அக்னிசெல்வனுக்கு ஓரளவுக்கு தெரியும் ராகாவின் திருமணத்தின் பின்னான அவர்களின் நடவடிக்கையும் செயல்பாடுகளும், குடும்ப கஷ்டங்களும்.
அப்பொழுதெல்லாம் கேட்க எந்த உரிமையும் இருந்திருக்கவில்லை. உரிமையில்லாத பொழுதே அந்த இக்கட்டான சூழ்நிலையில் முன்னின்றவன். இப்பொழுது விட்டுவிட முடியுமா?
முகம் இறுக அவனை பார்த்தபடியே அக்னி இருக்க அவனின் பார்வையை உணர்ந்ததால் ஸ்ரீநிவாஸ் திரும்பி அவனை பார்த்தான். பார்த்தவனுக்கு முதுகுத்தண்டு சில்லிட ஒருகணம் அதிர்ந்து போனான்.
‘என்ன பார்வையில ஒரு கொலைவெறி? அப்படி என்ன பண்ணிட்டேனாம்?’ என திகைத்து பார்த்தவன் இன்னும் அக்னி அப்படியே அவனை பார்த்தபடி இருக்க,
‘புரிஞ்சுபோச்சு, கீர்த்தியோட பிரச்சனை. அவளுக்கு நான் மாமான்றதால இந்த கில்லிங் லுக். என்னையவே இந்த பார்வைன்னா பிரச்சனை பன்ற கீர்த்தி மேல எம்புட்டு கோவமோ?’ என நினைத்தவன்,
‘இருக்கட்டும் இருக்கட்டும். பஞ்சாயத்துன்னு கூப்பிடட்டும் ராகா அப்பா. சேர்த்து வச்சுக்கறேன்’ என்று சூளுரைத்தவன் மீண்டும் அக்னியின் பக்கம் திரும்ப அச்சப்பட்டு வேலையில் ஆழ்ந்தான்.
அவனின் முகபாவனைகளை அவதானித்தபடி அமர்ந்திருந்த அக்னியின் மொபைல் மேநேடும் இசைக்க எடுத்து பார்த்தவன் முகம் அனைத்தையும் விடுத்து புன்னகைத்தது.
“என்னவாம் தீத்தீ உடனே போன்? சால்வ் பண்ணலாம்ன்னா?…” என்று சிரிக்க,
“ஐயோ அதில்லை. வேற சொல்ல கூப்பிட்டேன்…”
“சொல்லேன்…” என்றவன் ஸ்ரீநிவாஸ் கொண்டு வந்து வைத்த பைலை பார்த்துக்கொண்டே பேச,
“அப்பாவும் அம்மாவும் வந்திருந்தாங்க. உங்கக்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். நீங்க பேசினதுல மறந்துட்டேன்…” என அவள் சொல்ல அதற்கும் புன்னகை தான்.
“இப்படித்தான் என்னை மட்டும் நினைச்சு என்னையே நினைச்சே வெய்ட் பண்ணுவியாம். நான் வந்திருவேனாம்…” என,
“ஆமா உடனே வந்திருவீங்க. போங்க நீங்க…”
“எங்க டாப்ஸ்லிப் போவோமா?…” என்றான் சீண்டலாய்.
“இந்த ஊர் எல்லையை தாண்டிடுவேனா நான். சுத்தமா தூங்கலை…”
“அதுக்கா போனோம்?…” என கிசுகிசுப்பாய் கேட்டு அவன் அடக்கமாட்டாமல் சிரிக்க,
“ப்ச், சும்மா இருங்க. நைட் எல்லாம் மாத்தி மாத்தி எதாச்சும் கத்தி பயந்துட்டே இருந்தேன். யானை கத்துதா? சிங்கமா? புலியான்னு. இனி அங்க சும்மா பகல்ல கூட போக மாட்டேன்…”
“நீயா முடிவெடுத்தா போதுமா என்ன?…” என்றவனின் குரலில் சவால்.
