கவிதை – 18
அன்றுதான் கீர்த்தனாவுடன் மருத்துவமனை சென்று வந்திருந்தான் அக்னிசெல்வன். முகம் முழுவதும் அப்படி ஒரு சந்தோஷம்.
தந்தையாக போகும் பூரிப்பு அவனை நிறைவாய் உணரசெய்தது. அதன் பிரதிபலிப்பு குடும்பமே கீர்த்தனாவை கொண்டாட அவளானாள் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை.
காலை விடியும் முன்னரே வழக்கம் போல தங்கள் தோப்பிற்கு சென்றுவிட்டு சாப்பிடும் நேரத்தில் வீட்டிற்கு வந்தவன் இன்னும் கீர்த்தனா கீழே வராமல் இருக்க,
“அம்மா கீர்த்தி எங்க?…” என கேட்டான்.
“இன்னும் வரலைப்பா. தூங்கறா போல. அதான் தொந்தரவு பண்ண வேண்டாம். அவளே வரட்டும்னு இருக்கேன்…” என சாப்பிட அமர,
“ஓகே நான் போய் பார்த்துட்டு வரேன்…” என்று மாடிக்கு செல்ல திரும்ப,
“அக்னி, நீ முதல்ல சாப்பிடு. சும்மா அவளை பிடிச்சு கைக்குள்ளயே வச்சுட்டு இருக்க…” என்று சந்திரிகா சொல்ல,
“பொண்டாட்டியை பார்க்கனும்னு போறான். போய்ட்டு வரட்டும்…” என சிரிப்புடன் அடைக்கலம் சொல்ல,
“சரிதான். நீ போ அக்னி..” என பன்னீர்செல்வமும் சொல்ல,
“ஹ்ம்ம், இதுக்கு மேல எங்க அவன் நிக்க?…” என்று விட்டார் சந்திரிக்கா. அவர்களின் பேச்சை எல்லாம் கேட்டவன்,
“நான் போய் கூட்டிட்டு வந்து பேசறேன்…” என சொல்லிவிட்டு மாடிக்கு சென்றான்.
“அவனை கொஞ்சம் ப்ரீயா விடுங்க நீங்க. இப்ப தான் ஒரு ஒருவாரமா கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கான். எல்லாத்தையும் தலையில போட்டுட்டு ஒருத்தரையும் நம்பாம அவன் பட்ட பாடு. இனியாச்சும் கொஞ்சம் நிதானமா நிம்மதியா இருக்கட்டும்…” என அடைக்கலம் சொல்ல,
“சுபா என்னைக்கு வரா?…” என பேச்சை மாற்றினார் சந்திரிகா.
“நாளைக்கு வரதா சொன்னா. ஈவ்னிங் ஆகிடும்னு நினைக்கேன். அங்க சஹானா நிச்சயத்துக்கே இன்விடேஷன் அடிக்கனும்னு ஆர்ப்பாட்டம் பன்றார் சம்பந்தி. அதனால சாதனா இருந்து எல்லாம் டிஸைன்ஸ் பார்த்து குடுத்துட்டு தான் வரமுடியும். சுபாவை சாதனா விடமாட்டேன்றா…”
“அதுவும் சரிதான், சாதனா தானே பொறுப்பெடுத்து செய்யனும். பார்க்கட்டும்…” என்று சந்திரிகாவும் சொல்ல அதன்பின் அந்த நிச்சயதார்த்தம் என்றைக்கு எப்படி செல்லவேண்டும் என்ற பேச்சுக்களில் மூழ்கினார்கள்.
அறைக்கு வந்தவன் கட்டிலில் கீர்த்தனாவை காணாமல் தேட அவளோ பாத்ரூம் வாசலில் மயங்கி கிடந்தாள். குளித்து புடவை எல்லாம் கட்டியிருந்தாள்.
“கீர்த்தி…” என பதட்டத்துடன் அவளை கைகளில் தூக்கியவன் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப இன்னும் கண் விழிக்க முடியாமல் மயங்கிக்கிடந்தவளை அள்ளிக்கொண்டு கீழே வந்தான்.
