கவிதை – 10
தங்கதுரை குடும்பத்துடன் வந்ததும் ஆர்ப்பாட்டமாய் வரவேற்றனர் பன்னீர்செல்வம் குடும்பத்தினர்.
“வாங்க சம்பந்தி வாங்க வாங்க…” என இரு கரம் கூப்பி பன்னீர்செல்வம் அழைக்கவும் தங்கதுரைக்கு கூச்சமாய் இருந்தது.
“வணக்கம்ங்க…” என பொதுவாய் அனைவருக்கும் வணக்கம் சொல்ல சந்திரிகாவும் சுபாவும் கனகாவை பார்த்து பேசினார்கள்.
சாதனா வந்து ராகாவுடன் நின்றுகொண்டு வினயை வாங்கிக்கொள்ள அதற்குள் கீர்த்தனாவுடன் வந்து சேர்ந்தான் அக்னிசெல்வன்.
“வாங்க வாங்க…” என அனைவரையும் துள்ளலுடன் வரவேற்றாள் கீர்த்தனா. குடும்பத்தை பார்த்ததும் அத்தனை பூரிப்பும் சந்தோஷமும்.
“வாங்க மாமா…” என்றதும் ஸ்ரீநிவாஸ் ஒரு தலையசைப்பு தான் அவளுக்கு தந்தான். பின் அமைதியாக நின்றுகொண்டான். அக்னியை பார்த்ததும் தங்கதுரை,
“வணக்கம் மாப்பிள்ளை…” என்றவரின் அருகில் அமர்ந்தவன்,
“சாப்பிடலாம் மாமா…” என,
“இல்லை வரப்போவே சாப்பிட்டு தான் வந்தோம்…” என தன்மையாக மறுத்துவிட்டார்.
கோவிலுக்கு கிளம்புவதை பற்றிய விஷயங்களை பேசிக்கொண்டிருக்க ஸ்ரீநிவாஸ் தான் அங்கே ஒட்டாததை போல நின்றுகொண்டு இருந்தான்.
“ஸ்ரீநி உட்காருப்பா…” என அடைக்கலம் சொல்ல ஏனோ அமர தோன்றவில்லை.
“இருக்கட்டும் ஸார்…” என்று சொல்லிவிட்டான்.
ராகா அவனை பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் இருக்க கீர்த்தனா கனகாவிடமும், ராகாவிடமும் கவனத்தை வைத்திருக்க சாதனா குழந்தையுடன் விளையாண்டபடி அவர்களிடம் கலகலக்க ஆகமொத்தம் அவனை கவனிப்பார் யாருமில்லை.
“ஸ்ரீநிவாஸ் உள்ள வாங்க…” என சுரேன் அவனை அழைத்து அலுவலக அறைக்குள் சென்றவன் தொழில்நிமித்தம் பேச்சை துவங்க சுத்தமாய் நொந்துபோனான்.
“என்னம்மா கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கலாம் தானே? வினய்க்குட்டி தேடுனானா என்னை?. ஏன் டல்லா இருக்கான்? அப்பா நேத்து நைட் டேப்லட் போட்டாரா? கரெக்ட்டா எடுத்து குடுத்த தானே?..” என கீர்த்தனா ஓயாது பேச சந்த்ரிகா அவளை பார்த்தபடி இருந்தார்.
மனதிற்குள் சிறு எண்ணம், ‘இவள் சுரேன் பேசியதை பற்றி வீட்டில் சொல்வாளா?’ என்று.
ஆனால் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை போல மலர்ந்த முகத்துடன் கலகலவென்று அவள் பேசிக்கொண்டு இருக்க சற்று நிம்மதியானார்.
இனி விளையாட்டு என்று நோகடிக்கும் படி எந்த வார்த்தையும் வந்துவிடக்கூடாது இப்பெண்ணிற்கு என்று நினைத்துக்கொண்டார். நினைக்கமட்டும் தான் முடிந்தது.
