“என்கிட்ட தான பேசினீங்க? நான் தான பதில் சொல்றேன். இங்க பேசுங்க…” என்று கங்காவை தன்னை நோக்கி திருப்ப,
“என் அம்மாக்கிட்ட நான் பேசறேன். நீ என்ன வேண்டாம்ன்னு சொல்றது?…”
“உங்களுக்கு தக்க வார்த்தைகளையும் சூழ்நிலையையும் மாத்திப்பீங்க போல? குட் ஜாப்….” என்று கங்காவின் திசைதிருப்புதலை கண்டுகொண்டுவிட்டதாய் தீக்ஷா சொல்ல,
“என்ன?…”என்று தடுமாறினாள் கங்கா.
“என்கிட்ட ஒரு விஷயம் கேட்டீங்க. நான் பதில் சொல்லலாம்ன்னு பேசினா, இப்படி மாத்தி பேசறீங்க. இதையே நீங்க தொடர்ந்தீங்கன்னா நாளைக்கு அது உங்களுக்கே எதிரா திரும்பிரும்….” என்ற தீக்ஷா, கங்காவின் பார்வையில்,
“நீங்க எப்பவோ நம்பகத்தன்மையை இழந்துட்டீங்க. கங்கா சொன்னா அதுல நம்பிக்கை இருக்காதுன்ற இடத்துல நீங்க நிக்கறீங்க. நீங்க நாளைக்கு உண்மையை சொன்னா கூட யாரும் நம்பமாட்டாங்க. அந்த அர்த்தத்துல சொல்றேன். புரிஞ்சதா? இல்லை இதையும் மேனுப்ளேட் பண்ண போறீங்களா?…” என்றவள் கேள்வியில் வாயடைத்தாள் கங்கா.
“ஏய், என்ன என் வீட்டுலையே இருந்துட்டு…”என பார்வதி வர,
“ஷ்ஷ்ஷ்…” என்று சுட்டுவிரல் கொண்டு அவரின் சத்தத்தை அடக்கியவள்,
“என்னோட வளர்ப்பை பேசறீங்களே? ஒரு வீட்டுல நாகரீகமா எப்படி நடந்துக்கனும்ன்னு சொல்லித்தராம உங்கம்மா இப்படியா வளர்த்தாங்க?…” என்றதும் பார்வதி ஆத்திரமாய் பார்த்தார்.
“உங்கப்பனை இந்த வீட்டுல இருந்து அடிச்சு தள்ளின ஞாபகம் மறந்து போச்சா? அன்னைக்கு மாதிரி அத்தனை பேர் வேண்டாம். நான் ஒருத்தி போதும், உன்னை வெளியேத்த…” என்று சொல்ல,
“எங்க என் மேல கை வைங்க…” என்று பார்வதியின் அருகில் சென்றுவிட்டாள் தீக்ஷா.
“தீக்ஷா, ப்ளீஸ்…” என வந்த ஹரித்திரன்,
“வெளில போங்க நீங்க…” என்றான் பார்வதியிடம்.
“நீ என்னடா என்னை வெளில போக சொல்றது? இது என் அம்மா வீடு. என் தம்பி வீடு…” என்று மீண்டும் சட்டமாய் அமர,
“சொத்தை தான் பிரிச்சு வாங்கியாச்சு தானே? சொந்தம்ன்னா நாங்களா நினைக்கனும். நீங்க அதிகாரம் பண்ண இங்க இடமில்லை….” என்ற தீக்ஷா,
“நீங்க இப்படி இருந்ததால தான் உங்க மகனும் உண்மை இல்லாம, மருமகளும் உண்மை இல்லாம இருக்காங்க போல? சில பாவங்களுக்கு சம்பளம் இருக்கு. அது வந்துசேரவேண்டிய நேரம் வரும்….” என்றாள்.
“ஆக்ட்டிங்கா? என்னை பார்த்தா நடிப்புக்கு அழற மாதிரியா இருக்கு…” என்றதும் தீக்ஷா அவளை ஏற இறங்க பார்த்துவிட்டு,
“இன்னும் கொஞ்சம் அழுங்க. வீடியோ எடுத்துக்கறேன். எவிடென்ஸ் பக்காவா இருக்கும்…” என்றவள் தனது கைப்பேசியில் ஆக்ரோஷமாய் நிற்கும் பார்வதியையும், அவரருகில் அழுகையுடன் நிற்கும் கங்காவையும் சேர்த்தே எடுக்க பதறி போனார் பார்வதி.
