ஹரித்திரன் தான் கொண்டுவந்த பெட்டியை பிரித்து உடைகளை எடுத்து வெளியே வைத்தான்.
அன்று அதிகாலை தான் சென்னை வந்து சேர்ந்திருந்தான் ஹரித்திரன். ஹரிணியின் நிச்சயதார்த்தத்திற்கான வருகை அது.
இன்னும் பத்துநாட்கள் அங்கே தான் அவனின் இருப்பு. நான்கு வருடங்களுக்கு பின் அதிகநாள் அவனின் வீட்டில் தங்க போகிறான்.
இப்போதும் கூட அவன் மனதில் அந்த நிகழ்வு பெரிதாய் விரிந்து அவனின் குற்றவுணர்வை மேலும் கிளறிவிட்டது.
அந்த வீட்டின் நடுவில் வைத்து தானே அத்தனை கலவரம். அவ்வளவு கலாட்டாக்கள்.
ஏன் எல்லாவற்றிற்கும் உச்சமாய் தீக்ஷாவின் தந்தையை பிடித்து கீழே தள்ளியிருந்தார் கமலன்.
மறக்கவே முடியாத விஷயம் அது. தன் மீதே அவன் கோபம் கொண்டு இன்றளவும் தன்னையே மன்னிக்கமுடியாமல் நிந்தித்துக்கொண்டிருந்தான்.
கமலன் தள்ளியதில் தளர்ந்த அந்த வயோதிகர் தடுமாறி கீழே விழுந்திருக்க அவரை தூக்கி நிறுத்த கூட ஹரித்திரனால் அருகில் செல்லமுடியவில்லை.
அதற்குள் மதிவாளன் மீது தீக்ஷாவின் பெரியப்பாவும், அவரின் மகனும் பாய்ந்திருந்தனர்.
அன்றையநாளில் தங்கள் மீது தவறு இருந்தாலும் அவர்கள் செய்ததில் கோபம் எழுந்ததென்னவோ உண்மை.
அத்தனை நெருக்கம் கிடையாது. வரனாக வந்த பெண்ணை பார்த்துவிட்டு பேசி முடித்ததுடன் வந்தது.
அதற்குமேல் பழக்கமும் கிடையாது. இவர்கள் இதனை செய்திருக்க கூடுமா என்றும் யோசிக்கும் அளவிற்கு தெரிந்திருக்கவில்லை.
ஆனாலும் அங்கே நடந்தது தவறு. தங்கள் பக்கத்தினர் கை வைக்க அது இருபக்கமும் சரிசமமான அடிதடியில் முடிந்திருக்க அதன் இறுதியில் இருமனங்களின் மண இணைவின் கோலங்கள் குலைந்திருந்தது.
உண்மை தெரியும் முன்னவே இருபக்கமும் நடந்தவற்றை சிந்தித்து பார்த்ததிலேயே எங்கேயோ ஒரு கண்ணுக்கு தெரியாத பதற்றம், அதனால் உருவாக்கப்பட்ட பேச்சுக்கள் இடைச்சொருகலாக சொருகப்பட்டதை போலொரு தோற்றம் ஹரித்திரனின் மனதில்.
அதை உண்மை என்று நிரூபிப்பதை போல தன் அக்கா கங்காவின் பேச்சை எதிர்பாராத விதமாக கேட்க நேர்ந்தது என முற்றிலும் நிலைகுலைந்தான் ஹரித்திரன்.
இப்போதும் அந்த பேச்சுக்கள் காதினுள் எழுந்து அவனின் நெற்றியை பலமாய் தாக்க எடுத்த உடைகளை அப்படியே வைத்துவிட்டு அங்கிருந்த சேரில் அமர்ந்தவன் தன் கால்களை நீட்டி கட்டிலில் தூக்கி வைத்துக்கொண்டான்.
“ண்ணா…” என்ற ஹரிணியின் குரலில் நிமிராமல்,
“தலை வலிக்குது ஹரிணி…” என்றான் தங்கையிடம்.
“அதான் காபி கொண்டுவந்திருக்கேன். அம்மா குடுத்துவிட்டாங்க…” என்றதும் தான் அவனின் நாசியே அந்த நறுமணத்தை உணர்ந்தது.
இந்தளவிற்கா தன் உணர்வுகள் மரத்துவிட்டிருக்கின்றது என்ற சிந்தனையுடன் ஹரிணி நீட்டியதை பார்த்தான்.
“ப்ளாக் காபி தான் ண்ணா…” என்றதும் காபியை வாங்கிக்கொண்டவன் முகம் கசந்திருந்தது.
“நான் இந்த ட்ரெஸ் எல்லாம் எடுத்து வைக்கட்டுமா ண்ணா?…” என ஹரிணி கேட்க,
“ஹ்ம்ம், என்ன கேட்ட?…” என்றான் சரியாக கவனிக்காமல்.