“உங்களுக்கு எதுக்கு கால் பண்ணேன்?…”
“நீ தான் சொல்லனும்…”
“சொல்லவே விடலையே. டைவர்ட் பன்றீங்க நீங்க…” என்றவள் அதற்கும் பதில் பேச வந்தவனை அனுமதிக்காது,
“எங்கப்பாம்மா வந்திருந்தாங்க. ஊருக்கு கிளம்பறாங்களாம் இன்னைக்கு. உங்கக்கிட்ட சொல்லிட்டு போகலாம்னு வந்தாங்க…” என்றவளின் குரல் வருத்தத்துடன் ஒலிக்க,
“எனக்கும் கால் பண்ணினாங்க. பேசிட்டேன்…” என்றான் அமைதியாக.
தான் அழைத்து பேசும் பொழுது இருந்த குரலுக்கும், இப்பொழுது அவளே அழைத்து சொல்லும் குரலுக்கும் ஏக வித்தியாசங்கள். இதுதானே அவனுக்கும் வேண்டும்.
அப்பொழுதே இதை சொல்லியிருந்தால் அழுதுகொண்டே பேசியிருப்பாள். அதற்காகவே தானே அழைத்து அவளின் மனநிலையை மாற்றினான். இப்பொழுது பேசுபவளின் மனநிலை முற்றிலும் மாறுபட்டு இருக்க,
“வீக்லி ஒன்ஸ் வர சொல்லிருக்கேன் கீர்த்தி. அங்க கொஞ்சம் வேலை முடியட்டும். அவங்களே வருவாங்க…” என்றவன்,
“கொஞ்சம் நாள் உன் தொல்லை இல்லாம ரெண்டு பேரும் அவங்க லைபை வாழட்டுமே. ஊடால சுவர் மாதிரி நீ இருந்திருப்பா. இப்பத்தான் பலவருஷம் கழிச்சு அவங்களுக்குன்னு ஒரு தனிமை கிடைச்சிருக்கு. ஹேப்பியா இரேன்…”
அவன் சொல்லவும் கீர்த்தனாவுக்குமே அவன் சொல்லியவிதத்தில் அதில் புன்னகை தான். ஆனால் தான் குடும்பத்தின் பொருளாதார நிலை அப்படி இல்லையே. அந்த கசப்பை விழுங்கியபடி அவனையும் வருந்தச்செய்ய கூடாதென அதை மறைத்துவிட்டு,
“ஹ்ம்ம், சரி தான். ஓகே போன் வச்சிடறேன்…”
“ஏனாம்?…” என்று இவன் பேச்சை வளர்க்க,
“சொல்லிட்டேன். வைக்கறேன்…”
“ப்ச், வைக்கலாம், வைக்கலாம். நான் கால் பண்ணினப்போ நீ கட் பண்ணினல்ல. இப்ப நீ கால் பண்ணிருக்க. நான் தான் கட் பண்ணுவேன்…” என்றவனின் பேச்சுக்கள் அவளின் கவலைகளை எல்லாம் மறக்கடிக்கும் விதமாய் இருந்தது.
பேச அவர்களுக்குள் ஏகப்பட்ட விஷயங்கள் கொட்டிக்கிடக்க அவளையும் நன்றாக பேச வைத்துவிட்டே இவன் போனை வைத்தவன் வேளை அப்படியே இருப்பதை பார்த்துவிட்டு தலையை உலுக்கியவனாய் தன்னை மீட்டுக்கொண்டு கவனத்தை அதில் செலுத்தினான்.
இங்கே ஸ்ரீநி அவன் பேசி முடித்து போனை வைக்கும் பொழுது திரும்பி பார்க்க அக்னி தலையை உலுக்கிக்கொண்டு வேலையை பார்ப்பதை பார்க்கவும்,
‘சும்மாவா சம்சாரின்னா. அனுபவி ராஜா அனுபவி’ என்று வன்மமாய் வசனம் பேசியபடி மனதினுள் அக்னியை போட்டு வறுத்துக்கொண்டு இருந்தான்.
மதிய உணவு நேரம் நெருங்கியும் வேலை முடியாமல் இருக்க அப்படியே விட்டுவிட்டு செல்லமுடியாது போக மூன்றுமணி அளவில் தான் முடித்துவிட்டு கிளம்பினான் அக்னி.
