அங்கே ஹரித்திரன் நெற்றியில் கை வைத்தபடி அமர்ந்திருந்தான். முகத்தில் மிதமிஞ்சிய வருத்தம்.
அவன் அமர்ந்திருக்க பார்த்தாலும் தீக்ஷா எதுவும் பேசவில்லை. தனக்கொரு உடையை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றவள் மாற்றிவிட்டு வர, அவளின் செயல்களை பார்த்தபடி இப்போது கைகட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
எத்தனை நேரம் தான் அவனை கண்டுகொள்ளாமல் இருப்பது என தயாராகி நிற்க அப்போதும் அவளை அமைதியாக அவன் பார்த்திருக்க,
“ப்ச், தெரியலை. ஒருபக்கம் இப்படி உறவுகள்ன்னு அவமானமா இருக்கு. இன்னொருபக்கம் ஆத்தாமையா இருக்கு. இவங்களை எல்லாம் ஒண்ணுமே செய்ய முடியலையேன்னு என் மேலையே கோபமாவும் இருக்கு. இப்ப நீ செஞ்ச பார்த்தியா. ப்ச், உன்னை பேசவிட்டு உன்கூட நிக்காம வந்துட்டேனேன்னு கவலையாவும் இருக்கு…” என்றான் அவளை அணைத்தபடி.
“ஓஹ், எங்க என்னை விட்டுட்டு வந்துட்டீங்களோன்னு நான் கேட்கறதுக்குள்ள முன் அறிவிப்பா? கேடி ஹரி…” என்றவள் அவனின் முகம் நிமிர்த்தி மீசையின் ஒற்றை முடியை பிடித்து இழுக்க,
“ஆஹ்…” என்றவன் அடுத்து அவளுக்கு வாகாய் இதழை குவித்து காண்பிக்க,
“அடி…” என்று அதில் பொத்தென்று அடி வைத்தாள் தீக்ஷா.
“இந்தமாதிரி உறவுங்க எல்லாம் எல்லார் குடும்பத்துலயும் இருப்பாங்க. சிலசமயம் வெளில தெரியும். எல்லாம் நாம கையாளற விதம் தான். நாம கன்சர்ன் பன்ற அளவுக்கு அவங்க வொர்த் இல்லைன்னா இப்படித்தான் ட்ரீட் பண்ணனும்…” என்றவள்,
“இன்னைக்கு நான் பேசினதால இனிமே அவங்க இங்க வராமலா இருக்க போறாங்க? வாய்ப்பே இல்லை. அப்பப்ப நாமளும் திருப்பி குடுக்கனும். இல்லைன்னா இப்படி வருஷக்கணக்கா சாமியாரா சுத்த வேண்டியது தான்…” என்றவள் மீண்டும் மீசை முடியை இழுத்துவிட்டு இந்தமுறை முத்தமும் தந்து வெளியேறிவிட புன்னகையுடன் தானும் கிளம்பினான் ஹரித்திரன்.
வந்ததும் புவனாவை அழைத்துக்கொண்டு மருத்துவமனை சென்று கமலனை பார்த்துவிட்டு சுகன்யாவிடம் விசாரிக்க, கமலன் தன்னிடம் எதுவும் கேட்பார்களா என்று பார்த்தார் ஹரித்திரனையும், தீக்ஷாவையும்.
இருவருமே சுகன்யாவிடம், குமரனிடம் மட்டும் பேசிவிட்டு அவரிடம் தலையசைத்து கிளம்ப,
“அவங்க பேசற மாதிரியா நீங்க நடந்திருக்கீங்க? உங்கக்கா காலையிலையே அங்க போய் ஆடிட்டு போயிருக்கு. மனுஷியா அது? இங்கிதம் வேண்டாம். கல்யாணம் முடிஞ்ச வீட்டுல போய் இப்படி காலாங்காத்தால சண்டைக்கு நிக்கிறதெல்லாம் ஒரு பொழப்பு. இதுக்கு நீங்க சப்போர்ட் பண்ணுவீங்களா?…” என்று கேட்ட கேள்வியில் கமலன் மயங்கிவிட்டேன் என்பதை போல கண்ணை மூடிவிட்டார்.
