“ப்ச், சரி சரி, அதை விடுங்க. அம்மா மதியத்துக்கு என்ன செய்யனும்? சாப்பிட்டாச்சா எல்லாரும்?…” என கேட்டுக்கொண்டே கீழே பாயை விரித்து மகனை அமர வைத்தவள் தானும் அமர்ந்துகொள்ள தங்கதுரை பேரனுடன் விளையாட ஆரம்பித்தார்.
“இன்னும் காலை சாப்பாடே முடியல. நீயும் சாப்பிடு. எல்லாரும் இந்த சாப்பாட்டை முடிச்சா தான் மத்தியானத்துக்கு என்ன செய்யலாம்னு யோசிக்கனும்…” என்ற கனகா,
“மாப்பிள்ளைட்ட கேளு கீர்த்தி, அவருக்கு வேற என்ன பிடிக்கும்னு. அப்பாவை போய் எடுத்துட்டு வர சொல்லுவோம்…” என்றபடி நால்வருக்கும் உணவை கொண்டு வந்து கீழே வைக்க,
“அம்மா, அவர் வெளில போகனும்னு சொல்றார். இப்ப என்னனு கேட்கறதாம்?…”
“சந்தோஷமா போய்ட்டு வாங்க. மத்யானம் என்ன வேணும்னு சொன்னா செஞ்சு வச்சிடறேன்…”
“சரி கேட்டுட்டு சொல்றேன்…” என்றவள் சாப்பிட்டு முடித்து அக்னிக்கு அழைக்க,
“என்ன அதுக்குள்ள போன்?….” என்றான் சிரிப்புடன்.
“மத்யானம் என்ன செய்யனும்னு சொன்னா அம்மா செய்வாங்களாம். உங்ககிட்ட கேட்க சொன்னாங்க…”
“வரும் போது என்ன சொல்லிட்டு வந்தேன். நீ என்ன பேசற? வெளில வரமுடியலைன்னா அங்கயே இருந்துக்கோ…” என்று பட்டென்று சொல்ல,
“ப்ச், நான் இன்னும் முழுசா சொல்லியே முடிக்கலை….” என்றாள் அவனின் படபடப்பில் உண்டான பதட்டத்தில்.
“ஹ்ம்ம்…”
“நாம போய்ட்டு வந்து சாப்பிடுவோமா இல்லையான்னு தெரிஞ்சுக்க தான் கேட்காங்க. அதான் உங்கக்கிட்ட கன்பார்ம் பண்ணிட்டு…” என்றவளின் பேச்சில் உஷ்ணம் குறைந்தவன்,
“நைட் தான் வருவோம். அவங்களுக்கு மட்டும் சமைச்சுக்க சொல்லிடு. இப்ப நான் போனை வைக்கறேன்…” என்று வைத்துவிட்டான்.
அவனுக்கெதிரே நின்றுகொண்டு இருந்த ஸ்ரீநிவாஸ் அவனிடம் சொல்லுவோமா வேண்டாமா என எதையோ யோசித்துக்கொண்டே நிற்க,
“எதாச்சும் சொல்லனுமா ஸ்ரீநிவாஸ்?…” என்றான் பைலை பார்த்துக்கொண்டே.
“ஆமாம் ஸார்…”
“அப்ப என் மூஞ்சியை பார்த்துட்டே நின்னா சொல்ல வந்ததை நானே தெரிஞ்சிக்குவேனா? வாயை திறந்து சொல்லிட்டு வேலையை பாருங்க…” என சொல்ல,
“உங்க கைல மஞ்சளா இருக்குது ஸார்…” என்று சொல்லவும் கையை தூக்கி பார்க்க கையின் மணிக்கட்டில் இருந்து முழங்கை வரை இரு கையிலும் ஆங்காங்கே மஞ்சள் திட்டுக்கள் அச்சுக்களாய் தெரிய அக்னியின் இதழ்களில் புன்னகை.
‘சரியா தேச்சு குளிக்கனும் இனிமே’ என்று நினைத்தவனாக,
“ஓகே இருக்கட்டும்…” என சொல்ல,
“வீட்லயே சொல்லிருப்பேன். கிளம்பின அவசரத்துல மறந்துட்டேன் ஸார்…”
‘நல்ல வேளை சொல்லலை. இவனே பார்த்திருந்தா வீட்ல எல்லாரும் பார்த்திருப்பாங்க தானே’ என நினைத்தவனாக,
“ஓஹ்…” என்றவனின் முகம் இன்னும் ரகசிய கனவுகளில் சஞ்சரிக்க அதை பார்த்த ஸ்ரீநிவாஸ்,
“என்ன ஸார் மஞ்சள்?…” என அவசரப்பட்டு கேட்டு வைக்க,
“ஹ்ம்ம் அம்மனுக்கு வேண்டுதல்…” என்றான் இன்னமும் முகத்தில் உறைந்திருந்த புன்னகையோடு.
