“சரி, வீட்டுக்குள்ள வா…” என சொல்லிவிட்டு தைத்துக்கொண்டிருந்த பெண்களிடம்,
“பார்த்துக்கோங்கம்மா. வந்திடறேன்…” என சொல்லி சென்றார்.
உள்ளே வந்ததுமே தீக்ஷா தன்னுடையை மாற்றி இலகுவான காட்டன் குர்தியில் வந்து நிற்க மகளுக்கு சாதமும், ரசமும் வைத்து எடுத்துவந்து நீட்டினார் நர்மதா.
“சமைச்சீங்களா நீங்க? நான் தான் கஞ்சி செஞ்சிட்டு போயிருந்தேனே?…” என்று தாயை கண்டிப்புடன் பார்க்க,
“அப்பறமா பார்க்கலாம். இப்ப நீ இதை சாப்பிட்டு முடி. முகத்துல அவ்வளோ பசியும், அலுப்பும்…” என்றவர் தானும் அமர்ந்துகொண்டார் மகளின் அருகில்.
மௌனமாய் தீக்ஷா உண்டு முடிக்க அதற்குள் வந்து சென்றவர்கள் பற்றி விலாவரியாக சொல்லிவிட்டார் நர்மதா.
“நிறைய ப்ளவுஸ் தைக்கனும் போல ம்மா…” தீக்ஷா கேட்க,
“ஆமா, போனதடவை சுமதியோட ஒருத்தவங்க மட்டும் வந்து சும்மா ரெண்டு ப்ளவுஸ் மட்டும் குடுத்துட்டு போனாங்க. ட்ரையல் பார்க்கிற மாதிரி. அது நல்லா இருக்குன்னு வந்துட்டாங்க….” என்றவர்,
“கல்யாணத்துக்கு இன்னும் மூணு மாசம் இருக்கு. அதனால நிறைய டைம். நாம பொறுமையா செஞ்சு குடுக்கலாம்…” என்றார்.
“அப்போ பெரிய ஆடர் தான் போல?…” தீக்ஷா கேட்க,
“ஹ்ம்ம், இதுவரைக்கும் ஒரு கல்யாணத்துக்கு பொண்ணுக்கும் அந்த வீட்டுக்கும் சேர்த்து அதிகபட்சம் அஞ்சு இல்ல ஆறு ப்ளவுஸ் தைச்சிருப்போம். இவங்க குடும்பத்துல முதல்லையே பதினெட்டு ப்ளவுஸ். அதுவும் சிம்பிள் அன்ட் கிரான்ட்ன்னு ஒன்னொன்னும் ஒவ்வொரு டிஸைன்…”
“சூப்பர்ல ம்மா. பண்ணிடலாம்…” என்ற தீக்ஷா,
“ஆனா எப்படி மூணு மாசத்துக்கு முன்னாடியே ட்ரெஸ் எடுத்திடுவாங்களா?…” என்றும் கேட்டாள்.
“கல்யாணப்பொண்ணுக்கு இன்னும் எடுக்கலை போல. ஆனா சொந்தங்களுக்கு எடுத்தாச்சுன்னு சொன்னாங்க. அதுவும் முகூர்த்த மாசம். அதான் இப்பவே வேலையை ஆரம்பிச்சிட்டாங்கலாம் ருதி…”
“ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்க தேவை இல்லை ம்மா. பொறுமையா நாமளும் குடுக்கலாம். பினிஷிங் இன்னும் நல்லா இருக்கும்…”
“ஆமா, நிவா வரவும் நெக் டிஸைன்ஸ் புதுசா செய்யறதை பத்தி பேசனும். இன்னைக்கு உன் குர்தி பார்த்துட்டு அதுக்கும் கேட்டிருக்காங்க. வந்திருந்த அந்த பொண்ணுக்கு மட்டும் அளவெடுத்திருக்கு. சரின்னா அதுவும் வரும்ன்னு நினைக்கறேன்…” என்றார்.
உண்மையில் அத்தனை பெரிய நிம்மதி. ஒரேநேரத்தில் கணிசமான தொகை வரவு.
அதற்கென அத்தனை இலகுவான வேலையும் இல்லை. உழைப்பை கொட்டவேண்டும்.
கண்ணும், கருத்தும் கடுமையாக கவனமெடுக்க வேண்டிய வேலை என்பதனால் இன்னும் சிரத்தையாய் இருக்க நினைத்தார்.
தான் ஒரு நினைப்பில் மகளிடம் பேசிக்கொண்டிருக்க தீக்ஷாவின் முகத்தில் என்னவோ தீவிரம்.
“சாப்பிட்டு முடிச்சா எழுந்துக்க வேண்டியது தானே? என்ன யோசனை ருதி?…” என்று கேட்டபடி ஒரு பெரிய நோட்டினை எடுத்து தனக்கு தோன்றும் விதமாய் படங்களை வரைய ஆரம்பித்தார்.
அவரின் கவனம் மகள் மீது இருப்பினும் வரைவதிலும் கவனம் வைத்திருக்க,
“ம்மா, ஒரு விஷயம் சொல்லனும்…” என்றாள் வெகுவாய் யோசித்து.
“நீ ஏன் சீக்கிரம் வந்தன்னா?…” சரியாய் அவர் கேட்கவுமே தீக்ஷாவிடம் பதற்றம்.
“சரி சொல்லு. அதுக்கும் முன்னாடி எழுந்து போய் தண்ணி குடிச்சிட்டு அம்மாவுக்கும் எடுத்துட்டு வா…” என்றார் நர்மதா.
தீக்ஷாவிற்கு அவர் சொல்வதன் காரணம் புரிய எழுந்து சென்றவள் மீண்டும் வந்து அவரருகே அமர்ந்தாள்.
“இப்போ சொல்லு, ஆபீஸ்ல ப்ராப்ளம்ன்னு இதுவரை நீ சொன்னதில்லை. இப்படி லீவ் எடுத்தும் வந்ததில்லையே? என்ன ருதி?…” என்றார் மகளை புரிந்தவராக.
“ம்மா…” என்றவள்,
“நான் வந்திருக்க கூடாது. இருந்திருக்கனும்…” என்றாள் உள்ளடங்கிவிட்ட குரலில்.
இதனை பேசினால் நிச்சயம் தாய் தன்னிடம் தான் அதிருப்தி கொள்வார் என்பதில் அத்தனை நிச்சயம் தீக்ஷாவிற்கு.
அதனால் தானே தன் விளக்கவுரையை அவரிடம் கூற நர்மதா மகளை அழுத்தமாய் பார்த்துவிட்டு மீண்டும் தன் வேலையை பார்க்க ஆரம்பிக்க தீக்ஷா தான் வெகுவாய் தவித்து போனாள்.