பொள்ளாச்சி சென்று சேரும் வரை அவனும் பேசவில்லை. அவளையும் பேச அனுமதிக்கவில்லை. சந்திரிகா கூட கிளம்புவதற்கு தடை பேசினார்.
“என்ன இது அக்னி? இன்னைக்கு தான் விஷயம் தெரியும். அதுக்குள்ளே கீர்த்தியை அங்க கொண்டுபோய் விடனும்னு சொன்னா என்ன அர்த்தம்?…” என்று ஆரம்பிக்க மகனின் முகத்திலும் மருமகளின் முகத்திலும் பன்னீர்செல்வம் என்ன கண்டாரோ?
“சந்திரிகா இந்த மாதிரி நேரத்துல பொண்ணுங்க மனசு தாயை தேடறது சகஜம். போய் கொஞ்சம் நாள் அங்க இருந்துட்டு வரட்டுமே. கீர்த்தி முகமும் ரொம்ப சோர்ந்து போய் இருக்கு. பெத்தவங்களோட இருந்தா கொஞ்சம் மனசுக்கு மாறுதலா இருக்கும்…” என மனைவியை கண்டித்தவர்,
“பார்த்து ட்ரைவ் பண்ணு அக்னி, இந்த மாதிரி நேரத்துல ட்ராவல் பண்ணலாமான்னு தெரியலை. இது பக்கம்ன்றதால ஓகே. கேர்ஃபுல்லா கூட்டிட்டு போ…” என சொல்லியவர்,
“சந்தோஷமா போய்ட்டு வாம்மா. உனக்கு எத்தனை நாள் அங்க தங்கனும்னு தோணுதோ இருந்துக்கோ. உன் விருப்பம் தான் முக்கியம்…” என்று சொல்லவும்,
“நீ போய் பேக் பண்ணு கீர்த்தி…” என அவளை அக்னி அனுப்ப கீர்த்தனா உள்ளே சென்றுவிட்டாள்.
“இங்க பாரு சந்திரிகா கல்யாணம் ஆகி இவ்வளவு நாள்ல இன்னும் பொள்ளாச்சிக்கு இவங்க போகவே இல்லை. அதுக்குள்ளே என்னென்னவோ நடந்திருச்சு. சம்பந்தி குடும்பமும் இங்க ஒருதடவை தான் வந்தாங்க. அப்பவும் நிலைமை சரியில்லைன்னு கீர்த்தியும் அங்க போகலை. இப்ப தான் ஒரு பிரச்சனையும் இல்லையே. போய்ட்டு வரட்டும்…” என்றவர்,
“அக்னி நீ வேணும்னா ரெண்டு நாள் அங்க தங்கி இருந்து வாயேன். இங்க நாங்க பார்த்துப்போம்…” என்று சொல்ல பன்னீர்செல்வத்தின் பேச்சில் இடையிட்டவராக,
“எனக்கென்னமோ சரியாப்படலை. என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? இப்ப ஊர்ல பாதிபேருக்கு விஷயம் தெரிஞ்சிருக்கும். சொந்தக்காரங்க விசாரிக்கன்னு வரப்போ அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வைச்சா நாம பார்த்துக்க முடியாததால தான் அனுப்பினோம்னு நினைக்க மாட்டாங்க?…” என சந்திரிகா பேச,
“அம்மா, முதல்ல இந்த ஊர் ஊர்ன்றதை நிறுத்துங்க. இப்ப கீர்த்தி தான் முக்கியம்…” என சொல்லிவிட்டு அக்னியும் உள்ளே சென்றுவிட,
“இந்த வீட்டுக்கு சமமில்லாத பொண்ணு வந்தா போராடவேண்டியதா இருக்கும்னு கவலைப்பட்ட நீயே இப்ப அவளை போராட வைக்கிறியோன்னு தோணுது சந்திரிகா. தப்பு பன்ற…” என பன்னீர்செல்வம் எச்சரிக்க,
“அவளை எந்த வேலையும் செய்யவிடாம ராணி மாதிரி பார்த்துட்டு இருக்கேன் நான். அது தப்பா?…”
“தப்பு தான். கீர்த்திக்கு ராணியா இருக்க விருப்பம் இல்லையோ என்னவோ?…” என யோசனையுடன் அவர் சொல்ல,
“என்னங்க சொல்றீங்க? எனக்கு புரியலை…”
“பார்ப்போம். கொஞ்சம் நாள் போகட்டும். முதல்ல நீ கீர்த்தியை ரூல் பன்றத விடும்மா…” என மனைவிக்கு தன்மையாக அவர் சொல்லவும் இருமனதாய் தலையாட்டினார் சந்திரிகா.