அவன் வரும் வரை கீர்த்தனாவும் சாப்பிடாமல் இருக்க பன்னீர்செல்வம் கூட ‘அவன் வரும் நேரம் வரும் நீ சாப்பிட்டு’ என்றதற்கு தன்மையாக மறுத்துவிட்டாள்.
அவன் வரும் நேரம் அனைவருமே மதிய உறக்கத்தில் இருக்க அடைக்கலத்துடன் பன்னீர்செல்வம் பேக்டரிக்கு கிளம்பிவிட்டார். மகன் வீட்டில் நுழையவுமே,
“அக்னி, நானும் தம்பியும் பேக்டரி போறோம். நீ வீட்டில இரு. நாளைக்கு வந்துக்கலாம்…”
“இல்லப்பா அங்க ஒரு முக்கியமான வேலை இருக்கே…”
“ஏன் நாங்க பார்க்க கூடாதா?…” என்றார் அவர் சிரிப்புடன்.
“கீர்த்தி அப்பம்மாவும் இன்னைக்கு ஊருக்கு கிளம்பிட்டாங்க போல அக்னி. கூட இருப்பா. இங்க இன்னும் ஒத்துபோக நாளாகும். அதனால நீ தான் கொஞ்சம் நாள் பார்த்துக்கனும்…” என அடைக்கலம் சொல்ல,
“சரிங்க சித்தப்பா…” என்றான் அக்னி இளநகை தவழ.
“அப்பாவுக்கு நோ. சித்தப்பாவுக்கு எஸ். எனக்கு தெரியாம என்ன நடக்குது இங்க? கொஞ்சம் நாளா பார்த்துட்டு தான இருக்கேன். கல்யாணம் முடிஞ்சும் எதுவும் சொல்லாம இருக்கீங்க. பார்த்துக்கலாம்…” என பன்னீர்செல்வம் சிரிப்புடன் சொல்ல,
“நான் போய் சாப்பிடறேன்…” என்று அங்கிருந்து அவன் நழுவி செல்ல,
“கிளம்புவோம் அண்ணா, வேலை எக்கச்சக்கம் இருக்கு…” என்று அடைக்கலம் பேச்சை மாற்ற,
“சரி சரி, பண்ணுங்க…” என சிரிப்புடன் அவருடன் சென்றார் பன்னீர்செல்வம்.
சாப்பிடாமல் நேராம மாடிக்கு சென்றவன் கீர்த்தனாவை பார்க்க அங்கே அவளோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
முதல்நாள் இரவெல்லாம் உறங்காமல் இருந்தது, மதியம் இவனுக்காக சாப்பிடாமல் இருந்தது என முயன்று தூக்கத்தை விரட்டியபடி இருந்தவள் அவனுக்காக காத்திருந்து தன்னை மறந்து உறங்கினாள்.
“கீர்த்தி…” என அவளின் கன்னம் தொட்டு எழுப்ப அவள் அசையவே இல்லை.
அப்படி ஒரு உறக்கம். கண்ணை கூட விழிக்க முடியாமல் புரண்டு படுக்க மீண்டும் எழுப்பி பார்த்தவன் அதற்கு மேல் எழுப்ப மனமின்றி கீழே சென்று இருவருக்குமான உணவை எடுத்து வந்து கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டு அவளுக்கருகே படுத்தவன் தானும் கண்ணயர்ந்தான்.
ஐந்து மணிவாக்கில் தான் அவள் விழிக்க அவளின் அசைவில் தானுமே விழித்தவன்,
“முழிச்சுக்கலையா கீர்த்தி?…” என்றான் அவளின் கழுத்துக்கடியில் முகம் சாய்த்து.
“ஹ்ம்ம், தலை வலிக்குது…” என்றாள் அயர்ந்த குரலில்.
