கவிதை – 15
கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு அமர்ந்ததில் இருந்து கீர்த்தனாவின் மனதில் ஒருவித அமைதி நிலைபெற்றிருந்தது.
மனதின் மூலையில் பெற்றோரை பற்றிய எண்ணங்கள் இருந்தாலும் தன் புகுந்த வீட்டில் அவர்களுக்கான மரியாதை கிடைக்க பெற்றதில் மனதிற்குள் நெகிழ்ந்து தான் இருந்தாள்.
“கீர்த்தி…” என்றவனின் பக்கம் திரும்பியவளிடம் அக்னி தன் கையை நீட்ட பார்த்தவளின் முகத்தில் புன்னகை.
“எப்படி கண்டுபிடிச்சீங்க?…” என கேட்டுக்கொண்டே அர்ச்சனை கூடையில் இருந்த கயிற்றை எடுத்தாள்.
“வாங்கிருப்பன்னு தோணுச்சு. அதான். பெருசா ஒண்ணுமில்லை…” என சொல்லியவனின் கையில் கயிற்றை கட்டியவள்,
“அன்னைக்கு என்ன கோவமா என்னை முறைச்சீங்க? என்னவோ தேடி வந்து தொட்டுட்ட மாதிரி. இப்ப என்னன்னா கட்டு கட்டுன்னு நிக்கறீங்க…” என கேலி பேச,
“கோவில்ல வச்சு இதெல்லாம் பேசுவாங்களா என்ன? கிளம்பு, போய்ட்டே பேசுவோம்…” என்று எழுந்து நடக்க அவனுடன் சேர்ந்து நடந்தவள்,
“இதே கோவில்ல வச்சு தானே அன்னைக்கு என்னை மிரட்டி உங்க கைல கட்டிவிட சொன்னீங்க…”
“நான் பேசினது உனக்கு மிரட்டினது மாதிரியா இருந்துச்சு?…” என கேட்டுக்கொண்டே கை சட்டையை முழங்கை வரை இழுத்துவிட்டவன் பைக்கை எடுத்தான்.
“ஏறு…” என்றவனின் குரலில் வண்டியில் ஏறி அமர்ந்தவள்,
“நான் கேள்வி கேட்டா பதிலுக்கு பதில் சொல்லாம நீங்க கேட்கறீங்க?…” என சொல்ல சிரித்தபடி பதிலின்றி வீட்டை நோக்கி சென்றான்.
“இனி பேசினேனா என்னன்னு கேளுங்க…” என அவளும் அமைதியாகிவிட அதற்கும் பதிலில்லை.
பத்து நிமிடத்தில் வீட்டில் கொண்டு வந்துவிட்டவன் தோட்டத்திற்கு சென்று வருவதாக சொல்ல,
“இருங்க, கோவிலுக்கு போய்ட்டு வீட்டுக்குள்ள வராம அப்படியே கிளம்ப கூடாது…” என்று அவனை கூட்டிக்கொண்டே உள்ளே வந்தாள்.
“என்னம்மா தரிசனம் முடிஞ்சதா?…” என்று ஹாலில் அமர்ந்திருந்த சுபா கேட்கவும் அவரிடம் பிரசாதத்தை நீட்டியவள் சாதனாவை தேட,
“மாடில இருக்காம்மா. நீ பூஜை ரூம்ல வச்சிடு. வந்து எடுத்துப்பா…” என்றவர் கையில் இருந்த புத்தகத்தில் அமிழ்ந்துவிட்டார்.
“ஓகே நீ போய் வச்சிட்டு வா, நான் கிளம்பறேன்….” என்று அவன் திரும்பி செல்ல வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.
“அடடா, அக்னி. நீ உட்காருப்பா. இந்நேரம் எங்க போய்ட்டு?…” என சுபா சொல்லவும் ஒன்றும் பேசாமல் அமர்ந்துவிட்டவன் போனில் பேக்டரிக்கு அழைத்து பேச ஆரம்பித்தான். சிறிது நேரம் கழித்து தான் சந்திரிகா வந்தார்.
“என்னம்மா கோவிலுக்கு போய்ட்டு வந்தாச்சா?…” என அவரும் கேட்டுக்கொண்டே பூஜையறைக்கு சென்று பிரசாதத்தை வைத்து கொண்டவராய் வந்து அமர்ந்தவர் தொழில் நிலவரங்களை கேட்டபடி அவர் இருக்க சிறிதுநேரம் அங்கேயே வேடிக்கை பார்த்தவள் மாடிக்கு சென்றுவிட்டாள்.