நம்பி தான் மிகவும் சங்கடப்பட்டு தீக்ஷாவிடம் பேசமுடியாமல் பார்த்து நிற்க,
“சாப்பாடு இருக்கு. சாப்பிடுங்க…” என்று சொல்லிவிட்டு வெளியேறினாள் தீக்ஷா.
“ஹரி, இப்படி செய்வாங்கன்னு நான் நினைக்கலைப்பா…” என்று மகனிடம் பேச,
“தீக்ஷாவே அதை சமாளிச்சிட்டா. நீங்க வருத்தப்படாதீங்கப்பா…” என்றான் ஹரித்திரன்.
“இப்ப எங்க கிளம்பிட்டீங்க?…”
“ஹரிணி வெளில போகனும்ன்னு சொன்னா. அதான்…” என்று சொல்லி வெளியே வந்தான்.
அங்கிருந்து நேராக சென்றதும் நர்மதாவின் வீட்டிற்கு தான். அவருமே இதனை எதிர்பார்க்கவில்லை.
தீக்ஷா ஓடி சென்று தாயை அணைத்துக்கொள்ள நிவாஷினி ஒருபக்கம் சந்தோஷத்தில் கூத்தாடினாள்.
“இன்னும் மறுவீடு அழைப்பு வைக்கலையே?…” என்று மகளை அணைத்து பிடித்தபடி கண் கலங்க ஹரித்திரனிடம் கேட்க,
“இந்த சம்பிரதாயம் எல்லாம் எதுக்கு? இதுவும் நம்ம வீடு தானே த்தை. அதனால என்ன?…” என்றவன் அமர்ந்துகொள்ள அத்தனை நெகிழ்வாய் இருந்தது அவர்களுக்கு.
தருணும் வந்துவிட அங்கே தான் மதியஉணவு எல்லாம் அவர்களுக்கு. சிற்பி கிளம்பி வந்துவிட்டான் அங்கே.
புவனாவிற்கும், சுகன்யாவிற்கு சொல்ல அவர்களுக்கும் சந்தோஷம். அதுவே நர்மதாவிற்கு நிம்மதியை தந்தது.
புரிந்துகொள்ளும் உறவுகள் இருந்தால் போதும், வாழ்க்கையும் சிறக்கும் என்று நிறைவடைந்தார்.
அன்று முழுவதும் அங்கே இருந்துவிட்டு இரவு தான் கிளம்பி வீடு வந்தனர். ஹரிணிக்கு அவன் அங்கே மறுவீடு வரும் வரை நர்மதாவோடு தான் என்று சொல்லிவிட்டாள்.
தீக்ஷாவிற்கு அந்த வீட்டின் கசப்பான நினைவுகள் அடித்தளமாய் இருந்தாலும் அதனை நினைத்து அஸ்திவாரத்தை ஆட்டம் காண செய்ய விருப்பமில்லை.
உறவுகளுக்குள் எல்லாவகையான சுவைகளும் கலந்திருக்கும் என்று புரிந்துகொண்டாலும் பல சமயங்களில் ஹரித்திரனுடனான வாக்குவாதங்களையும் தவிர்க்க முடியவில்லை.
சண்டை நேரத்தில் சண்டை, மற்ற நேரங்கள் எல்லாம் சலுகை என்று காதலிக்க மறந்த காலங்களை எல்லாம் வாழ்க்கை நதியோடு போக்கில் கரைசேர்த்தனர்.
முறைத்துக்கொண்டு வந்தாலும் வினோதா தான் மண்டை காய்வது. சந்தோஷமாக இருந்தாலும் அவள் தான் சூடாவது.
“இதுங்களை வச்சுக்கிட்டு நான் படற பாடு இருக்கே? தலையும் இல்லாம வாலும் இல்லாம நடுவால ஒத்த பத்தியை சொல்லி என்னை பத்திவிடறதுல என்ன ஒரு ஆனந்தம் இந்த காதல் கரடிஸ்க்கு…” என்று பல்லை கடிப்பாள் அவள்.
