“ஹ்ம்ம்…” என்று சொல்லிக்கொண்டிருக்க அதற்குள் வாசலில் குரல் கேட்டது.
“நிவா அம்மா…” என்ற அழைப்பில் எழுந்து செல்ல அங்கே இரண்டு பெண்கள் நின்றிருந்தனர்.
“வாங்க சுமதி…” என்ற நர்மதா,
“இவங்க தான் உங்க பொண்ணா?…” என்றார் இன்னொரு பெண்ணை கண்டு.
“ஆமா நிவாம்மா, நீங்க சொன்னீங்கன்னு தான் பொண்ணையே கூட்டு வந்துட்டேன். எங்க வீட்டுல நிச்சயம் முடிஞ்சு பொண்ணை எப்படி வெளில அனுப்பன்னு ஒரே காய்ச்சல். சமாளிச்சு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுச்சு…” என்று சலித்தவர்,
“எத்தனை வருஷமானாலும் காலம் மாறினாலும் இவங்க பன்ற அழிச்சாட்டியமும், குத்தம் குறையும் இருக்கே? எல்லாத்துக்கும் மூடநம்பிக்கை. அடுத்த தெருவுல இருக்கற டெய்லர் கடைக்கு வர்றதுக்கே இந்த பாடா இருக்கு?…” என்றார் கோபமாய்.
“அப்படின்னு பொத்தாம்பொதுவா சொல்ல கூடாதே சுமதி. பெரியவங்க நம்பிக்கை அவங்களோட. நீங்க உங்க முற்போக்கு சிந்தனையை விவரிக்கலாம். தெளிவு படுத்தலாம். அதுக்காக அதை திணிக்கனும்ன்னு கட்டாயம் இல்லையே? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை….” என்று மென்புன்னகையுடன் சொல்லிய நர்மதா,
“இப்படி உட்காருங்கம்மா…” என்று சுமதியின் பெண்ணை அமர சொல்லி மூன்று புத்தகங்களை எடுத்து கொடுத்தார்.
“இதுல மாடல் டிஸைன் இருக்கு. எந்த டிஸைன் வொர்க் வேணும்ன்னு சொல்லுங்க. பண்ணிடலாம்…” என்றார்.
“அது மாப்பிள்ளை வீட்டுல இருக்கு. அதையும் கேட்க கூடாதுன்னு சொல்லிட்டாங்க. புடவைல வந்த சட்டைத்துணியை மட்டும் தச்சுக்க அனுப்பி வச்சாங்க. அதுவும் இங்க தைக்கறேன்னு நாங்க கேட்டு வாங்கினதால…” என்றார் அதையுமே ஒரு அதிருப்தியுடன்.
நர்மதா பெரிதாய் எதையும் முகத்தில் காண்பித்துக்கொள்ளவில்லை. ஆனாலும் சுமதியின் அந்தவிதமான பேச்சில் உடன்பாடும் இல்லை.
“என்ன நிவாம்மா சிரிக்கிறீங்க? நீங்களும் எவ்வளோ பார்க்கறீங்க. ஓரளவு என் வீட்டை பத்தி தெரியும் தானே உங்களுக்கு? என் பொண்ணுக்கு அவ ஆசைப்பட்ட மாதிரி என்ன செய்யமுடியுது? இதுல அவ போற வீடும் இப்படித்தான் பன்றாங்க….” என்றார் மகளுக்கு திருமணம் என்னும் மகிழ்ச்சியே இல்லாமல்.
சுமதியின் மகளும் இவர்களை கவனித்துக்கொண்டிருக்க அதற்குள் சம்ருதிக்ஷா வந்துவிட்டாள்.
“ருதி, இவங்களுக்கு கான்ட்ராஸ்ட் டிஸைன்ஸ் எடுத்து காமி. அப்படியே அந்த ப்ளவுஸ் கலர்க்கு எப்படி பண்ணினா நல்லாருக்கும்ன்னும் கொஞ்சம் பாரேன்…” என்று மகளுக்கு கண்ணை காண்பித்தவர்,
“இப்படி வாங்க சுமதி…” என்று தனியே அழைத்து வந்தார்.