மிதமான வேகத்தில் காரை செலுத்திக்கொண்டு இருந்தவன் பக்கம் அடிக்கடி திரும்பி பார்த்தபடி கீர்த்தனா இருக்க,
“என் மூஞ்சில என்ன ஒட்டிருக்கு? எப்ப பார்த்தாலும் எத்தனை தடவை பார்த்தாலும் அதே அக்னி தான் நான்….”
“சும்மா தான் பார்த்தேன். உங்களுக்கு அதுவும் பிடிக்கலன்னா பார்க்கவும் இல்லை போதுமா?…” என முகத்தை திருப்பிக்கொள்ள இப்பொழுது அவளை அவன் பார்க்க,
“உருப்படியா ஊர்ல கொண்டுபோய் விடற ஐடியா இல்லை போல தீப்பொறிக்கு…” என முணுமுணுத்தாள் கீர்த்தனா.
மெல்லிய குரலில் கேட்ட அவளின் கேலியில் சிரிப்புவர பார்த்தாலும் முறைப்புடன் அவளை பார்த்தவன்,
“விட்டா உன்னை திரும்பவும் வீட்டுக்கே கூட்டிட்டு போய்ட போற மாதிரி பன்ற. இன்னும் கொஞ்சம் நேரத்துல போய்டுவோம். அதுவரைக்கும் எதுவும் பேசிடாத. நிஜமாவே காரை வீட்டுக்கு திருப்பிருவேன்…” என்று மிரட்ட அவனின் கோபத்திற்கு அஞ்சியே வாயை மூடிக்கொண்டாள்.
ஆனாலும் வெகு நாட்களுக்கு பின்னான அவனுடன் இந்த பயணம் மனதை லேசாக்கியத்தை போல உணர்ந்தாள். முகம் அதிலேயே மலர்ந்திருந்தது.
“என்ன திடீர்ன்னு ப்ரெஷா இருக்கா? ம்க்கும், அம்மா வீட்டுக்கு போனும்னாலே இந்த பொண்ணுங்களுக்கு எங்க இருந்து தான் சந்தோஷம் வருமோ?…” என முணுமுணுத்தவனின் குரல் அவளை எட்டவில்லை.
ஜன்னலை நன்றாக திறந்துவைத்து வேடிக்கை பார்ப்பதை போல ஆர்வமாக பார்க்க அன்றுதான் சிறைப்பறவை வெளி உலகத்தை பார்க்கும் பாவனை அவளின் முகத்தில்.
காரை ஓட்டிக்கொண்டு இருந்தாலும் அவளின் இந்த முகபாவனைகளை பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
இப்போதைக்கு எதுவும் கேட்கவேண்டாம் என நினைத்தவனாக அமைதியாகி அவளின் வீட்டு வாசலில் சென்று காரை நிறுத்தினான்.
திடீரென வாசலில் கார் வந்து நின்றதும் யார் வீட்டிற்கோ என அசட்டையாக நின்ற கனகா மகளின் உருவம் தெரியவும் பார்த்துக்கொண்டு இருந்த வேலையை அப்படியே வைத்துவிட்டு வேகமாய் வாசலுக்கு ஓடினார்.
“வா கீர்த்தி, வாங்க மாப்பிள்ளை…” என புடவையில் கையை துடைத்துக்கொண்டு கேட்டவருக்கு மனதில் சிறு திடுக்கிடல்.
அக்னியின் முகத்தில் இருந்த இறுக்கத்தில் பதறினார். பின் மகளை பார்க்க அவளும் வாடி போய் இருக்க என்ன ஆனதோ என பெற்றமனம் தவித்தது.