“என்னடி மிரட்டறியா? தொலைச்சு கட்டிருவேன்….”
“நியாயம் கேட்டா என்னை மிரட்டுவீங்களா? இன்னும் வீடியோ ரன்னிங்ல தான் இருக்கு…” என்று தீக்ஷா கேமராவை காண்பிக்க எச்சிலை விழுங்கினார் பார்வதி.
“நீங்க நடந்துக்கறதுக்கு தான் உங்களுக்கு மரியாதை. இப்படி பண்ணினா நானும் பதிலுக்கு தருவேன். எங்கப்பா வேணா அமைதியா போயிருக்கலாம். இது என் வீடு, அப்படி நான் போகவேண்டிய அவசியம் இல்லை…” என தீக்ஷா கூற,
“என் அத்தை உங்களுக்கெல்லாம் மதிச்சு பதில் தரமாட்டாங்க. அவங்க பேசற அளவுக்கு உங்களுக்கு தராதரம் கிடையாது. வெளில போறீங்களா இல்லையா?…” என்றாள் மீண்டும்.
“இருக்கட்டும், பார்த்துக்கறேன் உங்களை…” என்று பார்வதி கிளம்ப,
“இவங்களை கூட்டிட்டு போங்க. இது எங்க குடும்பம்…” என்று சொல்லிவிட்டாள் உறுதியுடன்.
“இப்படி என்னை அனுப்பறீங்களே? அங்க என்னை என்ன பேசுவாங்கன்னு கவலையே இல்லையாம்மா?…” என்று கங்கா உடனே புவனாவிடம் உருக்கமாய் கேட்க,
“அதை என் அத்தை ஏன் சுமக்கனும்? உங்களுக்கு இங்க பேசத்தெரிஞ்ச அளவுக்கு அங்க பேச வாய் இல்லையா? எங்க கேள்வி கேட்கனுமோ அங்க கேளுங்க…” என தீக்ஷா கூற,
“நான் என் அம்மாக்கிட்ட பேசறேன்…”
“என் அத்தைக்காக நான் தான் பேசுவேன். கொஞ்சம் முன்னாடி உங்க மாமியார் மரியாதையை நீங்க பார்த்துக்கிட்டீங்களே, அப்போ என் மாமியாரை நான் தானே பார்த்துக்கனும்…” என்று எந்த வழிக்கும் செல்லவிடாமல் அடைத்தாள் தீக்ஷா.
உள்ளிருந்து ஹரியும் இதனை கேட்டுக்கொண்டு தான் இருந்தான். இப்படியாவது கங்காவிற்கு புத்தி வருகிறதா என்று பார்ப்போம் என.
“அப்போ எனக்காக வரமாட்டீங்களா ம்மா? நான் உங்க பொண்ணு தானே?…” என்று கரைக்க பார்க்க தீக்ஷாவிற்கும், புவனாவிற்கும் வெறுப்பானது.
எந்தளவிற்கு இந்த பெண்ணால் இப்படி பேச முடிகிறது என்று தான் பார்த்தனர்.
“நீங்க பலவீனத்தால இப்படி இருக்கீங்கன்னு நினைச்சேன் கங்கா. ஆனா தெரிஞ்சே தான் இப்படி இருக்கீங்க. எல்லார்க்கிட்டையும் நல்லவிதமா இருக்கறதா நினைக்கறீங்கன்னு தான் நம்பிட்டிருந்தாங்க. ஆனா நீங்க தான் எல்லாத்தையும் நகர்த்தறீங்க பாவம் போல இருந்து, அழுதுட்டு. வாவ்…” என்று சொல்ல திடுக்கிட்டு பார்த்தாள் கங்கா.
“உங்களை இதுக்கு மேல பேச எதுவும் இல்லை. என்ன முடிவு பண்ணியிருக்கீங்க? போறீங்களா? இல்லை கம்ப்ளைன்ட் பன்றீங்களா? கண்டிப்பா சட்டம் சப்போர்ட் பண்ணும்…” என்று தீக்ஷா சொல்ல,
“இந்தா, வந்து தொலை…” என்று கிளம்பினார் பார்வதி.