தங்கதுரை பேச்சில் இருந்தாலும் எதையோ சொல்ல தயங்கி தயங்கி அமைந்திருப்பதை புரிந்துக்கொண்ட அக்னி,
“என்ன சொல்லணும்னாலும் சொல்லுங்க மாமா, ஏன் இப்படி யோசிக்கறீங்க?…” என கேட்க பன்னீர் செல்வத்தையும், மற்றவர்களையும் சுற்றிலும் பார்த்தவர்,
“இல்லை இதை சொன்னா எப்படி எடுத்துப்பீங்கன்னு தான்…” என இன்னும் யோசிக்க,
“பரவாயில்லை சொல்லுங்க…” என அவரின் கையை பிடிக்க,
“இல்லை மாப்பிள்ளை பொண்ணை மறுவீட்டுக்கு அழைக்கனும். அதான் உங்களுக்கு எப்ப தோதுப்படும்னு கேட்கலாமேன்னு. உங்களுக்கு ஒத்துவரலைன்னா ஒன்னும் பிரச்சனை இல்லை…” என்று தயங்கி சொல்லியவர் பதட்டத்தை கீர்த்தனா அசையாமல் பார்த்தாள்.
எல்லோர் வீட்டிலும் நடக்கும் சம்பிரதாயம். இதை கேட்கவே இத்தனை யோசனை. வருத்தத்துடன் அதனை பார்த்தவள் புகுந்த வீட்டில் சம்மதிப்பார்களா என யோசித்து அமர்ந்திருக்க,
“அதுக்கென்ன? எத்தனை நாள் தங்கனும்?…” என அக்னி கேட்டதும் நம்பமுடியாமல் பார்த்தார் தங்கதுரை.
அக்னியின் பேச்சு அவனின் குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஆச்சர்யத்தை தரவில்லை. அவன் என்று கீர்த்தனாவின் வீட்டில் மாடி வீட்டை எடுத்து கட்டும் பொழுதே புரிந்துகொண்டார்கள்.
அதனால் வேறு வித யோசனைகள் எதுவும் இன்றி புன்னகையுடனே அதனை ஆமோதிக்க,
“நிஜமா தான் சொல்றீங்களா?…” என இன்னமும் தங்கதுரை நம்பமாட்டாமல் கேட்க,
“இதுல நிஜம் என்ன? பொய் என்ன? உண்மையா தான் சொல்றேன்….” என்றவன்,
“நீங்க சொல்லுங்கப்பா…” என பன்னீர்செல்வத்தை காண்பிக்க,
“ஆமா சம்பந்தி எத்தனை நாள் தங்கனும்? நம்மள்ள மூணு நாள், ஐஞ்சு நாள், இல்லை ஒரு வாரம் தங்குவாங்க. உங்களுக்கு எது திருப்தியா இருக்கும்?…” என்று அவரிடமே கேட்க அந்த பெருந்தன்மையில் மனம் குளிர்ந்து போனார் அவர்.
“ரொம்ப சந்தோஷம்ங்க, மாப்பிள்ளை வசதிப்படி எப்படியோ அப்படியே இருக்கட்டும்…” என்றவர் மகளை பார்க்க கீர்த்தனாவிற்கு அத்தனை சந்தோஷம்.
ராகாவின் திருமணத்தில் ஒரு நிம்மதி இல்லை தகப்பனுக்கு. இது நொட்டை அது சொட்டை, இதை எல்லாம் என்னால் சகிக்க முடியாது என எந்நேரமும் நெருப்பில் நிற்க வைத்ததை போல ஸ்ரீநிவாஸ் காட்டிய மாப்பிள்ளைமுருக்கு சொல்லி மாளாதது.
இந்த ஒரு அமைதியும், நிம்மதியும் அக்காவின் திருமணத்தில் அவருக்கு துளியும் கிடைக்கவில்லை என நினைத்தவள் ராகாவை பார்க்க அவளும் தந்தையைதான் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
“என்னைக்கு அழைக்க வருவீங்க?…” என அடைக்கலம் கேட்க,
“நாளைக்கு வந்து அழைச்சுக்கறோம், சரிதானே?…” என அனைவரிடமும் பொதுவாய் அவர் கேட்க,
“தாராளமா. இப்ப ஏதாவது சாப்பிடுங்க…” என்ற சந்திரிகா அவர்களை கவனிக்க டீ, ஸ்நாக்ஸ் முடிக்கும் வரை ஸ்ரீநிவாஸ் அங்கே வரவே இல்லை. சுரேனிடம் மாட்டிக்கொண்டு இருந்தான்.