“உள்ள வாங்க மாப்பிள்ளை…” என படபடப்புடன் அவர் அழைக்க,
“அத்தை எதுக்கு இத்தனை பதட்டம்? நம்ம வீட்டுக்கு வர இவ்வளவு வரவேற்பா? கொஞ்சம் ரிலாக்ஸா இருங்க…” என்றவன் ஹாலில் வந்து அமர்ந்து அந்த வீட்டை பார்வையிட்டான்.
கீர்த்தனா வேகமாய் உள்ளே சென்று அவனுக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து தந்தாள். அவளை பார்த்துக்கொண்டே வாங்கி குடித்தவன் மீண்டும் அவளிடம் தர அதை வாங்கி தானும் குடித்துவிட்டு பேனை வேகமாய் சுழலவிட்டாள்.
அவளின் செயலை புதிதாய் பார்ப்பதை போலவே பார்த்துக்கொண்டு இருந்தான் அக்னி. தன் வீட்டில் இப்படி என்றுமே நிகழ்ந்ததில்லை என்பதையும் அவன் மனம் கூறியது.
“இருங்க மாப்பிள்ளை அவருக்கு போன் பண்ணி சொல்லிட்டு வரேன்…” என மொபைலை எடுத்து அழைக்க அதற்குள் தங்கதுரையே வந்துவிட்டார் வீட்டிற்கு.
“வாங்க மாப்பிள்ளை, அப்பா இப்ப தான் போன்ல சொன்னாங்க. அதான் வேலையை முடிச்சுட்டு அரைநாள் விடுப்பு சொல்லிட்டு வந்துட்டேன். நல்லா இருக்கீங்களா?…” என கேட்டவர் மகளையும் கண்களில் நிரப்பிக்கொண்டார்.
“ஒரு நல்ல விஷயத்தை நேர்ல சொல்லலாமேன்னு தான் மாமா வந்தோம்…” என்றவன் கீர்த்தனாவை பார்க்க வெட்கத்துடன் தாயின் பின்னால் ஒளிந்து நின்றாள் அவள்.
அந்த நொடி முகம் விகசிக்க இதழ்களில் பனியென மின்னிய புன்னகையுடன் நின்றவளை காண தெவிட்டவில்லை. அவளின் முகத்தை விட்டு தன் பார்வையை மாமனாரிடம் வலுக்கட்டாயமாய் ஹிருப்பியவனின் மனம் அந்த ரசனையான ரம்யத்தில் இருந்து வெளிவரவில்லை.
“நீங்க தாத்தா ஆக போறீங்க. அதான் நேர்ல சொல்லிட்டு போகலாம்னு வந்தோம்…” என்று புன்னகையுடன் சொல்ல,
“கீர்த்தி…” என கனகா மகளின் கன்னம் வழித்து திருஷ்டி கழித்தவர் வேகமாய் பூஜை மாடத்தில் இருந்த விபூதியை எடுத்து வந்து தங்கதுரைக்கும் தந்து இருவரும் அவளுக்கு பூசிவிட,
“ஆசிர்வாதம் பொண்ணுக்கு மட்டும் தானா?…” என கேட்டவன் கீர்த்தியுடன் சேர்ந்து அவர்களின் காலில் விழுந்து பணிந்தான்.
“நல்லாருக்கனும், ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும். இதே மாதிரி சந்தோஷமா இருக்கனும்…” என உணர்ச்சிமிகுந்த குரலில் சொன்ன தங்கதுரையின் கண்கள் கலங்கி போனது.
“என்ன மாமா நீங்க இதுக்கு போய் கண்ணை கசக்கிட்டு. சந்தோஷமா இருக்கனும்…” என்று அவரை தேற்றினான் அக்னி.
அதை பார்த்தபடி இருந்தவளின் மனதில் சிறு குற்றவுணர்வு. அக்னியின் பெற்றோர்களிடம் தான் ஆசிர்வாதம் வாங்கவே இல்லை என்பதில் வருத்தமாகி போனாள்.
தன்னிடம் அத்தனை அன்பாக பேசியவர்களிடம் சரியாக முகம் கொடுத்து கூட பேசவில்லையே என அவளின் மூளையில் உதித்தது.
அவ்வீட்டில் இருந்த பொழுது பூதாகாரமாய் தெரிந்த விஷயங்கள் எல்லாம் தனது தாய்வீட்டிற்கு வந்ததும் கடுகளவு விஷயமாக தெரிந்தது.
