கீர்த்தனாவிற்கு அதையும் தாண்டிய குடும்ப சூழ்நிலை பற்றிய கவலை. அதன் பொருளாதார நிலையை நன்றாக அறிந்தவளாகிற்றே.
புகுந்த வீட்டிற்கு வந்ததில் இருந்து மாற்றி மாற்றி அக்னிசெல்வன் வழியில் சில சொந்தங்கள் வந்து சென்று கொண்டு இருக்க அவளால் வேறெதையும் நினைக்கமுடியாமல் இருந்தாள்.
விருந்திற்கு வர சொல்லிய அழைப்புகளை எல்லாம் இன்முகத்துடன் ஏற்றவள் இரவு உணவு முடிந்து அறைக்கு வரும் வரை தள்ளியிருந்த பெற்றோர் நினைவு இப்பொழுது வந்து ஒட்டிக்கொண்டது.
மழலைகளுக்கு வகுப்பெடுக்கும் பணியில் இருந்தாலும் அந்த பள்ளி மிகப்பெரிய பள்ளி என்பதால் ஏழாயிரத்துக்கு குறையாமல் வருமானம் வந்துகொண்டிருந்தது அவளுக்கு.
ஓரளவிற்கு அதையும், தங்கதுரை வருமானத்தையும் வைத்து குடும்பத்தை முடிந்தளவுக்கு சிரமம் இல்லாமல் ஓட்டிக்கொண்டு இருந்தார் கனகா.
தன் திருமணத்திற்கென மீண்டும் வீட்டை அடகுவைத்த இடத்தில் பணம் வாங்கியிருப்பதையும் தெரிந்து கொண்டவளுக்கு இப்பொழுது தொண்டை அடைத்தது.
“என்னப்பா பண்ணுவீங்க…” என்று வெடிக்க இருந்த கேவலை உதட்டை கடித்து அடக்கியவள் கண்ணீரை சிந்திவிடாமல் கட்டிலில் அமர்ந்திருந்த கீர்த்தனா தன் கால்களில் முகத்தை புதைத்திருந்தாள்.
“என்ன கீர்த்தி ஒன்வீக் இருப்போம்னு சொல்லி இப்படி அஞ்சு நாள்ல கூட்டிட்டு வந்துட்டேன்னு கோபமா?…” என்று கேட்டபடி அவளருகே வந்து அமர்ந்தவனை நிமிர்ந்து பார்த்தவள் முகம் சிவந்து போய் இருக்க,
“என்ன வீட்டை நினைச்சு அழுகையா?…” என அவளின் கன்னத்தை மிருதுவாக வருடினான்.
அவனையே பார்த்திருந்தவள் மனதில் சிறு மின்னல் போன்ற நினைப்பு தோன்றி மறைந்தது. அவனிடம் சொல்லிவிட்டால் என்னவென்று? ஆனால் உதவி என்று நிற்க தன்மானம் இடமளிக்கவில்லை.
அதையும் விட அவனிடத்தில் அவனின் குடும்பத்தின் முன் தந்தையை இன்னும் இறக்கமாய் காண்பிக்க விரும்பவில்லை.
இத்தனை கடன் இருக்கிறது, வீட்டில் சிரமப்படுகிறார்கள் என்று சொல்லி ஏதாவது செய்யுங்கள் என்று நிற்கும் அந்த நினைவே நெஞ்சை அறுத்தது.
ஒன்றுமே செய்யாமலே தன் தாய் தந்தையை மதிக்காமல் நடந்துகொள்ளும் சாரதா குடும்பத்தினரை நினைக்கும் பொழுதே அவர்களே இப்படி நினைக்க இவர்கள் நினைக்கமாட்டார்களா?
