“சொல்லுங்க…”
“முதல்ல கீர்த்தி என்ன நினைக்கிறாங்கன்னு கேட்டு பேசுங்க. மனசுவிட்டு அவங்களையும் பேச வைங்க. என்னவோ ஒரு பயம் அவங்க மனசுக்குள்ள இருக்கு. இந்த குழந்தை விஷயம் கூட முழுசா சந்தோஷப்பட முடியலை அவங்களால. உண்டாகியிருக்கன்னு சொல்லிருக்கன் முதல்ல சந்தோஷமா சிரிச்ச பொண்ணு உடனே எதையோ யோசிக்க ஆரம்பிச்சிட்டா…”
“நான் பார்க்கறேன்…” என்றவன் நன்றி சொல்லி எழுந்துகொள்ள,
“இன்னொரு முக்கியமான விஷயம். கீர்த்தனா மனதளவில மட்டுமில்லை பிசிக்கலாவும் ரொம்ப அனிமீக். பலவீனமா இருக்காங்க…” என மேலோட்டமாய் சொல்ல அவர் சொல்ல வருவதை புரிந்தவன் பதில் சொல்லும் முன்,
“இதை எல்லாம் சுபா மூலமா பொறுமையா சொல்லலாம்னு நினைச்சேன். வேற ஒண்ணுமில்லை. அதான் நீங்க கேட்டப்போ முதல்ல சொல்லலை…” என்ற்று முடிக்க,
“தேங்க் யூ…” என சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் வந்தான்.
அங்கே சந்திரிகாவும், பன்னீர்செல்வமும், அடைக்கலமும் மாறி மாறி அவளிடம் பேசிக்கொண்டு இருந்தனர். உள்ளே நுழைந்தவனை பார்த்தவளின் பார்வையோடு தன் விழிகளை கோர்த்தவன் அவளையே ஆராயும் விதமாய் பார்த்தான்.
எங்கே தவறினேன்? அவளின் அந்த முகம் அவனை வதைத்தது. ஏதோ ஓரிடத்தில் அவளுக்கு நான் இருக்கிறேன் என்பதை வெறும் பேச்சளவில் தான் காண்பித்திருக்கிறேனோ? என்ன மனிதன் நான்? என்று நினைத்து பார்த்தபடி இருக்க,
“என்னப்பா கிளம்பலாமா?…” என அடைக்கலம் கேட்க,
“இதோ போய் மெடிசின் வாங்கிட்டு வந்திடறேன் சித்தப்பா. போகலாம்…” என்றான்.
“என்கிட்டே குடு, நான் வாங்கிட்டு காருக்கு வந்திடறேன்…” என அடைக்கலம் அதை வாங்கிக்கொண்டு செல்ல,
“நான் டாக்டரை பார்த்து என்னவெல்லாம் சாப்பிட குடுக்கலாம்னு கேட்டுட்டு வரேன்…” என்று சந்திரிகா செல்ல அவருடன் பன்னீர்செல்வமும் சென்றுவிட்டார்.
கீர்த்தனா இன்னும் அக்னியையே பார்த்தபடி இருக்க அவளருகே வந்தமர்ந்தவன் அவளின் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டான்.
“இப்ப நீ ஓகே தானே கீர்த்தி? எப்படி இருக்கு?…” என கேட்டவனின் இன்னொரு கரம் அவளின் வயிற்றில் படிய அதனுடன் தன் கையையும் சேர்த்து அழுத்திக்கொண்டாள்.
“என்னை ஏன்டி தள்ளி வச்ச?” என கேட்டு கத்தவேண்டும் போல இருந்தது அவனுக்கு. இது கோபத்தை காண்பிக்கும் நேரமல்ல என நினைத்தவன் கொந்தளித்த மனதை சமன் செய்துகொண்டு அவளை பார்த்து புன்னகைத்தான்.
‘இனி உன் கூடவே தான் இருப்பேன்’ என ஒற்றை வார்த்தை அவனிடமிருந்து எதிர்பார்த்தபடி அவள் அமர்ந்திருக்க அலைப்புறும் விழிகளில் முத்தமிட்டவன்,
“எல்லாம் சரியாகிடும். வா போகலாம்…” என்று சொல்லவும் எதிர்பார்த்து ஏமாந்த மனதுடன் கட்டிலை விட்டு கீழே இறங்கினாள்.
சகஜமாய் பேச முடியாமல் தவிப்பின் மறைவில் இவள் நிற்க அவனோ பேசினால் கோபப்பட்டுவிடுவோமோ என்று அமைதி காத்தான்.
