கவிதை – 1
அந்த ஊரின் ஆரம்பித்தில் இருந்த தொழிற்சாலையின் உள்ளே கண்டெய்னர்களும், சின்ன டெம்போக்களும் நின்றிருந்தது.
உள்ளிருந்து பாதுகாப்பு செய்யப்பட்டிருந்த பெட்டிகளை வெளியே இருந்த வண்டிகளுக்கு இடமாற்றம் செய்துகொண்டு இருந்தார்கள் பணியாளர்கள். அதை பார்வையிட்டுக்கொண்டிருந்தவன்,
“ஸ்ரீநிவாஸ், கவனமா பண்ண சொல்லுங்க. அந்த லாஸ்ட்ல போன ரெண்டுபேர் சரியில்லையே. அவங்களுக்கு முன்னாடி இருந்த ரெண்டுபேர் யார் புதுசா?…” என கேட்டுக்கொண்டு விழிகளை வேலை செய்பவர்களிடம் மட்டுமே பதித்திருந்தான் அக்னிசெல்வன்.
“அவங்க நம்ம ஸ்டால்ல சப்ளை செக்ஷன்ல வேலை செய்யறவங்க தான். எல்லாம் நம்ம பசங்க தான் ஸார். லாஸ்ட்ல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை…” என சொல்ல,
“ரெண்டுபேருக்குமா? உடம்பு சரியில்லைன்னா ஏன் வேலைக்கு அனுமதிக்கறீங்க? உங்களுக்கு நான் சொல்லனுமா என்ன?…” என்றவனின் குரல் மட்டும் அவரிடம் கடுமை காட்டி இன்னும் பார்வையை அகற்றாமல் அங்கேயே பார்த்திருந்தான்.
“வேண்டாம்னு தான் சொன்னேன் ஸார். அவங்க தான் தானா வந்தாங்க. வராம போனா இன்னைக்கு கூலி கிடைக்காதேன்னு…”
“வெறும் காசை மட்டும் காட்டி நம்ம தொழிலாளர்களை கட்டி வைக்க கூடாது ஸ்ரீநிவாஸ். அதுக்குன்னு அள்ளி குடுத்து நாமளே கெடுக்கவும் கூடாது. இதை எப்போ புரிஞ்சுக்க போறீங்க?…” என்று அவன் அமைதியாக சொன்னாலும் குரல் கடும் கண்டனத்தின் வெளிப்பாடு தான்.
“ஓகே ஸார், இனி இப்படி நடக்காம பார்த்துக்கறேன்…”
“இனி இப்படி நடந்தா நீங்க இங்க எதையும் பார்க்க முடியாது. புரியுதா? உங்க வேலையை சொன்னேன். எனக்கு டிஸிப்ளின், பர்பெக்க்ஷன் மட்டும் முக்கியமில்லை, கொஞ்சம் மனிதாபிமானமும், சமயோசிதபுத்தியும் கூட முக்கியம்…” என்று சொல்லிவிட்டு அதற்கடுத்த வேலைகளை கவனிக்க உள்ளே சென்றான்.
“இவர்க்கிட்ட வேலை பார்க்கறதுக்கு இவங்கப்பாவுக்கு ட்ரைவரா போய்டலாம். எல்லாம் என் நேரம்” என நொந்துகொண்டே ஸ்ரீநிவாஸ் அவனின் பின்னால் சென்றான்.
அந்த ஊரிலேயே மிக பெரிய தொழிற்சாலை அது. தேங்காய் சம்பந்தப்பட்ட பொருட்கள் சிலவற்றை அங்கே தயாரித்து இந்தியாவினுள்ளும் சில வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் தொழிற்சாலை.
தேங்காய் எண்ணை, பதப்படுத்தப்பட்ட தேங்காய் பால், பதப்படுத்தப்பட்ட தேங்காய் துருவல், பதப்படுத்தப்பட்ட இளநீர் வழுக்கை, தேங்காய் பால் பவுடர், தேங்காயில் கைவினை பொருட்கள், தேங்காய் நார், கயிறு, மாடித்தோட்டதிற்கு பயன்படும் நார் என அந்த வட்டாரத்தையே திரும்பி பார்க்க வைத்திருந்தது அந்த தொழிற்சாலை.