கீர்த்தியின் மனது முதல் நாள் சுரேன் பேசியதில் சென்று நின்றது. மீண்டும் எதை எதையோ நினைத்து குழம்பியவளாய் தனக்குள் சுழல கணவனாய் அவனின் நெருக்கத்தை அப்பொழுது தான் உணர்ந்தவள் தான் இருக்கும் மனநிலையில் அவனோடு ஒத்து செல்ல முடியாமல் தடுமாறி உடலில் இறுக்கத்தை காண்பிக்க,
“என்னாச்சு கீர்த்தி?…” என்றான் அக்னி அவளிடத்தில்.
என்னவென பதில் சொல்ல முடியும்? மனது முழுவதும் பெற்றவர்களை பற்றிய பரிதவிப்பு. கண்களில் தெரிந்ததோ என்னவோ?
“ஓகே, ரிலாக்ஸ். இப்ப எதுவும் வேண்டாம். தூங்கு…” என அவளை விட்டு விலகி மென்மையாய் அணைத்தார் போன்று படுத்தவன் சற்று நேரத்தில் உறங்கியும் போனான். விடிய விடிய உறக்கமின்றி அவனின் முகம் பார்த்தபடி விழித்துக்கிடந்தாள் கீர்த்தனா.
மறுநாள் காலை அக்னி எழும்பும் முன்னரே எழுந்து குளித்து கீழே வந்திருந்தாள் கீர்த்தனா.
“என்னம்மா அக்னி தூங்கறானா?…” என கேட்டுக்கொண்டே சுபா அவளோடு வந்து அமர,
“ஆமா அத்தை, நல்லா தூங்கிட்டு இருந்தார் அதான் எழுப்பலை. எனக்கு தூக்கம் வரலை…” என்று சொல்லவும் சாதனா வந்துவிட்டாள்.
“குட்மார்னிங் சுபாம்மா…” என அவரோடு அமர்ந்தவள்,
“என்ன கீர்த்தி சரியா தூங்கலையா? கன்னம் எல்லாம பன்னு மாதிரி வீங்கிருக்கு?…” என கிண்டலுடன் சொல்லியவளை பார்த்து புன்னகைத்த கீர்த்தியின் பார்வை சுபாவையும் சாதனாவையும் மாறி மாறி பார்த்தது.
அவர்களுக்கிடையேயான நெருக்கம் ஒரு நொடி தன் மாமியாரையும் தன்னையும் வைத்து அவ்விடத்தில் ஒப்பிட்டுப்பார்க்க வைத்தது.
‘ச்சே என்ன நினைப்பு இது? அவங்களும் நல்லவங்க தான்’ என தன்னையே கடிந்துகொண்டவள் பின் அவர்களுடன் சரளமாக பேச ஆரம்பித்தாள்.
“என்ன பன்றீங்க எல்லாரும்?…” என்று சந்திரிகா வந்து அமர்ந்தவர்,
“கீர்த்தனா காபி, டீ ஏதாவது குடிச்சியாம்மா?…” என கேட்க,
“இல்லை இனிமே தான் அத்தை…” என்று பதில் சொல்லவும்,
“கொண்டு வர சொல்றேன்…”
“இல்லை இருக்கட்டும் அத்தை. அவங்களும் வரட்டும்…” என்று மறுத்ததும் சரி என்று தலையசைத்து விட்டுவிட்டார் அவர்.
பின் தினசரி நாளிதழை எடுத்து புரட்டிக்கொண்டு இருக்க சாதனா சுபாவுடனும் கீர்த்தனாவுடனும் பேசிக்கொண்டு இருந்தாள்.
அவளின் கிண்டல்களுக்கு சளைக்காமல் சுபாவும் பதில் தந்துகொண்டிருக்க அவ்வப்போது நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தாரே தவிர சந்திரிகா எதையும் பேசவில்லை.
கீர்த்தியின் மனது ஒரு நொடி கனகாவின் அருகாமைக்காக ஏங்கியது. சுபாவையும், சாதனாவையும் பார்த்தால் யாராகினும் தாய், மகள் என்று தான் சொல்வார்கள். அப்படி ஒரு நெருக்கம் இருவருக்கிடையில்.
