ஒருவழியாக தங்களுக்குள்ளேயே சமாதானம் செய்துகொண்டு கீர்த்தியின் நகையையும் பத்தாததற்கு கனகாவின் நகையையும் சேர்த்து ராகாவிற்கு போட போனால் போகிறதென்பதை போல சாரதா ஒப்புக்கொண்டார்.
திருமணத்தில் அத்தனை பாடு. இத்தனை வகை உணவு வேண்டும், அது இதுவென போட்டு ஆட்டிவைக்க பொம்மைகள் என ஆடிக்கொண்டு இருந்தார்கள் கீர்த்தனா குடும்பத்தினர்.
வழிப்பறி போல இருப்பதை பிடிங்கிக்கொண்டிருக்கும் உறவுகளை நினைத்து திருமணத்தின் மகிழ்ச்சியே இல்லாமல் ஒப்புக்கு சிரித்தபடி எப்போது புதிதாய் சாரதா என்ன பிரச்சனையை துவங்குவாரோ பதட்டத்துடனே தான் கழிந்தன அந்த நிமிடங்கள்.
திருமணத்திற்கு அக்னியும், சுபாவும் வந்திருக்க பாவாடை தாவணியில் சர்வ அலங்காரத்துடன் அழகாய் வளைய வந்து கொண்டிருந்த கீர்த்தனாவின் முகத்தில் அன்றைய நாளுக்கான மகிழ்ச்சி இன்றி ஏதோவென இருப்பதை போல தோன்றியது அக்னிக்கு.
அங்கே இருந்த நிமிடங்கள் அனைத்தும் அவனின் பார்வையை அவள் தான் நிறைத்துக்கொண்டு இருந்தாள்.
அவனறியாமல் அவளுக்குள் தனக்கு கயிறு கட்டிவிடும் பொழுது கண்ட கீர்த்தனாவை காண ஆர்வம் மேலோங்க சுற்றி சுற்றி வந்தான் பார்வையில்.
“அக்னி யாரையாச்சும் தேடறியா?…” என சுபாவே கேட்டுவிட,
“வந்தா உன்னை தேடி இங்க வர போறார். அங்க மேடையை பாரு. இங்க வந்தும் வேலை வேலைன்னு…” என சுபா அலுத்துக்கொள்ள சரி என தலையாட்டிய அக்னி மேடையை பார்க்க அங்கிருந்து திருமாங்கல்யத்தை ஆசிர்வாதத்திற்கு வாங்கிக்கொண்டு வந்தாள் கீர்த்தனா.
நேராக முதல் வரிசையில் முதலில் இவர்கள் அமர்ந்திருக்க சுபாவிடம் வந்து நீட்டியவள் அடுத்து அக்னியிடம் நீட்ட அவனோ வேண்டுமென்றே சட்டையின் கை பகுதியை இழுத்துவிட்டு கயிறு கட்டியிருந்த கையை நிதானமாக அவளின் முன்னால் கொண்டுசென்று அட்சதையை எடுக்க கீர்த்தனாவும் அவனின் கையில் இன்னும் கயிறு இருந்ததை பார்த்து அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
என்னவென்பதை போல புருவத்தை உயர்த்தி அவன் கேட்டதும் தலையசைத்துவிட்டு நகர்ந்துவிட,
“அக்னி கயிறெல்லாம் கட்டுவியா நீ? புதுசா இருக்கே? அம்மா சொன்னா கூட வேண்டமனு சொல்லுவ. கயறு கட்ட எல்லாம் பிடிக்காதுன்னு…” என வியப்பாய் கேட்க என்ன சொல்லவென தெரியாமல் திருதிருத்தான்.
“பேக்டரிக்காக வேண்டியிருக்கியா நீ?…” என அதற்கும் அவராகவே அர்த்தம் சொல்ல ஆமாம் என்று தலையசைக்க,
“வாயை திறந்திடாத. முத்து உதிர்ந்துடும்…” என்று சிரித்துவிட்டு மேடையை பார்க்க கெட்டிமேளம் முழங்க ஸ்ரீநிவாஸ் ராகாவின் கழுத்தில் திருமாங்கல்யத்தை கட்டினான்.
