கவிதை – 17
வீட்டிற்கு வந்த ஸ்ரீநிவாஸ் முகம் சொல்லும்படியாக இல்லாதிருக்க ராகாவிற்கு அடிவயிற்றில் பயப்பந்து சுழன்றது.
“சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?…” என மெதுவாய் தான் கேட்டாள்.
அதற்கே அவளை எரிப்பதை போல பார்க்க அங்கே மேலும் நின்றால் கோபமாய் பேசுவானோ என நினைத்து நகர்ந்து சென்றுவிட ஸ்ரீநிவாஸ் கோபம் இன்னுமே அதிகரித்தது.
“ராகா…” என கத்தி அவளை அழைக்க,
“சொல்லுங்க எடுத்து வைக்கட்டுமா?…” என்றாள் மீண்டும் இருந்த இடத்தில் இருந்துகொண்டே.
அவளின் இந்த அலட்சியத்தில் ஆத்திரம் மிக வேகமாய் அங்கே சென்றவன் அவளை அடித்துவிடும் எண்ணத்தில் தான் நெருங்கினான்.
அவளானாள் இவனின் வேகத்தில் உள்ளூர பயந்தாலும் அதை கட்டிக்கொள்ளாமல் திடமாய் நிற்க,
“ஏன் மகாராணி அங்க வந்து என்னன்னு கேட்க மாட்டியோ? அம்புட்டு தூரம் உனக்கு குளிர் விட்டு போய்டுச்சோ?….” என்று எகிற,
“அங்க வச்சு நான் கேட்கத்தான் செஞ்சேன். நீங்க தான் பதில் சொல்லலை. சரின்னு வந்துட்டேன். இப்ப அடுப்புல வேலை. அப்படியே விட்டுட்டு வர முடியாதுன்னு தான் நானும் இங்க இருந்தே கேட்டேன்…” என பதிலுக்கு அவள் பேச,
“வாய் கூடிருச்சு உனக்கு. எனக்கு தெரியும்டி. உன் நினைப்பெல்லாம் என்னன்னு. என்னை அவ்வளவு ஈஸியா நினைக்கிறியோ?…”
“நீங்க என்ன பண்ணிட்டீங்க நான் உங்களை ஈஸியா நினைக்கிற அளவுக்கு? புரியும்படியா சொல்லுங்க. சண்டை போடற மூட்ல நான் இல்லை…” என்றவள் வினய் அழைக்கும் சத்தத்தில் குழந்தையை பார்க்க சென்றாள்.
ஸ்ரீநிவாஸ் அப்படியே நின்றான். மறுநாள் வேலைக்கு செல்ல முடியுமா முடியாதா என்பதே பேரும் குழப்பமாய் இருக்க வந்ததில் இருந்து ராகாவின் நக்கல் பேச்சு வேறு வெறியேற்றி இருந்தது.
‘இப்பவே இந்த பேச்சு பேசறா. வேலை போற நிலைமைல இருக்கேன்னு தெரிஞ்சா மதிக்கவே மாட்டா. இப்போதைக்கு எதுவும் சொல்லவேண்டாம். ஒருநாள் சேர்த்து வச்சு எல்லாருக்கும் இந்த ஸ்ரீநிவாஸ் யாருன்னு காட்டுறேன்’ என கருவிகொண்டான்.
அவனின் மனதில் கொஞ்சமும் தான் செய்த செயலினால் உண்டாகியிருக்கும் நஷ்டமும், நடக்க இருந்த பெரும் தவறு தடுக்கப்பட்டதன் வீரியமும், அதற்கான குற்ற உணர்வும் கிஞ்சித்தும் இல்லவே இல்லை.
இத்தனை வருடங்கள் அங்கே நேரம் காலம் பார்க்காமல் உழைத்து தேய்ந்தவன் ஏதோ ஒரு நேரத்தில் பிசகிவிட்டேன். அதற்கு இத்தனை ஆர்ப்பாட்டமா? என்று தான் நினைத்து வஞ்சம் கொண்டான்.
அதன் கோபம் இன்னமும் வளர்ந்துகொண்டே தான் இருந்தது அவனின் மனதில். யாரிடமும் காட்டமுடியாமல் உள்ளுக்குள் குப்பையென அடைக்க அடைக்க எல்லாம் ஒருநாள் வெளிவரும் நேரம் அந்த துவேஷம் மிகப்பெரிய ஆபத்தை விளைவிக்க இருப்பதை உணராமல் போனான்.