இதை கூட சமாளிக்க முடியாமல் நான் என்ன பெண்? என தன்னையே நிந்தித்துக்கொண்டாள்.
அங்கிருந்த பொழுது அதை விட்டு தப்பித்தால் போதும் என்னும் எண்ணம் மட்டுமே பிரதானமாய் இருக்க கணவனின் அருகாமை கூட அவளுக்கு வேண்டாம் என்றுதானே தோன்றியது.
தன் வீட்டிற்கு வந்ததும் தன் தவறு புரிந்தவள் உணர்ந்தே அவனிடம் மன்னிப்பை வேண்டும் பார்வை பார்க்க அவனோ தங்கதுரையை தேற்றிக்கொண்டு இருந்தான்.
இத்தனை உணர்ச்சி பேருக்கு என்னவென்று அக்னி அறிவானா? கீர்த்தனா அறிவாளே. அக்னியின் சின்ன சின்ன அன்பும், அனுசரணையும் தரும் நிறைவும், சந்தோஷமும் அவர்களுக்கு கோடி ரூபாய் கொடுத்தால் கூட அந்த நொடி இதற்கு ஈடில்லை என்பார்களே.
ராகாவின் வாழ்க்கை அவர்களுக்கு ஏற்கனவே ஒரு பாடம். அதனால் கீர்த்தியின் எதிர்காலத்தில் கொஞ்சம் அச்சத்துடன் இருந்தவர்களின் கண்ணீர் இப்பொழுது ஆனந்த கண்ணீர்.
“சரிங்க மாப்பிள்ளை, நீங்க உட்காருங்க. இங்க முத முதல்ல வந்திருக்கீங்க. நான் போய் சமைக்க கறி எடுத்துட்டு வரேன்…” என சொல்லி வேகமாய் கிளம்ப பார்க்க,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா, வீட்டுல சமைச்சது போதும்…” என சொல்லியும் அவர்கள் கேட்கவே இல்லை.
“கீர்த்தி நீ சொல்லு என்ன செய்யட்டும்? என்ன சாப்பிடற?…” என மகளிடம் கேட்க,
“அம்மா எனக்கு ஒரு விருந்தும் வேண்டாம். வேண்டாம். அவருக்கு சமைச்சுக்க. எனக்கு ரசமும், கத்தரிக்கா பொரிமாவும் செஞ்சுதா. அது போதும். இங்க நான் இருக்கற வரைக்கும் நான் சொல்றது தான் வேணும். புரியுதா?…” என கட்டளையாக கீர்த்தி சொல்லியதில் சங்கடத்துடன் அக்னியை பார்த்தனர்.
“அவளுக்கு விருப்பப்பட்டதை செஞ்சு குடுங்க அத்தை. என்னை நினைக்க வேண்டாம். நானும் இப்ப கிளம்பிடுவேன்….” என்று சொல்ல,
“ஐயோ இருங்க மாப்பிள்ளை. கண்டிப்பா நீங்க சாப்பிட்டு தான் போகனும்…” என தங்கதுரை பதட்டத்துடன் அவனை இருக்க சொல்ல,
“உங்களுக்கு என்ன செய்ய தோணுதோ செய்ங்க. ஆனா அதிகமா வேண்டாம். சிம்பிளா இருந்தா போதும்…” என்று சொல்ல,
“இப்ப வந்திடறேன்…” என அறைக்குள் சென்றார் தங்கதுரை.
“என்னம்மா இது இத்தனை பெட்டி. வந்ததும் கேட்கனும்னு நினைச்சேன்…” என்று அங்கே அடுக்கியிருந்த அட்டை பெட்டிகளை பார்த்து அவள் கேட்க,
“உள்ள வா கீர்த்தி…” என அடுப்படிக்குள் அழைத்து சென்ற கனகா,
“நம்ம கடைசி வீட்டு அக்கா அவங்க பொண்ணுக்கு கல்யாணம் ஆகியிருக்கு. அதுக்கு பலகாரம் போட ஆடர் குடுக்கனும்னு சொன்னாங்க. நான் தான நானே செஞ்சு தரேன்னு வாங்கிட்டேன். அதுக்கான பலகாரம் தான் இதெல்லாம். இப்ப வந்து எடுத்திட்டு போய்டுவாங்க…” என மெதுவாய் சொல்ல,
“ரொம்ப கஷ்டமா இருக்குதாம்மா?…” என கீர்த்தனா சஞ்சலத்துடன் கேட்க,
“அட ச்சீ, என்ன இது கண்ணு கலங்கிட்டு. ஒழுங்கா அழாம பேசு. அம்மாவுக்கு வேற என்ன வேலை இருக்கு? பொழுதும் போகனும்ல. அதான் பலகாரம் போடு குடுத்தா ஒரு வருமானத்துக்கும் வழி கிடைச்ச மாதிரி ஆச்சு. கொஞ்சம் காசும் நிக்குது…” என இலகுவாய் சொல்லியது மகளின் மனதை அறுத்தது.