“என்ன நிவாம்மா?…” என சுமதி யோசனையுடன் பார்க்க,
“ஏன் இவ்வளோ டென்ஷன்? நீங்க இவ்வளோ கேட்கிறதால சொல்றேன். எல்லாமே நாம பார்க்கிற விதம்ன்னு கூட வச்சுக்கலாம். இன்னும் கல்யாணம் ஆகலை. அதுக்குள்ள உங்க பொண்ணு போற வீட்டு மனுஷங்க பத்தியும் ஒரு அதிருப்தியை காமிக்கறீங்க. அது உங்க பொண்ணையும் தானே பாதிக்கும்?…” என்றார் நர்மதா.
“என்ன பேசிட்டேன்? எனக்கு புரியலையே?…” சுமதி கவலையுடன் பார்க்க,
“ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நடைமுறைகளை பின்பற்றுவாங்க. மாப்பிள்ளை வீட்டுல அப்படி சொன்னாங்கன்னா அது அவங்க வழக்கமா இருக்கலாம். அதை ஏன் குறையா பார்க்கனும்? உங்க பொண்ணு புகுந்தவீடு போறதுக்கு முன்னாடியே அவங்க மீதான வேற ஒரு பிம்பத்தை அபிப்பிராயமா நீங்க உருவாக்கறீங்க….” என்ற நர்மதா,
“இது கல்யாணம். இதுல எவ்வளோ நல்ல விஷயங்களை பார்க்க முடியுமோ பாருங்க. உங்க வீட்டு பெரியவங்க மூடநம்பிக்கையா சொல்றாங்கன்னு ஏன் நினைக்கனும்? அக்கறைன்னு நினைங்க. ஒவ்வொரு காலகட்டத்துளையும் மனுஷங்க தான் மாறிக்கிட்டே இருப்பாங்க. காலம் அப்படியே தான் இருக்கும். நம்ம மாற்றத்துக்கு காலத்தை குறை சொல்ல கூடாது இல்லையா?…” என்றார்.
“புரியுது நிவாம்மா. எனக்கு என்னடா எல்லாத்துக்கும் முட்டுக்கட்டை போடறாங்களேன்னு கொஞ்சம் படபடப்பா போயிருச்சு. அந்த கோவம் தான்…” என்றார்.
“இந்த கோபத்தை விடுங்க. சந்தோஷமா கல்யாண வேலையை பாருங்க. நல்லபடியா பொண்ணை புகுந்தவீட்டுக்கு அனுப்புங்க. உங்க பொண்ணுக்கிட்ட இதை தெளிவுபடுத்துங்க….” என்றார் மென்மையாக.
“ரொம்ப சந்தோஷம் நிவாம்மா…” என்று அவரின் கையை பிடித்துக்கொண்ட சுமதி,
“அப்பறம் மறந்துட்டேன் பாருங்க. இதையும் சொல்லத்தான் வந்தேன். என்னோட ப்ரெண்டோட அக்கா பையனுக்கு கல்யாணம். அவங்க வீடு பெரிய குடும்பம். இதுக்கு முன்ன நிறைய பொட்டிக்ல ப்ளவுஸ் தைச்சும் பெருசா பிடிக்கலை…”
“சரி…”
“அதான் போனவாரம் அந்த வீட்டு நிச்சயதார்த்த பங்க்ஷனுக்கு நான் போனப்போ என்னோட சிம்பிள் ப்ளவுஸ் டிசைன் பார்த்து ரொம்ப நல்லா இருக்கேன்னு சொல்லி விசாரிச்சாங்க…”
“ஓஹ் சரி…”
“அதான் இன்னைக்கு ஈவ்னிங் வருவாங்க. நான் கூட்டிட்டு வர்றேன். முதல்ல அவங்களுக்கு உங்க நார்மல் ஸ்டிச்சிங் எப்படி இருக்குன்னு பார்க்கனுமாம். பிடிச்சிருந்தா கல்யாணத்துக்கு எல்லாருக்குமே இங்க தான் குடுக்கனும்ன்னு சொன்னாங்க. கண்டிப்பா குடுப்பீங்கன்னு நானும் சொல்லிருக்கேன்…” என்றார் சுமதி.
“ஓகே, சுமதி. கூட்டிட்டு வாங்க…” என்ற நர்மதா மீண்டும் மகளிடம் வந்தார்.
