கவிதை – 13
டாப்ஸ்லிப் சென்ற மறுநாளே திரும்பி ஊருக்கு வந்தவர்கள் அதற்கு அடுத்த நாள் தனது வீட்டிற்கு கீர்த்தனாவுடன் கிளம்பிவிட்டான் அக்னிசெல்வன்.
கிளம்பும் முன் கண்ணீருடன் கலங்கி நன்ற கீர்த்தனாவை ஆதரவாய் கை பிடித்துக்கொண்டவன்,
“இன்னும் ஒரு வருஷம் தான். உங்கப்பா அம்மாவோட இங்கயே வந்திட போறாங்க. இதுக்கு ஏன் இத்தனை அழுகை? நினைச்சா நாம போய் பார்க்கலாம் தானே?…” என அவளை சமாதானப்படுத்தியவன்,
“என்ன மாமா நான் சொல்றது சரிதானே?…” என்று தங்கதுரையிடம் கேட்க,
“ஆமாங்க…” என்றவரின் குரலும் தழுதழுத்தது.
தாயும் தந்தையும் முகம் சிவந்து கண்ணீர் ததும்ப நிற்க கனகா தான் தங்கதுரையை சமாதானம் செய்தார்.
“நீங்க அழுது அவளும் இன்னும் அழுவா. அதான் ராகா இருக்காளே. சும்மா இருங்க…” என கனகா ஒருபக்கம் சொல்ல,
“முடியறப்போ எல்லாம் இங்க வாங்க மாமா. வார லீவ்ல இங்க வந்து இருங்க…” என்று வேறு அக்னி சொல்ல ஸ்ரீநிவாஸ் காதில் புகை வராத குறை.
‘இவன் விட்டா இங்கயே வந்து இருக்க சொல்லுவான் போல?’ என மனதுக்குள் திட்டிக்கொண்டு வாயை திறக்காமல் நின்றான்.
“பொள்ளாச்சி வீட்டுக்கு இன்னும் வரலை. இப்போ நேரமில்லை. இன்னொரு தடவை அங்க வரோம். எதுவும் நினைக்க கூடாது நீங்க…” என அதற்கும் அக்னி சொல்ல,
“இந்த வார்த்தையே போதும் மாப்பிள்ளை. இதுக்கு மேல என்ன வேணும்? உங்களுக்கு தோதப்போ வாங்க…” என்றவர் அவனின் கையை பிடித்துக்கொண்டார்.
“எங்களால முடிஞ்ச சீரையும் ஏத்துக்கனும். தப்பா நினைக்காம…” என சொல்ல,
“உங்க பொண்ணுக்கு செய்யறதுக்கு நான் என்ன சொல்ல போறேன்? தாராளமா செய்ங்க. உங்களை கஷ்டப்படுத்திக்காம செய்ங்க…” என்றான் புன்னகையுடன்.
‘கேட்டு வாங்கினா கெட்டவன், இப்படி வாங்கினா நல்லவன் போல? இவனுக்கு என்ன குறைன்னு இங்க குடுக்கறத வாங்கறானாம்’ என பொடுபொடுவென வந்தது ஸ்ரீநிவாஸ்க்கு.
“உடம்பை பார்த்துக்கோங்கப்பா. அப்பாவை பார்த்துக்கோங்கம்மா…”என ஆயிரம் பத்திரங்கள் சொல்லி அங்கிருந்து விடைபெற்றாள் கீர்த்தனா.
அவளின் பின்னோடு ராகா, ஸ்ரீநிவாஸ் இருவரும் வந்து அவளை புகுந்தவீட்டில் விட்டு சென்றார்கள்.
என்னதான் தங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று சொன்னாலும் கனகாவின் மனது கீர்த்தனா திருமணத்தன்று பேசியதிலேயே உழன்றது.
அதனை கொண்டு அவளின் மதிப்பு குறையாதபடிக்கு செய்தனுப்ப முன்பே கணவரோடு சேர்ந்து பேசிவைத்திருந்தார்.
“இருக்கறத வச்சு நாம ரெண்டு பேர் வாழ்க்கையை ஓட்டுவோம். பொண்ணுங்க நல்லா இருந்தா போதும்…” என கனகா சொல்லிவிட தங்கதுரையிடம் மறுப்பேது?
ராகாவுக்கு சீர்வரிசைக்கு என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. தன்னுடைய நகையை தந்து உதவலாம் என்றால் வீட்டில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். அதையும் தாண்டி அந்த நகை ஸ்ரீநிவாஸ் வசம்.