வெளியே அமர்ந்திருந்த அக்னிக்கும் அவர்களின் மெல்லிய குரல் காதில் விழத்தான் செய்தது. கண்களை மூடிக்கொண்டு அதை கேட்டபடி அமர்ந்திருந்தான் அவன்.
‘என்ன செய்யலாம்?’ என யோசனை மூளையில் சுற்றிக்கொண்டு வந்தது.
ஸ்ரீநிவாஸ் மட்டும் அத்தகைய பெரிய தவறை செய்யாமல் இருந்திருந்தால் இதற்கு முன்பே ஒரு தீர்வை சொல்லியிருப்பான் அக்னி. இப்பொழுது மட்டுமென்ன?
‘முதலில் இவர்களை ஊருக்கு வரவழைப்போம்’ என்னும் தீர்மானத்துடன் அவன் இருக்க,
“என்னங்க, தூங்கறீங்களா?…” என அருகே வந்து அவனின் கையை தட்டி கேட்டவளை அழுத்தமாய் பார்த்தான்.
வந்து சிறிது நேரத்தில் படபடவென மழைபெய்யும் வேகத்தில் அவள் பேசும் பேச்சும், தாயானதை பெற்றோர்களிடம் சொல்லும் பொழுது வந்து வெட்கமும் அவளை வேறொரு கீர்த்தியாய் காண்பித்தது.
‘இதுதான் நான் விரும்பிய கீர்த்தனா. இவளே, இவளே’ என மனம் அடித்து கூற அவளை பார்த்திருந்தவன்,
“கொஞ்சம் நேரத்துல கிளம்பனும் நான்…” என சொல்ல அவளின் முகம் வாடியது.
“என்ன கீர்த்தி?…” என கேட்க அதற்குள் வெளியே யாரோ அழைக்கும் குரல் கேட்டது.
தங்கதுரையும் கனகாவும் அந்த பெட்டிகளை காண்பித்ததும் நான்கு பேர் வந்து அவற்றை எடுத்து சென்றார்கள். அதற்கான பணமும் பெற்றுக்கொண்டு உள்ளே வந்தவர்கள்,
“இருங்க மாப்பிள்ளை, இதோ கறிக்கடை வரைக்கு போய்ட்டு வந்துடறேன்…” என தங்கதுரை கிளம்ப,
“நானும் முக்கு கடையில போய் சமையலுக்கு சரக்கு எல்லாம் வாங்கிட்டு வந்திடறேன்…” என கனகாவும் ஒரு வயர் கூடையை தூக்கிக்கொண்டு செல்ல இருவரும் தனித்து இருந்தனர்.
“பேசமாட்டீங்களா?…” என கீர்த்தனா கேட்க,
“அதான் நீ இங்க வந்ததுல இருந்து பேசறதை கேட்டுட்டு தானே இருக்கேன். அதுவே நிறைஞ்சு போச்சு…” என நக்கலாக சொல்ல புடவை தலைப்பை கையில் சுருட்டிக்கொண்டு அமர்ந்திருந்தாள் பாவமாய்.
“இப்படி பார்த்து வைக்காத கீர்த்தி, செம்ம டென்ஷன்ல இருக்கேன்….” என சொல்ல சுரேன் அழைத்துவிட்டான். அவனிடம் இங்கே வந்திருக்கும் விஷயத்தை சொல்லி பேக்டரியை பார்த்துக்கொள்ளும் படி சொல்லிவிட்டு உள்ளே வர கீர்த்தி அடுக்களையில் இருந்தாள்.