“என்ன ருதி, பார்த்தாச்சா?…” என்றார் மகளிடம்.
“மூணு டிஸைன் செலெக்ட் பண்ணிருக்காங்கம்மா. நீங்களே பாருங்க…” என்று அவருக்கு காண்பிக்க, சுமதிக்குமே அந்த மூன்றையுமே பிடித்தது.
“மூணையுமே பிக்ஸ் பண்ணிக்கலாம். ஒன்னு கல்யாண முகூர்த்தத்துக்கு, இன்னொன்னு ரிசப்ஷன். இன்னொன்னு மறுவீடு போகும்போது….” என்று முடிவு செய்துவிட்டார் சுமதி.
அவர்கள் சொல்லிவிட்டு மற்ற புடவைகளின் நிறங்களையும் கேட்டறிந்து அளவுகளை எடுத்துக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
“சாப்பிட்டு முடிங்க. நான் கடையை திறக்கறேன்…” என்று தீக்ஷா வீட்டை ஒட்டி பக்கத்தில் இருந்த டெய்லர் கடையை திறந்து வைத்தாள்.
நர்மதா வருவதற்குள் கடையை பெருக்கி முடித்து சுத்தம் செய்து சாமி படங்களுக்கும் பூக்கள் வைத்து, பூஜையை முடித்துவிட நர்மதாவும் நிவாஷினியும் வந்துவிட்டனர்.
“பை க்கா…” என நிவாஷினி கிளம்பிவிட நர்மதா கடையில் வந்து அமர்ந்தார்.
வந்தவர் மகளின் முகத்தையே பார்ப்பதும் கையிலிருந்த நோட்டில் கவனம் வைப்பதுமாக இருக்க தீக்ஷாவுமே அதனை கவனித்துக்கொண்டு தான் இருந்தாள்.
“ரொம்பநேரமா யோசிக்கிறீங்க போல? என்னம்மா?…” என்று அவரின் எதிரே ஸ்டூலை இழுத்து போட்டு அமர,
“கேட்க கூடாதுன்னு இல்லை. என்கிட்ட ஒருவிஷயம் உனக்கு சொல்லனும்ன்னு தோணலை. அதை நான் எப்படி கேட்கன்னு தான் யோசிக்கிறேன் ருதி…” என்றார் நர்மதா.
“ம்மா…”
“நீ சொல்லவேண்டாம்ன்னு நினைச்சதை நான் வற்புறுத்தி கேட்ட மாதிரி இருக்க கூடாது பாரு. அதான் யோசிச்சேன். ஏன் உனக்கு சொல்ல தோணலைன்னு?…” என்றார் அப்போதும் பூடகமாகவே.
சம்ருதிக்ஷா மௌனமாய் இருக்க அவளின் அமைதியில் நர்மதா எவ்வித வருத்தத்தையும் காண்பிக்கவில்லை.
“நம்மோட இந்த நிலைமைக்கு அவங்களும் காரணம்ன்னு நீ நினைக்கிற. அதானே?…”
“ஆனா அவங்களும் ஒரு காரணம் தானே ம்மா?…”
“இருக்கலாம். அது அவங்களோட சூழ்நிலை, சுயநலம். அது முடிஞ்சது அதோட. அதுக்காக நம்மோட கவன குறைவுக்கும், நம்ம சரிவுக்கும் எப்படி முழுக்க அவங்க காரணமா இருக்க முடியும்?…”
“ஹ்ம்ம்…” என்றாள் சம்ருதிக்ஷா.
“இந்த முக்கியம் கூட அவங்களுக்கு குடுக்க அவசியமில்லைன்னு அம்மா சொல்றேன். நாம ஒன்னும் கஷ்டப்படலையே? முன்ன வாழ்ந்த வாழ்க்கைல இருந்து இப்போ உன் அப்பா இல்லை. அதை தவிர நமக்கு என்ன?…” என்றவர்,
“தெரியாதுன்னு சொல்லிட்டு வந்ததே தப்புன்னு சொல்றேன். ஏன் சொல்லனும்? நாம என்ன ஓடி ஒளிஞ்சு வாழறோமா? இல்லையே? ஆமா, தெரியும். இப்போ என்னன்னு கேட்டிருக்க வேண்டாமா நீ?…” என்றார் நர்மதா.