கழிவுகளை உரியமுறையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றும் முறைகளையும் கூட நேர்மையாக செய்து வந்தனர். அந்த கிராமத்தின் எழிலுக்கும், பசுமைக்கும் பங்கம் வராதளவிற்கு அவர்களின் புத்திசாலித்தனம் செயல்பட்டிருந்தது.
அதே போல் சுவைக்கெனவும் வியாபாரத்திற்கெனவும் எந்தவித சமரசமும் செய்யாமல் சரியான அளவுகளை கொண்டே சுகாதாரமான முறையில் பொருட்களை தயாரித்தான்.
உள்ளே தனது அலுவலக அறையில் டெக்ஸ்டாப்பில் அங்கு நடப்பவற்றை பார்வையிட்டுக்கொண்டே போனில் பேசியபடி இருந்தவனுக்கு இரண்டாவது கால் காத்திருப்பில் வர எடுத்து பார்த்தவன் முகம் யோசனையாகி பின் லேசாய் புன்னகைத்தது.
ஆனாலும் பேசிக்கொண்டிருந்தவரிடம் தொழில் நிமித்த பேச்சுக்கள் முடியவும் தான் வந்த அழைப்பிற்கு இன்னொரு அழைப்பு விடுத்தான். அழைப்பு எடுக்கப்பட,
“இந்த தொழிலதிபருங்க தொல்லை தாங்கமுடியலை…” என்றவளின் குரலில் லேசாய் சிரித்தவன்,
“எப்படி இருக்க?…” என்றவனை பார்க்க தோன்ற,
“அப்படியே இரு. என்னை பார்த்தே சொல்லேன்…” என்றவள் உடனே வீடியோ காலுக்கு வர ஒரு நொடி யோசித்து பின் அட்டென் செய்தான்.
“இதுக்குத்தான் இப்ப பேசனுமான்னு யோசிச்சேன். உடனே வீடியோ கால் பன்றியே…” என லேசாய் கண்டிக்க,
“அப்பப்பா, பயந்துட்டோம். உன்னோட சூடு என்னை ஒன்னும் செய்யாது…” என விளையாட்டாய் சொன்னவள் முகம் அமைதியாக,
“சொல்லு அஞ்சலி, எனிதிங் இம்பார்ட்டன்ட்?…” என்றான் கறாராய்.
“உனக்கு எதுவுமே இம்பார்ட்டன்ட் இல்லை தான. ஆனா என்னோட எக்ஸ் ஆச்சே நீ. அதான் உன்கிட்ட சொல்லாம உன்னை வெறுப்பேத்தாம கல்யாணம் செஞ்சுக்க கூடாதுன்னு தான் போன் பண்ணேன்…”
“அஞ்சலி…” என்று கோபமாக திட்டியவன்,
“ஹேய் கல்யாணமா?…” என ஆச்சர்யமாக கேட்க,
“பின்ன இல்லையா? எனக்கே எனக்குன்னு என்னை உயிரா விரும்பற ஒருத்தனை தான் கல்யாணம் செஞ்சுக்க போறேன்…” என்றவளின் குரலில் இருந்த குத்தலில் அக்னிசெல்வனுக்கோ அதே அளவான புன்னகை தான்.
“என்னை ஹர்ட் பண்ணனும்னு நினைச்சா கூட உன்னோட முயற்சி வேஸ்ட் தான் ஆகும்…” என்றான் அமர்த்தலாக.
“அந்த விளக்கண்ணை எனக்கும் தெரியும். இருந்தாலும் என் கோபத்தை எப்படி காட்ட?…” என்றவளின் கடுகடுப்பில் அழுத்தமாக பார்த்தவன்,
“இன்னும் பழசை நினைச்சுட்டு இருக்கியா நீ? டூ பேட். உன்னை உயிரா விரும்பறவனுக்கு இது தெரியுமா?…” என்றான் கோபத்துடன்.