வீட்டிற்கு வரும் வரை மௌனமாகவே தான் இருந்தார்கள். வந்ததுமே ஆழம் சுற்றி அவளை வரவேற்ற சந்திரிகா அதற்குள் மாலதியிடம் சொல்லி ஸ்பெஷலாக இனிப்பும், உணவும் செய்ய சொல்ல,
“குளிச்சுட்டு வரேன் அத்தை. மேல எல்லாம் ஸ்மெல்…” என்று மாடிக்கு செல்ல போக,
“இரு இரு, நீ மேல படி ஏறலாமா? இதை நான் கேட்காம விட்டுட்டேன். கால் பண்ணி கேட்டுட்டு சொல்றேன்…” என்று அவர் தனது மொபலை எடுக்க அறைக்குள் செல்ல அடைக்கலம் சுபாவிற்கு விஷயத்தை சொல்ல வெளியே செல்ல பன்னீர்செல்வம் பூஜையறைக்கு சென்றுவிட்டார்.
யாரும் இன்றி அப்படியே நின்ற இடத்திலேயே கீர்த்தனா நிற்க அனைவரும் சென்றதை உறுதிப்படுத்திக்கொண்ட அக்னி அவளை தூக்கிக்கொண்டு மாடிக்கு செல்ல,
“கீர்த்தி மாடிக்கு மெதுவா…” என பேசிக்கொண்டே காதில் வைத்த போனுடன் வர அதற்குள் அக்னியும், கீர்த்தியும் அப்போது தான் மறைந்திருந்தார்கள்.
“என்ன இப்படி அவளை தூக்கிட்டு போய்ட்டான்?…” என டாக்டர் லைனில் இருப்பதை மறந்து சந்திரிகா சொல்ல இதை பார்த்தபடி வந்த அடைக்கலம்,
“நீங்க போன் பண்ணி எப்ப கேட்டு எப்ப வர? அதான் அவன் பொண்டாட்டியை அவனே தூக்கிட்டு போய்ட்டான். இது ஒரு விஷயமா? அவங்களை விடுங்க….” என்று அடைக்கலம் சொல்லி செல்ல,
“ஹ்ம்ம்…” என்ற பெருமூச்சுடன் போனை பார்த்தவர் ஐயோ என்று எடுத்து பார்க்க அழைப்பு கட் ஆகியிருந்தது.
அடைக்கலம் பேசி முடித்ததுமே சிரிப்புடன் டாக்டர் போனை வைத்துவிட்டார். லைனில் இருந்தால் சந்திரிகா ஏதாவது பேசுவாரோ என அணைத்துவிட்டார்.
“என்னால நடந்து வர முடியாதா? விடுங்க என்னை. இறக்கி விடுங்க…” என்று கீர்த்தனா துள்ள துள்ள தூக்கி வந்து பாத்ரூமினுள் விட்டவன்,
“குளிச்சுட்டு வா. உனக்கு ட்ரெஸ் எடுத்து வைக்கறேன்…” என்று சொல்லி சவரை திறந்துவிட,
“நான் பார்த்துக்கறேன். நீங்க பேக்டரிக்கு கிளம்புங்க. உங்களுக்கு நிறைய வேலை இருக்கும்…” என்று விட்டேற்றியாக அவள் சொல்ல புருவமுடிச்சுடன் அவளை ஏறிட்டவனின் மனதில் எதுவோ புரிவதை போல இருந்தது.
“எப்ப போகனும்னு நான் பார்த்துக்கறேன். முதல்ல நீ குளிச்சுட்டு வா. சாப்பிட போவோம்…” என்று சொல்ல கண்களை கரித்துக்கொண்டு வந்தது கீர்த்தனாவிற்கு.
அவனை கன்னம்கன்னமாய் அறையவேண்டும் என்றளவிற்கு ஆத்திரம் வலுத்தது. அவனை அருகிலேயே விட கூடாதென்னும் அளவிற்கு அவன் மீது கோபம் பெருகியது. எதையும் செய்யமுடியாத இயலாமையில் கண்ணீர் வந்தது.
“கீர்த்தி…” என ஆதுரமாய் அவளை அழைத்து தலையில் கை வைக்க,
“நான் குளிச்சுட்டு வரேன், போங்க…” என்றவள் அப்போதைக்கு அவனை விட்டு விலகி நின்றால் போதும் என தோன்றியது.
அவனின் அருகாமை இன்று கிடைக்கும், மீண்டும் அவனின் ஓட்டம் துவங்கிவிட்டால் அதையும் இழந்து ஏக்கத்தின் சுழலில் சிக்கிக்கொள்ள நேரிடும். முன்பானால் தான் மட்டும். இப்பொழுது குழந்தையும். என்னுடைய ஏக்கங்கள் குழந்தையை பாதித்தால்?