கீர்த்தனாவின் கண்கள் சந்திரிகாவை முற்றுகையிட மனது இவரும் இப்படி இருக்கமாட்டாரோ என்று நினைத்துக்கொள்ள அவளின் பார்வையை உணர்ந்தவர்,
“ஏதாவது சொல்லனுமா கீர்த்தி?…” என்றார் அவளிடத்தில்.
“ஆங் இல்லை, சும்மா தான்…”
“பேப்பர் படிக்கறயா?…”
“இல்லை நீங்க படிங்க…”
இவ்வளவு தான். மீண்டும் சந்திரிகா பேப்பரில் மூழ்கிவிட கீர்த்தனா அதை விடுத்தவளாக சாதனாவுடன் பேச ஆரம்பித்தாள். ராகாவிடம் இருப்பதை போன்று ஒரு நிறைவு அவளிடத்தில்.
ஆயினும் சந்திரிகாவின் அந்த எல்லை மனதை முரண்டியது. அவரின் ஆளுமை, அமர்ந்திருக்கும் விதம். தானாகவே சென்று யாரும் நெருங்கமுடியாத அளவிற்கு இருந்தது.
‘ஒருவேளை தனக்கு தான் இப்படி தோன்றுகிறதா?’ என குழப்பத்துடன் அவள் அமர்ந்திருக்க,
“அக்னி வந்தாச்சு…” என்றார் சுபா.
“எல்லாருக்கும் குடிக்க கொண்டுவர சொல்லு சாதனா…” என்ற சந்திரிகா பேப்பரை மடித்துவிட்டு மகனை பார்த்தார்.
“அப்பா தோப்புக்கு போயிருக்காங்க அக்னி. உன்னை பேக்டரி போறதுக்கு முன்னாடி அங்க வந்துட்டு போக சொல்லிருக்காங்க…” என சொல்ல,
“ஹ்ம்ம் ஓகே…” என்றவன் கீர்த்தனாவை திரும்பி பார்த்துவிட்டு பேப்பரில் ஆழ்ந்து போக,
“டீ ரெடி…” என்றபடி வந்தாள் சாதனா.
அவளுக்கு பின்னால் பெரிய ட்ரேயில் டீ மற்றும் பிஸ்கட்களுடன் ஒரு பெண் வந்துகொண்டு இருந்தாள்.
அமர்ந்திருந்தவர்கள் அனைவருக்கும் அப்பெண்ணே எடுத்து தர கீர்த்தனாவும் வாங்கியபடி யோசனையில் ஆழ்ந்தாள்.
இதுவரை தோன்றாத எண்ணங்கள் எல்லாம் அணிவகுக்க ஆரம்பித்தது அவளின் மனதில்.
திருமணமாகி வந்த அன்றும், அதற்கடுத்த ஒருநாள் மட்டுமே அங்கே முழுதாய் அவள் இருந்திருக்க எதையும் அப்பொழுது கவனிக்கும் நிலையில் அவளில்லை.
மறுவீடு என தாய்வீடு சென்று வந்ததில் இங்குள்ள நிலவரங்கள் என்னவென இன்னும் பிடிபடாமல் போக இப்பொழுது ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள்.
“டீயை கையில வச்சுட்டு என்ன யோசனை?…” என அவளின் பக்கம் லேசாய் சாய்ந்தாமர்ந்து முணுமுணுத்தான் அக்னி.
“ஹ்ம்ம், என்ன?…” என திரும்பி அவனை பார்க்க,
“டீயை குடி. ஏன் இப்படி திகைச்சு போய் உட்கார்ந்து இருக்க?…” என அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாய் சொல்ல,
“ஆங் குடிக்கறேன்…” என வேகமாய் குடிக்க,
“கீர்த்தி என்ன இது? மெதுவா. சுட்டுட்ட போகுது…” என்றான் கண்டிக்கும் குரலில்.
