அதன் கூற்றில் இருக்கும் நியாயம் அவர்களாலும் உணர முடிந்தது. நிம்மதியாய் நடக்கவேண்டிய நிகழ்வு. நடக்கட்டும் என்று முடிவு செய்து திருமண நாளையும் குறித்துவிட்டனர்.
திருமணத்தை எளிமையாய் கோவிலில் நடத்தி, பதிவு செய்துவிட்டு வீடு திரும்பவேண்டும்.
ஆட்களுமே வெகு சொற்பம் என்பதனால் பதட்டமோ, பரபரப்போ இன்றி திருமண நாளும் வந்துவிட இதோ தீக்ஷா மனதில் அலைப்புறுதல்.
இன்னும் சற்று நேரத்தில் முகூர்த்தம். தன்னை அழைத்துவிடுவார்கள் இப்போதும் சுயஅலசலில் தான் இருந்தாள் அவள்.
“தீக்ஷா…” என்றவனின் அழைப்பில் திரும்பி பார்க்க பட்டு வேஷ்டி சட்டையில் மணமகனாய் ஹரித்திரன்.
“என்ன பதட்டம்? என்னவாகும்ன்னு பயம்?…” என கேட்டவன் அவள் சொல்லவிருக்கும் பதிலை கேட்க ஆவலாக,
“இப்பவும் என் மனசோரம் ஒரு முள் குத்திக்கிட்டே இருக்கு. உன் அப்பாவை அவமதிச்சு வெளில தள்ளின வீட்டுக்கு நீ போறியேன்னு. அந்த நினைப்போட அங்க நான் இருந்தா அது ஹரியோட சந்தோஷத்தை குறைக்குமேன்னு. இதுக்கா இத்தனை வருஷ காத்திருப்பும்ன்னு தோணுது…” என்றவள்,
“எந்தளவுக்கு நான் சந்தோஷமா இருக்கேனோ, அதே அளவுக்கு கவலையாவும் இருக்கேன். இது நம்ம விருப்பத்துக்கும், காத்திருப்புக்கும் நான் செய்யற அவமரியாதை தானே ஹரி? என் மனசாட்சி எனக்குள்ள அதை தான் சொல்லுது…” என்றாள் குரல் கரகரத்து போய்.
“இதுவே சொல்லலையா தீக்ஷா நீ என் மேல வச்சிருக்கற முழுமையான அன்பை. சரிதான், ஒரு பொண்ணா உங்கப்பாவுக்காக நீ யோசிக்கிற. தப்பில்லையே. அதேநேரம் நீயா உன்னை குழப்பிக்காத….” என்றவன்,
“வா போகலாம். எல்லாமே நாம ஜீரணிச்சு தான் ஆகனும். சண்டை போடு. இப்படி கலங்கி நிக்காத. உன் கோபத்தை என்னால சமாளிக்க முடியும். கண்ணீரை, ஓஹ் காட். சத்தியமா முடியாது….” என தலையை உலுக்கிக்கொண்டவன் லேசாய் புன்னகைத்தான்.
“என் மேல சுத்தமா நம்பிக்கை இல்லை. ஆனா இப்பவும் ஹரியை நம்பறேன். உடைஞ்சுடாது தானே?…”
“நீ என்னை தான் உடைச்சிட்டிருக்க. இனிமே வாழ்க்கை முழுக்க சேர்ந்து தான் இருக்க போறோம். இந்த டிஸ்கஷன் எல்லாம் கொஞ்சம் தள்ளி வச்சிட்டு தாலி கட்டிக்கலாம்…” என்று அவள் கை பிடிக்க,
கண்ணீர் வழிந்துவிட கரகரவென்று கொட்டிவிட்டது. யாரும் பார்த்துவிடாமல் முகத்தை திருப்பி சாய்த்துக்கொண்டார் நர்மதா.
“ம்மா…” என்ற தீக்ஷாவிடம்,
“சில விஷயங்களை நம்மால மாத்த முடியாது ருதி. ஆனா அதை கடந்து வர பழகனும். எனக்குமே இப்ப இந்த நிமிஷம் கஷ்டம் தான். அதுக்காக அதை மட்டுமே நினைச்சுட்டு இருக்கக்கூடாது. புரியுதாடா?…” என்று சொல்ல,
“தண்ணி குடிங்க…” என்று கொண்டுவந்தார் புவனா.
“வீட்டை சுத்தி பார்த்தியாம்மா…” என்று மருமகளிடமும் அவர் கேட்க,
“இல்லை, அப்பறமா…” என்று தீக்ஷா சொல்லிக்கொண்டிருக்க,
“அப்பறம் பேசுங்க. இங்க தான இருப்பாங்க. நீங்க முதல்ல இந்த திருஷ்டி பூசணியை சுத்துங்க….” என்று லாவண்யா வரவும் இருவருமாய் மணமக்களுக்கு சுற்றினார்கள்.