சிறிது நேரம் கழித்து அக்னியும் அவளை தேடி அங்கே செல்ல தனது பெட்டிகளை பிரித்து வைத்துக்கொண்டு துணிகளை வகைகளை தனித்தனியே பிரித்து வைத்துக்கொண்டு அமர்ந்திருக்க,
“நான் கீழே இருக்கேன். நீ என்னன்னா இங்க வந்து தனியா உட்கார்ந்திருக்க?…” என கேட்டபடி வாட்சை கழற்றி டேபிளில் வைத்துவிட்டு அவளுக்கெதிரே ஒரு குஷனை இழுத்து போட்டு அமர்ந்தான்.
அவன் பேசியவற்றை அவனின் முகம் பார்த்தபடி உள்வாங்கிகொண்டவள் பதில் ஏதும் பேசாமல் மீண்டும் குனிந்து துணிகளை பிரிக்க ஆரம்பிக்க,
“கீர்த்தி, பேசினா பதில் சொல்லமாட்டியா? உன்கிட்ட தான் பேசறேன்…” என முறைக்க,
“வேலை இருந்தது. வந்ததில் இருந்து இந்த பெட்டி எல்லாம் அப்படியே இருக்கு. எடுத்து பிரிச்சு அடுக்கனுமே. அதான் மாடிக்கு வந்தேன்…”
‘நீ எனக்கு பதில் சொல்லவில்லை, தானும் பேசவில்லை’ என சொல்லாமல் கவனமாய் மனதை மறைத்தவள்,
“நிஜமா அதுக்கு தான் வந்தேன்…” என அழுத்தமாய் சொல்ல அப்போதும் அவனின் முறைப்பை விடாமல் அவளை பார்க்க வேறு வழியின்றி,
“நீங்க வேலையா பேசிட்டு இருந்தீங்க. எனக்கு அங்க யார்கூட பேச? சுபா அத்தை புக் படிச்சிட்டு இருந்தாங்க. நீங்களும் அத்தையும் பேசிட்டு இருந்தீங்க. ஏற்கனவே உங்களுக்கு தோட்டத்துக்கு போக விடாம வீட்டுக்குள்ள வரவழைச்சுட்டேன்னு டென்ஷன். அதான்…” என முணுமுணுப்பாக சொல்லியிருந்தாலும் அவனுக்கு கேட்கும் விதமாகவே தான் கூறினாள்.
“நான் டென்ஷனா இருக்கேன்னு உனக்கு யார் சொன்னா?…”
“யார் சொல்லனும்? இதோ முறைக்கறீங்களே…” என குற்றம் சொல்லுவதை போல அவள் பேச வாய்விட்டு சிரித்தவன்,
“இதுக்கு பேர் செல்ல முறைப்புன்னு கூட வச்சுக்கோயேன்…” என மேலும் சீண்டுவதை போல சிரித்து அவனருகே இருந்த புடவையை அவளை நோக்கி வீச,
“ப்ச், புடவை எல்லாம அயர்ன் பண்ணினது. கலைக்காம உட்கார்ந்து பேசுங்க. திரும்ப மடிச்சுட்டு இருக்கனும்…” என்று அந்த புடவையை நன்றாக மடிக்க,
“அதனால என்ன? கலைஞ்சு போச்சுன்னா நான் ஹெல்ப் பன்றேன்….” என்றான் விஷமத்துடன்.
“ஒன்னும் வேண்டாம். நீங்க முறைச்சாலே பர்ஸ்ட் டைம் கயிறு காட்டினப்போ முறைச்சதும், செகெண்ட் டைம் உங்க ஷர்ட்ல மஞ்சள் ஒட்டினப்போ முறைச்சதும் தான் ஞாபகம் வருது…” என சொல்ல இன்னும் அவன் அட்டகாசமாய் சிரித்தான் அவளின் முகபாவனையில்.