அவளின் மனது ஒரு நிலையில் இல்லை என்பதை புரிந்துகொண்டவன் தாய் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவளை அணைத்து ஆதரவாய் தோள் சாய்த்துக்கொள்ள முடியாமல் கையை மடக்கியபடி அமர்ந்திருந்தான்.
அவனின் அந்த லேசான அதட்டலும் தள்ளி நின்ற விதமும் மனதின் குழப்பமும் வெகுவாய் அவளை தாக்கியது. கலங்கிய விழிகளை காண்பிக்காமல் குனிந்துகொண்டாள் கீர்த்தனா.
ஏன் எதற்கு இந்த கண்ணீர் என கேட்டால் என்ன பதில் சொல்வது என மௌனமாய் அமர்ந்திருந்தவள் கீழ் கண்ணால் மற்றவர்கள் தன்னை கவனிக்கின்றார்களா என பார்த்தவள் யாரும் கவனிக்காததில் நிம்மதியானாள்.
பின் மெதுவாய் பொறுமையாய் டீயை குடித்து முடிக்க அது ஆறி அலண்டுவிட்டிருந்தது.
“அக்னி ஆபீஸ் ரூம் வா…” என சுரேன் வந்து அழைத்ததும் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் அலுவலக அறைக்குள் சென்று மறைய சாதனாவும் சுபாவும் அதற்குள் எழுந்து வெளியே சென்றிருந்தனர்.
சந்திரிகா மட்டுமே எதிரே அமர்ந்து மொபைலில் எதையோ பார்த்தபடி இருந்தார். யாருமற்ற அந்த திடீர் தனிமை என்னவோ போல் இருக்க வந்ததில் இருந்து அடுக்களையை பார்க்காமல் இருக்க குடித்து வைத்திருந்த டீ கப்புகளை அந்த ட்ரேயில் எடுத்து வைத்தாள்.
“கீர்த்தனா…” என்ற சந்திரிகாவின் அழுத்தமான குரலில்,
“அத்தை…” என திடுக்கிட்டு பார்க்க,
“இதை எல்லாம் நீ ஏன் பன்ற? சர்வன்ட் வந்து எடுத்துப்பாங்க…” என்றதும் நின்றிருந்த மூச்சை இழுத்துவிட்டாள்.
‘இவ்வளவு தானா? இதற்கா அதட்டல் தொனி?’ என நினைத்தவள் புன்னகையுடன் அவரை பார்த்து,
“இருக்கட்டும் அத்தை, நம்ம வீடு தானே? யார் செஞ்சா என்ன?…” என இலகுவாக சொல்லியவளை இன்னும் அழுத்தமாய் பார்த்தவர்,
“நம்ம வீடாவே இருந்தாலும் எதை செய்யனும் செய்ய கூடாதுன்னு இருக்கும்மா. சொன்னா கேட்டுக்கனும். புரியுதா?…” என தன்மையாக சொன்னாலும் சந்திரிகாவின் குரலில் இருந்த கட்டளை மிகுந்த ஆளுமை கீர்த்தனாவை எட்டி நிறுத்தியது.
“மாலதி…” என சத்தமாய் அழைத்தவர்,
“ட்ரேயை எடுத்துட்டு போக உன்னை கூப்பிடனுமா? இது என்ன புது பழக்கம்? கிளீன் பண்ணு…” என வேலைக்கார பெண்ணை சத்தம் போட,
“இதோம்மா…” என்று பரபரவென அவற்றை எல்லாம் அகற்றி துடைத்துவிட்டு சென்றாள் அந்த மாலதி.
அந்த பெண் சென்ற பின்னரும் கீர்த்தனா இன்னும் அப்படியே நிற்பதை பார்த்த சந்திரிகா,
“நீ போய் ரெஸ்ட் எடும்மா, இல்லைன்னா கார்டனை சுத்தி பாரு…” என புன்னகையுடன் சொல்லியவர் எழுந்து சென்றுவிட்டார்.