“சொல்லுங்க சாப்பாடு எடுத்து வைக்கவா?…” என்று மீண்டும் வர,
“அதை ஹால்ல வந்து கேளு…” என்று அதிகாரமாய் சொல்லிவிட்டு அவன் சென்றுவிட,
“இந்த வெட்டி பந்தாவுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…”என முணகியபடி உணவை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு சென்றாள் ராகா.
——————————————————————–
“அக்னி மணி பதினொன்னு ஆச்சு. நைட் சாப்பிடவும் இல்லை. கீர்த்தனா வெய்ட் பண்ணிட்டு இருப்பா. நீ கிளம்பு. நானும் சுரேனும் இருக்கோம்…” என அடைக்கலம் சொல்லியும் அவன் அசையவே இல்லை.
கீர்த்தனாவிடம் இருந்து இரண்டுமுறை போன் வந்துவிட்டது. வர தமாதமாகும் என்றும் சாப்பிட்டாகிவிட்டது என்று சொல்லி அவளை உறங்க சொல்லிவிட்டான்.
டீலர்களிடம் பேசியதில் முகம் கசங்கி அமர்ந்திருந்தான். சிலர் ‘அதற்கென்ன அனுப்புங்கள்’ என சூழ்நிலையை புரிந்துகொண்டு பேச சிலரோ இதற்காகவே காத்திருந்ததை போல மிக கடுமையாக பேசிவிட இதை எல்லாம் கேட்டவனுக்கு அவமானம் பிடுங்கியது.
இப்படி ஒரு சூழ்நிலை தனக்கு வந்துவிடாமல் இருக்க, தன்மானத்துடன் நிமிர்வாய் இருக்க எத்தனை கவனமாய் இருந்தான். அனைத்தும் ஒரு நொடியில் சரிந்து விழுந்ததை போல தோன்றியது.
இழந்த பேர் இழந்தது தான். ஏனோ பார்த்து பார்த்து கட்டிய தன் சாம்ராஜ்யத்தில் சிறு பிறழ்வு. அதை ஏற்க முடியாமல் மூளையை கசக்கியபடி அவன் இருக்க,
“இங்க பார் அக்னி, இந்தளவுக்கு சரக்கை அனுப்புற முன்னாடியே நம்ம கவனத்துக்கு வந்தது நல்லதுக்குன்னு நினைச்சுக்கோ….” என அடைக்கலம் சொல்ல,
“பாஸிட்டிவா தான் நினைக்கறேன் சித்தப்பா. ஆனாலும் அப்படி என்ன உனக்கு கவனமில்லாமன்னு என்னையே நினைச்சு எனக்கு கோபமா வருது. எத்தனை தான் நம்பிக்கையானவங்களா இருந்தாலும் நாமளும் அதுல ஒரு கண்ணு வச்சிருந்திருக்கனும். எப்பவும் இருப்பேன். இந்த தடவை. ப்ச்…”
அவனின் பேச்சுக்களில் கவலையுடன் தான் அவனை பார்த்தார்கள் வீட்டினர். சுரேனுக்கு கூட கோபமில்லை அவன் தன்னை ஸ்ரீநிவாஸ் முன்னிலையில் அப்படி பேசியது.
இந்த தொழிற்சாலையை உருவாக்க அவன் பட்ட பாடுகளை அலைந்ததை எல்லாம் கண்கூடாக பார்த்துக்கொண்டு தானே இருந்தார்கள்.
“ஸாரி அக்னி, நானாவது இதை பார்த்திருந்திருக்கனும். ஆனா எனக்கு இந்த கெமிக்கல் பத்தி எதுவும் தெரியாதே…” என சுரேன் வருத்ததுடன் சொல்ல,
“ஹேய் இப்ப என்ன? இன்னும் கொஞ்சம் நாள்ல சரி ஆகிடும். சரி பண்ணிடுவோம். இப்படியேவா இருந்திட போறோம்?…” என சட்டென தன் வருத்தங்களில் இருந்து வெளிவந்தவனாக அவனுக்கு ஆறுதலாய் பேசினான்.
மனதிற்குள் மண்டிக்கொண்டிருக்கும் ஆற்றாமை புகைச்சலை அங்கே யாரிடமும் காண்பிக்க முடியாதே? அனைத்தையும் மனதிற்குள் கடிவாளமிட்டு பூட்டினான்.
