“உள்ள வாங்க, அங்க நின்னே ஏன் கேட்கனும்?…” என அழைத்ததும்,
“நானா? கிட்சனுக்குள்ளையா?…”
“ம்ஹூம், கிணத்துக்குள்ள…” என அவள் கேலி பேசி சிரிக்க அதை மயக்கும் புன்னகையுடன் பார்த்தவன் உள்ளே சென்றான்.
“பசிக்குது, அம்மா என்ன செஞ்சு வச்சிருக்காங்கன்னு பார்த்தேன்…”
“என்ன இது?…” என அந்த சிறு பாத்திரத்தில் இருந்ததை பார்த்தான்.
“மோர்குழம்பு, மோர்மிளகாய்…” என சொல்லியவள் அந்த வறுத்த மோர் மிளகாயை கடிக்க,
“ஏய் காரம்டி. உன்னை சாப்பிட கூடாதுன்னு சொல்லிருக்காங்க…” என அவன் சொல்ல சொல்ல ஒரு குழிந்த தட்டில் சாதத்தை போட்டு மோர்குழம்பை நன்றாக ஊற்றியவள் பிசைந்து ஒருவே சாதம், ஒருகடி மிளகாய் என சாப்பிடுவதை பார்க்க அக்னிக்குமே அப்படி சாப்பிட ஆசை வந்தது.
“நீ இவ்வளவு ரசிச்சு சாப்பிடுவியா என்ன?…” என்று ஆசையுடன் பார்க்க,
“கண்ணு வைக்காதீங்க…” என சொல்லி அங்கேயே நின்று சாப்பிட விக்கல் எடுக்க ஆரம்பித்தது.
“இரு தரேன்…” என்றவன் தண்ணீரை எடுத்து தந்தான். அந்த அனுபவமே அவனுக்கு புதிதாய் இருந்தது.
அந்த சிறிய அடுப்படியில் நின்றபடி மனைவி உண்ண அவளுக்கு சேவகனாய் கணவனாய் தான் நிற்க என அந்த நிமிடத்தை வெகுவாய் மனதிற்குள் ருசித்துக்கொண்டிருந்தான்.
தண்ணீரை வாங்கி குடித்தவளுக்கு மீண்டும் சாப்பிட அடுத்த வாய் வைக்க முடியாமல் சாப்பிட்ட மொத்தமும் வெளியே வந்தது.
“இவ்வவளவு வேகமா சாப்பிடனுமா என்ன? பாரு வாமிட் பன்ற…” என அவளை பிடித்துக்கொண்டே சொல்ல முகத்தை கழுவிவிட்டு வந்து சோர்வுடன் சுருண்டு படுத்தாள் கீர்த்தனா.
“இப்ப என்ன பண்ணுது? ஓகே தானே?…” என கேட்டு அவளின் அருகே அமர்ந்தவன் தலையை வருட,
“ஹ்ம்ம், தொண்டை வலிக்குது…”
“அதுக்கு என்ன பண்ணனும்? எனக்கு தெரியாதே? நீ சொல்லு ஹெல்ப் பன்றேன்…” என கேட்க கனகா வந்துவிட்டார்.
“என்னாச்சு கீர்த்தி?…” என வேகமாய் கேட்டு வர நகர்ந்து அமர்ந்தவன்,
“இப்பதான் பசிக்குதுன்னு சாப்பிட்டா. வாமிட் பண்ணிட்டா…” என கவலையுடன் அவன் சொல்ல,
“சிலபேருக்கு மசக்கி அப்படித்தான் இருக்கும் மாப்பிள்ளை…” என்றவர்,
“ஏன் கீர்த்தி மோர்குழம்பு சாப்பிட்ட? சரி இரு குடிக்க துளசி தண்ணி தரேன். சூடா இருக்கும்…” என்றவர் வேகமா அடுப்பில் தண்ணீரை வைத்து காய்ந்த துளசி இலை, சிறிது போட்டு, டீ தூளை சேர்த்து வெல்லம் போட்டு ஆற்றி கொண்டுவந்து தந்தார்.
“மாப்பிள்ளை நீங்களும் குடிக்கறீங்களா…” என கேட்க வேண்டாம் என மறுத்துவிட்டான்.