‘மனுஷன் வெட்கபடறாரோ? ஐயோ இவர் வெட்கப்பட்டு முன்னப்பின்ன பார்த்தது வேற இல்லை, நிசமா வெட்கமா?’ என அவனை இன்னும் பார்த்துக்கொண்டே இருக்க,
“இன்னும் மஞ்சள் வேற எங்க இருக்குன்னு பார்க்கனுமா ஸ்ரீநிவாஸ்?…” என அக்னி வேகமாய் கேட்க,
‘அதானே பார்த்தேன்? இவராவது சிரிச்சு பேசறாதாவது’ என உள்ளுக்குள் எரிச்சல் பட்டவனாக,
“நோ ஸார்…” என சொல்லி அவனின் அறையை விட்டு வெளியேறினான்.
அக்னியிடம் பேசிவிட்டு போனை அவன் கட் செய்ததும் அதையே பார்த்துக்கொண்டு இருந்த கீர்த்தனா,
“என்ன வேற ஒன்னும் பேசாம வச்சுட்டாங்க? அவ்வளோ தானா?…” என தன் மொபைலை பார்த்துக்கொண்டே பேசியவள்,
“இங்க மட்டும் கொஞ்சறது, இன்னைக்கு வரட்டும் வச்சுக்கறேன்…” என முனங்கி கீழே வந்து விஷயத்தை சொல்லிவிட்டு சிறிது நேரம் அங்கேயே இருந்து அளவளாவி பின் அவன் சொல்லிய நேரத்திற்கு மாடிக்கு சென்று கிளம்பி இருந்தாள். அக்னியும் சொன்ன நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.
“அம்மா, போய்ட்டு கால் பன்றேன் எங்கன்னு. அப்பா வீட்லயே இருங்க. எங்கயும் போகவேண்டாம்…” என சொல்லி கீழே செல்ல காத்திருந்தவனுடன் கிளம்பி சென்றாள்.
“எங்க போறோம்?…” என்று கேட்டவளுக்கு பதில் சொல்லாமல்,
“என் கூட வர அப்படி என்ன உனக்கு கஷ்டம்?…” என கேட்க,
“அப்படி எதுவும் இல்லை. சும்மா தான். நீங்களா எதுவும் நினைக்காதீங்க…”
“அப்படியா?…” என திரும்பி பார்த்தவன் பேச்சை நிறுத்த,
“இப்ப எதுக்கு உங்களுக்கு இவ்வளவு கோபம் வருது? நாலு வருஷம் முன்ன பார்த்த அதே அக்னிசெல்வன்…” என கிண்டலாய் சொல்ல,
“எப்பவும் அதே அக்னி தான். அதுக்கென்ன?…” என்றான் அவனும் மிதப்பாக.
“ரெண்டு நாளா அவர் எங்க போனார்ன்னு தான் தெரியலை…” என விடாமல் வம்பு பேச,
“உனக்கு தெரியலைன்னு சொல்லு…”
“ப்ச், சரி இப்ப எங்க போறோம்? அதை சொல்லுங்க. எங்க போறோம்னே சொல்லாம கூட்டிட்டு போறீங்க?…”
“பார்க்க தானே போற? மூச்…” என்றதும் அதற்கு மேல் கேட்டாலும் எதுவும் சொல்லமாட்டான் என்பதால் கண்ணை மூடிக்கொண்டு உறங்க முற்பட்டாள்.
“பேசிட்டு வருவன்னு பார்த்தா என்ன தூங்கற கீர்த்தி?…”
“எங்க போறோம்னு சொல்லாதவங்க கூட நோ பேச்சு…”
“ஒன்லி ஆக்ஷனா?…” என அவன் சிரிக்க,
“இந்த கிண்டல் தானே வேண்டாம்ன்றது…”
கார் பொள்ளாச்சியை நெருங்கிக்கொண்டு இருந்தது. அதை கண்டுகொண்டவள் அவனிடம் திரும்பி,
“பொள்ளாச்சி போறோமா?…” என கேட்டு சந்தோஷிக்க,
“ஆமா, உன்கிட்ட ரைம்ஸ் கேட்டா சொல்லி தரலை. அதான் ஸ்கூல்ல எப்படி சொல்லி குடுக்கன்னு பார்க்க தான் கூட்டிட்டு போறேன்…” என்றான் சிரிக்காமல்.