மாலை மாற்றி முடித்ததும் வாழ்த்துவதற்காக ராகாவை கட்டிக்கொண்டவள் சிந்திய கண்ணீரும் புன்னகையும் அக்னியின் மனதில் ஆழமாய் சென்று அமர்ந்துகொண்டது.
‘அழறாளே’ என அசையாமல் பார்த்தபடியே மனதிற்குள் நினைத்தவன் தனது கையை மடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் அங்கிருந்து கிளம்பிவிட்டாலும் மனது முழுவதும் கீர்த்தியின் புன்னகை கலந்த கண்ணீர் அவனை பெரிதும் இம்சித்தது.
ஸ்ரீநிவாஸ் வேலையில் படு நேர்த்தி, திறமை வாய்ந்தவன். அதில் மாற்றுக்கருத்தே இல்லை. ஆனாலும் அவனின் தனிப்பட்ட விஷயம் என்பது வரும் பொழுது சுத்தமாய் அவன் மீது நல்ல அபிப்ராயம் என்பது இல்லை அக்னிக்கு.
அன்று பார்த்தது கீர்த்தனாவை கடைசியாய். அந்த வீட்டை கடக்கும் பொழுது எத்தேர்ச்சையாகவேனும் அவனின் கண்கள் அடந்த பூட்டிய வீட்டின் மேல் படிந்து மீளும். கீர்த்தனாவின் நினைவுகளும் அவ்வப்போது மேலெழும்பும்.
அதன் பின்னர் அவர்கள் மறுவருடம் ராகாவிற்கு வளைகாப்பு போடுவதற்காக வந்திருந்தது. ஊர் திருவிழாவும் கூட.
வளைகாப்பிற்கு நான்கு நாட்களுக்கு முன்னரே திருவிழா என்பதால் எல்லோரும் வந்திருந்தனர்.
ராகா திருமணத்தின் போது அந்த வீட்டின் வாசலில் கடைசியாக கீர்த்தனாவை பார்த்தது. அதன் பின்னர் ஸ்ரீநிவாஸ் வந்து குடியேறிவிட அந்த பக்கம் திரும்பிவதையே தவிர்த்தான்.
“இவனுக்கு குடியேற ஊருக்குள்ள வீடா இல்லை?” என கோபம் உள்ளுக்குள் கனன்றது. ‘அவன் மாமனார் வீடு, இருப்பதில் உனக்கென்ன?’ என மனசாட்சி கேட்க அடங்கி போனான்.
அன்று திருவிழா முதல் நாள் கீழே ஸ்ரீநிவாஸ், ராகாவுடன் இருக்க மாடியில் கீர்த்தனா, கனகா, தங்கதுரை.
தேர் வரும் நேரம் கீழே வாசலுக்கு வந்து திண்ணையில் மாவிளக்கு தட்டை கொண்டுவந்து வைத்துவிட்டு நிற்க தேங்காய் உடைக்காமல் மாலை, பூ, பழம் மட்டும் வைத்து மாவிளக்கை கொடுத்து பிரசாதத்தை வாங்கிக்கொள்ள தேர் நகர்ந்தது.
“ராகா வா, கல்யாணம் ஆகி முதல் வருஷம். அங்க வச்சு சாமி கும்பிடனுமாம். அம்மா வர சொன்னாங்க… என சொல்ல,
“எல்லாம் எடுத்து வச்சிருக்கேங்க…” என மாவிளக்கு சகிதம் பூஜை பொருட்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டு நடக்க,
“கீர்த்தி நீ கூட போ. அக்கா கைல இருந்து இதை வாங்கிக்கோ…” என கனகா கீர்த்தியை அனுப்ப,
“ம்ம்ம், சீக்கிரம்…” என முன்னால் நடந்தான் ஸ்ரீநிவாஸ்.
