“கீர்த்தி இதை எப்படியாச்சும் மாமா கைல கட்டிடுடி. நான் ரொம்ப வேண்டி பூஜை செஞ்சு வாங்கின கயிறு…” என ராகா சொல்ல,
“அக்கா என்ன விளையாடறியா? கோவில்ல இத்தனை பேர் இருக்காங்க. எப்படி கட்ட? அதுவும் அவர் ஒரு சிடுமூஞ்சி. எப்ப சிரிப்பார். எப்ப முறைப்பார்ன்னு கூட தெரியாது. இன்னமும் இவருக்குள்ள லவ்வான்னு எனக்கு டவுட்டா இருக்கு…” கீர்த்தனா ராகாவிடம் பேசிக்கொண்டே தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஸ்ரீநிவாஸிடம் பார்வையை பதித்தாள்.
“சின்ன பொண்ணு பேச்சை பாரு? லவ் அது இதுன்னு. அம்மாவுக்கு தெரிஞ்சது உன் தோலை உரிச்சி உப்பு தடவிடுவாங்க…”
“ஆஹாங், அப்ப எனக்கு ராகாவை பிடிச்சிருக்கு. அவளை விரும்பறேன்னு அப்பா முன்னாடியே மாமா சொன்னது தப்பு இல்லையா?…”
“கீர்த்தி…” என ராகா சிணுங்க,
“ஆனா ஒன்னு நிச்சயம், இந்த கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கறதுக்குள்ள சாரதா அத்தை மட்டும் ஒன்னும் செஞ்சிருக்கமாட்டாங்களா?…” என கேட்க ராகாவின் முகம் கூம்பிவிட்டது.
“ப்ச், இப்ப எதுக்கு நீ மூஞ்சியை தூக்கி வச்சுக்கிட்ட? இதை கட்டிவிடனும். அவ்வளவு தானே?…” என்றவள் ஸ்ரீநிவாஸ் நிற்கும் இடத்தை பார்த்தாள்.
அங்கு பெரிய கல் திண்ணை போன்ற அமைப்பில் உள்ளே சிலர் அமர்ந்திருக்க சுற்றிலும் ஆட்கள் நின்றுகொண்டிருக்க ஸ்ரீநிவாஸ் அங்கே தூணின் அருகே நின்றான்.
“இங்க பாரு. போய் சத்தமில்லாம கட்டிட்டு ஓடி வந்திடறேன். நீ சாரதாத்தை பார்த்திடாம இருக்கனும்னு எனக்காக வேண்டிக்க தாயி. இல்லன்னா அந்தம்மா எதுடா சாக்குன்னு பார்த்துட்டு இருக்கறதுக்கு இது வாய்ப்பா போய்டும்…” என பயந்துகொண்டே மெதுவாய் சென்றாள்.
தூணின் அருகே சென்றவள் திரும்பி ராகாவை பார்க்க அவளோ எதையோ சொல்லி சைகை காட்டிக்கொண்டு இருந்தாள். அதற்குள் ராகாவிடம் யாரோ பேச்சுக்கொடுக்க திண்ணையின் கீழே நின்ற கீர்த்தனா தூணில் சாய்ந்து இடுப்பில் கை வைத்தபடி இருந்தவனின் கரத்தில் கயிற்றை கட்டிவிட்டாள்.
கடைசி முடிச்சையும் போட்டு முடித்ததும் தான் ஒரு பெருமூச்சை விட்டு வானத்தை நோக்கி சாமி கும்பிட்டவள்,
“ஆத்தா மகமாயி உன் புள்ளைய கூடவே இருந்து காப்பாத்திட்டாம்மா….” என்ற வேண்டுதலுடன் வானத்தை நோக்கி கும்பிட்டவள் கையை இறக்கும் பொழுதுதான் தன்னை முறைத்துக்கொண்டு நின்றவனையே பார்த்தாள்.
கை அந்தரத்தில் அப்படியே இருக்க அவனையும் அவனின் கையில் கட்டியிருந்த கயிற்றையும் மாறி மாறி பார்த்தவள் ‘அய்யய்யோ’ என மனதில் திடுக்கிட்டவளாய் திரும்பி ராகாவை பார்க்க அவள் தலையில் கை வைத்தபடி நின்றாள்.