“சிங்கிள்ஸ் சாபம். உன்னை சும்மா விடாதுடி…” என்று தீக்ஷாவிடம் புலம்பினால்,
“மிங்கிளான பின்னாடி உன் சாபம் எல்லாம் பலிக்காதே வினோ?…” என்பாள் பதிலுக்கு அவள்.
அத்தனை கடுப்பாகிவிடும் இருவரின் பேச்சுக்களும். அவளே பார்ட்டி வைத்து கொண்டாடும் நாளும் வந்தது.
“புண்ணியமா போகும். கிளம்பி போங்கய்யா. உங்களை எல்லாம் வீட்டுல என்னன்னு வச்சு வளர்க்காங்களோ?…” என்று சொல்லி ஹரித்திரனிடம் எக்கசக்க திட்டுக்களையும் பெற்றுக்கொள்வாள்.
“உன் புருஷன் லஞ்ச் டைம்ல மட்டும் உன்னை பத்தி கம்ப்ளைன்ட் பன்றது. பதிலுக்கு நான் பேசினா வொர்க் டைம்ல வச்சு செய்யறது. நான் பாவமில்லையா?…” என்று அழாத குறையாக பேசினாலும் அவளுக்கு அவர்கள் தான் சிறந்த நண்பர்கள்.
இதோ ஹரித்திரன் திருமணம் முடிந்து ஐந்து மாதத்தில் மீண்டும் நியூயார்க் பயணம். பணிநிமித்தம் மனைவியுடன்.
இந்தமுறை முகமெல்லாம் பூரிப்பும், சந்தோஷமுமாய் அவளோடு விமானம் ஏற காத்திருந்தான் ஹரித்திரன்.
இருவரின் குடும்பமும் விமானநிலையத்தில் இருக்க வருவோர், போவோருக்கு எல்லாம் இனிப்பு வழங்கி குதூகலித்துக்கொண்டு இருந்தாள் வினோதா.
“இவ சேட்டையை பாருங்க…” என்று தீக்ஷாவிற்குமே அத்தனை சிரிப்பு.
“பின்ன, உங்க தொல்லை இல்லாம இன்னும் மூணு வருஷம் நிம்மதியா இருப்பேன். முடிஞ்சா அங்கயே செட்டில் ஆகிடுங்க கரடீஸ்…” என்று கையெடுத்து அவள் கும்பிட,
“நாங்க இத்தனை பேர் இருக்கோமேம்மா. கவலைப்படாம போய்ட்டுவா…” என்று புவனாவுடன் சந்தனநம்பி.
“நாங்க மாத்தி போய் பார்த்துப்போம். நீ சந்தோஷமா இருடா…” என்று சுகன்யா.
“நானும், ஹரிணியும் கவனிச்சிட்டே தான் இருப்போம்…” என்று லாவண்யா.
“விடுங்கண்ணி, ஆறு மாசத்துக்கு ஒருதடவை ட்ரிப் போடறோம். ஃபன் பன்றோம்…” என்று ஹரிணி.
“போற நேரத்துல என்ன இது அழுதுக்கிட்டு?…” எங்கோ பார்த்துக்கொண்டு கமலன்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் ஆறுதல் கூறினார்கள் தீக்ஷாவிற்கும், நர்மதா, நிவாஷினிக்கும்.
இப்போதும் கமலன் சகஜமாக எல்லாம் பேசவில்லை. ஆனால் அதற்கென முகம் காண்பிப்பதும் இல்லை.
மன்னிப்பு கேட்க வரவில்லை. ஆனால் உடல்மொழியிலும், பார்வையிலும் அவர் சங்கடம் நர்மதாவால் உணரமுடிந்தது. கடந்துவிட்டார்.
இன்றளவும் பார்வதி வரவில்லை என்றாலும் கங்கா அவ்வப்போதும் தன் பிள்ளைகளுடன் வருவதும் செல்வதுமாக தான் இருந்தாள்.