ஹரித்திரன் வந்ததில் இருந்து அவர்களை மட்டுமே கவனித்துக்கொண்டிருக்க மனதோரம் அத்தனை பாரம்.
“ஹரி நீ ஓகே தானே?…” என லாவண்யா கேட்க,
“ஹ்ம்ம், ஆமா த்தை…” என்று புன்னகைக்கவும் தான் சுற்றவே செய்தார்கள்.
“சரி, நீ இவங்களை கூட்டிட்டு போய் சுத்தி காமி….” என்ற புவனா,
“சிற்பி இதை வாசல்ல உடைச்சிட்டு வா. உடைஞ்சதும் ரெண்டுநிமிஷம் நின்னுட்டு மறக்காம ஓரமா தூக்கி வச்சிரு…” என்றும் சொல்லி அவனிடம் தர வாங்கிக்கொண்டான்.
“இந்த சிற்பி பயலை எங்க? அப்ப இருந்து அவன் போன் அடிச்சிட்டு இருக்கு….” என உள்ளிருந்து சுகன்யா வர,
“இப்ப தான் வெளில போனான்…” என்று லாவண்யா சொல்லவும் பின்னால் சென்றார் சுகன்யா.
“டேய் உன் போன் தான். உங்கம்மா கூப்பிட்டுட்டே இருக்காங்க…” என்று அவனிடம் நீட்ட,
“இதை உடைச்சிட்டு பேசறேன் அத்தை…” என்றான் அவன்.
“அதை என்கிட்ட கொண்டா. ஓங்கி உடைக்கிற உடைல ஒரேதா சிதறனும். நீ செஞ்சிருவியா என்ன? போ, போய் உங்கம்மாவை சமாளி…” என்று சொல்லி அதனை தான் வாங்கிக்கொண்டவர் அவனிடம் திரும்பி பேசிக்கொண்டே வெளிக்கேட்டிற்கு வர,
“சித்தி பார்த்து உடைங்க…” என்று ஹரிணியும் வெளியே வந்தாள்.
“அதெல்லாம் எனக்கு தெரியும். எப்படி உடைக்கேன்னு மட்டும் பாரு…” என்று அவளை திரும்பி பார்த்து சொல்லிவிட்டு வாசலில் ஒரே வீசாக பூசணியை ஓங்கி வீச பொத்தென்று வெடித்து சிதறியதோடு, அங்கே வந்து நின்ற கமலனின் காலையும் பதம் பார்த்துவிட,
“ஆஆஹ்…” என்று அலறினார் கமலன். அவர் கத்திய அதேநேரம் சுகன்யாவும்,
“ஆஆஹ்…” என சுகன்யாவும் பதிலுக்கு அலறி உள்ளே ஓட பார்க்க மீண்டும் பொடீர் என்ற சத்தத்துடன் மீண்டும் கமலனின் அபயக்குரல்.
“சித்தி சித்தப்பா…” ஹரிணி சொல்ல,
“பாக்காம உள்ள வந்திரு. இந்த மனுஷன்கிட்ட தலை சுத்தலா இருக்கு, சுகர் டெஸ்ட் பண்ண ஹாஸ்பிட்டல் போறேன்னு சொல்லிட்டு கிளம்புனேன். கூடவே வந்து ஹாஸ்பிட்டல் வாசல்ல இறக்கி விட்டுட்டு போனாரு. இப்ப எப்படி தெரிஞ்சுச்சோ?…”
“அட சித்தி, திரும்ப சித்தப்பா கீழ விழுந்துட்டாங்க…” என்று ஹரிணி சொல்லவும் திரும்பி பார்க்க அங்கே கமலன் குப்புற விழுந்துகிடந்தார்.
“என்ன கவுந்து கிடக்காரு கரப்பாம்பூச்சி மாதிரி?…” என்று ஓடி வர,
“யார் இவங்க? நடுவாசல்ல படுத்து கிடக்கறது?…” என அப்போது தான் ஆட்டோவில் வந்து இறங்கிய வினோதா,
“குடிச்சுட்டு விழ வேற இடமே கிடைக்கலையா யோவ்…” என்று கமலனை தட்டி எழுப்பி பார்த்தவள் கை பிடித்து தூக்க முயன்றாள்.
அவள் தூக்கவும் கமலன் மெல்ல தலையை நிமிர்ந்து யார் என்று பார்க்க மொத்த வாயிலும் ரத்தம் கொட்டியது.
“ஐயோ…” என பிடித்த பிடியை வினோதா விட மீண்டும் நச்சென்று தலை தரையில் மோதியது.
“அட என்னம்மா நீ இப்படி பண்ணிட்ட?…” என்ற சுகன்யா,
“என்னங்க, என்னங்க?…” என்று அவரை திருப்ப கமலன் வலியில் அலறியபடி மயங்கி சரிந்தார்.