“என்னால எதுவுமே உனக்கு ஹெல்ப் பண்ண முடியலம்மா…” என்று அரற்றியவளை அணைத்துக்கொண்ட கனகா,
“குடுத்து உதவ நினைக்கிற மனசு பெருசுடா. நீ எங்களுக்காக நினைக்கிறதே போதும். உன் வாழ்க்கை சிக்கலாக நாங்க என்னைக்கும் விடமாட்டோம். புரிஞ்சு நடந்துக்கனும் நீயும்…” என மகளை தேற்றவே போதும் போதுமென்றானது கனகாவிற்கு.
கீர்த்தனா கிளம்பிய பின்னர் மூவருமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்க மறுநாள் கிளம்புவதை பற்றி மகளிடம் அப்போது தான் சொல்லிக்கொண்டு இருந்தார்.
“ரொம்ப நாள் லீவ் எடுத்தாச்சுடா ராகா. அப்பா வேலைக்கு போகனும். நாளைக்கு கிளம்பலாம்னு யோசிக்கறேன்…” என தங்கதுரை சொல்ல,
“இன்னைக்கு தான் கீர்த்தி அவங்க வீட்டுக்கு போயிருக்கா. இன்னும் ஒரு ரெண்டு நாள் கழிச்சு போகலாம்ல?…” ராகாவிற்கு அவர்களை பிரிய விருப்பமே இல்லை. இப்படியே இருந்துவிடலாமே தாயும், தந்தையும் என எண்ணி அவள் சொல்ல,
“இல்லைடாம்மா, இது என்ன கவர்மென்ட் பேங்கா? பிரைவேட்ல பார்க்கறது. இம்புட்டு நாள் குடுத்ததே பெருசு. போய் பொழப்பை பார்ப்போம். ரெண்டு நாள் கழிச்சுனாலும் போக தானே வேணும்?…” என்று தளர்வுடன் அவர் சொல்ல யாரும் பதில் பேசவில்லை. அமைதியாக அமர்ந்திருந்தார்கள்.
கனகாவிற்கு தெரியும் தங்கதுரை மனது முழுக்க அந்த மாத வட்டி பணத்தை எப்படி செலுத்த என்பதிலேயே இப்பொழுது சுழல்வது.
கடன். ராகாவின் திருமணத்திற்கு வாங்கிய கடன், அதன் பின் திருமணத்திற்கு போடவிருந்த நகைக்கு இருமடங்கான நகையை அவளுக்கு போடவேண்டிய சூழல் உருவானதால் உண்டான சிக்கல். ரொக்கமாய் ஸ்ரீநிவாஸ் வீட்டிற்கு வரதட்சனை தந்ததற்கு வாங்கிய கடன்.
போதாததிற்கு பொள்ளாச்சி வீட்டின் மீதான கடன். இடையில் தங்கதுரையின் மருத்துவ செலவு என அட்டை பூச்சியாய் அவர்களின் ரத்தத்தை உறிஞ்சிக்கொண்டிருக்கும் கடன்.
மீள முடியாத அளவிற்கு மீண்டும் மீண்டும் ஆடி சீர், தீபாவளி, பொங்கல், குழந்தைக்கு என மாற்றி மாற்றி செலவுகள்.
முதலில் கூட சமாளித்துவிடலாம் என்னும் ஒரு நினைப்பில் தான் சிறுக சிறுக செலவுகளை குறைத்து சேமிப்பிலேயே வாழ்க்கையை கழித்தார்கள். இப்பொழுது இளைய மகளின் திருமணம்.
என்னதான் வரதட்சனை, திருமண செலவு என்று எந்த வித நெருக்கடியும் இல்லாமல் முடித்திருந்தாலும் அப்படியே விடுவிட மனதில்லை அவர்களுக்கு.
நகை உங்களுக்கு விருப்பப்பட்டதை போடுங்கள் என்றுவிட்டார்கள். சொந்த மண்டபத்திற்கு எதற்கு செலவு என்றுவிட்டார்கள். சமையல், மற்ற இதர செலவுகளுக்கு இதற்கெல்லாமா கணக்கு பார்ப்பது என்று தங்கதுரையின் கையை கட்டி போட்டுவிட்டார்கள் அக்னிசெல்வத்தின் குடும்பத்தினர்.
