சிலநொடிகள் சட்டென்ற அமைதி நழுவி அவர்களிடையே விழுந்திருக்க தாய், மகள் இருவருமே வார்த்தைகளை விடவில்லை.
நர்மதாவின் மனது என்ன தான் நிதர்சனங்களை ஏற்றிருந்தாலும் மகளின் முகம் காணுகையில் பெற்ற வயிறும் மனதும் கலங்கத்தான் செய்தது.
மகளுக்கு பார்த்த முதல் சம்பந்தம். அத்தனைமுறை சொல்லியிருந்தாள் தன்னிடம்.
“ம்மா, சும்மா சும்மா எல்லார் முன்னாடியும் எல்லாம் காபி தம்ளரோட நிக்க முடியாது. கல்யாணம் பேசறீங்கன்னு தெரியும். தெளிவா பாருங்க…” என சொல்லியிருக்க அவள் ஆசைப்படி பார்த்த முதல் வரனே அத்தனை பிடித்தம்.
அதுவும் உடனே எல்லா விஷயங்களும் பேசப்பட்டு அதன் பின்னர் தான் பெண் பார்க்கும் படலம் என்று ஆரம்பித்து அலங்கோலமாகிய அந்நிகழ்வை மறக்க இயலவில்லை தானே?
எத்தனை தான் நம் நிலைக்கு யாரையும் பொறுப்பாக்க கூடாது என்று கூறினாலும் சிலநேரங்களில் கழிவிரக்கத்தில் உடைந்துதான் போவார்கள்.
அதிலும் பெண் பிள்ளைகள் இருவரின் முகத்திலும் சிறிதும், ‘இனி தகப்பன் இல்லாமல் தாங்கள் என்ன செய்ய போகிறோம்?’ என்னும் பாதுகாப்பின்மை வந்துவிடவே கூடாது என்பதில் கவனமாக இருந்தார் நர்மதா.
“நடந்ததை சமாளிக்க முடியலை. தாங்கிக்க முடியாம அதையே நினைச்சு மனசொடிஞ்சு போய்ட்டார் உங்கப்பா. நாமளும் அப்படியே இருந்தா திரும்பி வந்திடுவாரா? இனிமே தான் நாம வாழ போறோம். கண்ணை துடைங்க…” என்று பேசிய நர்மதாவை கும்பகோணத்தில் அத்தனைபேரும் விநோதமாக தான் பார்த்தனர்.
“இவளை பாரு, புருஷன் செத்தும் கல்லு மாதிரி இருக்கறதை. தூக்கிட்டு போய் எரிச்ச அன்னைக்கு அழுத்ததோட சரி. பொட்டு கண்ணீரை பார்க்கலையே இவ கண்ணுல. என்ன மனுஷியோ?…” என்று ஊரார் வாய்க்கு வந்தபடி பேசத்தான் செய்தனர்.
“பேசறவங்க ஒவ்வொருத்தருக்கும் பதில் சொன்னா என் பொண்ணுங்களை யார் பார்க்க? என்னால என் குடும்பத்தை பார்த்துக்க முடியும்…” என்று வைராக்கியமாய் பிள்ளைகளையும் தேற்றி சென்னைக்கு அழைத்து வந்தாகிற்று.
வந்தவரின் திடமும், நிமிர்வும் சிலருக்கு ஊரில் பொறுக்கவும் தான் இல்லை. எள்ளி நகையாடினார்கள்.
“உள்ளூர்லயே பொழப்பை ஓட்ட முடியலை. இவ மெட்ராசுக்கு போய் கிழிக்க போறாளாம்…” என்றவர்களுக்கு செவிசாய்க்கவே இல்லை நர்மதா.
“இங்க எல்லாரும் என்ன கிழிச்சீங்களோ தெரியாது. நாங்க கிழிக்கிறதை பார்த்து பொருக்கவாச்சும் பொறுமையா இருங்க…” என்று சம்ருதிக்ஷாவும் பேசி வந்துவிட்டாள்.
குடும்பம் உடைந்து, பஞ்சாலை விற்ற பணத்தில் கஷ்ட ஜீவனத்திற்கு அவசியமற்று நல்ல நிலைமையில் தான் வீடு பார்த்து குடியேறினார்கள்.
“காசிருக்கே வட்டி வருதேன்னு அதையே நம்பமுடியாது ருதி. நிவாவுக்கு படிப்பு வேணும். நீ மேல படிக்க நினைச்சா படி. இல்லைன்னா ஜாப் பாரு….” என்றவர் கையில் எடுத்ததென்னவோ தையல் தொழிலை தான்.
ஊரில் தங்களுக்கு மட்டும் என்று கற்று தைத்த நர்மதா இங்கே சென்னையில் வீட்டை ஒட்டி இருந்த கடையையும் சேர்த்தே பிடித்துவிட்டார்.
முதலில் தான் மட்டுமே தைத்து தந்துகொண்டிருக்க இந்த மூன்று வருடத்தில் தற்போது பணிக்கு இரு பெண்களும், தையல் கலையை கற்றுக்கொள்ளவும் சிலர் வருகின்றனர் அவரிடம்.
