“ம்மா நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க மாட்டியே..?” என்று தயக்கத்தோடு சமையலறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அன்னையிடம் கேட்டாள்.
“சொல்லு” என்றவர் கவனம் பொங்கிய பாலின் மீதிருக்க, “அது வந்தும்மா.. இப்போ.. ப்ச்.. இன்னைக்கு நான் உன்கூட படுத்துகட்டும்மா” என்று முடிக்கும் முன்னமே,
“என்ன அறிவுகெட்டதனமான பேச்சு இது..? இன்னொரு முறை இப்படி பேசின என்ன நடக்கும்னே தெரியாது” என்று சீறியவர் பாலை பக்குவமாக ஆற்றி, “இந்தா பிடி மாப்பிள்ளைக்கு கொண்டு போய் கொடுத்துட்டு அங்கேயே தான் படுக்கணும்.. ஏதாவது வில்லங்கத்தை இழுத்துவிட்ட அப்புறம் இருக்குடி உனக்கு” என்று சொல்ல அதுநேரம் வரை பலத்த யோசனையில் இருந்தவள் கையிலிருந்த பாலை கண்டு, “ம்மா என்ன இதெல்லாம்..?” என்றாள்.
“நீதானேடி சொல்லுவ அவருக்கு தினமும் நைட்ல பால் குடிக்கிற பழக்கம் இருக்குன்னு” என்றவர் அப்போது தான் மகளின் முகத்தில் இருந்த பதட்டத்தை கண்டு, “ஆமா நீ ஏன் டென்ஷனா இருக்க..?” என்றார்.
“டென்ஷனா இல்லையே.. அப்படியெல்லாம் ஒன்னுமில்ல”
“அப்புறம் என்ன கிளம்பு”
“சரி” என்றவள் நேரம் பார்க்க மணி பதினொன்று..!
இத்தனை நேரம் ஒருவர் மாற்றி ஒருவர் அவளை பிடித்துகொண்டதில் உடைமாற்ற கூட நேரமின்றி போனவள் இன்னுமே புடவையில் தான் இருந்தாள்.
எப்படியும் அவன் தூங்கி இருக்க மாட்டான் என்பதால் ‘எப்படி அவனை சமாளிப்பது..?’ என்ற யோசனையோடு மெல்ல அடி மேல் அடி வைத்து தன்னறை கதவை திறந்து கொண்டு உள்ளே நுழையவும்
“வாங்க மேடம்” என்றவனின் குரலில் ஏக நக்கல்..
இதை எதிர்பார்த்திருந்தவள் அமைதியாக கதவை அடைத்துவிட்டு திரும்ப அங்கே அவிரனின் விழிகள் கனவானாக இல்லாமல் கணவனாக மாறி இருப்பதை கண்டு உள்ளுக்குள் எரிமலையாக குமைந்தவள், ‘இதுக்கு தான் இங்க வரமாட்டேன் சொன்னேன் கேட்டியாம்மா நீ..?’ என்று மனதினுள் அன்னையை வறுத்தெடுத்து கொண்டே வேண்டா வெறுப்பாக எங்கேயோ பார்த்தவாறு “இந்தாங்க” என்று அவனிடம் பாலை நீட்டிட அவிரனோ அதை வாங்காமல் அமைதியாக தாடையில் கைவைத்து அவளை பார்த்தான்.
“என்ன வேண்டாமா..?”
“எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா..?” என்று கேட்டதும் தான் தாமதம் பாலை மேஜையில் வைத்துவிட்டு “அவி..” என்று திரும்பியவள் அவன் பார்வையை கண்டு அவசரமாக உடைமாற்றும் அறைக்குள் புகுந்து திரும்பிய போது புடவை களைந்து நைட்டிக்கு மாறி இருபக்கமும் சற்று தடிமனான துப்பட்டாவை ஒற்றையாக விட்டு அதை பின் செய்துகொண்டு வர அதை கண்டவனுக்கு அப்படி ஒரு சிரிப்பு பொங்கியது…
எங்கே சிரித்தால் தனக்கு பொங்கல் வைக்க தொடங்கி விடுவாளோ என்று அதை அவசரமாக விழுங்கி “ஸோ” என்று அவளை பார்த்தான்.