“ப்ச், சிரிப்பா உங்களுக்கு? அதுவும் அன்னைக்கு சொன்னீங்க பாருங்க ஒரு டயலாக். கல்யாணத்துக்கு முன்னாடி அப்படியெல்லாம் பேசறீங்க என்கிட்டே. கல்யாணம் பேச கூட இல்லை அப்போ. எனக்கு நீங்க என்கிட்டே பேசின ஷாக்கை விட நீங்க அப்படி பேசினது தான் ஷாக். உங்களை என்னவோன்னு நினைச்சிருந்தேன்…” என சொல்ல,
“என்ன சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்…” என மீண்டும் மீண்டும் அவளை கோபப்படுத்தும் விதமாய் அவனுக்கருகே பெட்டியில் இருந்த உடைகளை அள்ளி அவள் மீது போட்டுக்கொண்டே இருக்க,
“என்ன விளையாட்டு இது? இதை எல்லாம் திரும்ப மடிச்சு அடுக்க முடியாது. பேசாம இருங்க…” என்று அவனிடம் சொல்ல,
“பேசலைன்னு நீயே சொல்லிட்டு இப்ப பேச வேண்டாம்னும் நீ தான் சொல்ற. நான் என்னதான் பண்ண?…”
“ஒன்னும் பண்ண வேண்டாம். கொஞ்சம் நேரம் வேலை பார்க்க விடுங்க…” என பெரிய கும்பிடாய் போட,
“அதெல்லாம் முடியாது. ஏன் விட்டுட்டு வந்த?…” என்றன வம்பாய்.
“அடடா, இது உங்க வீடு. இதுல தொலைஞ்சா போக போறீங்க? வேலை இருக்குன்னு வந்துட்டேன். இது ஒரு பிரச்சனையா?…” என வார்த்தையை விட்டு பின்,
“இத சொல்ல கூட முடியலை…” என முறைத்தாள் அவள்.
“இந்த பிரச்சனையை ஆரம்பிச்சு வச்சதே நீதான் கீர்த்தி. என்னை சொல்லாத…” என பழியை அவள் மீதே தள்ள,
“இது அடுக்கவே அடுக்காது….” என்று வாயில் கை வைத்தாள்.
“எங்க அடுக்கனும்னு சொல்லு, நான் அடுக்கி காட்டறேன். நீயா ஒரு முடிவுக்கு வர கூடாது கீர்த்தி…” என்று கண்கள் சிரிக்க மிக தீவிரமான முகபாவனையுடன் அவன் சொல்ல,
“நான் சைலன்ட்…” என்றாள் கோபமாக.
“ஆமா, நீ தான கோவில்ல வச்சு உங்களுக்கு என்ன பிரச்சனை பிரச்சனைன்னு கேட்டுட்டே இருந்த. அதான் என் பிரச்சனையை அப்ப சொல்ல முடியாதுன்னு சொன்னேன். கல்யாணம் முடியவும் கூட அன்னைக்கு நைட் நீயா தான் கேட்ட. நல்லா நோட் பண்ணு. நீயா தான் அப்பவும் கேட்ட…”
“அதுக்கு…”
“ஆமா பொண்டாட்டி கேட்டு புருஷன் சொல்லாம இருக்க கூடாதுல. அதான் என்னோட பிரச்சனை எல்லாம் உன்கிட்ட சொன்னேன். இது தப்பா?…” என்றவனை பார்த்து ஆவென வாயை பிளக்க கீர்த்தனாவின் மொபைல் சிணுங்கியது.
“நீ உட்கார் நான் எடுத்துட்டு வரேன்…” என்றவன் அவளின் மொபைலை கொண்டு வந்து தரவும் வாங்கியவள்,
“சொல்லுக்கா…” என ஸ்பீக்கரில் போட்டுவிட்டு கலைந்து இருந்த உடைகளை மடிக்க ஆரம்பித்தாள்.
“கீர்த்தி ஒன்னும் பிரச்சனை இல்லையே…” என பதட்டத்துடன் ராகா கேட்க அவளை பார்த்தபடி அமர்ந்திருந்த அக்னி திடுக்கிட்டு பார்க்க கீர்த்தனாவிற்கு தூக்கிவாரி போட்டது.
“என்னது? என்ன கேட்கிற நீ?…” என மீண்டும் கேட்க,
“மாமா வந்து சொன்னாங்க உன் வீட்டுக்காரர் உன்னால ஏதோ பிரச்சனைன்னு போன்ல உன்னோட சண்டை போட்டதா. இங்க இந்த மனுஷனுக்கு அப்படியே குளிர்ந்திருச்சு போல. என்கிட்டே குத்தலா பேசிட்டு போறாரு…”
“என்னன்னு பேசினார்?…” என கீர்த்தனா அக்காவிடம் கேட்டபடி அக்னியை முறைக்க அவனோ கன்னத்தில் கை பதித்து கதை கேட்கும் பாவனையில் அடக்கப்பட்ட புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
அவனின் அந்த கோலத்தில் கோபம் பெருக கையில் இருந்த உடையை எடுத்து அவன் மீது வீசினாள். பதிலுக்கு அவனும் வீசி எறிய மாறி மாறி அந்த அறையையே அலங்கோலம் ஆக்கினார்கள்.