திருமணம் ஆனதில் இருந்தே கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்ரீனிவாஸின் முழு குணத்தையும் அறிந்துகொண்டாள் ராகா.
தன்னால் முடிந்தது தனது தாய், தந்தையருக்கு எந்த விதத்திலும் தொந்தரவோ, மனகஷ்டமோ தரக்கூடாது என்பது தான். அதற்கும் வாய்ப்பின்றி ஸ்ரீநிவாஸ் படுத்திக்கொண்டு இருந்தான்.
ஒன்றே ஒன்று, அவனுக்கு தன்னிடம் பிடித்தது தன் புன்னகை ஒன்றே என்பது. கொஞ்சம் கொஞ்சமாய் மனதார சிரிப்பது மறந்து அவன் நினைத்த நேரமெல்லாம் சிரிக்கும் பொம்மையாக மாறிக்கொண்டு இருந்தாள்.
“வாடி கீர்த்தி, உங்கக்காவை உன் வீட்டுலையே குடி வச்சதனால இங்கிட்டு தலையே அம்புடமாட்டிக்குதே?…” என நக்கலாய் சொல்ல,
“வேலையிருந்தது அத்தை…” என்றாள் முணுமுணுப்பாக.
“சரி சரி தாம்பளாத்தை எடுத்துட்டு வந்து இதை எல்லாம் பிரிச்சு அடுக்கு…” என சொல்லிவிட்டு வாசலில் ஒரு சேரை போட்டுவிட்டு அமர்ந்துகொள்ள ராகாவும் கீர்த்தியும் எடுத்து வைத்தனர்.
“மாவிளக்கு மாவு உன் அம்மா தான பண்ணினா?…” என கேட்க,
“ஆமா…” என்றால் கீர்த்தனா.
“அதானே பார்த்தேன். அந்த பக்குவத்தை உன் அக்காவுக்கும் சொல்லிக்குடுக்க சொல்லு…” என அதற்கும் நொடிக்க வாயை திறக்கவில்லை இருவரும்.
“கீர்த்தி சாமி வந்துருச்சு. புள்ளையார் இன்னும் புடிக்கலை…” என ராகா சொல்லவுமே,
“இதோ…” என மஞ்சளை கொட்டி பிள்ளையாரை பிடித்து முடிக்கவும் வாசலுக்கு தேர் வரவும் சரியாக இருந்தது. பூஜை முடிந்து தாம்பாளத்தை வாங்கியதும் தான் அதை பார்த்த சாரதா,
“என்னடா இது? மாலையா குடுக்காம பூவா அத்து குடுத்திருக்கானுங்க. பெரிய மாலை வேண்டாமா?…” என சாரதா சொல்ல,
“அம்மா இருங்க, போன் பேசிட்டு வரேன்…” என ஸ்ரீநிவாஸ் மொபைலுடன் உள்ளே செல்ல,
“கீர்த்தி, நீ போய் சாமிக்கு போட்டிருக்கற பெரிய மாலை தாங்கன்னு வாங்கிட்டு வா….” என சொல்ல,
“நானா?…” என அதிர்ந்து நின்றாள்.
“என்ன நானா? நீ தான். சின்னப்பிள்ளை தானே? உன்னை தெரியும் ஸ்ரீனிக்கு மச்சினின்னு…” என்றதும் மேலும் என்ன பேசுவாரோ என ராகாவை பார்த்துக்கொண்டே கையை கூட கழுவாமல் மஞ்சள் கையுடன் வேகமாய் நடந்து சென்றாள்.
தேர் வருவதற்காக தெருவை அடைத்து வீட்டுக்கு வீடு பெரிய பெரிய வண்ண கோலங்களாய் தீட்டியிருக்க அங்காங்கே வாசல் தெளித்த தண்ணீர் தேங்கி இருந்தது.