“இப்போ எனக்கு தூங்கனும்” என்றவளின் பார்வை சுவரை வெறித்தது.
“குட் டிசிஷன்..! குட் நைட் தூங்கு” என்றவன் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை ஒளிரவிட்டான்.
இரவு ஒளியில் அவனை பார்க்க, மெத்தையின் நடுவில் தளர்ந்து படுத்திருந்தவனின் எந்த பக்கம் படுத்தாலும் அவனை தவிர்க்க முடியாது அது இரண்டு பேர் மட்டுமே படுக்கும் அளவிலான சிறிய கட்டில்.., இவர்களின் திருமணத்திற்கு முன் அவளரையில் தந்தை கட்டிலை மாற்ற போகிறார் என்று அவள் கூறவும் வேண்டாம் என்றுவிட்டான் அவிரன் அகனெழிலன்.
‘இல்லைங்க உங்க வீட்ல மாதிரி இல்ல இதுல ஒருத்தர் தான் தாராளமா படுக்கமுடியும் இரண்டு பேருக்கு கஷ்டம்’
‘கஷ்டமா..? அது தான்டி எனக்கு வசதி எக்காரணம் கொண்டும் மாத்திடாத’ என்றவன் வசதி எப்படி என்பதே திருமணத்திற்கு பின்தான் அவளுக்கு புரிய வந்தது.
அன்றைய நினைவுகளில் பெண்ணவள் முகத்தில் மெல்லிய செம்மை படர்ந்திட இப்போது கட்டிலை முழுதாக அடைத்து கொண்டு படுத்திருப்பவனை சிறு எரிச்சலோடு பார்த்தவள், “தள்ளி படுங்க” என்றாள்.
“அவ்ளோ நம்பிக்கையா என்மேல..?”
“நம்பிக்கையா..?” என்று கசப்போடு புன்னகைத்தவள், “இருந்தது என்னோட மொத்த நம்பிக்கையும் தைரியமும் நீங்கதான்னு ஒரு காலத்துல வானளவு நம்பிக்கை இருந்தது ஆனா இனியும் உங்களை நம்ப நான் ஒன்னும் முட்டாளில்லை”
“ஐ சீ..!!” என்றவனின் புருவம் ஏறி இறங்க இதழ்கள் எள்ளலாக வளைந்தது.
“அப்புறம் மேடம் எப்படி என்னோட படுக்க வந்தீங்களாம்.., என்மேல நம்பிக்கை இல்லாதவ ரூமுக்குள்ள வந்திருக்கவே கூடாது வந்துட்டு சட்டம் பேசுவியா..? போய் கீழ படுடி” என்றவன் இன்னுமே கைகால்களை அகட்டி தாராளமாக மெத்தையை ஆக்கிரமித்து கொண்டான்.
“அவிரா இது என்னோட ரூம்..”
“இருந்துட்டு போகட்டும் நான் ஒன்னும் என் பேருக்கு எழுதி கொடுக்க சொல்லலையே..?” என்றவனின் சிரிப்பில் பொறுமை இழந்தவள்,
“என்கிட்டே இந்த மாதிரி பேசுற வேலை வச்சுக்காதீங்க..”
“பார்றாஆ ..!” என்று இருகரங்களையும் தலைக்கு அணைவாய் கொடுத்து, “ஏன்டி அப்போ வேற வேலை வச்சுக்கிட்டா உனக்கு ஓகேவா..?” என்றவனின் பார்வை மாற்றத்தை கண்டு,
“அவிராஆஅ..” என்று அவள் சத்தத்தை கூட்ட.,
“அடிங்க என்ன அவிரா..? என்னடி அவிரா..? புருஷன்ங்கிற மரியாதை இல்ல..! ஒழுங்கா மாமான்னு கூப்பிடு, எங்கம்மா அப்பாவை எவ்ளோ பாசமா கூப்பிடுவாங்க தெரியுமா..?”