“உன் தங்கச்சியை அவ்வளோ பெரிய வீட்டுல கட்டிக்குடுத்தும் அவளுக்கு வாழ தெரியலை. என்னதான் வளர்த்து வச்சிருக்கீங்கன்னு என்கிட்டே நக்கல் பண்ணிட்டு போறாருடி. எனக்கு மனசே சரியில்ல…” என கவலையுடன் ராகா சொல்ல,
“ஐயோ அக்கா உனக்கு என்னனு புரியவைக்க? அவர் என்கிட்டே நல்லா தான் நடந்துக்கறார். எங்களுக்குள்ள நீ நினைக்கிற மாதிரி ஒரு பிரச்சனையும் இல்லை…” என கீர்த்தனா சொல்ல அக்னியோ,
“சத்தியமா இல்லையா?…” என மெல்லிய குரலில் அவளிடம் குறும்புடன் கேட்க அவனை விரல் நீட்டி முறைப்புடன் எச்சரித்தவள்,
“நீ இதை நினைச்சு கவலை படாத. நான் நல்லா சந்தோஷமா தான் இருக்கேன். இப்ப கூட ரெண்டு பேரும் கோவிலுக்கு போய்ட்டு தான் வந்தோம்…” என சொல்லி அவளை சமாதானம் செய்து வைப்பதற்குள் போதும் போதும் என்றானது.
பேசிவிட்டு வைத்தவள் தலையை பிடித்துக்கொண்டு அமர அக்னியோ வாய்க்குள் சிரித்தபடி,
“அப்ப இத்தனை நாள் நடந்த பிரச்சனை எல்லாம் கனவா கீர்த்தி?…” என விளையாட்டாய் கேட்டு அவளை உசுப்பேற்ற வேகமாய் அவன் மீது பாய்ந்தவள்,
“என்னன்னு சொல்ல கூட முடியல அவக்கிட்ட. எல்லாம் உங்களால தான்…” என்று அவன் மீது பாய்ந்த வேகத்தில் இருவருமாய் கீழே கிடந்த உடைகளில் சரிந்தார்கள்.
“என்னை பேச பெருமை உன்னையே சேரும் கீர்த்தி…” என சொல்லி அவளிடம் சிலபல அடிகளை வாங்கிக்கொண்டவன்,
“மத்தவங்களுக்கு இது சாதாரண வார்த்தை தான். நமக்குள்ள பேசறதை எல்லாம் அதோட கனெக்ட் பண்ண கூடாது. இது கூடவா சொல்லி தரனும் உனக்கு? நீ என்ன குட்டி பசங்களுக்கு பாடம் சொல்லி குடுத்த? மை காட்…” என்றவன் அவளின் நெற்றியில் முட்ட,
“எனக்கு இப்படிலாம் பேச வராது. இன்னைக்கு அக்கா ரொம்ப பதறிட்டா. நீங்களும் கேட்டீங்க தானே?…” என்றவள் பின் அழுத்தமான குரலில்,
“உங்களுக்கு தெரியாது எந்த மாதிரி சூழ்நிலையில் என் கல்யாணம் ராகா கல்யாணம் நடந்ததுன்னு. அப்போ அவளுக்கு எவ்வளவு பதட்டம் இருக்கும்…” என்று சஞ்சலத்துடன் அவனின் மார்பில் சாய்ந்துகொண்டவளை ஆதரவாய் வருடியவன் சில நொடி அமைதிக்கு பின்,
“கீர்த்தி…” என்றவனின் கன்னத்தை பற்றி அழைக்க,
“ஹ்ம்ம்…” என்ற முணங்கல் மட்டுமே பதிலாய்.