“ஹ்ம்ம் லவ் பெயிலியர்ன்னு சொல்லிருக்கேன்…”
“நீ முட்டாளே தான்…” எரிச்சல் குரலில் சொல்ல,
“நீ ஏன் பேசமாட்ட? அதுக்காக தான் நான் என்னை புரிஞ்சு எனக்காக எதுவும் செய்யற, என்னை உருகி உருகி விரும்பற ஒருத்தனை தான் கல்யாணம் பண்ணனும்னு லட்சியமாவே இருந்தேன் தெரியுமா?…” என்றாள் வீராவேசமாக.
“ஓஹ் இது லட்சியத்துக்கு வந்த வாழ்வா?…” என்று அக்னிசெல்வன் கிண்டல் பேச,
“அக்னி…” என்று பல்லை கடித்தவள்,
“இன்னும் பத்து நாள்ல மேரேஜ். உன்னால வர முடியுமா?…” என்றவளிடம் பதில் சொல்வதற்குள்,
“வெய்ட் டூ மினிட்ஸ்ல கூப்பிடறேன். இன்னொரு கால்…” என அவள் பேசிக்கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாது கட் செய்துவிட்டவனை எண்ணி தலையில் தட்டி கொண்டாள்.
“அதானே பார்த்தேன். இவனாச்சும் திருந்தறதாவது…” என்று சிரித்துக்கொண்டாள்.
அக்னிசெல்வன், அஞ்சலி இருவருமே ஒரே கல்லூரியில் ஒரே வகுப்பில் பயின்றவர்கள். ஆரம்பத்தில் இருந்தே நண்பர்களாகவே பழகி வந்தவர்களிடையே முதலில் காதல் வயப்பட்டது அஞ்சலியே.
அக்னியின் சின்ன சின்ன கவனிப்பு, புன்னகை, அவனின் அறிவார்த்தமான பேச்சுக்களும் எதற்கும் பசப்பாமல், வளைந்து கொடுக்காத நேரடி பேச்சுக்களும், அவனின் குணநலன்களும், யாரையும் ஒரு எல்லையில் வைத்து பழகும் பாங்கும் அவனின் பால் அதிகமாகவே ஈர்த்தது அவளை.
அதிலும் அவனின் குடும்பம் அந்த ஊரிலேயே செல்வாக்காக வாழும் பெயர்கொண்ட குடும்பம். அவனை எந்த விதத்திலும் குறைத்து மதிப்பிடமுடியாத அளவிற்கு இருந்தது.
எதிர்கால வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்னும் எண்ணத்தில் இருந்தாளோ அதற்கு சற்று அதிகமான தகுதிகளுடன் கூடுதலாய் நண்பனாகவும் இருந்ததில் இன்னுமே திருப்தி தான் அவளுக்கு.
அவளே சொல்லிவிட்டாள் நேரடியாக. முதலில் ஆச்சர்யம் தான் அக்னிசெல்வனுக்கு.
பெரிதாக காதல் திருமணம் என்று எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தவனின் மனதில் சிறு சலனமும் எழவில்லை. அதையும் ஒரு கமிட்மென்ட்டாக தான் பார்க்க விழைந்தான்.
“ஹ்ம்ம், என்னை நல்லா தெரிஞ்ச பொண்ணு நீ. எனக்கு மறுக்கவும் எதுவும் இல்லை. ஆனா உன்னோட ஆம்பிஷன் வேற. என்னோட ஆம்பிஷன் வேற…” என அவள் காதல் சொல்லிய அன்றைக்கே அனைத்தையும் தெளிவுபடுத்திவிடும் வேகம் அக்னிசெல்வனுக்கு.
பிடித்தமில்லை என்றால் இப்பொழுதே விலகிவிடுவது சிறந்தது என்னும் மனப்பான்மை அஞ்சலியை ஆட்டிப்பார்த்தது.