“நஷ்டம் உடனே சரியாகற அளவுக்கு இல்லையே அக்னி. பழைய நிலைமைக்கு வர எப்படியும் ரெண்டு மாசம் ஆகும். ஏதாவது ப்ளான் வச்சிருக்கியா?…” என பன்னீர்செல்வம் கேட்க,
“ஹ்ம்ம், இருக்குப்பா. நாளைக்கு பேசுவோம். சரி கிளம்புவோம்…” என்றவன் சுரேனை பார்க்க,
“ஹ்ம்ம், போகலாம்…” என்றவன் இரவு நேர பணியாளர்களை சென்று பார்த்துவிட்டு வர அதற்குள் அக்னி காரில் ஏறி இருந்தான்.
அவனை முன்னால் விட்டு மெதுவாக இவர்கள் பின்தொடர்ந்து வந்துகொண்டிருக்க அதை கூட கவனிக்கும் நிலையில் அவன் இல்லை. பாதையில் கவனம் இருந்தாலும் மனதில் அடுத்தடுத்து செய்யவேண்டிய செயல்பாடுகளை பற்றி திட்டம் வகுத்துக்கொண்டு இருந்தான்.
கையில் பணம் இருந்தாலும் உடனடியாக அத்தனை இளநீர்களை வரவழைக்க வேண்டும். தரம் பிரித்து உடைத்து எடுக்கவென இன்னும் பல்வேறுகட்ட வேலைகள் வரிசையாக இருக்க நாள்வாரியாக பிரித்துக்கொண்டு இருந்தான்.
மூளை அதிவேகமாய் கணக்குகளை பட்டியலிட ஒருவழியாக வீடு சேரும் முன் திட்டம் தயார். முக்கிய தேவை இளநீர்கள் மட்டுமே. அதுதான் மனதை முரண்டிக்கொண்டு இருந்தது.
காரை நிறுத்திவிட்டு அவன் நேராக மாடிக்கு செல்ல அங்கே கீர்த்தனா நல்ல உறக்கத்தில் இருந்தாள். ஒளிர்ந்துகொண்டிருந்த விளக்குகளை அணைத்துவிட்டு உடைமாற்ற கூட தோன்றாமல் கட்டிலில் விழுந்தவனின் அதிர்வில் பதறி விழித்தாள்.
உறங்கும் போது விளக்குகளை அணைக்காமல் தான் படுத்திருந்தாள். எழுந்து பார்க்க இருட்டில் அருகில் அவனின் அருகாமையை உணர்ந்து,
“வந்துட்டீங்களா? எழுப்பிருக்கலாம்ல. பயந்துட்டேன்…” என்று கேட்டவளை தன் மீது சாய்த்தவனின் வேகத்தில் மிரண்டவள் திணறினாள்.
“கீர்த்தி…” என்ற குரலே அவளுக்கு வித்தியாசமாக இருந்தது.
இத்தனை நாளில் அவனிடம் காணாத முரட்டுத்தனம். இந்த வேகம் எதற்கும் பழக்கப்படாதவள் முயன்று அவனை விலக்க பார்த்து முடியாமல் கடைசியில் மெலிதாய் விசும்ப அதில் தான் தன்னுணர்வு பெற்றான். டேபிள் லைட்டை போட்டவன்,
“கீர்த்தி…” என தயக்கத்துடன் அவளை விலகி அவள் முகம் பார்க்க கண்ணீரின் தடம் அதில்.
சட்டென எழுந்தமர்ந்து தலையில் அடித்துக்கொண்டான். அவனின் செயலை அவனாலேயே ஏற்கமுடியாமல் அவளை காயப்படுத்த துணிந்துவிட்ட தன் நிலையை வெறுத்தவனாய் முகத்தை மூடி அமர்ந்திருந்தான்.
நொடியில் தனது அத்தனை எண்ணங்களுக்கான வடிகாலாய் அவளை மாற்ற இருந்தோமே என எண்ணி நொந்துகொண்டான். இந்த நிகழ்வு அவனை முற்றிலும் புரட்டியிருந்தது.
எப்பொழுதும் நிதானம் தான். இப்போதும் கூட நிதானம் தான். ஆனால் இத்தனை டீலர்களிடம் இறங்கி கெஞ்சுவதை போல பேசி அவகாசம் வாங்கியது அவனை வதைத்தது.