“அம்மா, சித்தப்பா, அப்பா…” என்ற அவனின் கூச்சலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள் பதறிப்போய் இவனுடன் வர,
“என்னாச்சு அக்னி?…” என்று கேட்டுக்கொண்டே அடைக்கலம் காரை எடுக்க செல்ல,
“பாத்ரூம் கிட்ட மயங்கி விழுந்திருக்கா. எவ்வளவு நேரமா இப்படி இருக்கன்னு தெரியலை. எழுந்துக்கவே இல்லை…” என்றவனின் குரல் ஏகத்துக்கும் கலங்கிப்போய் இருந்தது.
“ஒண்ணுமில்லை, எல்லாம் சரியாகிடும்…” என்று பன்னீர்செல்வம் சொல்லி மகனை ஆறுதல்படுத்த,
“அக்னி, கொஞ்சம் பொறுமையா இரு. நான் டாக்டருக்கு கால் பன்றேன். இப்ப வந்திருவாங்க. இப்படியே ஹாஸ்பிட்டல் போனா நல்லா இருக்காது…” என சந்திரிகா சொல்ல,
“அம்மா…” என்றவனின் குரலில் அவர் திடுக்கிட்டு போக,
“அதுவரைக்கும் இவளை இப்படியே விட சொல்றீங்களா?…” என்று கோபத்தை அடக்கிக்கொண்டு கேட்க,
“நீ பேசாம இரும்மா. நேர போய்ட்டா என்னனு பார்த்திடலாம்…” என்ற பன்னீர் செல்வம் காரில் ஏறிக்கொள்ள,
“மாலதி வீட்டை பார்த்துக்கோ வந்திடறேன்….” என்றுவிட்டு சந்திரிகாவும் ஏறிக்கொண்டார்.
அடுத்த தெருவில் தான் ஹாஸ்பிட்டல். எதுவானாலும் இத்தனை வருடங்களில் வீட்டிற்கு வந்துதான் பார்த்து செல்வார்கள். சந்திரிகாவிற்கு அங்கு செல்வதில் ஒப்புதல் இல்லை.
முதலில் வேகமாய் ஓடி வந்த அடைக்கலத்தை பார்த்ததுமே கண்டுகொண்டார்கள். வேகமாய் கீர்த்தியை பரிசோதித்து என்னவென்று கவனிக்க அக்னிக்கு அத்தனை குற்றவுணர்வை தந்தது.
அதிலும் தான் பார்த்த நேரம் அவள் விழுந்துகிடந்த விதமும் முகமும் அத்தனை துயரத்தை தந்தது.
பரிசோதனைகள் முடிந்து கீர்த்தனா கண்விழித்துவிட்டதாய் வந்து சொல்வதற்காக அவர்கள் காத்திருக்க அதற்குள் வந்த டாக்டர்,
“வாழ்த்துக்கள் அக்னிசெல்வன்…” என்றதுமே அவனின் முகம் பளீரிட்டது விஷயத்தை புரிந்து.
“டாக்டர்…” என சந்தோஷத்துடன் அழைத்தவன்,
“கீர்த்தனா எப்படி இருக்கா?…” என்று தான் கேட்டான்.
“நீங்க முதல்ல போய் உங்க வொய்பை பார்த்துட்டு வாங்க. மத்ததை ரெண்டாவது பேசிக்கலாம்…” என சொல்லவும் வேகமாய் அடுத்தடுத்து அந்த அறைக்குள் நுழைந்தார்கள்.
“கீர்த்தி…” என அவளின் கையை பிடித்துக்கொண்டவன் பேச வார்த்தையின்றி உணர்ச்சிவசப்பட்டு அமர்ந்திருக்க,
“ரொம்ப சந்தோஷம்மா. எங்களுக்கு எல்லாம் இப்பத்தான் குடும்பம் நிறைஞ்ச மாதிரி இருக்கு…” என பன்னீர்செல்வம் தழுதழுத்து சொல்ல,
“எங்க குடும்பத்துக்கு ஒரு வாரிசு வர போகுது. நான் பாட்டி ஆகிட்டேன்…” என சந்திரிகாவும் ஆனந்த கூத்தாடினார்.
மாறி மாறி தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தி அவளிடம் பேசிக்கொண்டு இருக்க வயிற்றை தடவியபடி கீர்த்தனா அமர்ந்திருந்தாள்.
