வெளியே அழைப்பு மணி சத்தத்தில் விழித்த சம்ருதிக்ஷா அருகில் ஹரித்திரனை காணாமல் எழுந்தமர மீண்டும் சப்தம்.
குளித்துவிட்டு தான் அவள் மீண்டும் வந்து படுத்திருந்தாள் ஹரித்திரன் அருகில். லேசாய் கண்ணயர்ந்திருக்க அந்த நேரத்தில் அழைப்பு சத்தம்.
புவனாவும், நம்பியும் வந்திவிட்டிருக்க கூடும் என்று எழுந்தவள் சென்று கதவை திறக்க அங்கே புவனா தான் நின்றுகொண்டிருந்தார்.
“என்னம்மா தூக்கத்துல எழுப்பிட்டேனா?…” என்றபடி உள்ளே வர மெலிதாய் புன்னகைத்தவள்,
“இல்லை, முழிச்சு தான் இருந்தேன்…” என்று சொல்லிவிட்டு அவரின் பின்னால் வேறு யாரும் வருகிறார்களா என்று பார்க்க எவருமில்லை.
அவள் தேடி பார்த்து கேட்காமலிருக்கும் விதம் கண்ட புவனா மென்புன்னகையுடன்,
“சுகா வீட்டுக்காரருக்கு இப்ப பரவாயில்லை. பல்லு உடைஞ்சிருக்கு. அது கட்டுற வரைக்கும் பேசறது கஷ்டம். மத்தபடி கைல சின்னதா பிராக்சர். விழுந்ததுல உடம்புல கொஞ்சம் அடி. சரியாகிடும்….”என்றவர்,
“நான் குளிச்சிட்டு சமைச்சுட்டு ஹாஸ்பிட்டலுக்கு குடுத்து விடனும். உன் மாமா இன்னைக்கு அங்க தான் இருப்பார். சுகாவால தனியா சமாளிக்க முடியாதுல…” என்று அவள் கேட்காமலேயே கேட்க நினைத்ததற்கு பதில் சொல்ல,
“ஹ்ம்ம், ஓகே…” என்றாள் அமைதியாய்.
“என்கிட்ட உனக்கு எப்போ சகஜமா பேச முடியுதோ பேசும்மா. அதுக்குன்னு இப்படி கஷ்டப்படுத்திக்க வேண்டாம். இங்க உன்னை எல்லாருக்குமே புரியும்…” என்றவர்,
“நான் போய் குளிச்சிட்டு சமைக்க வர்றேன்…” என்று சொல்லிவிட்டு பால் பாக்கெட்டை கொண்டுவந்து மேடையில் வைத்தார்.
“ஹரி எழுந்தாச்சா ருதி?…” என்று மகனை கேட்க அவரின் பின்னே வந்தவள்,
“குளிக்கிறாங்க. அதான் நான் வந்தேன்…” என்று சொல்ல,
“என்ன யோசனை? எதுவும் கேட்கனுமா?…” என்ற புவனா,
“நீ டீ தான் குடிப்பன்னு ஹரி சொன்னான். போட்டுட்டு போகட்டுமா?…” என கேட்டார்.
“தாராளமா. இது உன் வீடு. உனக்கு எப்படி வேணுமோ போட்டுக்கோ. எனக்கும் சேர்த்து தந்தாலும் சந்தோஷம் தான். உன்னை வேலை வாங்கன்னு இல்லை. காலத்துக்கும் மருமகன்னு ஒருத்தி கையால தண்ணி கூட வாங்கி குடிக்கமாட்டன்னு நிறைய பேச்சு. அதான் இப்ப ஒரு ஆசை, நீ எனக்கும் போடேன்…” என்றார் ஆசையுடன் புவனா.
தீக்ஷாவிற்கு அவர் கூறவருவது புரிந்தது. யார் சொல்லியிருப்பார்கள் என்றும் அனுமானமே.
ஓரளவு ஹரிணி அவளிடம் எல்லாம் கூறியிருந்தாள். ஹரிணி மட்டுமன்று, சிற்பி, குமரன், சுகன்யா கூட பேசியிருந்தார் நடந்தவற்றை பற்றி எல்லாம்.
இப்போது நினைக்க அத்தனை கஷ்டமாக இருந்தாலும் அதனை யோசித்து நிற்பதா என புவனாவை பார்த்து புன்னகைத்தவள்,
“நான் போட்டுடறேன். நீங்க குளிச்சிட்டு வாங்க…” என்று சொல்லவும் சந்தோஷமாய் கிளம்பினார் புவனா.
அவர் சென்றதும் அந்த சமையலறையின் ஒவ்வொன்றையும் பார்த்துக்கொண்டிருந்தாள் என்னென்ன எங்கே இருக்கிறதென குறித்துக்கொண்டாள்.
சட்டென்று நறுமணம் நாசியில் நுழைய திரும்பும்முன் வலிய கரமொன்று அவள் இடையை வளைத்தது.