என்ன ஒன்று முன்பை போல அவள் சொல்லும் எதையும் காது கொடுத்து கேட்பார் தான் இல்லை.
வந்து மற்றவர்களின் பாராமுகம் பார்த்து, மீண்டும் அழுது கரைந்து தான் செல்வாள்.
இத்தனை செய்பவள் தீக்ஷா வீட்டில் இருந்தால் எட்டியும் பார்ப்பதில்லை. அவளில்லாத நேரத்தில் தான் மற்ற நாடகங்கள்.
அதிலும் ஹரிணியோடான தீக்ஷாவின் ஒட்டுதலில் பொறாமையில் பொசுங்கி போவாள் கங்கா.
“திருந்தாத ஜென்மம்…” என்று பொருட்படுத்துவதில்லை ஹரிணி.
இப்போதும் இவர்கள் கிளம்புவதை அறிந்து தன்னிடம் சொல்லவில்லை என புவனாவிடம் கேட்டாலும் தானும் வருகிறேன் என்று சொல்லவில்லை. அந்த உரிமை அவளுக்கு இல்லை என்பது பெரும் தாக்கத்தை தந்தது.
மொத்த குடும்பமும் ஒற்றுமையாய் ஏர்போட்டில் இருப்பதை போன்ற புகைப்படம் கண்டு வயிறு புகைந்தாலும் தான் அதில் இல்லையே என கண்கள் கலங்கத்தான் செய்தது.
ஒவ்வொருவரும் தங்களுக்கு தோன்றிய அறிவுரைகளை சொல்லி வழியனுப்ப தீக்ஷா கிளம்புமுன் இறுக்கமாய் கட்டிக்கொண்டாள் வினோதா.
“உன்னை மிஸ் பண்ணவே மாட்டேன் ருதி. எப்படா கிளம்புவன்னு இருக்கு. தயவு செஞ்சு இந்த பக்கமே வந்துடாத…” என்று சொல்லும்பொழுதே கண்ணீர் வந்துவிட்டது.
கமலன் அவளை விநோதமாய் பார்க்க கண்ணை துடைத்துக்கொண்டு திரும்பியவள்,
“என்ன அங்கிள், என்ன பார்வை? இப்படி பார்க்கறீங்க?…” என்று பட்டென்று கேட்டுவிட அதிர்ந்து போய்,
“நானா, எங்க? இல்லையே?…” என்றவர் சுகன்யா பக்கம் பார்த்து,
“அழுவுது, என்னன்னு பாரு…” என்று அங்கிருந்து நகர்ந்தார்.
அனைவருக்கும் அவரின் செயலில் அப்படி ஒரு சிரிப்பு. அதே மகிழ்வுடன் அவர்களை வழியனுப்பி வைத்தனர்.
புவனாவிற்கும், நம்பிக்கும் இந்தமுறை எந்தவித வருத்தமும் இல்லை. தன் மகன் சந்தோஷமாய் அவன் மனதிற்கு பிடித்தவளுடன் மகிழ்வுடன் வாழ்கிறான் என்பதே போதுமானதாக இருந்தது.
எங்கிருந்தால் என்ன என்னும் நிறைவோடு அவர்களை வழியனுப்பிவிட்டு கிளம்பினார்கள்.
விமானத்தினுள் தங்களின் இருக்கையில் வந்தமர்ந்ததும் தீக்ஷாவின் விழிகள் வெளியே தான் பரிதவிப்புடன் பார்த்தது.
அவளின் உணர்வுகளை புரிந்த ஹரித்திரன் தன் கைகளோடு அவள் கரங்கள் இரண்டையும் பின்னிக்கொண்டவன்,
“சரியாகிடும் தீக்ஷா…” என்றான் ஆறுதலாய்.
“எப்படி நான் இல்லாம இருப்பாங்க? என்னால முடியலை ஹரி…” என்று அவனின் தோள் சாய்ந்தாள் தீக்ஷா.