“போதும், போதும். நீங்க ரைம்ஸ் சொல்லிக்குடுத்த விதம். ஆளை பாரு…”
“பாருன்னு தான் சொல்றேன். நீ சரியா பார்க்கலை. நான் என்ன பண்ண?…”
“பார்த்தவரைக்கும் போதும்…” என்றவள் மீண்டும் கண் மூடிக்கொள்ள,
“திரும்பவும் தூங்கற நீ…” என்றவனின் கேள்வியில் வேகமாய் கண் திறந்து,
“தூங்கவே இல்லை. இப்பவாச்சு தூங்கிக்கறேன். போதுமா? இதான எதிர்பார்த்தீங்க?…” என்றதும் அடக்கமாட்டாமல் சிரித்தவன்,
“இன்னைக்கு ஆபீஸ் ரூம்ல உன் மாமா என்னை கேட்ச் பண்ணிட்டான்…”
“என்னது?
“அதான் மஞ்சளை. ஸார் உங்க மணிக்கட்டு ஃபுல்லா மஞ்சளா இருக்குன்னு சொல்லிட்டான்….”
“ஹ்ம்ம் அப்பறம்?…” என்றாள் புன்னகையுடன்.
“எனக்கு ஒரே ஷைய்யா போச்சு. உடனே அமைதியா வேண்டுதல்ன்னு சொல்லிட்டேன்…” என்று சொல்லி முடிக்க,
“நீங்க? அமைதியா? நம்பிட்டேன்…” என வாய்பொத்தி சிரிக்க,
“உன்கிட்ட சொன்னேன். கைல கொஞ்சம் நேரத்துக்கு பூசாதன்னு. கேட்டியா?…”
“நான் சொன்னதை கூட தான் நீங்க கேட்கலை…”
“ஆஹாங், இன்னைக்கு எப்படி கேட்கறேன்னு பாரேன்…” என்றவனின் வார்த்தையில் இருந்த விஷமத்தில் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக்கொண்டாள்.
“திருவிழாவுக்கு வர அன்னைக்கு மழையில நனைஞ்சுட்டே வந்தியே, உனக்கு துணைக்கு நின்ன என்னை ஏன் அந்த முறை முறைச்ச நீ?…”
“நான் தூங்கிட்டேன்…” என்றாள் மழுப்பலாக.
“உண்மையை சொல்லு, என்னை திட்டிட்டு தான இருந்த?…”
“இல்லையே. நிஜமாவே. உங்களை ஒரு வார்த்தை கூட திட்டலை…” என அவள் சொல்லிய விதத்திலேயே புரிந்துபோனது அதில் எத்தனை பொய் என.
“திட்டிருக்கலாம் தான்….” என சொல்லி சிரித்தவனுக்குமே அந்த நாளின் தாக்கம் தான்.
நேராக டாப்ஸ்லிப் பாதையில் காரை செலுத்தியவனை திரும்பி பார்த்தவள் விழிகள் விரிந்தன.
“நிஜமாவே கூட்டிட்டு போறீங்களா? சொல்லவே இல்லை…” என்றாள் குதூகலமாக.
“உனக்கு புடிக்குமா இங்க?…” என்று அவளின் சந்தோஷத்தை ரசித்தபடி கேட்க,
“புடிக்காதவங்க யாராச்சும் இருப்பாங்களா? அதுவும் இந்த சீசன்…” என ஜன்னல் கண்ணாடியை நன்றாக இறக்கியவள் அந்த குளிர்ந்த காற்றை உள்ளிழுத்து சிலிர்த்தாள்.
“காலையிலையே கூட்டிட்டு வந்திருக்கலாம்ல. அப்பாவோட வந்தா காலையிலையே கூட்டிட்டு வந்திருவாங்க. அன்னைக்கு முழுக்க ஜாலியா இருக்கும். அக்கா கல்யாணத்துக்கு அப்பறம் இங்க வரவே இல்லை. அவ இல்லாம வர விரும்பலை….” என்றவள்,
“வீட்லயே சொல்லியிருந்தா எல்லாரையும் கூட்டிட்டு வந்திருக்கலாம். ராகாவுக்கு ரொம்ப இஷ்டம் தெரியுமா?…” என சொல்லியவளை முறைத்தவன்,
“விடு அடுத்தவாட்டி நம்ம ஊரையே கூட்டிட்டு வருவோம். சரியா?…” என நக்கலாய் கேட்க அவன் சொல்லவருவதை புரிந்தவள் தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
“இது நமக்கான ட்ரிப். நமக்கு மட்டுமேயான ட்ரைவ். கிளம்பற வரைக்கும் ஒரு ட்ரைவ் போகலாம்னு தான் தோணுச்சு. நீ பேசின பேச்சுக்கு தான் இங்க கூட்டிட்டு வரனும்னு வந்துட்டேன்…”
“ஓஹ் இது பனிஷ்மென்ட்டா? அப்ப இப்படியே பேசினா அடிக்கடி கூட்டிட்டு வருவீங்க…” என்று சொல்லி அவள் சிரிக்க அர்த்தத்துடன் புன்னகைத்தான்.
