங்க. நம்மோட செயல் இல்லாம எதுவுமே மத்தவங்களால நம்ம வாழ்க்கையை நகர்த்திட முடியாது….” என்ற நர்மதா,
“தவறு செய்யாதவங்க மனுஷங்களே இல்லை. தப்பு நடந்திருச்சு. அதை மட்டுமே நினைச்சு வாழ முடியுமா? அப்பா இல்லை. நாம சாப்பிடாம வாழாம அங்கயே இருந்துட்டோமா என்ன? இல்லையே. நமக்குன்னு இன்னும் வாழ்க்கை இருக்கு. இருக்கற வரை வாழ போறோம். முடிஞ்சதும் போகவேண்டியதுதான். ஆனா எப்படி வாழனும்ன்னு நாம தான் முடிவு பண்ணனும்…” என்றார்.
தீக்ஷாவிற்கு புரிந்தாலும் அந்த தடுமாற்றமும், ஆதங்கமும் மட்டும் குறையவே இல்லை.
அதற்காக ஹரித்திரனையும் அவளால் இழக்க முடியாது. யோசித்து யோசித்து நொந்து வாழ்வதை விட, முயன்று அடுத்தகட்டத்திற்கு செல்லலாம் என்ற முடிவிற்கு வந்துவிட்டாள்.
ஆனால் திருமணம் என்று வருகையில் அந்த குடும்பத்தினரும் கலந்துகொள்வார்கள் தானே?
தீக்ஷாவிற்கு அதை நினைத்து மனதிற்கு ஒப்பவே இல்லை. திருமணம், புகுந்தவீடு என்றால் அதையும் தானே தான் சமாளிக்க வேண்டும் என்று நினைத்தவள் அதற்கு தயார்படுத்துவதை போல மனதை தேற்றிக்கொண்டாள்.
அலுவலகத்தில் ஹரித்திரனிடம் தானாக சொல்லவும் யோசனை. சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.
முகம் பார்த்து, பார்வையை விலக்கி, அவன் பாராத நேரம் சொல்ல முயன்று என அவள் அல்லாட,
“என்ன பிரச்சனை உனக்கு?…” என்று அவனே கேட்டுவிட்டான் உணவு நேரத்தில்.
“பிரச்சனை தான்…” என்றவள்,
“இது,,, இந்த கல்யாணம்,,,, இது எப்படி எப்படி நடக்கும்?…” என்று திக்கி திணறி தடுமாறி கேட்க ஹரித்திரன் முகத்தில் கொள்ளையாய் புன்னகை.
“புரியலைன்னா புரியவே தேவை இல்லை….” என்று எழுந்து சென்றுவிட அவளின் கோபத்தில் இன்னுமே குதூகலம் அவன் மனதில்.
“பாஸ், சண்டையா?…” வினோதா கேட்க,
“அவங்க ஒன்னு சொல்லமாட்டாங்களாம். ஆனா நானே புரிஞ்சுக்கனுமாம். நியாயமா இது?…” என்று பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அவளிடம் கூற,
“இந்தா வர்றேன். இப்ப வரைக்கும் எங்க பார்த்தீங்க, எப்படி தெரிஞ்சதுன்னு எதுவும் ஒருவார்த்தை சொல்லலை அவ. இங்க உங்களையும் சுத்த விடறாளா? வச்சுக்கறேன்…” என்று வேகமாய் வினோதா தீக்ஷாவிடம் சென்று நிற்க,
“பார்த்தியா உன் பாஸ் பன்றதை? நான் என்ன சொல்ல வர்றேன்னே புரியாம பேசறார். இதுல நான் விளக்கமா வேற சொல்லனுமாம். தெரிஞ்சுக்கிட்டே கேட்கறதுக்கு நான் உக்கார்ந்து பேசனுமா? சொல்லி வை….” என்று அவள் விட்டு சென்றுவிட்டாள்.
“சில சந்தோஷங்கள் எல்லாம் முன்னாடி இப்படி செஞ்சிருக்கலாமோன்னு நினைக்க வைக்கிற அளவுக்கு மாறிடும். அதுக்காக தான் சொல்றேன்…” என்ற நர்மதாவின் அருகில் வந்து அவரின் கையை பிடித்துக்கொண்ட சுகன்யா,
“நீங்க பெருந்தன்மையா நினைக்கிற அளவுக்கு அந்த மனுஷங்க எல்லாம் தகுதியானவங்க இல்லை. என்னடா என் புருஷனையே விட்டுக்குடுக்கறேன்னு நினைக்காதீங்க. அவங்க வந்தா கல்யாணம் நல்லபடியா நடக்காது. அந்தளவுக்கு எதாச்சும் செஞ்சாலும் செய்ய கூடியவங்க….” என்று சொல்ல,
“ஆமாம்மா, வேண்டாம். எங்களுக்கு இதுல எந்த வருத்தமும் இல்லை. எப்பவோ நடந்திருக்கவேண்டியது. இப்ப குறைஞ்சபட்சம் சங்கடம் இல்லாம நடத்துவோம். எங்களுக்கு முழு சம்மதம்…” என்றார் சந்தனநம்பி.
“நீங்க இதை நினைச்சு வருத்தப்படாதீங்க…” என்று தணிகைவேலும் கூற,
“அதான் இத்தனை சொல்றாங்களே நர்மதா. அப்பறம் என்ன?…” என லாவண்யாவும் சொல்ல,
“சரி…” என்று மகளின் முகம் பார்த்து சம்மதித்தார் நர்மதா.
ஏற்கனவே ஹரித்திரன் அந்த முடிவில் தான் இருந்திருந்தான். வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பியவனுக்கு நடந்த விஷயங்கள் ஹரிணி மூலம் ஏற்கனவே தெரிந்திருந்தாலும், வந்ததும் புவனாவும், நம்பியும் நடந்ததை கூற அவன் தன் முடிவை சொல்லிவிட்டான்.