அவளுக்கும் தெரியும் அவனின் கனவுகள் என்னவென்று. காதலில் விழுந்துவிட்டால் அவனை கரைத்துவிடலாம் என்ற ஆசை ஒருபுறம். விரும்ப ஆரம்பித்துவிட்டால் ஏதோ ஒரு வகையில் அவன் தன் பேச்சை முக்கியத்துவம் வாய்ந்ததாக எண்ணக்கூடும் என்ற நம்பிக்கையில் இருந்தவளுக்கு பலத்த அடிதான் அது.
“அக்னி…”
அவன் தன்னை புரிந்துகொள்ள வேண்டுமே தவிப்புடன் தன்னை அவன் ஏற்க வேண்டுமே என்று அவனின் முகத்தையே அவள் பார்க்க,
“என்னோட முடிவு இதுதான் அஞ்சலி…” என்றான் எந்தவித அழுத்தமும் இல்லாம இலகுவாக.
“அக்னி, ப்ளீஸ். இன்னைக்கு தான் ப்ரப்போஸ் பண்ணிருக்கேன் நான். உனக்கு நான் சொன்னது ஷாக்கிங்கா இருந்ததே தவிர பிடிக்காம இல்லை. உன் முகத்தை பார்த்தாலே தெரிஞ்சது. ஓகே இப்போதைக்கு இதை பத்தி பேச வேண்டாம் அக்னி. கொஞ்சம்நாள் போகட்டும்…” என்று பேச்சை திசை திருப்ப,
“நோ, எப்போ என்னைக்கு பேசினாலும் என்னோட பதில் இதுதான். லவ் பண்ணிட்டா உன்னை மறக்க முடியாம உன்னோட பேச்சுக்கு கட்டுப்படுவேன்னு நீ நினைச்சா அது தப்பு…” என்றான் இன்னும் திடமாய்.
“இப்பவும் சொல்றேன், எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. இந்த காதல் இதுல நம்பிக்கை இல்லை. கல்யாணம் பண்ண போறவங்க நல்லா புரிஞ்சு இருந்தாலே போதும், வாழ்க்கை ஸ்மூத்தா போகும்னு நம்பறவன் நான். அதனால என்னோட ப்ரெண்ட் நீ லைப்ல வந்தா நாட் பேட்…”
இரக்கமற்ற அவனின் பேச்சு அவளுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. நண்பனாய் எதை ரசித்தாளோ அந்த பேச்சுக்கள் அவனை விரும்பும் பெண்ணாய் அவளுக்கு சகிக்கவில்லை.
“என்ன மனிதன் இவன்?” என்ற கோபம் தான் பிரதானமாக பொங்கி வர “போடா” என்று தான் சொல்ல தோன்றியது.
“நான் என் பேக்ரவுண்ட் இப்டித்தான்னு உனக்கு தெரியுமே அஞ்சலி. நான் சின்ன வயசுல இருந்தே பொறுப்புக்களை சொல்லி வளர்க்கப்பட்டவன். என்னோட மூச்சு என் குடும்பமும், ஊரும் தான். அந்த ஊருக்கும், என் குடும்பத்தோட பேருக்கும் என்ன செய்யனுமோ அதை தான் நான் விரும்புவேன்…”
“அதை இங்க இருந்து செய்யனும்னு இல்லை அக்னி. பாரின்ல எத்தனையோ வேலை. நல்ல சம்பளம். சம்பாதிச்சு…” என்று அவள் தொடங்கும் பொழுதே அவனின் முகம் கறுத்துவிட,
“லுக் அஞ்சலி, என் சம்பளத்தை நம்பி என் குடும்பம் இல்லை. நாங்களே பல குடும்பத்தை வாழ வச்சுட்டு தான் இருக்கோம். பிறப்பும் என் சொந்த ஊர்ல, இறப்பும் என் சொந்த ஊர்லன்னும் போது வாழ்க்கை மட்டும் ஏன் கடனுக்கு வாழற மாதிரி எங்கையோ வாழனும்? இன்னொன்னு நான் முதலாளியா பிறந்து முதலாளியா வளர்க்கப்பட்டவன். எனக்கு ஆளத்தான் தெரியும். கைகட்டி நிற்க தெரியாது…”
“நீ இவ்வளோ பேசவேண்டியதே இல்லை. அங்க போய் பிஸ்னஸ் பண்ணலாம். என் டாடி இருக்காரு. நமக்கு சப்போர்ட் பண்ணுவாரு…”
“அதுக்கும் அவசியமில்லைன்னு தான் சொல்றேன்…”
“அப்ப விவசாயத்தையே பண்ணிட்டு ஊர்ப்பக்கமே இருந்திருக்கவேண்டியது தானடா? இங்க ஏன் வந்து என் கூட பேசின?…” என்று கடுப்புடன் அவள் சொல்ல,
“தோடா, நானா பேசினேன்? நீயா தான் வந்து பேசின…”
“தப்புத்தான் மிஸ்டர் அக்னி. நானா தான் வந்து பேசினேன். அதுக்கு இப்போ என்ன? எனக்கு கோபம் வரத்தான் செய்யும். ஊருக்காக வாழனும்னா ஏன் இங்க வந்த?..” என்றவளின் முகத்தில் எள்ளுகொள்ளும் வெடித்தது.