“ஏதாவது கோவமா இருக்கீங்களா?…” என அவனின் செயலில் குழம்பி, ஒருவேளை கோபம் தன்னால் தானோ என கீர்த்தனா கேட்க அப்போதும் பதில் சொல்லாமல் அமர்ந்திருந்தான்.
“என் மேல தான் கோபமா? நான் வேணும்னு இல்லை. அழுகை வந்திருச்சு…” என தன்னை விளக்கிவிட அவள் வார்த்தைகளை தேட முகத்தை துடைத்துவிட்டு அவளை பார்த்தவன் புன்னகைத்தான்.
“உன்மேல எனக்கு என்ன கோபம்? அது எப்பவும் வராது. நான் தான் ரொம்ப ஹார்ஷா நடந்துட்டேன். ஹர்ட் பண்ணிட்டேன்…” என அவளின் கன்னத்தை இருகரத்திலும் பற்றியவன்,
“ரொம்ப கஷ்டமாகிடுச்சா?…” என்றவனின் தோளில் சாய்ந்தவள்,
“உங்க குரல், உங்க முகம் எதுவுமே சரியில்லை. என்னாச்சு?…” என கேட்க தலையணையை எடுத்து நிமிர்த்தி வைத்தவன் பின்னால் நகர்ந்து சாய்வாய் அமர்ந்தவன் கீர்த்தனாவை உறங்க சொல்ல,
“என்னன்னு சொல்லுங்க…” என அவனை நெருங்கி அமர அவளிடம் எப்படி சொல்வான் உன் அக்கா கணவனால் தொழிலில் பெரும் நஷ்டமென?
அவளையே பார்த்தபடி இருந்தவன் மனது இன்னும் சமன்பட மறுக்க சட்டென அவளின் இதழோடு இதழணைத்தான்.
மன இறுக்கத்தை குறைக்கவோ, ஆறுதல் தேடவோ அல்ல. இளைப்பாறுதல். தனது ஆற்றாமைகள், கவலைகள், குழப்பங்கள் என அனைத்தையும் அந்த இளைப்பாறுதலில் இறக்கி வைத்தான்.
“தூங்கு கீர்த்தி. இப்ப எதையும் சொல்ற மூட்ல நான் இல்லை. நிறைய யோசிக்கனும். தூங்கு…” என சொல்லி அவளை அழுத்தமாய் பார்க்க அவனின் முகத்தில் இருந்த அழுத்தத்தில் அமைதியாக படுத்துக்கொள்ள அவளை பார்த்தபடி இருந்தவன் பின் கண்களை மூடிக்கொண்டான்.
அதன் பின்னான செயல்கள் எல்லாமே தொழிலை கொண்டே இருக்க அவனின் ஓட்டம் ஆரம்பித்தது.
மிக தீவிரமாக செயலில் இறங்க லேசாய் சரிந்திருந்த பேரை மீட்டெடுக்க அவனின் உழைப்பு கடுமையாக ஆரம்பித்தது. அதையும் விட யாரையும் நம்ப மறுத்தான். அனைத்தையும் முன்னின்று கவனிக்க ஆரம்பிக்க அவனின் போக்கை கண்டு குடும்பத்தினருக்கு கவலையானது.
மற்றவர்களுக்கு அது கவலை என்றால் கீர்த்தனாவிற்கு வெகுவாய் தடுமாற்றமாக இருந்தது.
இரவு தான் வருபவன் சில நேரம் கணவனாய் அவளை அணுகினாலும் அவனிடம் மேலும் எதையோ அவள் எதிர்பார்த்தாள். அவனின் சிரிப்பும் பேச்சும் கூட அளந்து வந்துகொண்டிருந்தது அவளிடத்திலும் கூட.
போதாததிற்கு ஸ்ரீநிவாஸ் மீண்டும் தொழிற்சாலைக்கு வர அக்னி அனுமதிக்கவே இல்லை.
“முதல்ல அவனோட கணக்கை முடிச்சு அனுப்புங்க. சொந்தமா மட்டும் இனி இருந்தா போதும்…” என்று குதிக்க அடைக்கலம் தான் சமாதானம் செய்தார்.
வேறு வழியின்றி நான்கு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்ரீநிவாஸ் தொழிற்சாலைக்கு வர சாதாரணமாக பார்ப்பவர்களின் பார்வை கூட அவனை துளைப்பதை போல உணர்ந்தான்.