“என் மாமா நல்லவர்” என்று உடனே அவள் பதில் கொடுக்க,
“எங்கப்பா நல்லவர்னா என்னை கெட்டவன்னு சொல்றியாடி..?” என்று எழுந்தமர்ந்து விட்டான்.
‘அதை என் வாயால சொல்லனுமா..?’ என்று முனுமுனுத்தவள், “ப்ச் இதோ பாருங்க எனக்கு தூக்கம் வருது..”
“தூக்கம் வந்தா தூங்குடி ஏன் என் தூக்கத்தை கெடுக்குற..? ஆனா ஒன்னு தூங்குறதுக்கு முன்னாடியும் தூங்கின பின்னாடியும் என் கை கால் கண்ட்ரோல் இல்லாம எங்க இருக்கும்னு உனக்கே நல்லா தெரியும்..” என்றவன் தன் பேச்சை நிறுத்தி,
“என்ன தெரியும் தானே..? இல்லனா எங்க எப்படின்னு நான் சொல்லவா..?” என்று கேட்டவனை முறைத்து கொண்டு நின்றவள் “தெரியும்” என்று சிவந்த முகத்தை அரும்பாடுபட்டு மறைத்தவண்ணம் மெல்லிய குரலில் முனுமுனுத்தாள்.
“சத்தமா சொல்லுடி எனக்கு கேட்கலை..” என்றவனின் சிரிப்பில் விழதுடித்த மனதை இறுக்கி பிடித்து,
“யோவ் அதான் சொல்றேன்ல திரும்ப திரும்ப கேட்டு எதுக்கு என் ஆவியை எடுக்குற..? தெரியும்! தெரியும்! போதுமா..?”
“அதுதான் உனக்கே தெரியுதே! அப்புறம் நடுராத்திரி உட்காந்து என் கற்பு போச்சுன்னு நீ என்னை அக்யூஸ் பண்ணவா..? வேண்டாம் தாயே என்னை நம்பாதவ ஒன்னு கீழ போய் படுத்துக்கோ இல்ல வேற ரூம்க்கு போடி எனக்கு பிரச்சனையில்ல” என்றவன் மாமியார் தனக்கு கொடுத்துவிட்ட பாலை எடுத்து மனைவியை பருகியவாறே ருசிக்க தொடங்கினான்.
அவன் குடித்து முடிக்கும் வரையிலுமே சுவரை வெறித்துகொண்டு நின்றவளிடம், “என்ன அமைதியாகிட்ட அப்போ என்னை நம்புறியா..?” என்றான் அழுத்தமான குரலில்.
“நோ நம்பமாட்டேன்..! உங்களை எப்பவும் நம்பமாட்டேன்” என்றவள் அதே வேகத்தோடு பாயை எடுத்து தரையில் விரித்தாள்.
“ஏன்..?”
“யு ஆர் எ சீட்..! உங்களை எவ்ளோ நம்பியிருந்தேன் ஆனா நீங்க என்னோட நம்பிக்கையை முழுசா உடைச்சுட்டீங்க. யு ஆர் எ சீட்டர்..!” என்று இரவு நேரம் என்பதையும் மறந்து அவள் கத்த அமைதியாக அவளருகே வந்தவன்,
“என்னடி ஏமாத்திட்டேன் உன்னை..” என்று கோபத்தோடு கேட்டவன் அவள் கழுத்தை அலங்கரித்து கொண்டிருந்த தாலிசரடை கையிலெடுத்து, “இதை கட்டிட்டு நான் படர அவஸ்த்தை எனக்கு தான்டி தெரியும்” என்றவன்,
“சொல்லு அப்படி என்ன உன்னை ஏமாத்திட்டேன்னு எனக்கு இப்போ தெரியனும்..?” என்று அவிரன் கேட்ட நொடி இருவரின் பார்வையும் ஒருசேர அவள் வயிற்றில் நிலைகொண்டது.