வேகமாய் நடந்தவள் கால்கள் வழுக்கி கீழே விழும் முன் பிடிமானத்திற்கு தனக்கு முன்னால் போனில் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தவனின் சட்டையை பிடித்து இழுக்க திரும்பியவன் இவளை பார்த்ததும் கீழே விழாமல் அவளையும் தூக்கி பிடித்து நிறுத்தினான்.
“அய்யோ நீங்களா?…” என பதறி கேட்க அவனின் சட்டையை இரு கைகளாலும் இன்னுமே பிடித்துக்கொண்டு இருக்க அவளை எதிர்பாராதவன் ஒரு நிமிடம் பார்த்தபடி நின்று பின்,
“இந்த விளையாட்டை எல்லாம் என்கிட்டே வச்சுக்காத. என் பேர் மட்டுமில்லை, நானும் அக்னி தான். அப்பறம் பத்திக்கிச்சுன்னு பஞ்சாயத்து பண்ண கூடாது. புரியுதா?…” என்று சொல்லிவிட பின்னர்தான் தான் பேசியதன் அர்த்தம் புரிந்து அவளை விலக்கி நிறுத்தியவன்,
“நிதானமாவே நடக்க மாட்டியா நீ? எப்ப பாரு என் முன்னால விழறது, கட்டறதுன்னு…” என்று சீற கீர்த்தனாவின் கண்களில் கண்ணீர் கோர்த்தது.
“இப்ப என்ன கட்டிட்டேன்? அன்னைக்கு தெரியாம கட்டிவிட்டது, வேணும்னா கட்டிவிட்டேன்? சும்மா அதையே பேசிட்டு. அத்தை தான் பெரிய மாலையா சாமிக்கு போட்டதை வாங்கிட்டு வர சொன்னாங்க. அதான் வேகமா வந்தேன்…” என்றவளும் கோபமாய் பேச,
“இங்கயே நில்லு…” என்று சொல்லியவன் மாலையுடன் மீண்டும் வந்தான்.
காலையில் இருந்து கோவிலிலும் வெளியிலும் செல்லும் இடமெல்லாம் சுற்றி வர பார்க்கும் இடம் யாவும் அவளின் தரிசனமே. பார்க்க கூடாதென நினைத்தாலும் கண்கள் தன்னை போல் அவளிடத்தில் சென்றது. அதில் தடுமாறியவனின் மனது கீர்த்தியை திட்டியது.
“பிடி, இனி இப்படி இருட்டுக்குள்ள வர கூடாது. ஸ்ரீநிவாஸ் என்ன பன்றார்?…” என சொல்லிவிட்டு சென்றுவிட அக்னியை திட்டிக்கொண்டே வந்து மாலையை சாரதாவிடம் நீட்ட,
“அது. இதுல்ல மரியாதை. ஸ்ரீநிக்குன்னா தனி மரியாதை தான்…” என வாயெல்லாம் பல்லாக மாலையுடன் உள்ளே சென்றார்.
“அப்ப ஏன் உன் புருஷன் இங்க நிக்கும் போதே அந்த மரியாதையை குடுக்கலையாம்?…” என ராகாவிடம் கீர்த்தனா எரிந்துவிழ,
“இப்ப எதுக்கு கோவப்படற? அவங்களை பத்தி தெரிஞ்சது தானே?…” என ராகா சொல்ல,
“போக்கா நீ. இந்தம்மாவால அந்த தீப்பொறிட்ட திட்டு வாங்கிட்டேன்…” என்றவள் அவனின் மேல் மோத இருந்து அவனின் சட்டையை பிடித்து இழுத்ததையும், அவன் கடைசியாய் திட்டியதையும் சொல்லியவள் முதலில் சொல்லியதை சொல்லவில்லை.
“அவர்க்கிட்டையே போய் வம்பிழு…” என ராகாவும் விளையாட்டாய் சொல்லி கேலி பேச,
“ஆமா, நானா தான் தேடி போறேன், போக்கா…” என்றுவிட அந்த திருவிழா தான் அவர்கள் கலந்துகொண்ட கடைசி திருவிழா. அடுத்த மூன்று வருடங்கள் அதற்கு வரவே இல்லை.