“எனக்கு ஒருசில விஷயம் தெரியாதுன்னா எதுவுமே தெரியாதுன்னு இல்லை. உனக்கு அது புரியாது…” என்றவனின் பேச்சில் கவனமின்றி அவள் இருக்க,
“உன்னை தவிர வேற யார்க்கிட்டயும் நான் இப்படி பேசினதில்லைன்னு சொன்னா நம்புவியா நீ?…” என அவன் கேட்க,
“அதுதான் எனக்கும் தோணுச்சு. இத்தனை வருஷத்துல பர்ஸ்ட் டைம் என்கிட்டே நீங்க பேசற வார்த்தை. எனக்கு ரொம்ப வருத்தமாவும் பயமாவும் இருந்துச்சு தெரியுமா? உங்க மேல இந்த ஊர்ல எவ்வளவு மதிப்பு வச்சிருக்காங்க. நீங்க என்கிட்டே அப்படி பேசவும் ஆடிப்போய்ட்டேன். ஒரு நிமிஷம் தப்பாவும் நினைக்க முடியாம தடுமாறிட்டேன்…” என சலுகையாய் சொல்லி குறைபட,
“எனக்கும் தான், யார்க்கிட்டயும் நான் அப்படி பேசினதில்லை. என் கையில நீ கட்டின கயிறு, அதை கழட்டி போட முடியாதபடிக்கு ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிடுச்சு. போதாததுக்கு திருவிழாவுல என் கண்ணு உன்னை தாண்டி எங்கையும் போகலை. அதான் உன்மேல செம்ம கோபம். கண்ணு முன்னாடியே வந்து உசுப்பேத்தறன்னு தான் கொஞ்சம் பயம் கட்டினேன்…”
கேலியாய் சொல்லியவனின் உடல் சிரிப்பில் குலுங்க அவனை முறைத்தவள் வேகமாய் எழுந்தமர்ந்தாள்.
“உங்களை போய் இந்த ஊர் உத்தமன்னு நம்புது…”
“நீ நம்பாம இருந்தாலே போதும்…” என படுத்தபடி கண்ணடிக்க,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை. இப்ப இவ்வளவும் நான் மடிக்கனும்…” என தலையில் கை வைத்து அமர,
“எனக்கும் மடிக்க வராது. வேணும்னா உனக்கு அடுக்க ஹெல்ப் பன்றேன்…” என்றவனுக்கு இன்னொரு கும்பிடு.
“தயவு செஞ்சு கிளம்புங்க. நானே அடுக்கிப்பேன்….”
“தனியாவா?…” என அவன் ஆச்சர்யமாய் கேட்க,
“ஆமா, இது என்ன பெரிய விஷயமா? மொபைல்ல பாட்டை போட்டுவிட்டுட்டு கேட்டுட்டே கடகடன்னு வேலையை முடிச்சிட வேண்டியது தான்…” என சுலபமாய் அவள் சொல்ல,
“ஓகே நீ பாரு. உனக்கு நான் கம்பெனி தரேன்…” என்று மீண்டும் அவளருகே அமர,
“உங்க கம்பெனி வேலையை நீங்க பாருங்க. இதை நான் பார்த்துக்கறேன்…” என்றதும் அவளின் தலையில் லேசாய் கொட்டியவன்,
“ஹெல்ப் பண்ணுங்கன்னு கேளு. வச்சிக்கறேன் உன்னை…” என்று சொல்லி தன் லேப்டாப்பை தூக்கிக்கொண்டு கட்டிலில் சென்று அமர்ந்தான் அக்னி.
“கீர்த்தி…” என வெளியே சாதனா அழைக்கும் குரல் கேட்க,
“உள்ள வா சாதனா…” என்றான் கீர்த்தி எழுந்து வெளியே செல்லும் முன்பு.
அவனின் குரல் கேட்டதுமே சாதனாவும் கதவை திறந்து உள்ளே வந்தவள் தன் முன்னே வேகமாய் வந்து நின்ற கீர்த்தியை பார்த்து திகைத்து,
“என்ன இப்படி வந்து நிக்கற? என்னை தேடினதா சுபாம்மா சொன்னாங்க. அதான் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்றவள் பார்வை கீர்த்தியின் பின்னால் கிடந்த உடைகள் பக்கம் சென்று கீர்த்தியை பார்க்க,
“அது அக்கா எடுத்து அடுக்கும் போது கீழே கொட்டிருச்சு…”
“அச்சோ கொட்டின அரிசி பருப்பு எல்லாம அள்ளுறதுக்குள்ள நான் வேற கரடியா கத்திட்டேன் போல?…” என்று கிண்டல் பேசியவள் அக்னியை பார்க்க அவன் லேப்டாப்பில் மிக கவனமாய் இருந்தான்.