“சாப்பிடாம தூங்கினா வலிக்காம. எழுந்துக்கோ….” என தானும் எழுந்தமர்ந்து கொண்டு வந்த உணவை அவளிடம் நீட்ட,
“போய் முகத்தை கழுவிட்டு வரேன்…” என்று எழுந்து சென்றாள். மீண்டும் வந்தவள்,
“நீங்க சாப்பிட்டாச்சா?…” என கேட்டுக்கொண்டே தட்டை வாங்கிக்கொள்ள,
“ஹ்ம்ம் சாப்பிட்டேன். நீ சாப்பிடு முதல்ல. நானும் போய் குளிச்சுட்டு வரேன்…” என அவன் உருண்டு இறங்க,
“கோவிலுக்கு கூட்டிட்டு போறீங்களா?…” என்றாள் அவனிடம்.
திரும்பி அவளின் முகம் பார்த்தவன் சோர்ந்து இருந்தவளை கண்டு லேசாய் முறைத்து,
“கூட்டிட்டு போங்கன்னு சொல்லேன். அதென்ன போறீங்களா? இப்படி பேசினா நோ தான். இதான் லாஸ்ட் உனக்கு…” என்றான் உத்தரவாக.
அவனின் பேச்சில், கோபத்தில் புன்னகைத்தவள் தட்டில் இருந்ததை மெதுவாய் சாப்பிட,
“உனக்கு தலை வலின்னு சொன்னியே. ஒன்னும் பிரச்சனை இல்லை தானே?…” என கேட்க,
“ம்ஹூம், போகலாம். டேப்லட் போட்டா சரியாகிடும்…” என சொல்லி பாதி தான் உண்ண முடிந்தது அவளால்.
“என்னால சாப்பிட முடியலை….” என என்ன நினைப்பானோ என்று நினைத்து சொல்ல,
“சரி வச்சிடு. அவ்வளவு தானே?…” என்றவன் குளியலறைக்கு சென்றுவிட அந்த உணவையே பார்த்தபடி இருந்தாள் கீர்த்தனா.
உணவு கழிப்பு. எந்த சூழ்நிலையிலும் அவளுக்கு கற்றுதரப்படவில்லை. நன்றாக இருக்கும் போதும் சரி, கஷ்டப்படும் போதும் சரி இருப்பதை கொண்டு கழிக்காமல் தான் உண்டனர்.
இனி மீண்டும் அவர்களின் சிக்கனம். நினைக்கும் பொழுதே கண்களின் முணுக்கென கண்ணீர் படர அந்த உணவை முடியவில்லை என்றாலும் மெதுவாய் சிரமத்துடன் விழுங்க துவங்கினாள்.
“கீர்த்தி…” என குளித்துவிட்டு ஐந்து நிமிடத்தில் வந்தவன் அவள் உண்ணுவதை பார்க்க அவளின் சிரமம் புரிந்து அருகில் மறந்தான்.
“நான் கூட தான் சரியா சாப்பிடலை, எனக்கும் கொஞ்சம் குடேன்….” என்று அவளின் கைகளில் இருந்த உணவை தனக்குள் வாங்கிக்கொள்ள,
“ஏன் சரியா சாப்பிடலை. என்னை எழுப்பிருக்கலாம்ல…” என சற்றுமுன் நினைத்ததை மறந்தவளாக அவனிடம் பேச அவனும் பொதுவான பேச்சுக்களுடன் அந்த உணவை வாங்கிக்கொண்டான்.
அவனளவில் அவனை புரிந்து வைத்திருந்தான். அவளின் குடும்ப சூழ்நிலை ஓரளவு அறிந்ததனால் எதையும் கேட்காமல் அமைதிகாத்தான். அவளாக பகிரும் வரை கேட்டு சிரமப்படுத்த எவ்ண்டாம் என்ற முடிவுடன் அவளின் முகம் பார்த்து கவனிக்க ஆரம்பித்தான்.
மொத்தமாய் சாப்பிட்டு முடித்ததும் கையை கழுவிவிட்டு அந்த தட்டுகளை எடுத்துக்கொண்டு கதவை திறக்க போக,
“முடிஞ்சது…” என வேகமாய் வந்து அவளை தடுத்து கதவை மறைத்து நின்றவன்,
“அந்த பிளேட்டை அங்கயே வச்சிரு…” என சொல்ல,
“ஏன்? காய்ஞ்சு போய்டுமே. நான் கொண்டு போய் வச்சிடறேன்…” என அவள் சொல்ல,
“சொன்னா கேளு கீர்த்தி. கொண்டு போய் வச்சிடு நீ போய் ரெடியாகி வா. கோவிலுக்கு தானே போகனும். கிளம்புவோம்…” என அவளை மேலும் பேசவிடாமல் வம்படியாய் கிளப்பிக்கொண்டு கீழே வந்தான்.