அவர் விருட்டென்று செல்லவும் கங்கா தீக்ஷாவையும், புவனாவையும் பார்க்க,
“கம்பளைன்ட் பண்ண நினைச்சது உங்களுக்காக இல்லை. இங்க உங்களை விட்டுட்டு போனா இங்க இருக்கறவங்க நிம்மதி போயிரும். அதுக்காக. கிளம்புங்க….” என்று தீக்ஷா சொல்லிவிட,
“உன்னை பார்த்து மன்னிப்பு கேட்கனும்ன்னு எல்லாம் நினைச்சேன் தெரியுமா? என்னை போய்…” கங்கா மீண்டும் ஒரு நாடகத்தை நடத்தினாள்.
“ஹப்பா, நல்லவேளை கேட்கலை. உங்க மன்னிப்பும் தேவை இல்லை. அதுக்கு வேல்யூவும் இல்லை. நான் நம்ப போறதும் இல்லை….”
“என்ன, நான் சொன்னா நம்பிக்கை இல்லையா?…”
“ஆமா, உங்களை மாதிரி ஆளுங்களை தான் முதல்ல நம்பக்கூடாது…” என்றவள்,
“எனக்கு போட்ட டீ ஆறிருக்கும். டைம் வேஸ்ட் பண்ண விரும்பலை நான்…” என்று உள்ளே சென்றுவிட்டாள் தீக்ஷா.
“ம்மா, பார்த்தீங்களா?…” கங்கா புவனாவிடம் திரும்ப,
“உன்னோட இந்த நிலைமைக்கு நீ மட்டும் தான் காரணம். உன் புத்தியை மாத்திக்கோ. உன்னை திருத்திக்கோ. இனிமேலும் இங்க யாரும் ஏமாற மாட்டாங்க. உறவு மொத்தமா இல்லைன்னு இல்லை. கடமைக்கு செய்யறதுக்கு இருக்கோம்….” என்றதும்,
“ம்மா…”
“போதும் கங்கா, இவ்வளோ நாள் நீ பாவம், சூதுவாதில்லாத அமைதியான பொண்ணுன்னு நினைச்சிட்டிருந்தேன். ப்ச், விடு. இனிமே எதையும் ஏமாத்தி வாங்கிட நினைச்சா இனிமே அது நடக்காது. உன்னை பெத்த நானே வெறுக்கற அளவுக்கு இருந்துட்ட நீ. கிளம்பிடு…” என்று சொல்லிவிட்டு உள்ளே வர தீக்ஷா டீயை சூடு செய்துகொண்டிருந்தாள்.
“அவங்க பேசினதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன்ம்மா…” என்றார் புவனா.
“இன்னும் எத்தனை பேருக்காக நீங்க மன்னிப்பு கேட்பீங்க? அவங்கவங்க செஞ்சதை உணர்ந்தாங்கன்னா அவங்களே கேட்கட்டும். நீங்க கேட்டதனால உங்க பொண்ணு மாறிடுவாங்களா என்ன?…” என்று கேட்க,
“ம்மா, நீங்க ஏன் மன்னிப்பு கேட்கறீங்க?…” என்றாள் கங்கா.
“இன்னும் கிளம்பலையா நீங்க…” என்றாள் தீக்ஷா.
“நான் போவேன், போகாம இருப்பேன். அதை நீ சொல்லாத. எங்கம்மா மன்னிப்பு கேட்டா பரவாயில்லை, அதெல்லாம் கேட்காதீங்கன்னு சொல்லாம புத்தி சொல்ற? அந்தளவுக்கு பெரிய மனுஷியா நீ?…” கங்கா கொந்தளிக்க,
“உங்கம்மா மன்னிப்பு கேட்கிற இடத்துக்கு கொண்டுவந்ததே நீங்க தான். இதுக்கு முதல்ல நீங்க வெட்கப்படனும். வேதனைப்படனும். அந்த குற்றவுணர்ச்சி இல்லாம இப்படி பேச எப்படி முடியுது?…” என்றவள்,
“முதல்ல உங்களை நீங்க பாருங்க. அப்பறம் அடுத்தவங்களை பார்க்கலாம். அப்பறம் என்ன சொன்னீங்க, போகாம இருப்பீங்களா? இருந்துடுவீங்களா? சட்டம் உங்களை பாதுகாக்க மட்டுமில்லை. எனக்கும் தான். உங்க மாமியார் தூண்டுதல்ல நீங்க இங்க வந்து என்னோட பிரச்சனை பன்றீங்கன்னு உங்க மேலையும் கேஸ் குடுப்பேன்…” என்றாள் தீக்ஷா.
