“என்ன ராகா இப்படி பேசற? உன்னை என்னலாம் நினைச்சிருந்தேன் தெரியுமா?…” என்று அவளை கவிழ்க்க பார்த்தான். மீண்டும் பழையபடி ராகாவை மாற்ற பார்த்தான்.
“பேசாம சாப்பிடுங்க, இல்லைன்னா நான் என் தங்கச்சி பக்கத்துல போய் உட்கார்ந்துப்பேன்…” என்றதும் வாயை மூடிகொண்டான்.
இங்க கீர்த்தனா சாப்பாடு வேண்டாம் என மறுக்க அக்னி அவளை தன்னுடன் சாப்பிட சொல்ல,
“அம்மாவை வர சொல்லுங்க, அவங்களோட அப்பறமா சாப்பிடறேன்…”
“இவளோட, அம்மா அம்மான்னு படுத்தாத…” என பல்லை கடித்தவன்,
“என்னதான்டி உன் பிரச்சனை? என்னோட சாப்பிடறதால என்ன பிரச்சனை?…” என இப்பொழுது கோபமாக கேட்டுவிட அவன் கேட்டதும் கீர்த்தனா வாய் பொத்தி சிரித்துவிட்டாள்.
அவளின் சிரிப்பு எதனால் என்று புரிந்தவன் இடுப்பில் கை வைத்து முறைப்புடன் பார்த்தவனின் இதழ்களிலுமே புன்னகை.
“சிரிச்சு டைவர்ட் பன்ற. அந்த பிரச்சனையை நைட் பார்ப்போம். இது வேற பிரச்சனை. எந்த பிரச்சனைக்கு என்ன அர்த்தம் எடுக்கனும்னு முதல்ல உனக்கு கத்து தரனும்…” என ரகசியமாய் சொல்ல,
“ஐயோ…” என முகம் மூடியவள் பின்,
“சாப்பாடு சூடா இருக்கும்…”
“ஆமா, சாப்பாடுனா சூடா தான் இருக்கும். அதுக்கென்ன?…” என கேட்டபடி அவளை அமர செய்து இலையை விரித்து தண்ணீர் தெளித்தபடி பேச,
“அதோட சாப்பிட்டா கை எரியும்…” என சொல்லவும் முதலில் புரியாமல் பார்த்தவன் சட்டென அவளின் கையை பிடித்து விரித்து பார்க்க லேசான கொப்பளங்களுடன் சிவந்து தடித்து போய் இருந்தது இரு கையின் மொத்த விரல்களும்.
“என்ன கீர்த்தனா?…” என பதறி கேட்க,
“காலையில பொங்க வைக்கறப்போ பானை லேசா சாயற மாதிரி தெரிஞ்சது. கொட்டிடுமேன்னு சட்டுன்னு தூக்கி வச்சுட்டேன். யாருக்கும் தெரிஞ்ச சகுன தடைன்னு ஏதாவது பேச்சு வருமோன்னு தான் சொல்லலை. எல்லாருக்கும் மனசு கஷ்டமாகிடும்ல…” என சொல்ல,
“அறிவிருக்கா உனக்கு? அதை இவ்வளவு நேரம் சொல்லாம இப்படியே விட்டிருக்க…” என்று திட்ட,
“அய்யோ சத்தமா பேசாதீங்க, அக்காவுக்கு கேட்டா அம்மாட்ட சொல்லிடுவா. நானே மெதுவா அவங்கட்ட சொல்றேன்…” என்று அவனை அடக்க,
“உன்னை என்ன செய்யலாம்…” என அவளின் காதை பிடித்து திருக அவனின் அன்பில் சிரித்தவள்,
“அப்ப சொல்லிருந்தா எல்லாரும் இதை நினைச்சு கஷ்டப்படுவாங்க. அதையே நினைச்சுட்டு இருப்பாங்க. அதான் சொல்லலை…” என்றவள்,
“நீங்க சாப்பிடுங்க கூட உட்கார்ந்திருக்கேன். நான் அப்பறமா சாப்பிடறேன்…” என்று அவள் சொல்ல அவளை முறைத்தவன்,
“சுரேன்…” என்றதும் வந்தான்.