அன்று மாலை மயங்கி இருள் கவிழும் வரை சுற்றி பார்த்தபடி இருந்தவர்கள் ஆட்களின் நடமாட்டம் குறைய குறைய கீர்த்தனா அவனை நொச்ச ஆரம்பித்துவிட்டாள்.
“எப்போ வீட்டுக்கு போவோம். இருட்டிருச்சு. கிளம்புவோம். கிளம்புவோம். குளிர ஆரம்பிச்சுடுச்சு. வீட்டுக்கு போவோம்…” என்று அவனை போட்டு படுத்த,
“வீட்டுக்கு போய் என்ன பண்ண போறோம். மெதுவா போகலாம்…” என அவனும் அவளுக்கு பிடிகொடுக்காமல் பேசினான்.
“வர லேட் ஆகும்னாச்சும் சொல்லிட்டு வந்திருக்கலாம். போன் பண்ணி சொல்றேன்…” என மொபைலை தேடினாள்.
“என் போன் எங்க? போனை காணோம்?…” என காருக்குள் துழாவ அதற்குள் கார் ஓரிடத்தில் சென்று நின்றது.
“இறங்கு கீர்த்தி…” என்றவனின் குரலுக்கிணங்கி கீழே இறங்கியவளின் பார்வை அப்படியே விரிந்தது.
காட்டிற்கு நடுவே அந்த மரவீடு ஓங்கி உயர்ந்து இருக்க நிமிர்ந்து பார்த்தவள் இங்கு எதற்கு என்பதை போல அக்னியை திரும்பி பார்த்தாள்.
“வா மேல போகலாம்…” என்றவனின் கையை இறுக்கமாய் பற்றிக்கொண்டு,
“இங்க எதுக்கு வீட்டுக்கு கிளம்பனுமே…” என சொல்லியதையே சொல்ல,
“ப்ச், வந்து பாரேன்…” என்றவனை ஒட்டிக்கொண்டு நடந்தாள்.
அந்த இருளை அச்சத்துடன் பார்த்தவளுக்கு சத்தமில்லாத நேரத்தில் கேட்ட வினோதமான விலங்குகளின் சத்தங்கள் தொண்டையை கவ்வியது.
மரப்படிக்கட்டுகள் வழியே மேலே ஏறியவள் கீழே பார்க்க திரும்பாமல் வெளிச்சத்தை மட்டும் பார்த்தபடி அவன் பின்னே செல்ல,
“இந்த ரூம் எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா?…” என அந்த அறைக்குள் நுழைந்ததும் கேட்டான் அவன்.
“அதெல்லாம் நல்லா இருக்கு. முதல்ல கிளம்புவோம்…” என சொல்லி அவனின் கையை பிடித்து இழுக்க அவளை தன்னோடு கட்டிக்கொண்டு கதவை சாற்றியவன் அங்கிருந்த சேரில் அமர்ந்து,
“இன்னைக்கு நாம இங்க தான்…” என்று சொல்லி சாவகாசமாய் அவளை தன் மீது அமர்த்திக்கொண்டான் அக்னி.
“என்ன இங்கயா? நான் மாட்டேன். மாட்டேன்…” என்று அவனுடன் சண்டையிட்டவளின் சத்தம் மெல்ல மெல்ல குறைந்து முனகலுடன் கரைய,
“இதுக்குதான் கூட்டிட்டு வந்தீங்களா?…” என்ற சிணுங்கலுடன் அவனை முடிந்த மட்டும் கிள்ளி வைத்தாள்.
“இதுக்கு பேர் தான் ஷார்ட் ஹனிமூன். ..” என விளக்கம் சொல்லியவனின் வாயில் நன்கு நான்கு அடி வேறு விழுந்தது.
இவர்களின் கொண்டாட்டம் ஸ்ரீநிவாஸ்க்கு அங்கே சுரேனிடம் திண்டாட்டமாக போனது.