வாங்கி குடித்தவள் அவனை பார்த்து வேண்டுமா என்பதை போல அவனுக்கு நீட்ட கனகா இருக்கிறாரா என பார்த்தவன் அவளிடம் இருந்து வாங்கி ஒரு மிடறு குடித்தான்.
“ஹ்ம்ம், நல்லா தான் இருக்கு…” என குடித்துவிட்டு அவளுக்கு தர இருவரின் மனதும் ஒரு சுமூகமான நிலையில் தான் இருந்தது அதுவரை.
தங்கதுரையும் வந்துவிட சமையல் வேலை பரபரவென நடந்தது. கீர்த்திக்கு உள்ளே சென்றாலே குமட்டிக்கொண்டு வர வெளிவாசலிலேயே அமர்ந்துகொண்டாள். அங்கே தான் அக்னி போனில் பேசியபடி இருந்தான்.
இடையிடையே இருவருக்குமான பேச்சு. இப்படி மிதமான ஒட்டுதலும், ஒட்டுதல் இல்லாமலும் இருந்தாலும் காலை இருந்ததற்கு இங்கே இந்த சூழ்நிலை மனதிற்கு இதமாகவே இருந்தது.
“கீர்த்தி சாப்பிட வாம்மா…” என அழைத்ததும் அவனுடன் உள்ளே சென்றாள்.
“உட்காருங்க மாப்பிள்ளை…” என சொல்லவும் கையை கழுவிக்கொண்டு வந்து அமர்ந்தான் அக்னி. ஆடம்பரமாக இல்லையென்றாலும் எளிய விருந்து தான்.
இலையில் அக்னிக்கு பரிமாறியவர் கீர்த்தனாவிற்கு ஒரு தட்டை வைத்து அதில் சாப்பிட வைத்தார்.
“உனக்கு அடி சாதம் தரேன் குழைவா. இந்த தட்டுல நிறைய ரசம் விட்டுக்கோ. இந்தா இந்த வறுவலை சாப்பிட்டு பாரு. உரைப்பா நாக்குக்கு நல்லா இருக்கும். உமட்டர மாதிரி இருந்தா கறி சாறுல ரசம் வச்சிருக்கேன். அதை கொஞ்சம் குடிச்சுக்கோ…”
இப்படி மகளுக்கு அவர் பக்குவம் சொல்லிக்கொண்டே இருக்க கீர்த்தனாவும் தாயிடம் கேட்டுக்கொண்டே சாப்பிட்டாள்.
“இந்த மாதிரி நேரத்துல காரம் சாப்பிடலாமா?…” என அக்னி கேட்க,
“இப்பத்தான் புள்ளத்தாச்சிங்களுக்கு உரைப்பா புளிப்பா சாப்பிட தோணும் மாப்பிள்ளை. திடீர்ன்னு ஏதாவது சாப்பிட ஆசை வரும். இப்படி ஆசைப்பட்டதை சாப்பிடலனா பிறக்கற புள்ளைக்கு காதுல நீர் வடியும்னு ஒரு பயத்தை கிளப்பி விட்டுருக்காங்க. உண்மையோ பொய்யோ அந்த நேரம் விருப்பப்பட்டதை சாப்பிட்டுட்டா ஆசை நிறைவேறின மாதிரி…”
“அது இதுக்கு மட்டுமில்ல, இந்த மாறி நேரத்துல எதுக்கும் அவங்க ஏங்க கூடாதுன்னு சொல்லுவாங்க. அது புள்ளையையும் கூட பாதிக்கலாம்னு. அதான் பொத்தி பொத்தி பாத்துக்குவாங்க…” என அவனுக்கு பரிமாறிக்கொண்டே பொதுவாய் கனகா சொல்ல சொல்ல அக்னி கேட்டபடி சாப்பிட்டான்.
ரசத்தை குடித்தவள் சப்புக்கொட்டி அதை சில்லாகித்து கண்மூடி ரசித்து ருசித்து குடிக்க பார்த்தவனுக்குள்ளும் பரவசம். அப்படியே அந்த வாயை என எண்ணிக்கொண்டவன் மனதை கடிவாளமிட்டு அடக்கினான்.
மனக்கண்ணில் அன்று காலை கீர்த்தனா உணவு உண்ண எத்தனை யோசித்தாள் என்பதும் ஞாபகம் வந்தது.
