கவிதை – 14
காலை உணவு முடிந்து அக்னி கிளம்பிவிட சந்திரிகா தனதறைக்கு சென்றுவிட சாதனாவோடு பேசிக்கொண்டு இருந்தாள் கீர்த்தனா.
பத்தரை மணி போல தங்கதுரையும், கனகாவும் வந்தார்கள் இவர்களிடம் சொல்லிக்கொண்டு ஊருக்கு கிளம்புவதற்கு.
“வாங்க அப்பா…” என துள்ளிக்கொண்டு ஓடியவள் கட்டிக்கொண்டது கனகாவை.
“என்னம்மா இவ்வளவு சப்ரைஸ்? நான் உன்னை நினைச்சுட்டே இருந்தேன் தெரியுமா? வா வா…” என கனகாவை இழுக்காத குறையாய் அழைத்துக்கொண்டு வந்தாள் கீர்த்தனா.
அதற்குள் சாதனா சந்திரிகாவிடம் இவர்கள் வந்திருக்கும் விபரத்தை சொல்ல அவரும் வந்துவிட்டார்.
“வாங்க வாங்க, உட்காருங்க…” என வேகமாய் அவர்களை வரவேற்றவர்,
“என்ன சாப்பிடறீங்க?…” என கேட்க,
“இல்லைங்க சம்பந்தியம்மா, சாப்பிட்டு தான் வந்தோம்…” என்ற தங்கதுரை பார்வையால் மற்றவர்களை தேட,
“அவங்க எல்லாரும் பேக்டரிக்கும், தோப்புக்கும் கிளம்பியாச்சு. நாங்க மட்டும் தான் இருக்கோம்…” என சந்திரிகா சொல்ல அதற்குள் அவர்களுக்கு குடிக்க டீ வந்துவிட்டது.
“அடடா, நாங்க கொஞ்சம் சீக்கிரம் வந்திருக்கனும் போல…” என தங்கதுரை சொல்ல,
“ஒரு போன் பண்ணிருந்திருக்கலாம் வரதா இருந்தா. இருக்க சொல்லிருப்பேனே…” என சந்திரிகாவும் சொல்ல சாதனாவும், கீர்த்தனாவும் பார்வையாளர்களை போல தான் இருந்தார்கள்.
“பண்ணிருக்கலாம் தான்….” என்றவர்,
“இன்னைக்கு பொள்ளாச்சிக்கு கிளம்பலாம்னு இருக்கோம். அதான் சொல்லிட்டு போகலாமேன்னு வந்தோம்…” என்று தங்கதுரை சொல்லவுமே கீர்த்தனாவிற்கு ஏன் இத்தனை சீக்கிரம் என தோன்றியது.
அதை அவர்கள் முன்பு கேட்கமுடியாதே. கனகாவை பார்வையால் வினவ அவர் புன்னகைக்க மட்டுமே செய்தார். முகமே அத்தனை சோர்ந்து போய் இருந்தது.
“என்ன அதுக்குள்ளே கிளம்பறீங்க?…” என்று சந்திரிகா கேட்க,
“லீவும் முடிஞ்சிடுச்சு. அதான் கிளம்பிடலாம்னு இருக்கோம். வேலை இருக்குதுங்களே…”
“அதுவும் சரிதான். போய்ட்டு வாங்க…” சந்திரிகா சொல்லவுமே பெற்றோர்களின் பார்வை மகளை தீண்ட,
“கீர்த்தனாவை பத்தி கவலை பட வேண்டாம். நாங்க நல்லபடியா பார்த்துப்போம். இப்போ அவ இந்த வீட்டு மருமக…” என்று அவர்களுக்கான பதிலை சந்திரிகா தர,
“ரொம்ப சந்தோஷம்ங்கம்மா…”என்ற தங்கதுரை எழுந்துகொள்ள உடன் கனகாவுமே எழுந்துகொண்டார்.