பேசி முடித்து அனைவருமாக ஒரே சேர கோவிலுக்கு செல்ல கிளம்ப சுரேனை தேட அப்பொழுதுதான் ஸ்ரீநிவாஸ் அவனுடன் சென்றதே ஞாபகம் வந்தது.
“கிளம்பலாம்ப்பா சுரேன்…” என அடைக்கலம் அழைக்க,
“அப்பா நானும் ஸ்ரீநியும் சேர்ந்து வரோம். நீங்க முன்னாடி போங்க…” என அவரிடம் சொல்லியவன்,
“ஸ்ரீநிவாஸ் ஓகே தானே?…” என கேட்டவிதமே சரி என சொல் என்பதாக இருக்க தலையை அசைத்தான்.
கோவிலுக்கு சென்றதும் அங்கே பூஜைக்கு தயாராக அனைத்தும் இருக்க போனதும் கீர்த்தனா கையால் பொங்கல் வைத்து இறக்கி பூஜைக்கு தூக்கி சென்று வைத்தனர்.
அங்கே முதல் மரியாதை கொடுக்கப்பட்டு கீர்த்தனாவும் அக்னியுடன் சேர்ந்து அந்த மரியாதையை பெற்றுக்கொண்டாள்.
கோவிலுக்குள் நுழைந்ததும் ஸ்ரீநிவாஸ் பார்த்த காட்சி இதுவே. ‘வாழ்வை பாரேன்’ என மனது எக்காளமிட்டது எரிச்சலில். அவனுக்கு கோபம் அவனின் பெற்றோரை இதற்கு அழைக்கவில்லை என்று.
விருந்திற்கு கூட தங்கதுரை தான் நேரில் சென்று அழைத்தார் அவர்களை. அடைக்கலம் ஸ்ரீநிவாஸிடம் சொல்லி அவனின் போனிலேயே அழைப்புவிடுத்து வந்துவிடுமாரு சொல்லியிருக்க கடுப்பிலும் கடுப்பு அவனுக்கு.
பூஜை முடிந்ததும் அனைவருக்கும் இலையில் பொங்கல் வைத்து தந்தவள் கடைசியாக ஸ்ரீநிவாஸ் தனியாக நிற்குமிடம் வந்து அவனுக்கும் நீட்டி,
“இங்க தனியா வந்து நின்னுட்டீங்களே மாமா. அங்க எல்லோரோட சேர்ந்து வந்து உட்காருங்க…” என சொல்ல அதை வாங்கியவன்,
“என்ன நக்கலா? அந்த வீட்டுக்கு வந்தப்போ உட்கார சொல்லலை. என்னை கவனிக்கலை. இப்ப இங்க வந்து நான் நின்னது உனக்கு பெருசா போச்சாக்கும்?…”
“இல்லை மாமா, நான் சொன்னேன். நீங்க தான் அடைக்கலம் மாமாட்ட வேண்டாம்னு சொன்னேங்க…” என்றாள் பொறுமையாய்.
“ஆனா உன் புருஷன் சொல்லலையே. ஞாபகம் வச்சுக்கோ, இப்பவும் உன் வீட்டோட மூத்த மாப்பிள்ளை நான் தான். உன் அக்கா புருஷனும். மறந்து போய்டுச்சோ பெரிய இடத்துல போய் உட்காரவும்…”
“நான் எதையும் மறக்கலை…” என்றாள் இறுக்கத்துடன்.
“பார்த்தா அப்படி தெரியலையே. நடந்துக்கறதும் அப்படி இல்லை…” பார்க்க சாதாரணம் போல பேசினாலும் வார்த்தைகளில் அப்பட்டமான மிரட்டல் தொனி தான்.