“படிக்கனும்னு தான். அதுவும் எங்க தொழிலை விருத்தி பண்ண கூடிய செயல் மட்டுமே இருக்கும் என்கிட்ட. மத்த எதுவும் எனக்கு செகென்ட் தாட் தான்…” என்றவனை பார்க்க பார்க்க கோபம் தான் வந்தது.
“இதுக்கு ஓகேனா மேல ப்ரசீட் பண்ணலாம் அஞ்சலி. ஆனா அதுவும் இப்போ இல்லை. படிப்பு முடிஞ்சு என்னோட ட்ரீம் ப்ராஜெக்ட் ஆரம்பிக்கனும். அது சக்சஸ் ஆகனும். இன்னும் நிறைய. உனக்கு இது புதுசா அஞ்சலி. நான் ஏற்கனேவே உன்கிட்ட சொல்லிருக்கேன் தானே?…”
“சொல்லிருக்க, பட் இப்போ…” என்றவள் ஒரு நிமிடம் எதுவும் பேசவில்லை. அவனை மாற்ற முடியுமென்பது சுத்தமாக தோன்றவில்லை.
“உனக்கு எங்க ஊர் பிடிச்சிருக்கு. என் பேமிலி பிடிச்சிருக்கு. ஆனா இங்கயே இருக்கறது தான் பிடிக்கலைன்ற. என்னை தான் மாத்தணும்னு பார்க்கறையே தவிர்த்து உன்னை மாத்திக்கனும்னு நீ நினைக்கவே இல்லை. மாறனும்னு நானும் விரும்பலை. அதை நான் சொல்லமாட்டேன். மாற்றம் எல்லாமே வற்புறுத்தி வர கூடாது அஞ்சலி…”
அக்னி சொல்ல சொல்ல அஞ்சலிக்கே இது சரி வரும் என்று தோன்றவில்லை. அவன் மீதான அன்பிற்காக கூட தன்னை மாற்றிக்கொள்ள நினைக்கவில்லை.
அதே நேரம் தான் விரும்புகிறவன் தனக்காக செய்யவேண்டும், உருகவேண்டும் இப்படியான எதிர்பார்ப்புகள் அவனிடத்தில் தனக்கு பூர்த்தியாகாது என்ற எண்ணம் ஸ்திரம் பெற்றது. ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள்.
“உன்னை கன்வின்ஸ் பண்ணிடலாம்னு நினைச்சேனே. ப்ச், அக்னி லிசன் எனக்கு இது சரிவரும்னு தோணலை…” என சொல்ல அவன் இன்னும் அவளை பார்த்தபடி நின்றான்.