சூழ்நிலை உருவானதும், உருவாக்கப்பட்டதும் என அந்த குடும்பத்தின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்துகொண்டு இருந்தது.
அதன் பின்னர் தங்கதுரையின் உடல்நிலை குறைபாடு. அதற்கு பணம் புரட்டி அதற்கு கடனாகி என குடும்பமே களையிழந்து போனது.
ஆனால் எத்தனை கஷ்டத்திலும் ராகாவிற்கான செய்முறை எதையும் செய்ய அவர்கள் தவறவும் இல்லை. கேட்டு வாங்க சாரதா குடும்பத்தினர் நெருக்கடி தரவும் யோசிக்கவில்லை.
கீர்த்தியின் படிப்பு முடிந்ததும் மேலே படிக்க முடியாமல் வேலைக்கு செல்ல கழுத்தை பிடிக்கும் குடும்ப கஷ்டத்தில் இருந்து கொஞ்சம் மூச்சுவிட முடிந்தது அவர்களால்.
இப்பொழுது மீண்டும் அந்த குடும்பத்தின் கஷ்டம். நினைக்க நினைக்க கீர்த்தனாவின் மனதிற்கு ஆறவில்லை.
இதையே நினைத்தபடி பேக்டரியில் இருந்த அக்னிக்கும் கையில் இருந்த கயிற்றை பார்த்தபடியே பழையவற்றை அசைபட்டுக்கொண்டிருந்தவனின் மனதும் தங்கதுரை இந்த கஷ்டத்திலிருந்து விடுபட என்ன செய்வது? எப்படி செய்வது என யோசித்துக்கொண்டு இருந்தான்.
அதற்குள் பேக்டரி முழுவதும் கீர்த்தனா தாயான விஷயம் தெரிய வந்து அனைவரும் பேசிக்கொள்ள தனக்கு ஏன் எதுவும் சொல்லப்படவில்லை என்ற யோசனையுடன் ராகாவிற்கு அழைத்தான் ஸ்ரீநிவாஸ்.
“ராகா, உனக்கு விஷயம் தெரியுமா?…”
“என்னன்னு சொல்லுங்க, தெரியுமா, தெரியாதான்னு நான் பதில் சொல்றேன்…” என்றாள் அவள் விட்டேற்றியாக.
“உங்க வீட்டு மூத்த மாப்பிள்ளை நான். எனக்கு தெரியலை. ஆனா இந்த ஊருக்கே தெரிஞ்சிருக்கு. என்ன மதிச்சு வச்சிருக்கீங்க நீங்க எல்லாரும்?…” என அங்கிருந்தே கத்த,
“வினய் அழறான். அப்பறமா பேசறேன்…” என போனை கட் செய்துவிட்டாள் ராகா.
அவளுக்கு கீர்த்தனா போன் செய்து விஷயத்தை சொல்லி பொள்ளாச்சியில் இருப்பதாக சொல்லவும் ராகாவிற்கும் அவர்களுடன் செல்ல ஆசையாய், ஏக்கமாய் இருந்தது.
செல்லமுடியாத தன் நிலமையை எண்ணி வருத்தத்துடன் இருக்க ஸ்ரீநிவாஸ் குதித்தது பிடிக்காமல் போனது. அதனால் பேச பிடிக்காமல் போனை கட் செய்துவிட,
“ராகா, ராகா…” என கத்திக்கொண்டு இருந்தான் ஸ்ரீநிவாஸ்.
“இப்ப இந்த விஷயம் உங்களுக்கு முதல்ல தெரிஞ்சா என்ன பண்ணிடறதா இருக்கீங்க ஸ்ரீநிவாஸ்?…” என கேட்டவனின் குரலில் திடுக்கிட்டு ஸ்ரீநிவாஸ் திரும்ப அக்னி நின்றுகொண்டு இருந்தான்.