“இல்ல, ட்ரெஸ் எல்லாம் நான் எடுத்து வைக்கட்டுமான்னு கேட்டேன்….” என்றாள் அவனின் முகமாற்றத்தை கவனித்தபடி.
“ப்ச், அதெல்லாம் வேண்டாம் ஹரிணி. நான் பார்த்துக்கறேன்…” என்று காபியை அருந்த,
“நீங்க ரொம்ப டயர்டா இருக்கீங்களே? அதான் கேட்டேன். என்னையாச்சும் எதாச்சும் செய்ய விடுங்கண்ணா. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு….” வருத்தமாய் பார்த்த ஹரிணியை கண்டு லேசாய் முறுவலித்தவன்,
“சும்மா இருக்கற மூளை என்னையே தின்னுடும். என்னால என் வேலையை பார்க்காம உன்கிட்ட குடுத்துட்டு சும்மா இருக்க முடியாதே?…” என்றான்.
ஹரிணிக்கு அவனின் பேச்சும், இன்றைய நிலையும் கண்ணீர் வரவழைக்க நீர் நிறைந்து நின்றது கண்களில்.
“ப்ச், என்ன இது? கல்யாண பொண்ணு. அழற. நான் பார்த்துக்கறேன்னு சொன்னேன்ல. கண்ணை துடை…” என்றான் அதையுமே அதட்டலாக.
கண்களை துடைத்தவள் புன்னகைக்க முடியாமல் மனம் அழுத்தும் பார்வையுடன் அவனை பார்த்திருக்க மௌனமாக காபியை குடித்து முடித்தவன்,
“தங்கச்சியா இருந்தாலும் தனி மனுஷி. உனக்காக சொல்லலை இதை. எனக்காக சொல்றேன். அதனால மாத்த முயற்சி பண்ணாத ஹரிணி…” என்றவன் அந்த பேச்சை மாற்ற,
“பங்க்ஷனுக்கு ட்ரெஸ் எல்லாம் எடுத்தாச்சா? உனக்கு பிடிச்ச மாதிரி சேரி எடுத்துக்க சொன்னேனே? எடுத்துட்டியா?…” என்றான் அவளிடம்.
கேட்டுக்கொண்டே மீண்டும் எழுந்து பெட்டியில் இருந்த உடைகளை எடுத்து கட்டிலில் வைத்தான்.
“நீங்க ஒருவாரம் முன்னாடியே வர்றதா சொல்லியிருந்தீங்க இல்லையா? அதான் நீங்க வரவும் போய் எடுப்போம்ன்னு வெய்ட் பண்ணேன். இன்னைக்கு ரெஸ்ட் எடுங்கண்ணா. நாளைக்கு போய் எடுப்போம்…” என்றவள் அவன் மறுத்துவிட கூடாதே என்று,
“எனக்கு நீங்க கூட வந்து பார்த்து செலெக்ட் பண்ணி குடுத்து நாலு வருஷமாச்சு. ப்ளீஸ், எனக்காக வாங்கண்ணா…” என்றாள் இறைஞ்சுதலாக.
“என்ன செண்டிமெண்ட் கார்னரா?…” என்று இலகுவாய் ஹரித்திரன் கேட்டதுமே பதறிவிட்டாள் ஹரிணி.
“அச்சோ அப்படி இல்லைண்ணா. ப்ளீஸ், இந்தமாதிரி எல்லாம்…” மீண்டும் கண்ணீர் வந்துவிட,
“இப்ப தான சொன்னேன் அழாதன்னு…” என்றவன்,
“உன்னை கஷ்டப்படுத்த சொல்லலை. நீ தனி மனுஷி. உனக்கு கல்யாணம் ஆக போகுது. உனக்கான முடிவுகளை நீ எடுக்கறது தான் சரி. அதுக்காக சொன்னேன்…” என்றான்.
“நானே தானே கூப்பிடறேன்…” ஹரிணி கண்ணை துடைத்துக்கொண்டு கேட்க,
“இல்லம்மா, அதெல்லாம் தாண்டி போய்ட்டேன் நான். யாரையும் குற்றம் சொல்ல இல்லை. ஆனா திரும்ப பழைய மாதிரி இருக்கமுடியாது என்னால…” என்றவன் குரல் வலி மிகுந்திருந்தது.
“நானும் கங்காக்கா மாதிரி இருப்பேன்னு நினைக்கறீங்களா ண்ணா? நான் அப்படி இல்லை ண்ணா. உங்களுக்கு என் மேல நம்பிக்கை இல்லையா?…”
“இங்க சூழ்நிலை தான் ஒவ்வொருத்தரோட நடப்பை, வார்த்தையை, தீர்மானிக்குது. உனக்கும் ஒரு சூழ்நிலை வரும். தப்புன்னு சொல்லமாட்டேன். ஆனா நான் அடி வாங்க தெம்பில்லாம இருக்கேன். அதனால…” என்றவன் தன் இமைகளை சிமிட்டி உணர்வுகளை கட்டி வைக்க முயன்று,
“புரிஞ்சுக்கோ ஹரிணி…” என்றான் கரகரத்த குரலில்.