“எல்லாம் பார்க்கிறதை பொறுத்து. மனசை பொறுத்து…” என்றவளின் பேச்சில் முறைத்தவன்,
“கீர்த்தி இப்பலாம் நான் உன் மாமான்ற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு…” என்று சொல்ல,
“உங்களுக்கான மரியாதையை நாங்க குடுக்கத்தான் செய்யறோம். அதுதான் மரியாதைன்னு உங்களுக்கு தான் தெரியாம போச்சு மாமா…” என கீர்த்தனாவும் இப்பொழுது அவனை குத்தலாக பேச,
“கீர்த்தி…” என்று அடக்கப்பட்ட குரலில் அவன் சீற,
“என்ன ஸ்ரீநிவாஸ் எதோ மரியாதை பத்தி பேசற மாதிரி இருக்கே?…” என வந்து சேர்ந்தான் அக்னி.
அவன் வரவுமே ஸ்ரீநிவாஸ் உடல்மொழியே மாற்றம் பெற்று பவ்யமாய் உடனே முகத்தை மாற்றிகொண்டவனின் பச்சோந்தித்தனத்தை வெறுமையுடன் பார்த்தாள் கீர்த்தனா.
“நீ போ கீர்த்தனா. அம்மா கூப்பிட்டாங்க…” என அவளை அனுப்பியவன்,
“மரியாதை பத்தி பேசிட்டிருந்தீங்க ஸ்ரீநிவாஸ், அதான் யாருக்கு குடுக்கனும்? எவ்வளவுன்னு சொன்னா குடுக்க மறந்திருந்தா குடுத்திடலாம் பாருங்க…” என அவன் கேட்டு நின்ற விதமே ஸ்ரீநிவாஸ்க்கு தூக்கி போட்டது.
‘இவன் என்ன அடிக்க நிக்கிற மாதிரி மரியாதை வேணுமான்னு நிக்கறான்’ என நினைத்தவன்,
“இல்லை ஸார், தங்கதுரை மாமா பேமிலியை நீங்க எல்லாரும் ரொம்ப நல்லபடியா மரியாதையோட நடத்தறீங்கன்னு கீர்த்திட்ட சொல்லிட்டு இருந்தேன்…” என அசடு வழிய சொல்ல,
“ஓஹ் அதுவா என் மாமனாரை நான் கவனிக்கலைன்னா எப்படி?…” என நக்கலாக சொல்ல,
“சரிதான் சரிதான். ஆமா ஆமா…” என தலையை ஆட்டிக்கொண்டே நின்றான்.
“நீங்க எப்படி? இதெல்லாம் உங்களுக்கு புதுசா? நீங்களும் இப்படித்தானே கவனிச்சிருந்து இருப்பீங்க?…” என கேட்க,
“ஆங் என்னது?…” என அவன் திகைக்க,
“இல்லை ஏதாவது குறைன்னா சொல்லுங்க. டிப்ஸ் மாதிரி…” என்று அவன் கேட்க அக்னியின் முகத்தை ஊன்றி பார்த்தான் ஸ்ரீநிவாஸ்.
“நான் விளையாடலை. சீரியஸா கேட்கறேன்…” என அக்னி அதற்கும் பதில் தர,
“ஐயோ நான் அப்படி எல்லாம் சொல்லலை? உங்களுக்கு டிப்ஸ்ன்னு சொன்னீங்களா? அதான்…”
“உங்கள்ட்ட கேட்காம எப்படி ஸ்ரீநிவாஸ்? நீங்க தான் அந்த வீட்டு மூத்த மாப்பிள்ளை ஆச்சே…” என்றவனின் வார்த்தையில் ‘மூத்த’ என்ற வார்த்தை அதிக அழுத்தத்திற்குள்ளாக,
“ஆமா, ஆமா மூத்த மாப்பிள்ளை…” என உளறியவன்,
“என்ன கேட்டீங்க ஸார்?…” என்று கேட்க,
“அதுக்குள்ளே மறந்தா எப்படி ஸ்ரீநிவாஸ்? நீங்க நல்ல ஞாபகசக்தி உள்ளவராச்சே. உங்க திறமை தான் நம்ம பேக்டரில எல்லாருக்கும் தெரியுமே?…” என விடாமல் அவனை துரத்த,
‘ஐயோ என்ன இவன் விருந்துக்கு கிளம்பாம என்னை கூறு போடறான்? நான் என்ன பதில் சொல்லுவேன்?’ என்று திருதிருவென முழிக்க,
“நல்லாவே கவனிச்சோம் ஸார். மாமாவையே கேட்கலாம்…” என அவன் சொல்ல,