“ம்மா…” அவள் அலறிக்கொண்டு புவனாவை பார்க்க,
“எங்களுக்கு கல்யாணம் முடிச்சு வச்சதுக்கு என் மாமியாரை மிரட்டறீங்கன்னும் சொல்லுவேன். என்ன பண்ணலாம்? இருக்கலாமா? போகலாமா?…” என்று கேட்க,
“அப்படி சொல்லுங்க அண்ணி. இப்படி பேச இங்க ஆளில்லைன்னதால தான் இவ கண்ணை கசக்கிக்கிட்டு எல்லாரையும் ஏமாத்திட்டு இருந்தா…” என்று வந்துவிட்டாள் ஹரிணி.
“வா ஹரிணி…” என முகமெல்லாம் புன்னகையுடன் தீக்ஷா அழைத்ததும் கங்காவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
“நான் பகை. இவ மட்டும் உறவா? இவ மட்டும் தான் இந்த வீட்டு மகளா?…” என்றாள் கங்கா ஆவேசத்துடன் ஹரிணியை கோபமாய் பார்த்து.
“நான் வந்திருக்கேன். ஒருவார்த்தை என்னன்னு பேசலை நீ. நீயெல்லாம் பாசத்தை பத்தி பேசற. எல்லாம் நேரம்…” என்ற ஹரிணி,
“அண்ணி இவளுக்கு எத்தனை பேசினாலும் உரைக்காது. ஏனா எங்க எப்படி பேசினா அவளுக்கு லாபமோ அதை மட்டும் தான் செய்வா. இவ புருஷன் அதுக்கும் மேல. இவங்களை லிஸ்ட்லயே சேர்க்க கூடாது. என்ன ஒன்னு இவ்வளோ நாள் தெரியாம இருந்தது திரும்பவும் உங்க கல்யாண விஷயம் வரவும் தெரியவருது…” என்று இகழ்ச்சியாய் கங்காவை பார்த்துக்கொண்டே ஹரிணி கூற,
“இதுக்கெல்லாம் நீ நல்லா அனுபவிப்ப. இப்ப தான கல்யாணம் முடிஞ்சு போயிருக்க…” என்று கங்கா தன் தங்கையிடம் சொல்ல,
“கங்கா, என்ன பேசற நீ? முதல்ல கிளம்பு….” என்றார் புவனா.
“இவளை சொன்னா மட்டும் பொத்துக்கிட்டு வருதா உனக்கு? பெத்த மகளை இப்படி கண்ணீரோட அனுப்பற நீயும் அனுபவிப்பம்மா. நீயெல்லாம் ஒரு அம்மா?…” என்று சொல்லிவிட்டு கங்கா வெளியேற புவனா அழுதுவிட்டார்.
“ம்மா, அவ ஒரு ஆளுன்னு அவ சொல்றதெல்லாம் நடந்திடுமா என்ன?…” என்றாள் ஹரிணி.
“இவங்களுக்காக கண்ணீர் சிந்தாதீங்க த்தை. விடுங்க…” என்ற தீக்ஷா,
“சரி, என்ன செய்யனும்ன்னு சொல்லுங்க. பண்ணலாம்…” என்றாள்.
“நீ டீயை குடிச்சிட்டு வாம்மா. நான் அதுவரை ரெடி பண்ணிட்டிருக்கேன்…” என புவனாவும்,
“நீங்க கிளம்புங்க அண்ணி, நாம அப்படியே வெளில போலாம்…” என்றாள் ஹரிணியும்.
“போலாம். போய்ட்டு அப்படியே சும்மா ஒரு ரவுன்ட். வீட்டுல இருந்தா இப்படி இம்சைங்க வந்து டிஸ்டர்ப் பண்ணும்ங்க…” என்றவள்,
“இந்த வேலை எல்லாம் நாங்க பார்த்துக்கறோம். கிளம்புங்க கிளம்புங்க…” என்று அவளை தள்ளிக்கொண்டுவந்து ஹரித்திரன் அறைக்குள் விட புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள் தீக்ஷா.