திரும்பி மீண்டும் முறைத்துக்கொண்டு நின்றவனை பார்த்தவள் என்ன சொல்லி சமாளிக்கவென தடுமாறி பின்,
“அது எங்க மாமாவுக்காக வேண்டிக்கிட்ட கயிறு. தெரியாம உங்களுக்கு கட்டிவிடுட்டேன். வேண்டுதல் கயிறு. கழட்டி தரீங்களா?…” என்று தைரியத்தை வரவழைத்து அவனிடம் கேட்டேவிட முழுதாய் திரும்பி இன்னும் முறைத்தான்.
“கல்யாணம் நல்லபடியா நடக்கனும்னு வேண்டின கயிறு. தரலைன்னா போங்க. அதுக்கு முறைக்கவெல்லாம் வேண்டாம். பயமா இருக்குதுல…” என அவனுக்கு கேட்கும்படியாகவே முணகிவிட்டு சென்றுவிட அவள் சென்றதும் மீண்டும் அவள் கட்டிய அந்த மஞ்சள் நிற கயிற்றை பார்த்த அக்னிசெல்வனின் இதழ்கள் லேசாய் நெளிந்தது கீர்த்தனாவின் படபட பேச்சை நினைத்து.
“என்னடி இப்படி பண்ணிட்ட? அவருக்கு போய் கட்டிவிட்டுட்ட?…” என ராகா கடிந்துகொள்ள,
“நான் என்ன கண்டேன்? மாமா நின்ன இடத்துல தீப்பொறி வந்து நிப்பாருன்னு. சேம் கலர் ஷர்ட். ஃபுல்ஹேண்ட். வேற யாரும் பார்ப்பாங்களோன்னு நிமிர்ந்து பார்க்காம இவருக்கு கட்டிவிட்டுட்டு நிமிர்ந்து பார்த்தா அய்யானார் சாமியாட்டம் முறைச்சுட்டு நிக்கறார்…” என கீர்த்தனா எரிச்சலுடன் பேசினாள்.
“நீ கவனிக்காம இருந்ததுக்கு அவர் மேல பழியா? அவரை பத்தி தான் தெரியுமே. திட்டாம முறைச்சதோட விட்டாரேன்னு சந்தோஷப்படு. இப்ப வா போகலாம்…” என அவளை அழைத்துக்கொண்டு பொங்கல் வைக்கும் இடத்திற்கு வந்துவிட,
“இன்னும்மாம்மா நீ கிண்டிட்டே இருக்க?…” என கேட்டுக்கொண்டே கனகாவின் அருகே அமர்ந்தாள் கீர்த்தனா.
“அதைத்தான் நானும் சொல்றேன். உங்கம்மா என்னைக்கு கேட்டா…” என்று தங்கதுரை தேங்காயை துருவினார்.
“இத்தனை வருஷம் கோவில்ல பொங்கல் வைக்கறோம். வீட்டுல பொங்கல் வைக்கறோம். இது கூட தெரியாதாக்கும்? எம்புட்டு குழைஞ்சாலும் வெல்லம் போட்டதுமே சாதம் மாதிரி அரிசி எல்லாம் மொக்கையா முழிச்சுக்கும். இன்னும் கொஞ்சம் குழைஞ்சதுனா இனிப்பு சேரவும் அல்வா மாதிரி வரும்…”
“அப்ப நீ அல்வா தான் கிண்டுறியா? சாமிக்கே அல்வா குடுக்கம்மா நீ…” என்ற கீர்த்தனா கிண்டல் செய்ய,
“வாயை குறைச்சிட்டு சீவு. நேரமாகுதுடி சீக்கிரம் முடி. ராகா அந்த பச்சை கற்பூரம் எங்க? நெய் டப்பாவை கொண்டா…” என்று வரிசையாய் அதட்டவும் நால்வருமாக சேர்ந்து பொங்கலை கிண்டி கீழே இறக்கிவைத்து பானையை வெளிப்புறமாக கழுவிவிட்டு தூக்கிகொண்டுப போய் சாமி முன்னால் வைத்துவிட்டு வந்தார்கள்.