அக்னி பிடித்திருந்த கையில் அழுத்தம் குடுத்தபடி இருந்த அவளின் முகத்தில் மிதமான புன்னகை. அதிகப்படியான சந்தோஷம் என்பதே இல்லை. எதையோ யோசித்துக்கொண்டு இருந்தாள்.
“கீர்த்தி, நீ ஓகே தானே?…” என அக்னி கேட்டதும்,
“சரி நாம வெளில இருப்போம். அவங்க பேசிட்டு வரட்டும். மத்ததை வீட்டுக்கு போய் பேசுவோம்…” என்று வெளியேற போன பன்னீர் செல்வம் டாக்டரை பார்த்ததும் புன்னகையுடன் நின்றார்.
“என்ன ஸார் பேசியாச்சா?…” என கேட்டுக்கொண்டே வந்தவர்,
“கீர்த்தி இப்ப எப்படிம்மா இருக்கு? மயக்கம் வர மாதிரி இருக்கா உனக்கு?…” என்று கேட்க,
“ம்ஹூம் இல்லை டாக்டர், இப்ப பரவாயில்லை…” என்றாள் களைப்புடன்.
“எத்தனை நாளா வாமிட் உனக்கு?…” என கேட்க,
“ஒரு ஒன் வீக்கா தான்…” என அக்னியின் முகத்தை பாராமல் மெல்லிய குரலில் முணுமுணுக்க அதிர்ந்துவிட்டனர் குடும்பத்தினர்.
பிடித்திருந்த கையை இறுக்கியவன் கீர்த்தனாவின் முகத்தையே பார்த்தபடி அசையாமல் அமர்ந்திருந்தான்.
“ஒன்வீக் இருந்திருக்கு. அப்பவே ஏன் சொல்லலை? பாரு இன்னைக்கு மயங்கி விழுந்திருக்க…” என கடிந்தவர்,
“இனிமே தான் நீ ஜாக்கரதையா இருக்கனும் கீர்த்தி. அனிமிக்கா இருக்க நீ…” என அறிவுரை சொல்ல,
“காலையில எழும்பும் போதே தலை சுத்துச்சு. முகத்தை கழுவிட்டு தண்ணி குடிச்சேன். உடனே வாமிட் வரவும் மயக்கமும் வந்திருச்சு…” என்றாள் இப்பொழுதும் யாரையுமே ஏறெடுத்து பார்க்காமல்.
பன்னீர்செல்வம் சந்திரிகாவை கண்டனப்பார்வை பார்த்தார். அவரின் பார்வையில் அப்பட்டமான குற்றச்சாட்டு.
எப்பொழுதும் காலை எழுந்ததும் குளித்து கீழே வந்துவிடும் பெண் அன்று வரவில்லை என்றதும் முதலில் கேட்டது பன்னீர்செல்வம் தான்.
“முதல்ல அவங்க என்ன பன்றாங்க என்னன்னு கேட்கறதை விடுங்க. அவங்கவங்க சுதந்திரத்துல தலையிடாம இருக்கனும். டெய்லி வந்தா இன்னைக்கும் எழுந்து வந்திடனுமா? ரெஸ்ட் எடுக்கட்டும்….” என சொல்லியிருக்க,
“உடம்பு எதுவும் முடியலயோனு தான் கேட்டேன்…”
“அதெல்லாம் இல்லை. இருந்தா சொல்லியிருப்பா தானே? நீங்களா நினைக்காதீங்க. அவ விருப்பம் போல இருக்கட்டும். பொறுமையா வரட்டும்…” என அடக்கிவிட்டார்.
‘மன்னிச்சிடுங்க’ என பார்வையால் அவர் கேட்க பன்னீர்செல்வம் மீண்டும் கீர்த்தனாவை பார்த்தார்.