“நீங்க சொல்லி மாட்டேன்னு சொல்லுவேனா? இதோ கூப்பிடுவோம்…” என தங்கதுரையை அழைக்க திரும்பிவிட,
“ஐயோ எதுக்கு ஸார்? இருக்கட்டும் இருக்கட்டும். பின்னால பார்த்துக்கலாம். இப்ப எவ்வளவு வேலை இருக்கு. மண்டபத்துல எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க…” என்று அவனை திசைதிருப்ப,
“ஓஹ் அப்படி சொல்றீங்களா? ஓகே ஓகே. கிளம்புவோம்…” என்றவன் மீண்டும் நின்று,
“ஒன்னு சொல்ல மறந்துட்டேன் பாருங்க…” என்றவனின் பார்வையில்,
‘இன்னும் என்னடா இருக்கு?’ என பாவமாய் அவன் நிற்க,
“இதுக்குத்தான் ஸ்ரீநிவாஸ் வேணும்ன்றது. கரெக்ட்டான நேரத்துல ஞாபகப்படுத்தறதுக்கு சரியான ஆள் நீங்க தான். நீங்க என்னோட பி.ஏன்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க…” என்று சொல்லிவிட்டு செல்ல,
“இதை கொஞ்சம் சிரிச்சிக்கிட்டு சொன்னா என்னவாம்? இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. நூறுவாட்டி ஸார் போடறேன். அதெல்லாம் வேண்டாம். பேர் சொல்லி கூப்பிடுன்னு சொல்ல மனசு வருதா பாரேன். எல்லாம் திமிர் திமிர்…” என்று வாய்விட்டு முணங்க,
“யாருக்கு திமிர் ஸ்ரீநி?…” என வந்து நின்றார் அடைக்கலம்.
‘அய்யோ இவரா? முழுசா கேட்டிருப்பாரோ?’ என மனம் அலற மயக்கம் வரும் போல் ஆனது அவனுக்கு.
“ஸ்ரீநி…” என அவனை மீண்டும் அழைக்க,
“தண்ணி குடுச்சுட்டு வரட்டுமா ஸார்?…” என்றான் அவரிடத்தில். அதற்கு கோவிலே அதிரும் படி வெடித்து சிரித்தவர்,
“சரி சரி போ…” என அவனை அனுப்பிவிட்டு திரும்ப ராகாவோடு சாதனா பேசியபடி அமர்ந்திருந்தது தெரிந்தது.
“என்னம்மா பொண்ணுங்களா இன்னும் பேசி தீரலையா?…” என்று அவர் வரவும் அமர்ந்திருந்த திண்டிலிருந்து இறங்கி கீழே நின்றவர்கள்,
“என்ன சொன்னாரு மூத்த மாப்பிள்ளை?…” என்றாள் சாதனா.
“தண்ணி தவிக்குதாம். அக்னி என்ன சொன்னான்னு தெரியலை. ஓடிட்டான்…” என அடைக்கலம் சொன்னவர்,
“ராகாம்மா, எல்லாம் சரியாகிடும். எதுக்கு முகத்தை வாட்டமா வச்சிட்டு இருக்க? நாங்கலாம் இல்லையா?…” என ஆதுரமாக சொல்ல லேசாய் கலங்கிய கண்களை துடைத்துக்கொண்டவள்,
“புரியுது மாமா, ஆனாலும் சில நேரம் தாங்க முடியலை…” என்றவள் அன்று காலை நடந்ததை மேலோட்டமாக சொல்ல,
“நான் ஒன்னு சொன்னா கேட்பியா?…”
“சொல்லுங்க மாமா…”
“வினய் வளர்ந்துட்டே வரான். ஸ்கூல்ல சேர்த்துட்டு நீ ஒரு வேலை பாரேன். நம்ம பேக்டரி வேண்டாம்னு நினைச்சா நானே வேற ரெகமன்ட் பன்றேன். இப்படியே எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சுக்காத…” என சொல்ல,
“ஹ்ம்ம்…” என பொதுவாய் தலையசைக்க,
“என்ன ஹ்ம்ம், பெத்த அப்பாட்ட தான் சொல்ல முடியாது. இந்தப்பாட்ட சொல்லலாம். தூளில போட்டு ஆட்டிறமாட்டேன்…” என சிரித்தவர்,
“என்னடாம்மா சாதனா?…” என மருமகளை பார்க்க,
“கரெக்ட்ப்பா…” என்றாள் அவளும்.