சற்று நேரத்தில் எல்லாம் பூஜை முடித்துவிட்டு சாமி கும்பிட்டு பொங்கல் பானையுடன் வீட்டுற்கு வந்தார்கள்.
கீர்த்தனாவிடம் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு இலையில் பொங்கல் வைத்து வாழைப்பழம், தேங்காய் பத்தை என வைத்து தர,
“அம்மா இன்னைக்கு எல்லார் வீட்டுலையும் கோவில்ல பொங்கல் வைச்சிருப்பாங்கம்மா. நீ வேற கொடுமை பன்ற…” என கீர்த்தனா சிணுங்க,
“சொல்றதை கேளுடி…” என சத்தம் போட்டவர்,
“முதல்ல அத்தை வீட்டுக்கு கொண்டு போய் குடுத்துட்டு வா…” என்று ஒரு பாத்திரத்தில் வைத்து தர,
“அங்க எல்லாம் என்னால போக முடியாது. எதாச்சும் திட்டுவாங்க…” என்று முறைக்க,
“கீர்த்தி…” என கனகா கோபமாய் பார்த்தார்.
“எடுத்து தா…” என முறுக்கிக்கொண்டு நிற்க பெரிய டிபன் கேரியரில் பொங்கலை வைத்தவர் நான்கைந்து வாழைப்பழமும் கோவிலில் உடைத்த தேங்காய் அரைமூடியும், விபூதி பிரசாதமும் என ஒரு கூடையில் வைத்து தர,
“இதுக்குன்னே அந்தம்மா பொங்கல் வைக்காம கால் குடைச்சல்ன்னு பீலா விட்ருக்கும். இந்தம்மாவும் அது புரியாம வச்சு அனுப்பறாங்க…” என்று ராகாவின் காதை கடித்துக்கொண்டு இருந்தாள்.
“அம்மா அது எதுக்கும்மா? சும்மாவே இருக்க மாட்டியா நீ?…”
“அவங்க உடம்புக்கு முடியலைன்னாங்க இல்ல. பாவம். இங்க இருக்கறப்போ செஞ்சு தரது தான். நித்தமுமா? போடி நீ…” என மகளை அனுப்பி வைத்தார் கனகா.
“ம்க்கும், இந்த கல்யாணம் முடிஞ்ச பின்னாடி கூட சாரதாம்மா சமைக்காது. இந்தம்மாவும் எல்லாத்துக்கும் சரிங்கறது…” என முணுமுணுப்புடன் நடக்க அடுத்த தெருவிற்கு திரும்பிய நொடி எதிரே வந்த பைக்கை பார்த்ததும் தடுமாறி சுவற்றில் சாய்ந்து பின் நின்றாள்.
“யோவ் கண்ணா தெரியா…” என கேட்டவள் வாயை அப்படியே கப்பென்று மூடிக்கொண்டாள்.
எதிரே பைக்கில் வந்தது அக்னிசெல்வன். ஹாரன் அடித்துக்கொண்டே தான் வந்தான். இவள் தான் அத்தையின் மீதான கோபத்தில் எதையும் காதில் வாங்காமல் நடக்க சடுதியில் சுதாரித்து வண்டியை ப்ரேக் பிடித்து நிப்பாட்டி இவளை முறைத்தான்.
‘இவ என்ன காலையில இருந்து என்னை சுத்தியே சுத்திட்டு இருக்கா?’ என பார்த்தபடி பைக்கை ஸ்டார்ட் செய்து இடதுபக்கம் திருப்ப கீர்த்தனாவும் அதே பக்கம் திரும்பி பின் வலது பக்கம் திரும்பினாள்.
இவள் திரும்பும் பக்கமெல்லாம் தன்னிச்சையாக அவனும் பைக்கை திருப்ப பொறுத்து பார்த்தவள் மீண்டும் கையெடுத்து கும்பிட்டு ‘ போய்யா’ என்பதை போல ஒதுங்கி வழியை கட்டிவிட அவளின் செயலில் சிரிப்பு வந்தாலும் பைக்கின் ஆக்ஸிலேட்டரை அதிகமாய் முறுக்கிவிட்டு அவளை தாண்டிக்கொண்டு கடந்து சென்றான்.