“சொல்லு அக்னி…” என கேட்டு கீர்த்தனாவை பார்க்க பார்வை அவளின் விரித்து வைத்திருந்த கையில் படிந்தது.
“அய்யோ என்னடா இது? என்னாச்சு இவங்க கைக்கு?…” என கேட்டவன்,
“ப்ச், அண்ணி கைக்கு?…” என திருத்தமாய் சொல்ல அதை கேட்ட ஸ்ரீநி வாயில் வைத்திருந்த முட்டை நழுவ பார்த்தது.
“அண்ணியா? அப்ப நான் யாராம்? நான் அண்ணனாகுதுல…” என ராகாவிடம் பொறுக்கமாட்டாமல் பல்லை கடித்தான்.
“ப்ச்…” என உச்சுக்கொட்டி அவள் சாப்பிட,
“பதறாத. எல்லாரும் போயாச்சா?…” என்றவனுக்கு பதில் தராமல் கீர்த்தனாவை பார்த்தவன்,
“ஹாஸ்பிட்டல் போகலாமா? வலிக்கும் தானே?…” என்றான் அவன்.
“இல்லை, பரவாயில்லை. கஷ்டமில்லை….” என அவள் பட்டுபடாமல் சொல்ல,
“சுரேன், எல்லாரும் சாப்பிட்டாச்சா? வேற யாரும் வராங்களா?…” என,
“யாரும் இல்லை. நம்ம தான். ஏன் கேட்கற?…” என,
“சரி சித்தப்பாட்ட டைனிங் ஹால்க்கு யாராவது வராங்களான்னு கவனிக்க சொல்லு. வந்தா கால் பண்ண சொல்லு…”
“எதுக்கு இதெல்லாம்?…”
“என் பொண்டாட்டிக்கு ஊட்டிவிடனும். போதுமா? போ…” என சொல்ல சிரிப்பை அடக்கியபடி பார்த்த சுரேன்,
“நீயாடா? வேற லெவல் பன்றடா அக்னி…” என சொல்லிவிட்டு செல்ல,
“டேய், யார் பரிமாறுவா? போன்னா அப்படியே போற?…” என்று அவனை அழைக்க,
“சும்மா இருங்கங்க…” என்றாள் கீர்த்தனா தலையை குனிந்தபடி.
“நாம இருக்கறதையே மறந்துட்டார் பாரேன்…” என ஸ்ரீநிவாஸ் ராகாவிடம் திரும்ப அவள் சாப்பிட்டு முடித்திருந்தாள்.
“என்ன எழுந்துட்டீங்க, உட்காருங்க…” என அவளிடம் அக்னி சொல்லவும்,
“இல்லை முடிச்சுட்டேன். உங்களுக்கு பரிமாறலாமேன்னு தான்…” என ராகா சொல்ல,
“அக்கா நீ சாப்பிடுக்கா, நான் வைக்கறேன்…” என்று கீர்த்தனா எழுந்துகொள்ள,
“என்ன இங்க சத்தம்? என்ன இங்க சத்தம்?…” என்றபடி சாதனா வந்துவிட,
“உன் வேலையா…” என்றான் அக்னி சுரேனை பார்த்து.
“எல்லாரும் இங்க இருக்கோம். அவ மட்டும் தனியா இருப்பா இல்ல…” என தன் போனை காண்பித்து சொல்லி அவளுக்கு விஷயத்தை சொல்ல கீர்த்தனாவை பார்த்து முறைத்தாள். அதற்குள் சுரேன் சற்று தள்ளி போய் அங்கு நடப்பவற்றை வீடியோ எடுக்க ஆரம்பித்தான்.
“உங்களுக்கு பரிமாறனும் அவ்வளவு தானே? நான் எதுக்கு இருக்கேன். உங்க கல்யாணத்துக்கு காரணமான நான் ஊட்டிவிடறதுக்கும் காரணமா இருந்துட்டு போறேன்…” என்று சாதனா கண்சிமிட்டி சொல்ல,
“டவுட் இருந்துச்சு. இப்ப கிளியர் ஆகிடுச்சு…” என்றான் அக்னி.