இப்படி பலவும் யோசித்து யோசித்து தன் மனதை இடியாப்ப சிக்கலாக மாற்றிக்கொண்டு இருந்தாள்.
அவளையே பார்த்தபடி இருந்த அக்னிக்கு ஒன்றுமட்டும் தெளிவாய் தெரிந்தது. கீர்த்தனாவை மீண்டும் நார்மலாக மாற்றுவது அத்தனை சுலபமில்லை என்று. அவளாகவே வாயை திறந்தாலே தவிர இதற்கு தீர்வென்பது கிடையாது என நினைத்தான்.
இனி பொழுதுகள் எல்லாம் அவளுடன் தான் என முடிவெடுத்தவன் அவளுக்கு பின்னர் தான் தொழிலும் மற்றவையும் என்ற ஸ்திரமான முடிவுடன் அவளை பார்த்தான்.
“குளின்னு சொல்லிட்டு இங்கயே நின்னா? நான் எப்படி குளிக்கிறதாம்? போங்க…” என்று முறைப்புடன் சொல்ல அதில் சிரித்தவன்,
“இதுதான் உன் பிரச்சனையா?…” என்று கேட்டவனின் முகத்தில் கண்ணனின் கள்ளப்புன்னகை.
பார்க்க பார்க்க பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போல விழிவிரித்து அவனை பார்வையில் விழுங்கிவிடுபவளை போல வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்க,
“என்ன திருமதி தீப்பொறி? ப்ரீஸ் ஆகிட்ட? நான் வேணும்னா ஹெல்ப் பண்ணவா?…” என அவளருகே வந்து அந்த புடவை முந்தானையை பற்றி லேசாய் இழுத்ததும் அவனின் கையில் இருந்த புடவையை உருவியவள்,
“ஒரு பிரச்சனையும் இல்லை, இனி பிரச்சனையே இல்லை. போங்க போங்க…” என வேகமாய் அவனை அங்கிருந்து தள்ளியவள் கதவை அடைத்துக்கொள்ள வெளியே வந்தவனின் முகம் மீண்டும் கவலையை தத்தெடுத்தது.
குளித்துவிட்டு வந்தவள் உடை மாற்றி வரவும் அவளுடன் சேர்ந்து கீழே இறங்கினான் அக்னி.
“மெதுவா வா அக்னி. ஏற்கனவே அவ ரொம்ப வீக்கா இருக்கா…” என சந்திரிகா சொல்ல,
“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. நாமலே சொல்லி அவளை வீக் ஆக கூடாது…” என்று தாய்க்கு சொல்லியவன் அவளுடன் சாப்பிட அமர அங்கே மாலதி கீர்த்தனாவின் தட்டில் வைத்தவற்றை பார்த்ததுமே உமட்டிக்கொண்டு வந்தது கீர்த்தனாவிற்கு.
“சாப்பிடு கீர்த்தி. முதல்ல ஸ்வீட் எடுத்துக்கோ. உனக்காக இப்ப செய்ய சொன்னேன் இந்த ஃபூட் எல்லாம்…” என்று அவர் சொல்ல தட்டில் இருந்தவற்றை பார்த்தவள் முகம் சுருங்கினாலும்,
“வாமிட் வர மாதிரி இருக்கு அத்தை…” என்றாள் மெதுவாய்.
“வாமிட் வரத்தான் செய்யும். இதை எல்லாமே சாப்பிடனும்னு இல்லை. கொஞ்சம் கொஞ்சமா சாப்பிடு…” என்று அவளருகே அமர்ந்துகொண்டார்.
அங்கிருந்த எதையுமே சாப்பிட பிடிக்காததை போல அவள் அமர்ந்திருக்க அக்னிக்கு அவளை பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
“இந்த ஒரு வாரமா நீ ஏன் சரியா சாப்பிடலைன்னு இப்பதான் புரியுது. உனக்கு என்ன வேணும்னு சொல்லு, செஞ்சு தர சொல்றேன்…” என்று கேட்கவும் யோசித்தவள்,
“கூழ், கூழ் குடிக்கணும் போல இருக்குது அத்தை…” என அப்போது சாப்பிட வேண்டும் என்று தோன்றியதை சொல்லியவளின் மனக்கண்ணில் கனகா செய்து தரும் கம்மங்கூழும் அதற்கு நெத்திலி கருவாடும், வெங்காயத்தையும் தூக்கலாய் பச்சைமிளகாய் போட்டு வாட்டி தரும் ருசியை அவளின் மனது நாக்கிற்கு கொண்டுவந்து எச்சிலூற செய்தது.