இத்தனை தூரம் வந்துவிட்டாலும் யாரையும் ஒரு வார்த்தை குற்றம் குறை சொல்லியதில்லை நர்மதா.
“எப்படி அத்தை உங்களால இருக்க முடியுது?…” என்று தன் மூத்தாரின் முதல் மருமகள் கண்ணீருடன் அவரிடம் கேட்க,
“அவங்கவங்க செயலுக்கு அவங்கவங்க தான் பொறுப்பு. உன் மாமனார் சாமர்த்தியம். சொத்துல பெரும்பங்கை வாங்கிட்டார். என் புருஷனுக்கு அந்த சாமர்த்தியம் இல்லை. கிடைச்சது போதும்ன்னு இருந்துட்டார். இதுல நான் என் வீட்டுக்காரரை தான் குறை சொல்லமுடியும். மத்தவங்களை சொல்ல எனக்கென்ன உரிமை இருக்கு?…” என்றுவிட்டார் நர்மதா.
இப்போது வரை அவள் ஒருத்தியிடம் மட்டும் தான் இன்னும் தொடர்பில் இருக்கின்றனர்.
வேண்டாம் என்றாலும் விட்டு போகாத உறவென அவள் விடாப்பிடியாய் தங்களை தேடி வர விலக்க முடியவில்லை.
இப்போதும் அந்த நினைவுகளில் சிலநிமிடங்கள் தன்னையறியாமல் அவர் ஆழ்ந்திருக்க பணிக்கு வரும் பெண்கள் வந்ததோடு, தைக்கவும் துவங்க அந்த சத்தத்தில் தான் சிந்தை கலைந்தார்.
அந்த பெண்களிடம் பேசி சிரித்தபடி தீக்ஷா நின்றுகொண்டிருக்க மகளின் முகத்தையே அவதானித்துக்கொண்டிருந்தார் நர்மதா.
‘அவங்களுக்கு கல்யாணம் போலம்மா’ என்னவோ அந்த குரல் அவளின் இயல்பில் இருந்து இடறியதை போலொரு தோற்றம்.
சொந்தமில்லாத ஒன்றை நினைக்கவோ, பேசவோ, அதன்மீது தம் உணர்வுகளை காண்பிக்கவோ கூடாதென்று வளரும் பிள்ளைகள்.
இப்போது ‘தெரியாது’ என்று அவள் சொல்லிவந்திருந்ததில் ஒளிந்திருப்பது கோபமன்றி வேறு எதுவாம்?
நர்மதாவிற்கு மகளின் எதிர்காலம் நினைத்து அத்தனை கவலை. கேட்பவர்களிடம் சிரித்துக்கொண்டே சொல்லிவிடுவார்.
“நம்ம கையில என்ன இருக்கு? அமையும் போது தானா அமையும். நம்ம நினைச்சிட்டா போதுமா? வாழ்க்கை இப்படியே போயிடாதே…” என்று.
இப்போது யோசிக்க யோசிக்க நர்மதாவின் மனதை என்னவோ அழுத்த துவங்கியது.
சட்டென்று அந்த அழுத்தமான உணர்வை துடைத்துவிட்டு வெளியே வந்தார் அவர்.
தான் இருக்கும் வரை தான் பிள்ளைகளின் தைரியம். தன்னை பேணி தன் பிள்ளைகளை காக்கவேண்டும் என்று நினைத்தார் நர்மதா.
“சரி, டெலிவரி குடுக்கவேண்டியதை எல்லாம் சரி பாருங்க. நான் போய் எடுத்துட்டு வரேன்…” என்று தீக்ஷா சொல்லி வீட்டிற்குள் செல்ல,
“என்ன நர்மதாக்கா ருதிக்கு இன்னைக்கு நைட் ஷிப்ட்டா?…” என்றனர் வேலை செய்யும் பெண்கள்.
“ஆமாம்மா, அதான் இந்தநேரம் இங்க இருக்கா…” என்று பேசிக்கொண்டிருந்தார் நர்மதா.
பழையவற்றை எல்லாம் மறந்து மீண்டும் தங்களின் புதுவுலகில் வந்து சேர்ந்துவிட்டார்.
————————————————–
“ருதி, வா கேண்டீன் போகலாம்…” என வினோதா அழைக்க தன் கணினியின் முன் மூழ்கியிருந்த சம்ருதிக்ஷா நிமிர்ந்து பார்த்தாள்.
“வந்துட்டியா? கரெக்ட்டா உன் ப்ரேக் டைம்க்கு வந்திடுவ?…” என்று தானும் எழுந்துகொண்டே பேச,
“பின்ன வயித்துல எதாச்சும் போட்டா தானே நம்ம வண்டியும் ஓடும். ஆனா இது ப்ரேக் இல்லை மேடம். லஞ்ச் டைம்…”
“ஆமா, டைம் பார்க்கலை நான்…”
“சரியா போச்சு ருதி. உன்னோட சேர்ந்தா நானும் இளைச்சிடுவேன் போ. ஆல்மோஸ்ட் எல்லாம் முடிச்சிட்டு வந்திட்டாங்க…” என்று வினோதா சொல்ல, சிரித்துக்கொண்டே இருவரும் மேல் தளத்திற்கு வந்தனர்.