“கீர்த்தி இன்னைக்கு வளைச்சு வளைச்சு மொக்கை வாங்கிட்டு இருக்கியே. அந்த ஜண்டாமாத்ரே மூஞ்சி வச்ச அத்தை என்ன பேச காத்திருக்கோ?…” என புலம்பியபடி அங்கே செல்ல நன்றாக சோபாவில் அமர்ந்து டிவியை பார்த்துக்கொண்டு நொறுக்குதீனியை கொறித்தபடி இருந்தார் சாரதா.
“வாடி வா. பொங்கல் வச்சு அதை கொண்டு வர உனக்கு இதுதான் நேரமாக்கும்? ஏன் சாயங்காலம் கொண்டு வர வேண்டியது தானே?…” என்று நீட்டிமுழக்க ஏற்கனவே கனகா சொல்லியே அனுப்பியிருந்தார்.
‘என்ன பேசினாலும், பதிலுக்கு எதுவும் பேசிவிட கூடாது’ என்று. அதனை கொண்டே அமைதியாக நிற்க,
“வா கீர்த்தி…” என்று வந்தான் ஸ்ரீநிவாஸ்.
அவன் அணிந்திருந்த சட்டையை பார்த்தவளுக்கு சட்டென அக்னியின் முகம் கண்முன் வர முக சுருக்கத்துடன் அந்த நினைவை ஒதுக்கினாள்.
“கொண்டுபோய் பூஜை ரூம்ல வை. வாரேன்…” என்றவர் பேச்சை தட்டாமல் செய்தவள்,
“மதியத்துக்கு அம்மா சமைச்சு குடுத்துவிடறேன்னு சொல்லிருக்காங்க அத்தை. உங்களை சமைக்க வேண்டாம்னு சொல்ல சொன்னாங்க…” என பொறுமையாக சொல்ல,
“ம்க்கும், வெந்து அவிஞ்ச காய்கறிய தின்னா வாய்க்கு விளங்குமா?…” என்று கடுப்பாய் அவர் சொல்ல,
“இன்னைக்கு கும்பாபிஷேகம் அத்தை. இன்னைக்கு கவுச்சி செய்ய கூடாது…”
“வாய மூடுடி. எனக்கே புத்திமதி சொல்ல வந்துட்டா. போயி காரசாரமா எதையாச்சும் செய்ய சொல்லு உன் அம்மாவை. அப்படியே சாப்பாட்டை அவளையே கொண்டு வர சொல்லு. கூட உன் தகப்பனையும். முக்கியமான விஷயம் பேசனும்…” என சொல்லவும் கீர்த்தியின் மனது படபடத்தது.
‘அடுத்த குண்டு. என்ன செய்ய காத்திருக்கிறாரோ இந்த அத்தை?’ என அதிர்ச்சியுடன் பார்த்து நிற்க,
“இன்னும் என்ன? கிளம்பு…” என்றவர் பின்,
“ஆமா உள்ளூருக்குள்ள பத்திரிக்கை எல்லாம் வச்சு முடிச்சாச்சா?…”
“பாதி முடிச்சாச்சு அத்தை. இன்னும் கொஞ்சம் தான் பாக்கி இருக்கு…”
“ஹ்ம்ம், அதை நாளைக்கு முடிக்க சொல்லு. கல்யாணவேலை எல்லாம் என்னால இழுத்துபோட்டு செய்ய முடியாது. நானே ஆத்தமாட்டாம கிடக்கேன். அதனால எல்லாம் உன் அப்பா தான் பாக்கனும். போய் வர சொல்லு…” என அதிகாரமாய் சொல்ல,
“ப்ச், அம்மா அத கொஞ்சம் அமைதியாத்தான் சொல்லேன்…” என இருந்திருந்து ஸ்ரீநிவாஸ் சொல்ல,
“உன் வாயை மூடு. கல்யாணத்துக்கு வரனுமா வேண்டாமா?…” என அவனையும் மிரட்ட,
“இன்னும் என்ன உனக்கு? கிளம்பு…” என்றதும் துக்கம் பொங்க அங்கிருந்து வெளியேறியவள் தன் வீட்டிற்கு நடந்து சென்றாள்.