அதனால் ஏற்பாடு செய்து வைத்திருந்த பணத்தில் பாதி கூட செலவாகாததால் அதை வைத்து மகளுக்கான நகையை செய்து, சொற்ப பணத்தை அவளின் கையில் தந்துவிட்டார். அதில் ஒரு திருப்தி.
எத்தனை செய்தும் மூத்த மகளுக்கு செய்த அளவிற்கு எதுவும் செய்துவிடவில்லை தான். அன்று இரவு உணவை முடித்துவிட்டு வீட்டை அடைத்துவிட்டு விளக்கை அணைத்து வந்து படுத்த மனைவியிடம்,
“கனகா, கீர்த்தி மனசு ஒன்னும் சங்கடப்பட்டு இருக்காது தானே?…”
“எதுக்குங்க?…”
“இல்லை, ராகா கல்யாணத்துக்கு முதல்ல பேசின நகையை விட கட்டக்கடைசியில கீர்த்திக்கு செஞ்சுவச்ச நகையையும் ராகாவுக்கு போட வேண்டியதாச்சு. இப்ப கீர்த்திக்கு அந்தளவுக்கு கூட போடலை. என்னதான் இருந்தாலும் ரெண்டு பொண்ணுங்களை சமமா நடத்தலை தானே? மனசு குத்துது…”
தழுதழுத்த குரலுடன் அவர் சொல்லியதை கேட்டதும் என்னவோ என எழுந்து விளக்கை போட்டு பார்த்தார் கனகா.
“என்ன இது இப்படி வேர்த்துருக்கு? எந்திச்சு உட்காருங்க…” என அவரை பயத்துடன் எழுப்பியவர்,
“எதையாச்சும் போட்டு மனசை குழப்பாதீங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா நாங்க என்ன பண்ணுவோம்?…” என புலம்பியபடி தண்ணீரை கொண்டுவந்து குடிக்க தந்தவர் பேனை வேகமாய் சுழலவிட்டு அவரின் வியர்வையை ஒற்றி எடுத்தார் கனகா.
அவரின் கைகளுமே நடுங்கியபடி இருந்தது. தங்கதுரையின் உடல்நிலையை அறிந்தவராகிற்றே.
ஏற்கனவே உயிரை போராடி மீட்டு வந்திருக்கிறார். சாவின் விளிம்பிற்கு சென்று வந்த மனிதர். இதுவரை இல்லாத கலக்கம் கனகாவை பந்தாடியது.
“எதையும் நினைக்காதீங்க, எதையும் நினைக்காம இருங்க…” என சொல்லிக்கொண்டே இருந்தவரின் கையை பிடித்த தங்கதுரை,
“அப்படியெல்லாம் உன்னை நட்டாத்துல விட்டுட்டு போயிடமாட்டேன் கனகா. அதுவும் இம்புட்டு கடனை வச்சுட்டு உன்னை நிர்கதியாக்கிருவேனா? இப்ப என்னோட வேண்டுதல் ஒண்ணுதான். உனக்கு எந்த சுமையும் தராம இந்த கடனெல்லாம் அடைச்சு உனக்குன்னு ஒரு வருமானத்தை தந்த பின்னால தான் என்னைய எந்த எமன் எடுத்துக்கனும்…”
தங்கதுரை சிரித்துக்கொண்டே சொன்னாலும் அதன் பின்னால் உள்ள வேதனையின் அளவு பெரியதென்று கனகாவிற்கு தெரியாதா? அவரின் காலடியில் அமர்ந்திருந்த கனகா கதறி அழ ஆரம்பித்துவிட்டார்.
“உங்களுக்கு என்ன ஆச்சு? திடீர்ன்னு இப்படிலாம் பேசறீங்க? எனக்கு பயமா இருக்குதே…” என உடைந்து போய் அழ அழ அவரின் தலையை வருடியபடி அமர்ந்திருந்த தங்கதுரைக்குமே கண்கள் கலங்கியது.
எத்தனை இக்கட்டிலும் கல்லை போல நின்ற பெண்மணி கனகா. ஒரு நாளும் கலங்கி புலம்பியதில்லை. சமாளித்துக்கொள்ளலாம் என்று தங்கதுரையையே தேற்றும் அஸ்திவாரம் அவர்.
ராகாவின் திருமணத்தின் பின்னான சோதனைகள் ஏராளம். அதிலேயே பாதி நொறுங்கிப்போய் தான் இருந்தார்.