“எல்லாருமே எப்பவும் கூடவே இருக்க முடியாதே? இன்னும் நமக்கு நிறைய காத்திருக்கு. நிவாஷினிக்கு ஒரு நல்ல லைப். அத்தையை பார்த்துக்கனும். அதுக்கு நாம இன்னும் போகவேண்டிய தூரம் நிறையவே இருக்கு…”
“நில்லாமல் பயணிக்கும் தூரமா?…” பனித்திருந்த கண்களின் நீரை சிமிட்டி ஒதுக்கியவள் கேட்க,
“ஹ்ம்ம், கரையில்லா நதி போகும் தூரம். இலக்கில்லா தூரம். நம்ம வாழ்க்கையோட எல்லை வரை….”
“நான் கேட்டா அப்படியே பதில் சொல்லுவீங்களா?…”
“அதுக்கு தானே நான் இருக்கேன் எக் பப்ஸ்…” என்றவன் கண் சிமிட்டி அவளின் கரத்தில் முத்தமிட,
“ஹரி…” என்றவளின் அழைப்பில் காதலாய் கவனித்தான்.
“இன்னும் கிட்ட…” என்று அவனின் முகத்தை அருகில் பாத்தவள் சட்டென்று மீசையை பிடிக்க சட்டென அவளின் கரத்தை பற்றிக்கொண்டான்.
“இங்க கத்தினா மானம் போயிரும். அங்க போய் இழுத்துக்கோ. கத்திக்கறேன். நீலேஷ் மட்டும் தான். பய கேள்வியே கேட்கமாட்டான்…” என சிரித்தான் ஹரித்திரன்.
அங்கே நீலேஷ் ஹரித்திரன் தங்கும் இல்லத்தில் அவன் அனுப்பிய புகைப்படத்தினை பெரிதாய் மாட்டிக்கொண்டிருந்தான்.
அந்த இல்லத்தின் நடுமத்தியில் பெரிதாய் விரிவாக்கம் செய்யப்பட்டிருந்த அந்த புகைப்படத்தில் தீக்ஷாவின் கைகள் கொடுத்த வெற்றிலை மடிக்கப்பட்ட தாம்பூலம் ஹரித்திரன் கரத்தோடு காதலுடன் இணைந்திருக்க பார்வையை திருப்பமுடியாத அந்த ஓவியம் கவர்ந்திழுத்தது.
“இவனுக்குன்னு எப்படி இப்படி எல்லாம் போட்டோ எடுத்திருக்கானுங்க? நான் பார்த்ததெல்லாம் டொரினோ பாட்டிலும், ரெண்டு ஸ்ட்ராவும் தானடா….” என்றபடி அடுத்த வேலையை பார்க்க சென்றான் தான் மாட்டியிருந்ததை ஹரித்திரனுக்கு புகைப்படமாய் அனுப்பிவிட்டு.
இப்போது அதை தான் பார்வையிட்டுக்கொண்டிருந்தான் ஹரித்திரன். தோளில் சம்ருதிக்ஷா உறங்கியிருக்க வாழ்க்கை நிறைவாகிவிட்ட மனதோடு ஆர்ப்பரிக்கும் மனதினை அமைதியாக்கிக்கொண்டிருந்தான் முகம்கொள்ளா புன்னகையுடன்.
மனைவியின் தலையோடு தலையை மென்மையாய் சாய்த்துக்கொண்டவன் கைகள் அவளையும் ஆதுரமாய் அணைத்துக்கொண்டது.
அவனின் அணைப்பை உணர்ந்து இன்னும் அவனின் அணைப்பை இறுக்கிக்கொண்டவள் இதழ்களிலும் காதலாய் குவிந்தது புன்னகை.
காத்திருப்பிலேயே கனவுகள் கலையுமென கலங்கினாலும், பாதம் தொட்டு கூழாங்கல்லில் ஊடுருவி நழுவியோடும் நதி நீராக கலக்கங்கள் சலசலத்து மறைந்தோட, இரு கரை நதிகள் சங்கமத்தில் புதிதாய் உருவெடுத்த நேச நதி இவர்கள் காதல் நதி.