“அடிக்கடி போன் பண்ணுங்க. கீர்த்திட்ட பேசுங்க. உங்களை மிஸ் பண்ணுவா இல்லையா?…” என்றவரை நன்றி பார்வை பார்வை பார்த்தனர்.
“சரி நீங்க கீர்த்தியோட பேசிட்டு இருங்க. நான் வரேன்…” என அவர்களுக்கு தனிமை கொடுத்தவராக சாதனாவையும் அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல அதுவரை அமைதியாக இருந்த கீர்த்தனா தாயை கட்டிக்கொண்டு விசும்ப ஆரம்பித்தாள்.
அவளின் முதுகை தட்டிக்கொடுத்துக்கொண்டே நின்ற கனகா தங்கதுரையை எதுவும் பேசவேண்டாம் என்று கண் காட்டியவர்,
“இப்ப எதுக்குடா அழற? உன் மாமியார் வந்தா வருத்தப்படமாட்டாங்களா? அழுகையை நிறுத்து. அழவா உன்னை இங்க கட்டிக்குடுத்தோம். நீ சந்தோஷமா இருந்தா தானே எங்களுக்கு நிம்மதி கீர்த்திம்மா…” என அவளின் கண்ணீரை துடைத்தவர்,
“சிரிச்ச முகத்தோட எங்களை அனுப்பு. இனி உனக்காகவே வாரவாரம் இங்க வர பார்க்கறோம்….” என்றவர் தங்கதுரையை பார்க்க,
“ஆமாடாம்மா. கண்டிப்பா. எங்களுக்கும் வேற யாரு இருக்கா?…” என்று சொல்லும் பொழுதே தழுதழுத்துவிட்டார். அவர் சொல்லியதில் மட்டுப்பட்டிருந்த அழுகை மீண்டும் கரையுடைக்க,
“எனக்கும் தான். எனக்கும் வேற…” என கண்ணீர் கரகரவென இறங்க தேம்பலுடன் மெல்லிய குரலில் அவள் பேச,
“ப்ச், அப்படி பேச கூடாது கீர்த்தி. உனக்கு ஒரு குடும்பம் இருக்கு. உன்னோட புருஷன் இருக்காரு. புரிஞ்சு பேசனும்…” என அதட்டிய கனகா,
“போதும், அழாம சந்தோஷமா இரு. நீயாவது சந்தோஷமா வாழறன்ற ஒரு நிம்மதியை எங்களுக்கு குடுடா. இப்படி எங்களை நினைச்சு அழுது எங்களை இன்னும் கஷ்டப்படுத்தாத…” என்று கலங்கி போய் கனகா சொல்லவும் வேகமாய் புடவை தலைப்பில் முகத்தை துடைத்தவளாக முயன்று தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டுவந்தாள்.
“நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். நீங்க ஊருக்கு போறீங்களேன்னு தான் எனக்கு வருத்தம். இங்க வரப்போ சேர்ந்து வந்தோம். இப்ப நீங்க மட்டும் கிளம்பறீங்களா அதான் அழுதுட்டேன். வேற ஒண்ணுமில்லை…” என சிரித்த முகமாய் அவள் சொல்ல,
“இது போதும்டா. நாங்க எங்க போக போறோம்? இந்தா இருக்கற ஊருக்கு. பார்க்கனும்னு ஒரு போன் பண்ணு. நாங்களே கிளம்பி வரோம். அதுக்குன்னு மாப்பிள்ளைட்ட சும்மா சும்மா எங்களை பார்க்கனும்னு சொல்ல கூடாது. இனி இது தான் உன் குடும்பம். இங்க உள்ளவங்களுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ…”
“ஹ்ம்ம்…”
“உன்னை நினைச்சு நாங்க பெருமைப்படற மாதிரி இருக்கனும். இப்படி போய் பொண்ண எடுத்துட்டோமேன்னு அவங்க நினைச்சிட்ட கூடாது. புரியுதா? இவங்க எல்லாருமே ரொம்ப நல்லவங்க. அவங்க முகம் சுருங்கற மாதிரி நடந்துக்காதே. முக்கியமா உன் வீட்டுக்காரர். பார்த்துக்கடா…”
கனகா ஏகப்பட்ட அறிவுரைகளை சொல்ல சொல்ல தாய் சொல்லியவை அப்படியே பதிய கனகாவிற்கு தெரியவில்லை ஏற்கனவே மன அழுத்தத்தில் இருப்பவள் இதனால் இன்னமும் அழுத்தத்திற்குள்ளாக போகிறாள் என்று.