“அண்ணா வேண்டாம். இப்படி உங்களை பார்க்க முடியலை. நான் உங்களை கஷ்டப்படுத்தற மாதிரி எதுவும் பேசமாட்டேன்…” என்றாள் வேகமாய் தன் அண்ணனின் நிலை பொறுக்காமல்.
“ஆமா சித்தி, ஹரிக்கு பிடிச்ச நான்-வெஜ் எல்லாம் செஞ்சு கொண்டுவந்துட்டேன்…” என்றாள் புன்னகையுடன்.
அவள் சொல்லியதை கேட்டுக்கொண்டே ஹரித்திரன் அடுக்களை செல்ல அங்கே புவனா மகனுக்காக பருப்பை தாளித்துக்கொண்டிருந்தார்.
“முடிச்சிட்டீங்களா ம்மா?…” என்று கேட்டவன் சமையல் அறையிலேயே இருந்த மேஜையில் அமர்ந்துகொண்டான்.
“வச்சிருங்க நானே போட்டுக்கறேன்…” என்றதும் அவனின் பின்னே வந்த கங்கா,
“ம்மா நான் கொண்டுவந்ததை வைங்க…” என்றாள் தாயிடம்.
“இன்னைக்கு செமத்தியா வாங்க போறா கங்கா க்கா…” என்றாள் ஹரிணி சுகன்யாவிடம் முணுமுணுப்பாய்.
“யாரு, இவனா? இவன் பேசிட்டாலும். இந்தநேரத்துக்கு நல்லா அந்த ஊமைக்கொட்டான் மதி வாயிலையே நாலு போடு போட்டு பொய் சொல்லுவியான்னு அந்த பார்வதியம்மா முகத்துல கரிய பூசிருக்க வேண்டாமா? நல்லா சேர்ந்திருக்கீங்க போங்க…” என்று பொடுபொடுத்த சுகன்யா,
“என் வாயையும் கட்டி போட்டுட்டீங்க. இதுல உங்கப்பாவுக்காச்சும் சொல்லலாம்ன்னா இவன் விடமாட்டேன்றான். இவ்வளோ யோசிக்கிறான் அக்காவையும், குடும்பத்தையும் பத்தி. அவங்க யாரு இவனை யோசிக்கிறாங்க…” என்று ஆத்திரம் தீராமல் பேசினார்.
புவனா தன் மூத்த மகளையும், மகனையும் மாறி மாறி பரிதாபமாக பார்த்துக்கொண்டு நிற்க,
“ம்மா, வைக்கறீங்களா இல்ல வெளில போய் சாப்பிட்டுக்கட்டுமா?…” என்றான் ஹரித்திரன் குரலை உயர்த்தாமல்.
“ஏன் ஹரி, நான் கொண்டுவந்ததை சாப்பிட மாட்டியா நீ? என்னை ஏன் இப்படி ஒதுக்கி வைக்கிற?…” என்றாள் அவனின் கையை பிடித்து.
“ப்ச்…” என்று முகம் திருப்பிக்கொண்டு எழுந்து சென்று பாத்திரங்களை திறந்து பார்த்தான்.
புவனா செய்துவைத்திருந்த உணவுகளில் மற்றவற்றை விட்டுவிட்டு சாதம் வைத்து ரசம், பருப்பை மட்டும் எடுத்துக்கொண்டு வந்தமர்ந்துவிட்டான்.
“ஹரி உனக்காக தான எல்லாம் செஞ்சிருக்கேன்? இதென்ன ரசம் மட்டும் போட்டுக்கற?…” என்று புவனா பதறிக்கொண்டு மற்றவற்றையும் எடுத்து வைக்க அதில் அப்பளம் மட்டும் எடுத்துக்கொண்டவன்,
“என்னை மன்னிக்கவே மாட்டியா ஹரி? நான் வேணும்ன்னு பண்ணலை ஹரி. ப்ளீஸ்டா. என்னை ஒதுக்கிடாத…” என்று அவனெதிரே நின்று அழ,
“நான் யாரையுமே ஒதுக்கலை. நானே ஒதுங்கி நிக்கறேன். அவ்வளோ தான். என்னோட தப்பும் இருக்கே? வேடிக்கை பார்த்தேனே? என் கண் முன்ன நடந்தும் நிலைமையை சமாளிக்க முடியாம தான நின்னேன்? இதுல யாரையுமே நான் எப்படி குற்றம் சொல்லி, பழி சொல்ல முடியும்?…” என்றான் வெகுசாதாரண குரலில்.