கண்கள் கலங்கி போய் இருந்தது. தன் அக்காவின் எதிர்காலம் குறித்து பெரிதும் கவலையுடன் முகம் வாடி நடந்து செல்ல அவளையே பார்த்தபடி இன்னொருவருடன் பேசிக்கொண்டிருந்தான் அக்னிசெல்வன்.
‘போகும் போது நல்லா தான இருந்தா?’ இப்ப என்ன ரொம்ப சோகமா இருக்கா?’ என அவனறியாமல் அவளை பற்றி யோசிக்க இதை எல்லாம் கவனிக்காமல் கீர்த்தனா அவனை கடந்து சென்றுவிட்டாள்.
“என்ன கீர்த்தி குடுத்துட்டியா? மாமா இருந்தாங்களா?…” என ராகா கேட்க அவளை பாவமாய் பார்த்தவள்,
“ஹ்ம்ம், இருந்தாங்கக்கா. ஆனா பேசலை. நான் குடுத்துட்டு வந்துட்டேன்…” என சொல்லி உள்ளே சென்றவள் விஷயத்தை கனகாவிடம் சொல்ல நெஞ்சுக்குழி துடித்தது. ஆனாலும் பதட்டத்தை மகளுக்கு காண்பிக்காமல்,
“சரிடாம்மா, நாங்க பார்த்துக்கறோம்…” என அவளை சமாதானம் செய்து பேச,
“அம்மா அக்காவுக்கு இந்த கல்யாணம் வேணுமாம்மா?…” என்றாள் படக்கென்று.
“அம்மாடி, அப்படியெல்லாம் சொல்லக்கூடாதுடா. ஊரை கூட்டி நிச்சயம் பண்ணி பத்திரிக்கை அடிச்சு அடுத்தவாரம் கல்யாணம்னு வந்துட்டோம். இப்ப திரும்பி போக முடியாதுடாம்மா. ஸ்ரீநி தம்பிக்கு ராகா மேல ரொம்ப பிரியம் இருக்குது. அதனால அவ நல்லா இருப்பா…”
ஸ்ரீநிவாஸ் மேல் ஓரளவு நம்பிக்கை வைத்தே பெண்ணை கொடுக்க சம்மதித்து இருக்க அந்த நம்பிக்கையும் பொய்த்து போனது அன்று மாலை அவர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது தான்.
இரக்கமின்றி போடும் நகையை இன்னொரு மடங்கு சேர்த்து போட்டால் மட்டுமே இந்த திருமணம் என்று முடிவாய் சாரதா சொல்லிவிட எத்தனையோ கெஞ்சியும், மன்றாடியும் முடியவே முடியாதென மறுத்துவிட்டார்கள் ஸ்ரீநிவாஸ் குடும்பத்தினர்.
“எங்க அம்மா சொல்றது தான் எதுவா இருந்தாலும்…” என அவனும் கையை விரித்துவிட கலங்கி போய் வந்த பெற்றோரின் முகத்தில் இருந்த வேதனையில் பெண்கள் இருவரும் என்னவென கேட்க மறைக்கமுடியாமல் தங்கதுரை கொட்டிவிட விக்கித்து போனாள் ராகா.
அதுவரை தன் மீது விருப்பம் கொண்டு போராடி தன்னை மணக்கவிருக்கிறான் அவன் என்கிற பிம்பம் உடைய ஆரம்பித்தது.
“அம்மா, நீங்க தான் சொன்னீங்களே கல்யாணத்தை நல்லபடியா நடத்தனும்னு. என் நகையை அக்காவுக்கு போடுங்க…”
“கீர்த்திடா…” என்று அவளை கட்டிக்கொண்டு கனகா அழ, திருமணமே வேண்டாம் என ராகா பிடிவாதம் பிடிக்க இரு பெண்களின் அன்பில் நெக்குருகினர் அந்த பெற்றோர்கள்.