“நீங்க சொல்றபடியே செய்யறேன். நீங்க சந்தோஷமா நிம்மதியா இருந்தா போதும்…” என்று வேதம் போல எடுத்து அவள் சொல்ல,
“சரிடாம்மா. நாங்க கிளம்பறோம். ஊருக்கு போய்ட்டு போன் செய்யறோம்…” என தங்கதுரை சொல்ல,
“இருங்கப்பா அத்தையை கூப்பிடறேன்…” என்றவளை மறுத்த கனகா,
“வேண்டாம்மா தொந்தரவு பண்ண வேண்டாம். அதான் சொல்லிட்டோமே…” என சொல்லி மகளின் கன்னத்தில் முத்தமிட்டவர்,
“மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பேசிடறோம். நீ பார்த்துக்கோடா…” என அணைத்து விடுவித்து கிளம்ப வாசல் வரை செல்லும் நேரம் சாதனா வந்துவிட்டாள்.
“கவலைப்படாம போய்ட்டு வாங்கம்மா. என் தங்கச்சி மாதிரி நான் பார்த்துக்கறேன்…” என்று தானாக முன்வந்து சொல்லிய பெண்ணை அன்பு பொங்க பார்த்தவர்கள்,
“எங்க ராகா மாதிரியே இருக்கடாம்மா…” என சொல்லிவிட்டு அவளிடமும் பேசி செல்ல வந்த அழுகையை அடக்கிக்கொண்டு புன்னகை முகமாய் அவர்களை வழியனுப்பினாள் கீர்த்தனா.
“கீர்த்தி…” என்ற சாதனாவை திரும்பி பார்த்தவள்,
“சொல்லுங்கக்கா…” என கேட்க அவளின் முகத்தையே பார்த்த சாதனாவிற்கு அவள் அழுகையை முயன்று அடக்குவது புரிந்து,
“நத்திங், நீ உன் ரூம்ல வேணும்னா ரெஸ்ட் எடு. நான் அப்பறமா உனக்கு கால் பன்றேன்…” என்று சொல்லவும் சரி என்று தலையாட்டியவள் அறைக்கு வந்ததும் ராகாவிற்கு அழைத்தாள்.
“அப்பாவும் அம்மாவும் வந்தாங்கக்கா…”
“சொல்லிட்டுதான் அங்க வந்தாங்க கீர்த்தி. கிளம்பனும்னு முடிவா இருக்காங்க. நான் சொல்லியும் பார்த்துட்டேன்…” என ராகா அவளின் மனத்தாங்கலை சொல்ல,
“ஓகே பார்த்துக்கோக்கா…” என சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
கண்ணை மூடி சாய்ந்திருந்தாலும் நினைவு மொத்தமும் பெற்றவர்களிடத்தில். ஏதோ ஒரு வகையில் மனதுக்கு நிறைவாய் இருந்தது சந்திரிகாவின் அணுகுமுறையும், உபசரிப்பு, மரியாதையான பேச்சும்.
அந்தளவிற்கு கீர்த்தனாவிற்கு நிம்மதியே. அவள் பயந்ததே இதற்கு தானே? அதற்கு அவசியமே இல்லை என்பதை போல சந்திரிகா புன்முறுவலுடன் பெற்றோரை வரவேற்று பேசி தங்களுக்கு தனிமை கொடுத்து அனுப்பிவைத்தது என அவரின் மேல் நன்மதிப்பை இன்னும் உயர்த்தியது.