“அக்னி பேக்டரி போகலை?…” என அவனை அந்த நேரத்தில் ஆச்சர்யமாய் பார்த்த சந்திரிகா இருவரும் கிளம்பி இருப்பதை பார்த்துவிட்டு,
“வெளில கிளம்பியாச்சா…” என்றார்.
“ஆமாம்மா. கோவிலுக்கு போய்ட்டு வரோம்…”
“நல்லது பார்த்து போய்ட்டு வாங்க…” என சொல்லி,
“கீர்த்தி பூ வச்சுக்கலையா?…” என கேட்டவர்,
“மாலதி பூ எடுத்துட்டு வா…” என்று கூப்பிட,
‘ஆரம்பிச்சுட்டார்’ என கிண்டலாக நினைத்தாள் கீர்த்தனா.
“இனி வெளில போகும் போதும் சரி வீட்டுல இருக்கும் போதும் சரி தலையில எப்பவும் பூ வச்சுக்கோ. உனக்கு பூ வைக்கிறதால ஒன்னும் இல்லையே?…” என கேட்க,
“இல்லை அதெல்லாம் இல்லை அத்தை…”
“சாதனாவுக்கு மல்லிகை பூ சேராது. ஆனா மத்த பூ வச்சுப்பா. அது மாதிரி…”
“இல்லை அப்படி எதுவும் இல்லை…” என்றதும் மாலதி பூவுடன் வர வாங்கி வைத்துக்கொண்டாள்.
இருவரின் பேச்சையும் கேட்டபடி இருந்தவன் இடையில் பதில் சொல்லாமல் பார்த்தபடியே இருக்க,
“பார்த்து போய்ட்டு வாங்க…” என அவர்களை அனுப்பி வைத்தவர்,
“மாலதி ரெண்டு பேரும் கோவில்ல இருந்து வரவும் திருஷ்டி எடுக்கனும். தயாரா வச்சிரு…” என்று சொல்லிவிட்டு சென்றார் மகிழ்ச்சியுடன்.
———————————————————–
அந்த அறையில் பன்னீர்செல்வம், அடைக்கலம், சுரேன் மூவரும் இருக்க அக்னி இங்குமங்கும் நடந்துகொண்டு இருந்தான்.
முகம் அக்னி ஜுவாலையாய் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டு இருந்தது. அவனின் கோபத்தை கவலையுடன் பெரியவர்கள் இருவரும் பார்த்துக்கொண்டு இருக்க சுரேன் ஸ்ரீநிவாஸ் வெடவெடத்து நிற்பதை கண்டு முறைப்புடன் இருந்தான்.
“இதுல நாங்க என்ன பண்ண முடியும் ஸ்ரீநி?…” என பன்னீர்செல்வம் கையை விரிக்க,
“அப்படி சொல்லாதீங்க ஸார். நான் என்ன சொன்னாலும் அக்னி ஸார் நம்ப மாட்டேன்றார்…” என அவன் சொல்ல அக்னியின் தீ பார்வை அவனை சுட்டெரித்தது.
“நீ நம்பிக்கை வர அளவுக்கு எதுவும் சொல்லையே ஸ்ரீநி…” என அடைக்கலமும் கேட்க பதில் சொல்லமுடியாமல் திணறி நின்றான்.
“ஏதோ கவனக்குறைவால…”
“எதே? கவனக்குறைவா? இந்த பேக்டரிக்கு முதல் போட்டது நீயா? எல்லாம் என்னோட உழைப்பு. ஈஸியா கேர்லஸ்ன்னு சொல்ற? உண்ணா எவ்வளவு பெரிய நஷ்டம்?…” என்று அப்படியே அவனை கொத்திவிடுவதை போல அக்னி வந்து நிற்க ஸ்ரீநிவாஸ் நடுநடுங்கி போனான்.