“ஹரி, அத்தை வந்தாச்சு…” என அவனின் கரத்தை பிரிக்க முயன்றவள் பக்கவாட்டில் அவன் முகம் காண,
“எக் பப்ஸ். ஒரு ப்ளாக் காபி…” என்றான் அவள் கழுத்தில் முகம் புதைத்து.
“ஏன் ஸார்க்கு கையில்லையா? வேணும்னா போடவேண்டியது தான?…” என்று சொல்லி அவனின் கைப்பிடியிலிருந்து நழுவியவள் டீ போட பாத்திரத்தை எடுத்து வைத்தாள்.
“ம்ஹூம், இதில்லை. அம்மாக்கிட்ட கேட்டிருக்கலாமே?…” என வேறு ஒன்றை ஹரித்திரன் எடுத்து நீட்ட,
“அதான் இருக்கீங்களே? எடுத்து தந்தாச்சுல….” அவன் பேசியவைக்கெல்லாம் பதிலுக்கு வம்பு பேச,
“ஒன்னொன்னும் சொல்லி செய்யனுமா ஸார்? இத்தனை வயசாகிடுச்சு. இது கூட…” என்றவள் முடிக்கும்முன் அவள் மீது மொத்தமாய் சாய்ந்தவன்,
“அடிங், நானும் பார்த்துட்டே இருக்கேன். திரும்ப திரும்ப வயசாகிடுச்சுன்னு சொல்லிட்டே இருக்க…” என்றான் கோபமின்றி ஹஸ்கி வாய்ஸில்.
“பின்ன, நீங்க என்ன என்றும் இளமையா?…” என்று நக்கலாய் சிரித்தவள்,
“பார்க்க கொஞ்சம் ஓகே….” என்று சொல்லிக்கொண்டே பால் பாக்கெட்டை பிரித்து பாத்திரத்தில் ஊற்ற,
“அது என்ன ஓகே? என்னன்னு சொல்லேன்….” என்றபடி ஹரித்திரன் புன்னகையுடன் டீக்கு வேண்டியதை எடுத்து வைத்தான்.
“சொல்லிடுவேன். அப்பறம் வருத்தப்படக்கூடாது…” என எச்சரிக்கையுடன் அவள் ஆரம்பிக்க எல்லாம் வைத்துவிட்டு மேடையில் ஏறி அமர்ந்துகொண்டான் ஹரித்திரன்.
“முன்னாடி இந்த மீசை இத்தனை அடர்த்தியா இருக்காது. கொஞ்சம் மைல்டா அப்ப இருந்த முகத்துக்கு ஆப்ட்டா இருந்துச்சு. இப்ப வயசாகிடுச்சு இல்ல? அதனால இப்ப இந்த மீசை ஓகே தான்….”
“ஹ்ம்ம், நெக்ஸ்ட்…”
“முன்னாடி கொஞ்சம் மெலிவா அந்த ஹைட்க்கு போதாத வெய்ட். பட் பிப்டி பிப்டி மார்க். இப்ப கரெக்ட் வெய்ட். வயசாகிடுச்சு இல்ல?…”
“ஹ்ம்ம், அப்பறம்…”
“முன்னாடி சிரிச்சா சின்ன பிள்ளை மாதிரி அழகா இருக்கும். இப்ப சிரிச்சா பெரியாள் சிரிப்பு மாதிரி இந்த மீசைக்குள்ள சிரிப்பு ஒளிஞ்சிக்கிட்டு தெரியறதே இல்லை. வயசாகிடுச்சு இல்ல?…” என்று அவனை ஒவ்வொன்றாய் சொல்லிக்கொண்டே வர,
“அவ்வளோ தானா? இல்ல இன்னும் இருக்கா?…” என்றான் அவன் ரசனையாய் கேட்டுக்கொண்டு.
“ஏன் இல்லாம, முன்னாடி நடைல ஒரு வேகம், துள்ளல் இருக்கும். ஆனா இப்ப அதுல நிதானம் இருக்கு….” என்றவள் வாயை கை கொண்டு மூடியவன்,
“என்ன கங்கா, கேட்டுக்கிட்டியா உன் தம்பி பொண்டாட்டி பேச்சை?…” என்று சொல்லவுமே அவர்கள் யார் என்று புரிந்துபோனதும்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் பார்த்ததுடன் எதுவும் பேசாமல் உள்ளே வந்துவிட ஹரித்திரனும் வந்து எட்டி பார்த்தான்.
“ஹரி…” என்று கங்கா வேகமாய் உள்ளே வர, பார்வதிக்கு பொங்கிக்கொண்டு வந்தது தீக்ஷாவின் அலட்சியத்தில்.
உண்மையில் அது அலட்சியம் அல்ல என்பது அவர்களுக்கு புரியவில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்பதற்கேற்ப தீக்ஷா விலகி வந்திருந்தாள்.