“நான் சொல்றேன்னு நீ என்னை தப்பா எடுத்துக்காத…” என்றவளை “மேலே பேசு” என்பதை போல தலையசைக்க,
“எஸ் அக்னி, எல்லாமே புதுசா கேட்கலை தான். பட் காதால கேட்டதுக்கும், கண்ணால லைவ்ல பார்க்கறதுக்குமான டிப்ரெண்ட் இப்ப நீ பேசறதை பார்க்கவும் தான் தெரிஞ்சது எனக்கு. ப்ளீஸ் அண்டர்ஸ்டேண்ட் மீ அக்னி…”
“நீ எதுவா இருந்தாலும் பேசலாம் அஞ்சலி. அந்த தெளிவு நம்ம ரெண்டுபேருக்குமே நல்லது…” என சொல்ல,
“ரொம்ப தெளிவுடா. நீ ஏன் இப்படி இருக்க? கொஞ்சம் கிறுக்குத்தனமாவும் இருந்திருக்கலாம்…” என்று அவனை திட்டியவள்,
“நீ சொல்ற மாதிரி உனக்காக பார்த்து அரைமனசோட உனக்காக அட்ஜஸ்ட் பண்ணிடலாம்ன்னு நினச்சு நம்ம மேரேஜ் பண்ணினாலும் நம்மோட ப்யூச்சர்ல நிறைய பிரச்சனைகள சந்திச்சு நாம பிரிய வேண்டிய சூழ்நிலை கூட வரலாம். அது வேண்டாம். வலிக்க வலிக்க வெறுப்போட பிரியறதுக்கு இப்பவே பிரிஞ்சிடலாம்…” என தோன்றியதை பட்டென்று போட்டுடைக்க,
“நீ டிஸைட் பண்ணிட்ட?…”
“ம்ஹூம் நீ டிஸைட் பண்ண வச்சுட்ட. சரியான ராட்சஷன் நீ. ஐ ஹேட் யூ. எஸ். உங்க ஊர் மாதிரி ஒரு ப்ளேஸ்ல ஜஸ்ட் ரிலாக்ஸா டூ த் ரீ டேய்ஸ் வந்து இருக்கலாம். பட் நிரந்தரமா இருக்க என்னோட நேச்சர் ஒத்துக்காது அக்னி…” என லேசாய் கண்ணீர் கோர்க்க சொல்லியவள்,
“ப்ரப்போஸ் பண்ணின அன்னைக்கே பிரேக்கப் சொல்ல வச்சிட்ட. என்னை குழப்பிட்ட. என்னையே உன்னை வேண்டாம்னு சொல்ல வச்சுட்ட. நீ மனுஷனே இல்லை…” என அவள் குற்றம் சாட்டவும் சிரித்தவன்,
“இது லவ்வே இல்லைன்னும் போது பிரேக்கப் எங்க வந்துச்சு? லெட்ஸ் கோ…”
“ஆனாலும் உன்னை ரொம்ப புடிக்குதே?…” என்றாள் கோபமாய்.
“இப்பவும் உனக்கு நான் ப்ரெண்ட் தான். ப்ரெண்டை பிடிக்காம இருப்பாங்களா?…” என்று அவளை சமாதானம் செய்ய பேச அவளும் கடைசியில் அப்படித்தானோ என எண்ணம் பிறக்க அதுவும் வலுவாய் இருக்க,
“ஜஸ்ட் க்ரஷ் தான் போல. ஹ்ம்ம்…” என சொல்லிக்கொண்டவள்,
“தட்ஸ் மை பாய். ஆனாலும் நீ கன்ஸிடர் பண்ண பாரேன் அக்னி…” என்றாள் கடைசியாக. அவனின் முறைப்பில்,
“புரியுது, நான் உன்னை போர்ஸ் பண்ண மாட்டேன். எப்பவும்…” என்று வேகமாய் எழுந்து நின்றவள்,
“இனி உன்கிட்ட பேசறதும் ஒண்ணுதான். அந்த சுவத்துக்கிட்ட பேசறதும் ஒண்ணுதான்…” என்று சொல்லி செல்ல அதை இப்பொழுது நினைக்கும் பொழுதே சிரிப்பு பொங்கியது அஞ்சலிக்கு.
“இவனை கட்டிக்க போறவ ரொம்ப பாவம்…” என நினைத்தவளாக அவனுக்கு மீண்டும் அழைக்க அவனோ மெசேஜ் அனுப்பினான்.