“என்ன கூழா? அது ஹெல்தி தான். இருந்தாலும் இப்ப நீ மாசமா இருக்கற பொண்ணு, நிறைய விட்டமின் கன்டென்ட் இருக்கற ஃபூட் தான் எடுத்துக்கனும். இதை சாப்பிடு. கூழ் இப்போ வேண்டாம்…” என்று அவர் சொல்ல அந்த அன்பும் கூட கீர்த்தனாவிற்கு மூச்சுமுட்ட வைத்தது.
“அம்மா அவளுக்கு பிடிச்சதுன்னா…”
“ப்ச், உனக்கு இதெல்லாம் புரியாது அக்னி. இனி அவ என்ன சாப்பிடனும்னு நான் பார்த்துக்கறேன்…” என்றவரின் கண்டிப்பில் வாயை மூடிக்கொண்டான்.
“நீ சாப்பிடும்மா…” என்று சொல்ல,
“இதெல்லாம் வேண்டம், தோசை போதும்…” என தோசை வைத்து கார சட்னியை போட,
“ரொம்ப காரம் குழந்தைக்கு ஒத்துக்காது. உனக்குமே. நாளைக்கு காரம் கம்மியா செய்ய சொல்றேன். இப்ப நீ சாம்பார் போட்டுக்கோ. பருப்பு ப்ரோட்டின்…” என்று சொல்ல வேறு வழியின்றி சாம்பாருடன் சாப்பிட்டவள் பாதி தோசை சாப்பிடும் முன்பே ஒத்துக்கொள்ளாமல் வெளியேற்ற அனைவரின் முன்பும் வெளி எடுத்தது வேறு அவளுக்கு அழுகையை தந்தது.
“ஒன்னும் இல்லை, கீர்த்தி இங்க பாரு…” என அவளின் முகம் துடைத்து கன்னம் பற்றியவனின் தோளில் சோர்வுடன் சாய்ந்துவிட,
“நீ கீழே இருக்கற கெஸ்ட் ரூம்க்கு கூட்டிட்டு போய் படுக்க வை…” என்ற அடைக்கலம் சொல்லவும் மெதுவாய் கூட்டி சென்று அவளை படுக்க வைத்தவன்,
“எதாச்சும் வேணுமா கீர்த்தி?…” என அவளின் தலையை வருடியபடி கேட்க,
“ஹ்ம்ம் ஆமா அம்மாவை பார்க்கனும்…”
“ஓகே, பார்க்கலாம், போன் பண்ணி விஷயத்தை சொல்லுவோம். அவங்களை வர சொல்லுவோம். இன்னும் சொல்லலை அவங்களுக்கு…” என்று போனை எடுக்க,
“ம்ஹூம், போகனும், அங்க போய் அங்க இருக்கனும்…” என்று அவனின் போனை வாங்கிகொண்டாள்.
“என்ன சொல்ற நீ?…” என அவன் கேட்க போயே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடித்திருந்தால் கூட அனுப்பியிருக்கமாட்டானோ என்னவோ?
கண்ணீருடன் இங்கிருக்கவே முடியாதென்று கெஞ்சும் அவளிடம் எப்படி கடுமை காட்டுவதாம்? அவளின் இருப்பின்றி அவனால் இங்கே இருந்துவிடமுடியுமா? உள்ளுக்குள் தவித்து போனாலும் அவளுக்காக அவளின் விருப்பத்திற்காக அழைத்துக்கொண்டு செல்ல முடிவெடுத்தான்.
தகப்பனாகிவிட்ட சந்தோஷத்தை முழுவதும் அனுபவிக்கமுடியாமல், மனைவியை கையில் வைத்து தாங்கி கொண்டாட முடியாமல் உள்ளுக்குள் உருகிக்கொண்டு இருந்தான்.
‘என்னை யோசிக்கவே மாட்டியாடி?’ என மனதிற்குள் அரற்றியபடி அவளுடன் பொள்ளாச்சி நோக்கி சென்றான் அக்னிசெல்வன்.
அவனுக்கு தெரியவில்லை, அவனுக்காக பார்த்து, அவனுக்காக யோசித்து, அவனை நினைத்து தவித்து, அவனுக்காக உருகி என அவனை மட்டுமே நினைத்து நினைத்து அந்த யோசனைகளின் விளைவு தான் அவளின் இந்த முடிவென்பது.