“சரி சரி, அழாத. இங்க பாரு. அதான் நல்லா தான இருக்கேன்…” என அவரை தேற்ற முயன்றவர்,
“இன்னைக்கு இல்லைன்னாலும் என்னைக்காச்சும் பொண்ணுங்களுக்கு செஞ்சதை வச்சு பிரச்சனையை யாராச்சும் கிளப்பினா?…”
“யார் கிளப்புவாங்க?…”
“ஏன் என் அக்காவே இல்லையா? எல்லாரும் ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்கமாட்டாங்க தான். இன்னைக்கு பொண்ணுக்காக நம்ம வீட்டு சூழ்நிலையை பெருசா நினைக்காம பொண்ணை எடுத்துட்டாங்க. நாளைக்கே சொந்தங்களுக்கு மத்தியில சடங்கு சம்பிரதாயம்னு வரப்போ நம்ம வீட்டு பக்கம் என்ன செஞ்சோம்னு யாராச்சும் கேட்கறப்போ அங்க நம்ம கீர்த்திக்கு தான் இறக்கமா போகும்?…”
“இதெல்லாம் அனாவசியம். அப்படியெல்லாம் கீர்த்தியை விட்டுடமாட்டாங்க அவங்க வீட்டுல. இதையெல்லாம் யோசிக்காமலா பொண்ணை கட்டி குடுத்தோம். அவ வாழறதை நாம கண்கூடா பார்த்தாச்சு. இது போதும்…” என கனகா அவருக்கு ஆறுதல் சொல்ல,
“முதல்ல இந்த கடனை எல்லாம் அடைக்கனும் கனகா. ஒத்த பைசா கூட என் பொண்ணுங்க தலையில போயி விழுந்துட கூடாது. அவங்க கடனை ஏத்து அடைக்கிற ஒரு சூழ்நிலை வரவே கூடாது…” என்ற தங்கதுரை,
“பேசாம பொள்ளாச்சி வீட்டை குடுத்துருவோமே…” என வேகமாய் கேட்க,
“என்ன பேசறீங்க? அதை குடுத்துட்டு? நாம எங்க போறதாம்?…” கனகா கேட்க,
“இது நம்ம வீடு கனகா. நாம எங்க போகனும்? இங்க தான் இருக்கனும்…” என்ற தங்கதுரையை நிராசையுடன் பார்த்தார்.
“மூத்த மாப்பிள்ளை கீழ் வீட்டை எடுத்துக்கிட்டார். ரெண்டாவது மாப்பிள்ளை இதுக்கு மேல ஒரு வீட்டையே கட்டி வந்து போகறப்போ தங்கறதுக்குன்னு வச்சுக்கிட்டார். இதுல இடையில நாமா?…” என்ற கனகா,
“ரெண்டு பேருக்கும் உள்ள ஒரு வித்தியாசம் சின்ன மாப்பிள்ளை நம்மக்கிட்ட கேட்டு இந்த வீட்டை எடுத்து கட்டிருக்கார். அது பெரிய மாப்பிள்ளைக்கு பிடிக்கலை. இதை அப்பவே நான் கணிச்சுட்டேன்…” கனகா சொல்ல சொல்ல அப்படியே அமர்ந்திருந்தார்.
“நாம நம்ம காலம் வரைக்கும் அங்க பொள்ளாச்சி வீட்டுல இருப்போம். பார்ப்போம் அதுக்கப்பறம் என்னன்னு முடிவு பண்ணுவோம். இப்பவே எதுக்கு யோசிக்கனும்?…” என சொல்ல,
“இந்த வீட்டை பிரிக்கிற சூழ்நிலை வந்தா?…” ஸ்ரீநி குணத்தை நினைத்து கவலையுடன்.
“ப்ச், பேசாம தூங்குங்க நீங்க. படுங்க. சும்மா எதையாச்சும் நினைச்சுட்டு…” என அதட்டிய கனகா விளக்கை அணைத்துவிட்டு வந்து படுத்துக்கொள்ள தங்கதுரையுமே உறங்க ஆரம்பித்தார்.
ஆனால் விடிய விடிய விழித்தபடியே இருந்தார் கனகா. மனதில் துக்கம் தளும்ப உறக்கம் என்பதே இன்றி அவ்வப்போது எழுந்து தங்கதுரையை பார்த்தபடியே இருந்தார்.
உறங்காமல் விழித்திருந்தது அவர் மட்டுமல்லாது அவரின் மக்களுமே. ராகாவிற்கு இனி கீர்த்தி அங்கில்லாமல் எப்படி இருவரும் காலத்தை கழிக்க போகிறார்கள் என்கிற கவலை.