“என்ன கையை பிடிச்சு தூக்கினதுக்கு இம்புட்டு அலறி விழறார்?…” என சொல்லி,
“என்னடி இதுக்கு போய் வாயெல்லாம் அடி?…” சுகன்யா ஹரிணியிடம் கேட்க,
“பூசணிக்காய்லையே காலை வச்சிட்டார் போல சித்தி. அதான் வேகத்துல வழுக்கிருச்சு…”
“ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுமா மட்டு. கண்ணும் அவுட்டு. தேவையா இவருக்கு?…” என்று சத்தம் போட அதற்குள் அனைவரும் வந்துவிட்டனர்.
“என்னாச்சு? எப்படி ஆச்சு?…” என்று கேட்க அதற்குள் சிற்பி காரை எடுக்க செல்ல,
“தூக்கி பிடிங்கடா இவரை…”என்றார் சுகன்யா.
“என்ன சுகா?…” புவனா கேட்கவும்,
“ம்மா, சித்தி தான் ஒரே போர்ஸ்ல சித்தப்பா மேல பூசணிக்காயை போட்டு, அவர் கால் உடைச்சதுமில்லாம அதுலயே காலை வச்சு நடந்து விழுந்துட்டாங்க. வாய்ல மூக்குல நல்ல அடி…” என்றாள் ஹரிணி.
“இவ வேற நான் என்னமோ வேணும்ன்னு பண்ணின மாதிரியே வாக்குமூலம் குடுக்கா. இவர் வேற சுயநினைவுல இருக்காரான்னு தெரியலை….” என்று கமலன் முகத்தை இன்னும் அருகில் பார்த்து,
“நல்லவேளை மயங்கிட்டாரு…” என்று நெஞ்சில் கைவைக்க,
“ஹாஸ்பிட்டல் போனதும் மயக்கம் தெளிஞ்சிடும். அப்ப கேட்பாங்க தானே?…” என லாவண்யா.
“நீங்க வேற ஏன் சம்பந்தி? அவச்சொல்லா சொல்லாதீங்க…” என்றவர் அனைவரும் தன்னையே பார்க்க கண்டு,
“வந்து அவச்சொல்லுன்னா, இவர் என்னை மயக்கம் தெளிஞ்சு திட்டுவாருன்னு சொல்லாதீங்கன்னு சொன்னேன். அதுக்குன்னு மயக்கம் தெளியாமையா இருக்கும். என்னன்னாலும் என் புருஷன்…” என்றார் சுகன்யா.
“இப்ப இந்த கேள்வி ரொம்ப அவசியம். நானே இவருக்கு என்னாச்சோன்னு இருக்கேன்…” என்று சொல்ல அதற்குள் சிற்பி வந்துவிடவும் கமலனை காரில் ஏற்றினார்கள்.
“என்ன வேகமா நாலு கால்ல நடந்து வந்த மனுஷன், கிழிஞ்ச துணியாகிட்டாரே?…” என்று கண்ணீரை துடைத்தபடி கமலனை மடியில் வைக்க, முன்பக்கம் நம்பி ஏறிக்கொண்டார்.
“புவி நீ இவங்களை பார்த்துக்கோ. நாங்க போய்ட்டு என்னன்னு சொல்றோம்…” என்றார் நம்பி.
அந்த கார் கிளம்பவும் தருணும் தானும் செல்வதாக சொல்ல சரி என்றார் லாவண்யா.
மருத்துவமனையில் கமலன் விழுந்தவேகத்தில் கையில் பிராக்சர் என்றும், மேல் பற்கள் கொட்டிவிட்டதாகவும், வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சொல்லியிருந்தனர்.
“அம்புட்டு வேகம் மனுஷனுக்கு ஆகுமா? மொத்த பல்லும் போச்சா? இனிமே நாக்கு மேல பல்லை போட்டு பேசமுடியுமா? கொஞ்சநஞ்ச பேச்சா? அந்த வீட்டு வாசப்படியே தட்டிவிட்டுருச்சு…” என்ற சுகன்யா,
“பல்லு கட்டனுமா குமரா? அதுவரைக்கும் என்ன செய்வாரு உங்கப்பா? மென்னு கூட சாப்பிட முடியாதே?…” என்றவர்,
“போய் ஆரஞ்சு வாங்கிட்டு வா. ஜூஸ் தான் இனிமே இவருக்கு…” என்று சோகமாய் சொல்ல,
“கமலா ஆரஞ்சு தான?…” என்றான் குமரன்.
“ம்க்கும், இந்தா தோல் உறிஞ்சு கிடக்காரே. பத்தாதா. போடா டேய்…” என்றவர் வெளியில் அமர்ந்திருக்க, பார்வதி வந்துசேர்ந்தார் விஷயம் கேள்விப்பட்டு.