“என்ன பேசறேங்க ரெண்டு பேரும்?…” என கீர்த்தனா புரியாமல் பார்க்க,
“நீ வாயை திற…” என்றவன் அவளுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் ஊட்ட ஆரம்பித்தான்.
“ராகா பார்த்தியா, இவரு வெளிலதான் புலி. வீட்டுக்குள்ள பாரேன்…” என சொல்ல,
“நீங்க வீட்டுக்குள்ள தான் புலி…” என சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட,
“என்ன போற?…” என சத்தமில்லாமல் கேட்டவன் அக்னியை பார்க்க அவனும் அதே நேரம் ஸ்ரீநியை பார்க்க பார்த்தவன் ஸ்ரீநியிடம் புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்டுவைத்தான்.
“ஒண்ணுமில்லை ஸார்…” என வேகமாய் வழக்கம் போல எழுந்து நின்று அவள் சத்தமாய் சொல்ல,
“நீங்க இன்னும் ஆபீஸ் மோட்ல இருந்து மாறவே இல்லையா?…” என்று சிரித்தாள் சாதனா.
“சனா, நீ அங்க பார்த்து பரிமாறு…” என்ற சுரேன் ஸ்ரீநியை பார்க்க,
‘இந்தா போய்ட்டேன்’ என எழுந்து கை கழுவ சென்றான்.
“என்னடா?…” என அக்னி கேட்க,
“சும்மா பார்த்தா கூட ஓடுறார், நான் என்ன பண்ண?…” என்றான் அவன் ஒரு தோள் குலுக்கலுடன்.
ராகாவும் பரிமாற வந்துவிட பேசியபடி உண்டு முடித்து வெளியே வந்தார்கள் அவர்கள்.
அதன் பின்னர் தான் கீர்த்தனாவின் கையில் காயம் இருப்பதே அவர்களுக்கு தெரிந்தது.
ஆளாளுக்கு ஏன் சொல்லவில்லை என்று கேட்க கனகாவின் மனதில் கலக்கம் உண்டாகியது.
கோவிலில் வைத்து இப்படி நடந்ததை நினைத்து என்னன்னவோ யோசிக்க,
“கீர்த்தி அம்மா, எதுக்கு இப்படி பயப்படறீங்க? பெருசா இல்லாம சின்ன காயத்தோட போச்சுன்னு நினைச்சுக்கோங்க. இதெல்லாம் ஒரு திருஷ்டி மாதிரி. கழிஞ்சு போய்டுச்சு. நைட் ஒரு திருஷ்டி எடுத்திருவோம்…” என சந்திரிகா சொல்லவும் கொஞ்சம் மனது சமாதானம் அடைந்தது.
திருஷ்டி என்றதுமே ராகாவிலிருந்து, சுரேன், சாதனா, அக்னி, அடைக்கலம் என அனைவரும் ஸ்ரீநிவாஸ் பக்கம் பார்க்க,
‘விட்டா நான் தான் முட்டை மந்திரிச்சுவச்சேன்னு சொல்லுவாங்க போல. மதிக்காம ஆடினா அதான் வச்சான் கடவுளாவே’ என்று இவனாக திருப்தியாக நினைத்து கொண்டான்.
“என்னமோ சொன்னீங்களே ஸ்ரீநிவாஸ்?…” என்றான் அக்னி.
‘இவன் வேற, மனசுக்குள்ள கூட ஒன்னும் நினைக்க முடியாம’ என அலுத்துக்கொண்டவன்,
“இல்லை வீட்டுக்கு கிளம்புவோம்ன்னு தான்…”
“ஹ்ம்ம் ஓகே…” என்றவன் கீர்த்தனாவை பார்க்க அவள் கனகாவிற்கு சமாதானம் சொல்லிக்கொண்டு இருந்தாள்.
அதன்பின் அனைவருமே கிளம்பிவிட கடைசி வரை அக்னி அங்கே மறுவீட்டுக்கு வந்து தங்க இருப்பது ஸ்ரீநிவாஸ்க்கு தெரியாமலே போனது.