வீட்டிலும் நான்குநாள் ராகாவிடமும் எதுவும் சொல்லாமல் உடல்நிலை சரியில்லை என்பதை போலவே காட்டிக்கொள்ள அவளோ நம்பமுடியாத பார்வையை தர நொந்துபோனான் ஸ்ரீநிவாஸ்.
அதிலும் அக்னி முன்பை விட கடுமையாக நடந்துகொள்வதும் அவனை நம்பாமல் தானே முன்னின்று அனைத்தையும் சரிபார்த்து ஒன்றுக்கு நான்குமுறை பார்த்துவிட்டே இறுதி ஒப்புதல் அளித்தான்.
நம்பிக்கையான ஆட்கள் இரண்டுபேரை மேலும் வேலையில் அமர்த்தி அவர்களை மேற்பார்வைக்கு சேர்த்துக்கொண்டான்.
முன்பை விட நான்கு மடங்கு உழைப்பு. நஷ்டத்தை சரிக்கட்டும் வகையில் இரவுபகல் பாராது அதன் யோசனையிலேயே உழல இங்கே கீர்த்தனாவின் தவிப்புதான் வெகுவாய் கவனிக்க தகுந்ததாய் இல்லாமல் போனது.
அவனின் வேலைப்பளுவின் நடுவில் கீர்த்தனாவை பற்றி தாயிடம் சொல்லி அவளை கவனித்துக்கொள்ளுமாரு பேச்சுவாக்கில் சொல்லியிருக்க அந்த கவனிப்பு தங்க கூண்டில் அடைபட்ட கிளியை போலத்தான் இருந்தது அவளுக்கு.
அவனின் அருகாமையை தேடியவள் அந்த தவிப்பை தேடலை திசைமாற்ற முயல அதற்கு அந்த வீட்டில் வாய்ப்பில்லாமல் போனது.
“இன்னைக்கு நான் சமைக்கட்டுமா அத்தை?…” என்று சொன்னால்,
“நீ ரெஸ்ட் எடும்மா. இதெல்லாம் நம்ம வேலை இல்லை…” என்பார்.
தோட்டத்தில் பூப்பறிக்க சென்று நின்று பூக்களை பறித்துக்கொண்டிருக்க அவளை தேடி வந்தவர்,
“இது நம்ம வேலை இல்லை கீர்த்தி. உனக்கு வேணும்னா சொல்லு. பறிச்சு கட்டித்தருவாங்க. இதை நாம செய்ய கூடாது…” என்று சொல்ல மறுக்கமுடியாமல் அறைக்குள் முடங்கினாள்.
வேலைக்காரர்களிடம் பேசிக்கொண்டு இருந்தால் கூட அதற்கும் அவசியம் இல்லை என வந்து நின்றார் சந்திரிகா.
“என்னதான் அவங்க சிரிச்சு பேசினாலும் அவங்கவங்க இடத்துல தான் வைக்கனும் கீர்த்தி. நாம வேலை வாங்கறவங்க. அவங்களை அதிகாரத்தோட தான் அணுகனும். பேசு ஆனா சகஜமா கூடாது…” என அவர் எடுத்த பாடங்கள் கீர்த்தனாவின் பொறுமையை சோதித்துக்கொண்டு இருந்தது.
கஷ்டப்படாமல் கவனித்துக்கொள்கிறேன் பேர்வழி என்று அவளை கொஞ்சம் கொஞ்சமாய் ஒடுக்கிக்கொண்டு இருந்தார் சந்திரிகா. அவரறியாமலே மருமகளை தாங்குவதாக நினைத்து கீர்த்தனாவை ஒரு கூண்டிற்குள் அடைத்தார்.
இதில் சோதனையாக சாதனாவின் தங்கைக்கு திருமண ஏற்பாடுகள் நடக்க இருப்பதாலும் அவளின் தாய்க்கு அவ்வப்போது முடியாமல் போவதாலும் அங்குமிங்குமாய் சாதனா செல்ல அவளின் துணைக்கு சுபாவும் சென்றுவிடுகிறார்.
பேச்சுத்துணைக்கும் தவிப்பதை போலவே தான் ஏங்கி போனாள். அக்னியின் இருப்பும் கூட இரவுகளில் தான்.
வாய்விட்டு சிரித்து பேசி பல காலம் ஆகிவிட்டதை போல மனதளவில் சுருண்டுகொண்டாள் கீர்த்தனா.