காலை நினைத்து பயந்தவை எல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை போல அவர் நடந்துகொள்ள அவரின் சுபாவமே இதுதான் போல என நேராக சிந்திக்க ஆரம்பித்தாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் அக்னியிடமிருந்து அழைப்பு வந்துவிட்டது கீர்த்தனாவிற்கு.
“என்ன பன்ற கீர்த்தனா?…” என்றான் எடுத்ததுமே.
“நம்ம ரூம்ல தான் இருக்கேன். சொல்லுங்க…” என கேட்க,
“ஓஹ். ஹ்ம்ம்…” என்றவனின் மூச்சுக்காற்றின் சத்தம் மட்டும் நன்றாக கேட்க,
“போன் பண்ணிட்டு எதுவுமே பேசலையே நீங்க?…”
“ஹ்ம்ம் பேசனும் தான். என்ன பேசன்னு யோசிக்கறேன்…” என்றான் ஒருவித உல்லாச மனநிலையுடன்.
“ஓஹ், பேச எதுவும் இல்லாம அதுக்குள்ளே யோசிக்கறீங்க போல?…” என அவனுக்கு சரியாய் இவளும் பேச வாய்விட்டு சிரித்தவன்,
“பேச நிறைய இருக்குது. ஆனா எதை முதல்ல பேச, எதை அடுத்து பேசன்னு லிஸ்ட் போட்டுட்டு இருக்கேன்….”
“அப்போ கஷ்டம் தான்…” என்று இவள் உச்சுக்கொட்ட,
“ம்ஹூம், கஷ்டமில்லை. பிரச்சனை. பெரும் பிரச்சனை…” என்றான் கரகரத்த குரலில்.
“நீங்க இருக்கறது பேக்டரில…” என்றாள் வெட்கத்துடன் அனைத்து சஞ்சலங்களையும் மறந்தவளாய். மறக்கடித்தான்.
“சோ வாட்? என் பிரச்சனையை உன்கிட்ட சொல்லாம யார்க்கிட்ட சொல்லவாம்?…” என கேட்டுக்கொண்டே அந்த சுழல் நாற்காலியில் சுவற்றின் பக்கம் திரும்பிக்கொண்டு இவன் பேச பைலுடன் உள்ளே வந்த ஸ்ரீநி தான் கதவை தட்டியும் அவன் கண்டுகொள்ளாமல் இருக்க லேசாய் திறந்திருந்த கதவை நன்றாக திறந்தான்.
“ஒன்னும் சொல்ல வேண்டாம். அங்க வேலையை பாருங்க…” என கீர்த்தி விளையாட்டாய் விட்டேற்றியாய் சொல்ல அதில் புரிந்துகொள்ளாததை வேண்டுமென்றே அவள் பேச இவனும் மிரட்டுவதை போல,
“உன்னால தான்டி எனக்கு பிரச்சனையே. உன்னால மட்டும் தான். அப்ப உன்னை தானே கேட்பேன். பதில் சொல்லித்தான் ஆகனும்….” என்று இவன் குரலில் அப்படியே திகைத்து நின்றான் ஸ்ரீநிவாஸ்.
‘பிரச்சனை பிரச்சனை அக்னி கீர்த்தனா வாழ்க்கையில அதுக்குள்ளே பிரச்சனை. வேணும் இவங்களுக்கு நல்லா. என்னை என்ன பாடு படுத்தினாங்க. இதை விட பெரிய பிரச்சனை தினமும் பிரச்சனை ஆகட்டும். பழனி முருகா உன் கோவிலுக்கு வந்து உன்னை பார்க்கறேன்’ என மனமுருகி வேண்டியவன் கண்ணை திறந்து பார்க்க அக்னி இவனை பார்த்தபடி அப்படியே காதில் போனுடன் அமர்ந்திருந்தான்.