“சரி சரி ரொம்ப நேரம் நின்னுட்டு இருக்கோம். ஸ்ரீநி பையன் வேற வந்தா என்னனு கேட்பான். ஓடுங்க ஓடுங்க. மண்டபத்துக்கு கிளம்புவோம்…” என அவர்களை கலைத்தவர் ஒன்றும் அறியாததை போல,
‘ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்’ என்ற பாட்டை வாய்க்குள் முணங்கியபடி நடந்து சென்றார்.
மண்டபத்திற்கு சென்றதும் அனைவரையும் கவனிக்க அவர்களை சாப்பிட வைத்து அனுப்ப என்று நேரம் சென்றது.
இருவீட்டார் சார்பில் கொடுக்கப்படும் விருந்து ஆகையால் இரண்டுபக்க சொந்தங்களும் வருகை தந்திருக்க கவனிப்பும் இருமடங்காக இருந்தது.
வந்தவர்களின் மனதும் வயிறும் நிறைந்துவிட மனதார மணமக்களை ஆசிர்வதித்து சென்றார்கள் உற்றார், உறவினர்கள், ஊரார், நண்பர்கள் என. ஆகமொத்தம் மொத்த கூட்டமும் கலைந்து வீட்டாட்கள் மட்டும் எஞ்சி இருக்க பெரியவர்கள் சாப்பிட்டு முடித்தனர் முதலில்.
அதிலும் தங்கதுரை மாத்திரை போடவேண்டியவர் என்பதால் பன்னீர்செல்வம் அவருடன் சேர்ந்து சரியான நேரத்திற்கு உண்டுவிட ஒவ்வொன்றையும் மனதிற்குள் பார்த்து பார்த்து மகிழ்ந்தாள் கீர்த்தனா.
‘மனிதரை மதிக்கும் மேன்மக்கள்’ அவளிதழ்கள் பெருமிதமாக சொல்லிக்கொண்டது தனது புகுந்தவீட்டினரை.
நேரம் செல்ல செல்ல ஸ்ரீநிவாஸ்க்கு பசியில் காதடைக்க சாப்பிட அமர்ந்தான். அவனோடு சேர்ந்து ராகாவும் வந்து அமர,
“நானே உன்னை கூப்பிடனும்னு இருந்தேன். வந்துட்ட…” என சிரித்தவன்,
“என்னா கூட்டம்…” என சொல்லிக்கொண்டு அமர அக்னி வந்துவிட்டான் கீர்த்தனாவுடன்.
“உட்கார் சாப்பிடலாம்…” என வம்படியாக அவளை அமர சொல்ல,
“ம்ஹூம், நான் அப்பறமா சாப்பிடறேன். ப்ளீஸ் பசிக்கலை. நீங்க சாப்பிடுங்க…” என சொல்ல,
“என்ன விளையாடுறியா? டைம் என்னனு பார்த்தல்ல. ரொம்ப டயர்டா வேற இருக்க. சாப்பிடலாம்…” என்று அவளை அமர சொல்ல,
“இந்த நேரம் பார்த்தா எதிர்க்க இவர் வந்து உட்காரனும்…” என்றான் ராகாவிடம்,
“இப்ப என்ன? எந்திச்சு போகனுமா?…” என்றவள் அவளின் இலையில் வைக்கப்பட்டிருந்தவற்றை சாப்பிட ஆரம்பிக்க,
“நீங்க இப்பதான் சாப்பிடறீங்களா?…” என ராகாவை பார்த்து அக்னி கேட்க,
“ஆமாங்க, இப்பதான்…” என்று அவளும் சிரித்தாள்.
“என்னை கேட்கவே இல்லை?…” என்றான் ராகாவிடம் ஸ்ரீநி.
“நான் கேட்டு வரவா?…” என்றவள் அவன் புறம் திரும்பாமல் பேச,