“ஓகே, ஓகே. என்னை உள்ள வான்னு சொல்லாம இருந்திருக்கலாம்…” என்றவள் கண்ணடித்துவிட்டு செல்ல கீர்த்தனாவிற்கு எங்கே கொண்டு முகத்தை வைப்பதேன்றே தெரியவில்லை.
“எல்லாம் உங்களால, உங்களை யார் உடனே உள்ள வான்னு கூப்பிட சொன்னா? பாருங்க கிண்டல் பண்ணிட்டு போறாங்க…” என அவனிடம் சென்று சிணுங்க,
“ஈஸிட்? என்ன பேசினாங்க?…” என்றவனின் கவனம் அவளிடமே இல்லை. பார்வை திரையில் தெரிந்த பேக்டரியின் வீடியோவில் இருந்தது.
கீர்த்தனா எதையெதையோ பேசிக்கொண்டு வேலையை பார்க்க அவள் பேசிய எதற்கும் அவனிடம் பிரதிபலிப்பு இல்லை.
வெகுநேரமாய் பதில் வராமல் போக அவனை திரும்பி பார்க்க அக்னியின் முகம் கோபத்தில் தகித்தது. தனது மொபைலில் யாரையோ அழைத்துவிட்டு அவன் காத்திருக்க என்னவோ என இவள் அவனருகே சென்று நின்றவள் அவனின் தோளை தட்டி கேட்டாள்.
அவளின் தோளை தட்டிக்கொடுத்தவன் போய் வேலையை பார் என்பதை போல சைகை செய்துவிட்டு,
“அப்பா ட்வென்டி தேர்ட் பேக்கிங் செக்ஷன் உடனே போங்க. நான் இப்ப கிளம்பி வரேன்…” என கோபமாய் சொல்லிவிட்டு,
“கீர்த்தி நான் வர லேட் ஆகிடும். சாப்பிட்டு தூங்கு….” என அவளின் கன்னம் தட்டி சொல்லியவன்,
“சாப்பிட்டு தூங்கு. புரியுதா?…” என மீண்டும் அழுத்தி சொல்லிவிட்டு வேகமாய் கிளம்பி சென்றான்.
செல்லும் பொழுதே ஸ்ரீநிவாஸ் நம்பருக்கும் அழைத்து உடனே பேக்டரிக்கு வர சொல்லி வைத்தவனின் முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.
மழையோடு கிளம்பி வந்தவன் கோபத்தை அவன் வண்டி ஓட்டிக்கொண்டு வந்த வேகத்திலும் உள்ளே நுழைந்து நடந்துசெல்லும் விதத்திலும் புரிந்துகொண்டார்கள்.
அதற்கு முன்னரே சுரேனும் அங்கே வந்துவிட அடைக்கலமும், பன்னீர்செல்வமும் அக்னியை எப்படி சமாளிக்கவென யோசனையில் இருந்தார்கள்.
நடக்க இருந்தது பேரும் தவறு. நல்லவேளையாய் அதனை கண்டுபிடித்து தடுத்துவிட்டாலும் நஷ்டத்தை தவிர்க்க இயலாது. அந்தளவிற்கு மிக பெரிய அளவிலான ஆடர் இது.
வேகமாய் அறைக்குள் நுழைந்தவன் வந்ததும் அங்கிருந்த தன் வீட்டினரை தவிர்த்து ஸ்ரீநிவாஸ் இல்லாததை குறித்துக்கொண்டவன்,
“அவன் இன்னுமா இங்க வரலை?…” என உட்சஸ்தானியில் இரைய,
“அக்னி, காம்டவுன். கொஞ்சம் உட்கார். இப்ப வந்திருவான். கொஞ்சம் பொறுமையா ஹேண்டில் பண்ணு…”
“என்னது பொறுமையா? என்ன விளையாடறீங்களா? பொறுப்பானவன்னு கொஞ்சம் அசந்தேன். பார்த்தீங்கள்ள எத்தனை பெரிய இழப்புன்னு. காசை விடுங்க. இப்ப இந்த சரக்கை அனுப்பி பேர் கேட்டிருந்தா திரும்ப இந்த இடத்துக்கு நம்மால வர முடியுமா?…”
உண்மையான உழைப்பு வீணான ஆத்திரமும், சம்பாதித்த நற்பெயர் பாதிக்க இருந்ததன் அதிர்வும் அக்னியை எரிமலையாய் மாற்றியிருந்தது.