“என்ன வேண்டுதல் ஸ்ரீநிவாஸ்?…” என கேட்க,
“இல்லை ஸார், இது சொந்த பிரச்சனை…” என்றான் அவனும் சிரிப்புடன்.
“அப்ப ஏன் இங்க வரீங்க? போய் வேலையை பாருங்க…” என்று சொல்ல,
“இந்த பைல்…”
“வச்சுட்டு போங்க…” என டேபிளை காட்ட வைத்துவிட்டு திருப்தியுடன் கிளம்பினான் ஸ்ரீநிவாஸ்.
லைனில் இருந்த கீர்த்தி வாயை பொத்தியபடி சிரித்துக்கொண்டு இருக்க ஸ்ரீநிவாஸ் சென்றதும்,
“உன் மாமா தான். சரி அதை விடு நம்ம பிரச்…”
“மூச், இப்பலாம் யார் சாதாரணமா உண்மையான பிரச்சனைன்னு கேட்டா கூட என் மைண்ட் அங்க போகுது. போதும். இதுக்கு மேல சொன்னீங்க பாருங்க…” என்று அதட்டல் தொனியில் சொல்ல,
“திருமதி தீப்பொறி தீ தான். இனி நீ கீர்த்தி இல்லை தித்தீ. திருமதி தீப்பொறி…” என்று கேலி பேச,
“இன்னைக்கு அங்க ஒரு வேலையும் ஆக போறதில்லை. இதுக்கு இங்க வீட்டிலையே இருந்திருக்கலாம் நீங்க…” என சொல்ல,
“இருக்கலாம் தான். ஆனா முடியலையே…” என வார்த்தைகளை இழுத்தவனின் குரலின் பேதத்தை உணர்ந்தவள்,
“நான் வைக்கறேன். பை…” என சொல்லி அவசரமாய் அழைப்பை துண்டித்ததும் புன்னகையுடன் மொபைலை பார்த்தபடி இருந்தவன் மனது சற்று லேசானது.
சற்று முன்னர் தான் தங்கதுரை அழைத்து வீட்டுக்கு வந்ததையும், ஊருக்கு கிளம்புவதையும் சொல்லியவர் கீர்த்தனாவை பார்த்துக்கொள்ளும் பத்தியும் அத்தனை வேண்டுதலாக கேட்டுகொண்டார். அதற்கும் மேல் கனகா.
அவனிடம் இயல்பாய் பேசவே அத்தனை தயக்கம். அவ்வளவு யோசனை. அனைத்திற்கு மேலாக அதில் ஒரு பயந்த தன்மை. மனது கனத்து போனது அவர்களை நினைத்து.
பெண்களை பெற்றவர்களின் நிலை அவர்களை திருமணம் செய்துகொடுத்த பின்பும் இப்படி இருந்திருக்க வேண்டாம் என நினைத்தான்.
இதற்கு ஆண்களும் ஒரு காரணமல்லவா. வாழ்க்கையை அர்த்தமாக்க வாழ்க்கையாய் வந்தவள். தாங்கவில்லை என்றாலும் தவிக்கவிடுவது எந்தவிதத்தில் நியாயம்?
கண்ணாடி தடுப்புக்கு அந்த பக்கம் இருந்த ஸ்ரீநியை பார்த்தபடி இருந்தான் அக்னிசெல்வன்.
‘இவன் சரியாக இருந்திருந்தால் அவர்களுக்கு இந்த பரிதவிப்பு நிலை ஏன்?’ என்று தான் தோன்றியது.
இன்னொருவரின் வாழ்க்கையில் சென்று நியாயம் பேச தனக்கு உரிமை இல்லை தான். அதே நேரம் கண்ணுக்கெதிரில் தானும் மாமனார், மாமியாராகிவிட்ட போது இனி நான் கேட்பேன், கேட்க முடியாதென யாரும் சொல்லமுடியாது என நினைத்தான்.