‘ரெஸ்ட் எடுக்கனுமா? பொம்மை மாதிரி எதுவும் செய்யாம இருக்கனுமா?’ கீர்த்தனாவிற்கு அந்த வீடே சட்டென்று அந்நிய தூரத்தில் நின்றுவிட்ட பிரம்மை வலுப்பெற துவங்கியது.
ஒரு இலகுவான வாழ்க்கையை வாழமுடியதோ என்னும் விதமான அவளின் எண்ணவோட்டங்களை தடைசெய்யும் விதமாய் அக்னி வந்துவிட்டான்.
“என்ன கீர்த்தி நின்னுட்டு இருக்க? உட்கார்…” என்று அவளோடு சேர்ந்து அமர்ந்தவன்,
“என்ன முகம் டல்லா இருக்கு? கண்ணெல்லாம் இப்படி சிவந்து போய்?…” என கேட்டவன்,
“எதையாவது நினைச்சு கன்ப்யூஸ் பண்ணிக்கிறியா நீ?…” என கேட்க,
“ச்சே ச்சே, அதெல்லாம் இல்லை. ஓகே தான்…” என்றாள் தடுமாற்றமின்றிய பதிலில்.
“அப்போ ஓகே, எதுவா இருந்தாலும் சொல்லிடு. இப்படி இருக்காதே…” என்றவன்,
“இப்ப நான் சாப்பிட்டதும் பேக்டரிக்கு கிளம்பிடுவேன். லஞ்ச்க்கு தான் வருவேன். ஆனா டைம்க்கு வருவேனான்னு டவுட். அப்பப்ப முன்னப்பின்ன ஆகும். எனக்காக வெய்ட் பண்ணாம சாப்பிட்டுட்டு…”
“ஹ்ம்ம்…”
“ஈவ்னிங் பேக்டரில இருந்து கிளம்பிட்டாலும் குடோன்க்கு எல்லாம் போய்ட்டு வர நைட் ஆகிடும். இப்ப தான் கல்யாணம் ஆனதனால உனக்கு இவ்வளோ நாள் சொல்லலை…”
“இருக்கட்டும். சொல்லுங்க…”
“இனி ரொட்டீன் லைஃப்…” என சொல்லி சிரித்தவன்,
“போர் அடிச்சா நம்ம ரூம்ல புக்ஸ் இருக்கு. எடுத்து படி. டிவி இருக்கு. ரூம்லயே டெக்ஸ்டாப் இருக்கு. என்ன தோணுதோ அதை செய். இல்லையா சாதனா கூட வெளில போகனுமா போய்ட்டுவா…”
வரிசையாய் அவளுக்கு அவள் செய்ய வேண்டியதை அவன் சொல்லியபடி இருக்க பார்த்தபடியே அமர்ந்திருந்தாள்.
“கீர்த்தி ஓகே தானே?…” என மீண்டும் அவன் கேட்க,
“ஹ்ம்ம் ஓகே தான். ஓகே தான்….” என வேகமாய் தலையை ஆட்டியவளை பார்த்தவன் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவளின் மூக்கை பிடித்து நிமிண்டி,
“பொம்மை மாதிரி தலையாட்டற…” என்று சொல்லி சிரிக்க ‘உனக்கும் பொம்மையா நான்?’ என நினைத்தவள் அவனோடு சேர்ந்து புன்னகைத்தாள்.
“அப்பப்ப கால் பண்ணவும் செய்வேன். அட்டன் பண்ணு. தூங்கிடாம….” என்றதற்கும் தலையசைத்து சிரித்தாள்.
இனி அவளின் வாழ்க்கை இப்படித்தான் சுழலவிருக்கிறதா என்னும் ஆயாசம் அவளறியாமல் அவளுள் புகுந்துகொண்டது.