“இப்ப இருக்கற பொண்ணுங்களுக்கு எதை ஈஸியா எடுத்துக்கனும், எதை அலட்சியமா தள்ளனும்னு தெரியறதே இல்லை. ஓகே, காட் கிரேஸ் எல்லாம் நல்லதுக்கு தான். இல்லைன்னா பண்ணையக்காரங்க குடும்பம் ஹாஸ்பிட்டலுக்கு வருவீங்களா?…” என கேட்டு சிரித்தவர்,
“ட்ரிப்ஸ் முடிஞ்சதும் வீட்டுக்கு போகலாம். நான் மெடிசின்ஸ் எழுதி தரேன். அதை பாலோ பண்ணுங்க…” என சொல்ல,
“அடுத்த செக்கப் எப்போ?…” என்று சந்திரிகா கேட்க,
“நெக்ஸ்ட் மந்த் வந்தா போதும். நானே ஞாபகப்படுதறேன்…” என்ற டாக்டரிடம்,
“அது இருக்கட்டும் டாக்டர், நீங்க வீக்லி ஒன்ஸ் வீட்டுக்கு வந்து ஒரு செக்கப் பண்ணிடுங்க…” என்று சந்திரிகா சொல்ல அவரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்? டாக்டரும் இதை யூகித்தவராக,
“இதை நீங்க சொல்லனுமா? கண்டிப்பா வந்திடறேன்…” என்றவர் தன் அறைக்கு சென்றுவிட,
“இனி எதை பத்தியும் கவலைப்பட வேண்டாம். உன்னை நான் பத்தரமா பார்த்துப்பேன் கீர்த்தனா. நீ சந்தோஷமா நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தா போதும்…” என்று சொல்ல அவரின் அக்கறையில் நெகிழ்ந்தாலும் அந்த ‘ரெஸ்ட்’ என்னும் வார்த்தையில் சோர்ந்தாள்.
“ஹ்ம்ம், சரிங்க அத்தை…” என்று முணுமுணுப்பாய் சொல்ல,
“ஸார் உங்களை டாக்டர் வர சொன்னாங்க…” என அக்னியை அழைக்க நர்ஸ் வர,
“பேசிட்டிருங்க, பார்த்துட்டு வரேன்…” என்று எழுந்து சென்றான்.
“வாங்க மிஸ்டர் அக்னிசெல்வன்…” என அவனை அமர செய்தவர்,
“இந்த ப்ரிஷ்க்ரிப்ஷன்ல எழுதிருக்கற மெடிசின்ஸ் ஃபாலோ பண்ண சொல்லுங்க. நிறைய ப்ரூட்ஸ் எடுத்துக்கனும். முக்கியமா நல்லா சாப்பிடனும். பிடிச்சதை வாங்கி குடுங்க. அவங்க மனசு சந்தோஷமா இருக்கனும்…” என சொல்ல,
“கீர்த்திக்கு என்ன ப்ராப்ளம் டாக்டர்?…” என்றான் நேரடியாக.
“இல்லை வழக்கமா எல்லாருக்கும் இருக்கறது தான். விட்டமின்ஸ் குறைபாடு…” என்று அவர் சமாளிப்பாய் கூறினார்.
டாக்டருக்கு சுபா நெருக்கம். இதை பற்றி அவரிடம் சொல்லிக்கொள்ளலாம் என நினைத்து தான் அக்னியிடம் சொல்வதை தவிர்க்க நினைக்க அவனோ நேரடியாக கேட்டான்.
“டாக்டர்…” என்ற அவனின் அழுத்தத்தில்,
“ஓகே, உங்கக்கிட்டையே சொல்லிடறேன். அவங்க மனசளவுல ரொம்ப இன்செக்யூரா பீல் பன்றாங்க ஸார். மனசளவுல ரொம்ப தனியா இருக்காங்க. உங்க மேரேஜ் லைப் நார்மல் தானே?…” என்று வேறு கேட்க அக்னியின் முகமே கசங்கி போனது.
“நார்மல் தான்…” என அவனின் குரல் கிணற்றுக்கடியில் இருந்து பேசுவதை போல கேட்டது.
“இங்க பாருங்க ஸார். எனக்கு உங்க பேமிலியும் தெரியும். கீர்த்தனா பேமிலி கூட பரிட்சயம் தான். ஓரளவு என்னால கெஸ் பண்ண முடிஞ்சது கீர்த்தனா உங்க பேமிலி அட்மாஸ்பியரோட ஜெல் ஆக ரொம்ப சிரமப்படறானு நினைக்கேன்…”
“வாட் யூ மீன்?…”
“யோசிச்சு பாருங்க, கண்டிப்பா உங்களுக்கு புரியும். இது உங்க பேமிலி விஷயம் நான் தலையிட கூடாது. அஸ் எ டாக்டரா என் பேஷன்ட் பத்தி பேச மட்டும் தான் முடியும்…”