“ஹேய் எங்க உன் லன்ச் பேக்?…” என்று அப்போதுதான் தீக்ஷாவிடம் அவளின் உணவு பை இல்லாததை கவனித்தாள் வினோதா.
“மறந்துட்டேன் வினோ. அம்மாவுக்கு கொஞ்சம் முடியலை. அந்த டென்ஷன்ல கிளம்பி வந்தேன். லீவும் போட விடலை அம்மா. அதான், இல்லைன்னா வீட்டுல இருந்திருப்பேன்…” தீக்ஷா சொல்ல,
“நான் தான் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன் இந்த கேபடேரியா விட்டா வேற வழி இல்லை. இன்னைக்கு நீயும் அதையே அனுபவி…” என்றதற்கும் புன்னகைத்தவள்,
“உனக்கு ஆடர் பண்ணு. நான் வர்றேன்…” என்று சற்று தள்ளி இருந்த கவுண்டருக்கு சென்றாள்.
“ஹாய் அண்ணா…” என்று அங்கிருந்த பணியாளரிடம் புன்னகைக்க,
“என்ன ருதிம்மா, மத்தியான நேரம் இங்க?…” என்றார் அவரும் அவளை பார்த்த சிரிப்புடன்.
“வேற எதுக்கு வருவேன்? ஒரு கப் இஞ்சி டீ, ஒரு எக் பப்ஸ்…” என்றாள் அவரிடம்.
“அதுவும் முழு முட்டை…” வினோதா அவளருகில் வந்து நின்று பின்பாட்டு பாட,
“நீ சாப்பிட போகலையா?…” தீக்ஷா அவளை கேட்க,
“ம்க்கும், உன்னோட முட்டை பைத்தியம் என்னையும் பிடிச்சிருச்சு. அதான்…” என்ற வினோதா,
“ண்ணா எனக்கும் சேர்த்து…” என்று சொல்லிவிட்டு அங்கே நின்று பேச, தீக்ஷாவும் பதில் சொல்லிக்கொண்டிருக்க,
“ஒரு எக் பப்ஸ் வித் ப்ளாக் காபி…” என்ற குரலில் உடல் விறைக்க அதிர்ந்தவள் செவிகள் தான் உணர்ந்தது நிஜமோ என்னும் வகையில் மெதுவாய் திரும்பி பார்த்தாள்.
அவனே தான். ஹரித்திரன். கவுண்டர் டாப்பில் ஒற்றை கையை ஊன்றியபடி நின்றிருந்தவன் தீக்ஷாவை பார்த்த அதிர்ச்சி எதையும் காண்பிக்காமல் சாதாரணமாக இருக்க அவனை போலிருக்க அவளால் தான் முடியவில்லை.
“ருதிம்மா, உன்னோட ப்ளேட்…” என்று அவர் தந்ததும்,
“ஹாங்…” என்று தெளிந்தவள் தனக்கானதை எடுத்துக்கொண்டு நகர,
“காபில நாட்டு சர்க்கரை தானே கலந்தீங்க?…” என்றான் ஹரித்திரன்.
“ஆமா ஸார்…” என்று அவனிடம் சொல்லிக்கொண்டிருக்க,
“தேங்க்ஸ்…” என்று எடுத்துக்கொண்டு அவனொரு டேபிளில் சென்றமர்ந்தான்.
இன்னும் சம்ருதிக்ஷா தெளிவடையாமல் படபடக்கும் நெஞ்சத்துடன் அமர்ந்திருக்க,
“ருதி இவர் யாருன்னு தெரியுமா?…” என்றாள் வினோதா.
ஆம், இல்லை என்று எவ்வித பாவனையும் காண்பிக்காமல் தீக்ஷா மௌனமாய் அமர்ந்திருக்க,
“நம்ம ஆபீஸ் தான். நியூயார்க்ல இருந்து வந்திருக்கார். ஆனா நம்ம டீம் இல்லை. வேற டிபார்ட்மென்ட். பத்துநாளாகுது. நீ பார்க்கலையா?…” என்றாள் அவளிடம்.
“ம்ஹூம்…” என்று தீக்ஷா தலையசைக்க,
“சரிவிடு, நானே முந்தாநாள் தான் பார்த்தேன். எப்படி கவனிக்காம விட்டேனோ தெரியலை…” என்றபடி உண்ண துவங்க, ‘பார்க்காதே பார்க்காதே’ என்ற ஜபத்துடன் தீக்ஷா தன் டீயை எடுத்து பருக நிமிர எதிரிருந்த பெரிய கண்ணாடியில் அவனுருவம்.
குப்பென்று வியர்த்து போனது ஹரித்திரனை அவ்விடத்தில், அவன் பார்வையை கண்டதுமே.