“அந்த பொண்ணு எங்களை வாங்கன்னு கூட ஒருவார்த்தை சொல்லலை ஹரி. அப்போ இந்த அக்கா அவ்வளோ தானா? அத்தை எவ்வளோ பெரியவங்க, மரியாதை தெரிய வேண்டாமா?…” என்று அப்போதே ஆரம்பிக்க புவனாவும் வந்துவிட்டார்.
“வாடியம்மா, ஊர்ல இல்லாத மருமகளை கொண்டு வந்திருக்கியே. அவ லட்சணத்தை பார்த்தியா? ஒரு வார்த்தை வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கேட்க தெரியலை. என்ன புள்ளை வளர்த்தாளோ இவ அம்மா….” என்று சொல்ல,
“என்ன பேசறீங்க அண்ணி?…” என்றார் புவனா.
“கேட்டுச்சு தான? உண்மையை தான சொன்னேன்?…” என பார்வதி சொல்ல,
“நீங்க எதுக்காக இப்ப வந்தீங்க?…” என்றான் ஹரித்திரன் அவர்கள் இருவரையும் பார்த்து.
“கண்ணுக்கு முன்னாடி இல்லாதப்பவே மயக்கத்துல சுத்தின. இப்ப பொண்டாட்டியாவே ஆகிட்டா. உன்னை கைல புடிக்க முடியுமா?…” என்று எள்ளலாய் அவர் கேட்க,
“நீங்க கைல ஏன் பிடிக்கனும்? இப்ப எதுக்காக வந்தீங்க?…” என்றான் அவன் எரிச்சலுடன்.
“ஹரி, என்ன பேசற நீ? அத்தைய போய் எப்படி பேசற?…” என கங்கா கேட்க,
“ஏன், உன் அத்தை கொஞ்சம் முன்னாடி உன் அம்மாவை பேசினாங்க. என் பொண்டாட்டி வளர்ப்பை பேசினாங்க. அப்போ தப்பா தெரியலையா? அது மரியாதையான பேச்சா? அதை கேளு…” என்றதும் கங்கா விழித்தாள்.
“அவங்க பெரியவங்க ஹரி. என்னவோ பேசறாங்கன்னா நீ அர்த்தம் எடுத்துப்பியா?…” கங்கா கேட்க,
“இப்ப நான் பேசினதுக்கும் கூட தான் நீ அர்த்தம் எடுத்துக்கற க்கா. இதென்ன ஆளுக்கு ஒரு நியாயமா?…” என்றான் பதிலுக்கு ஹரித்திரனும்.
அவனை சமாளிக்க முடியவில்லை கங்காவால். என்ன சொல்ல என்று அவள் புவனாவை பார்க்க,
“ஹரி சொல்றதுல என்ன தப்பு? சரியா தான் கேட்கறான்…” என்று சொல்லிவிட்டார் புவனா.
“என்ன புவனா? பேச்செல்லாம் தினுசா இருக்கு? நானும் பார்க்கேன், ஹரி கல்யாணத்துல இருந்து ரொம்ப பேச ஆரம்பிச்சிட்ட நீ. புள்ளப்பூச்சி மாதிரி இருந்துக்கிட்டு…” என்று சொல்ல, அதற்குள் ஒரு ட்ரேயில் டீயும், ப்ளாக் காபியும் எடுத்துக்கொண்டு வந்தாள் தீக்ஷா.
“இதாச்சும் தெரிஞ்சதே. என்னமோ போ…” என்று பார்வதி அந்த கப்பை எடுக்க தயாராக,
“எடுத்துக்கோங்க…” என தீக்ஷா புவனாவிடம் நீட்ட அவர் திகைப்பாய் பார்த்தார்.
“உங்களுக்கு தான் த்தை. டீ கேட்டீங்க தானே? போட்டுட்டேன், குடிச்சிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க….” என்றவள்,
“ப்ளாக் காபி…” என ஹரித்திரனிடமும் நீட்ட கடுகடுவென்று பார்த்தார் பார்வதி.
“என்னமா எங்களை அவமானப்படுத்தற நீ. அதுவும் என் வீட்டுல இருந்துட்டு இன்னைக்கு வந்துட்டு என்னையும், என் அத்தையையும் அலட்சியப்படுத்தற?…” என்று கங்கா கேட்க தீக்ஷா அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள்.
“உங்க வீடு இது இல்லையே? என் வீடு…” என்ற வார்த்தை பளிச்சென்று வர,
“என்ன? உன் வீடா?…” என பார்வதி எழுந்துவிட, ஹரித்திரன் தீக்ஷாவிடம் வர பார்த்தான்.
“நான் பேசிக்கறேன்…” என்று சொல்லி அவனை நிறுத்தியவள்,
“வேற எதுவும் கேட்க வேண்டியது இருக்கா?…” என்றாள் பார்வதி, கங்காவை பார்த்து.