யாரிடமும் காட்டிக்கொள்ளவும் பயம். வீட்டில் தெரிந்தால் கவலை கொள்வார்களே என்ற அச்சம். தொழிற்சாலையில் நடந்த விஷயம் ஒருவாரத்தில் அவளுக்கு அக்னி சொல்லிவிட உண்மையில் அவனிடத்தில் கூட அத்தனை இறக்கமாய் உணர்ந்தாள் கீர்த்தனா.
அதிலும் தன்னையும், ராகாவையும், தன் குடும்பத்தையும் யாரும் ஒரு வார்த்தை உங்கள் குடும்பத்து ஆளால் தான் என்று விரல் நீட்டி சுட்டிக்காட்டாமல் வேறு நடந்துகொள்ள அவர்களிடம் தானே சென்று சகஜமாய் கலகலத்து பேச கூட யோசித்தாள்.
‘பார், இத்தனை பெரிய நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. அந்த கவலை கொஞ்சமாவது இருக்கிறதா?’ என கேட்டுவிடுவார்ளோ என்று எண்ணி எண்ணி குமைந்துகொண்டிருந்தாள்.
முழுதாய் ஒரு மாதத்தை கடக்கவே மூச்சு திணறி போனது அவளுக்கு. அந்த வீடும் வீட்டு மனிதர்களையும் சாதாரணமாக அணுகமுடியாமல் போனது.
அதனை கொண்டே மனதை திசைதிருப்ப சில சில வேலைகள் செய்ய முயல அதற்கும் சந்திரிகா தடைவிதிப்பதை போல சொல்ல நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக முகப்பொலிவு இழந்தாள்.
புன்னகை அரிதானது. பெரும்பாலும் ஒட்டிவைக்கப்பட்ட உதட்டளவு புன்னகையே அவளை எந்நேரமும் இறுக்கி பிடித்துக்கொண்டு இருந்தது.
ராகாவிடம் பகிர்ந்துகொள்ளலாம் என்றால் அவளுக்கு இது விஷயமாக தெரியுமோ? தெரியாதோ? தானே போய் சொன்னால் கவலைப்படுவாளோ? என ஒரு பயம்.
ஒருவேளை ராகாவிற்கு தெரிந்திருந்து தான் சொல்லியதை வைத்து அவள் வருத்தப்படுவாளோ என்றும், ஒருவேளை புரிதல் தவறாகி தான் சொல்லிய விஷயத்தை குற்றம் சாட்டுவதை போல அவள் எடுத்துக்கொண்டுவிட்டால்?
இப்படி பலவிதமான யோசனைகளை அவளின் மனது தாங்கமுடியாதளவுக்கு சுமையாக கருதினாள். பைத்தியம் பிடிப்பதை போல தான் மாறிக்கொண்டிருப்பதை உணர்ந்தவள் கடைசியாக அந்த முடிவையும் எடுத்தாள்.
இரண்டு மாதங்கள் ஆகியிருந்தது அவர்களின் திருமண வாழ்க்கை ஆரம்பித்து. அதற்குள் ‘என்ன வாழ்க்கை?’ என்று எண்ணிவிட்டாள். இதிலிருந்து சிறிது காலம் ஒய்வு வேண்டும் போல மனது கெஞ்ச அன்று அக்னியிடம் அவனிடம் அதைப்பற்றி பேச நினைத்தாள்.
அதற்கேற்றாவாறு அடுத்தடுத்து நிகழ்வுகள் நடந்தேற சோர்ந்து போனவள் அவனிடம் கேட்டேவிட்டாள்.
“நான் ஒரு ஒன்வீக் அப்பாம்மா கூட இருந்துட்டு வரேனே? மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க ப்ளீஸ்…” என இறைஞ்சுதலாக கேட்டவளின் சோர்ந்த முகமும் களையிழந்த கண்களும் அக்னியை செயலிழக்க செய்தது.
“கீர்த்தி என்ன பேசற? இப்ப எதுக்கு அங்க போகனும்னு?….” என்றவனின் முகத்தை கூட பார்க்காமல்,
“எனக்கு போகனும். என்னால இங்க இருக்க முடியலை. அம்மாகூட அவங்க மடில சாய்ஞ்சுக்கனும்னு தோணுது. ப்ளீஸ். அட்லீஸ் ஒரு மூணு நாளாவது? ப்ளீஸ்…” என ஆயிரம் ப்ளீஸ் சொல்லி கண்ணீருடன் கேட்க,
“கிளம்பு…” என்றதோடு பேச்சை முடித்துக்கொண்டான் அக்னி.