தன் வீட்டில் எதுவோ அவளுக்கு சரியில்லை என்பதை புரிந்துகொண்டான். இப்போதைக்கு இங்கே இருந்தே வரட்டும் என முடிவெடுத்தவனாக உண்டு முடித்து சிறிது நேரத்தில் கிளம்பியவன்,
“கீர்த்தி இங்க இருக்கட்டும் அத்தை. இங்க இருக்கனும்னு பிரியப்படறா. அதான் கூட்டிட்டு வந்தேன். இங்க வரவும் அவளுக்கும் சந்தோஷம். எப்போ வரனும்னு தோணுதோ நானே வந்து கூட்டிட்டு போறேன்…” என சொல்ல மகளை திரும்பி பார்த்தார் கனகா.
இந்த மாதிரி நேரத்தில் தாயை தேடுவது சகஜம் தான். ஆனால் உண்டான செய்தி தெரிந்த அன்றே வந்து நின்றது அவருக்கு நெருடலாய் இருந்தது. ஆனாலும் மகளை கவனித்து கொள்வதை தவிர வேறு என்ன சந்தோஷம்?
“அதுக்கென்னங்க மாப்பிள்ளை, நாங்க பார்த்துக்கறோம்…” என கனகாவும், தங்கதுரையும் சொல்ல காரில் இருந்த பேக்கை கொண்டுவந்து தந்தவன்,
“நான் கிளம்பறேன்…” என பொதுப்படையாய் சொல்லிவிட்டு திரும்ப,
“போய் அனுப்பிவிட்டுட்டு வா…” என மகளை அனுப்பி வீட்டிற்குள்ளேயே இருந்துகொண்டார்கள் அவர்கள்.
“என்ன கீர்த்தி?….” என பின்னால் வந்தவளை கேட்க,
“இல்லை இப்பவே போகனுமா?…” என்றாள் அவள்.
“இப்பவேன்னா?…” என காரில் சாய்ந்தவன் கைகளை கட்டிக்கொண்டு அவளிடம் கேட்க என்ன பதில் சொல்வதென யோசித்தபடி இருந்தாள் கீர்த்தனா.
இங்கு வரவேண்டும் என பிடிவாதமாய் வந்ததும் அவள் தான். இப்பொழுது அவன் கிளம்புகிறேன் என்றதும் தான் மனதிற்குள் வலித்தது.
‘இவனை பிரிந்து இருக்கவேண்டுமே’ என்ற உண்மை அப்பொழுதுதான் உரைக்க கூடவும் செல்லமுடியாமல் எங்கே இருக்கமுடியாமல் அவஸ்தையுடன் அவனை பார்க்க,
“என்ன?…” என்றான் இரக்கமின்றி.
“அது நான் இல்லாம நீங்க அங்க?…”
“இதையெல்லாம் தெரிஞ்சு தான வந்த. போடி. எதாச்சும் பேசறேன்னு கிட்ட வந்து உசுப்பேத்தி வாயை கடிச்சு வச்சிருவேன். மனுஷனை வெறுப்பேத்தாம போய்டு பார்த்துக்கோ…” என்று எரிந்துவிழ,
“நான் கேட்டதும் நீங்க தான கொண்டுவந்து விட்டீங்க. என்னமோ என்னை குறை சொல்றீங்க….” என அவனுக்கு மேல் அவளும் எகிற,
“அப்ப வா போகலாம். வண்டில ஏறு…” என்று சொல்லவும் இன்னும் திருதிருத்தாள்.
“என்ன மாட்டியா? அப்ப எதுக்கு இந்த வசனம் எல்லாம்? பேசாம உள்ள போ…” என காரின் கதவை திறக்க போக,
“என்னங்க…” என மீண்டும் சிணுங்கலுடன் அழைத்தாள்.
“என்னதான்டி உன் பிரச்சனை?…” என கேட்டதுமே கீர்த்திக்கு சிரிப்பு வந்துவிட,
“ப்ச், இந்த வேலை எல்லாம் என்கிட்டே வேண்டாம். நான் கிளம்பறேன்…” என்றவன்,
“என்ன பிரியாவிடை குடுத்து என்னை கட்டிப்புடிச்சு வழியனுப்ப போறியா? காண்டாகிடுவேன் பார்த்துக்க. பக்கத்துல மட்டும் வா அப்படியே தூக்கி கார்ல போட்டுட்டு உன்னை தூக்கிட்டு போய்டறேன்…” என எரிச்சல்மிகுதியில் அவன் பேச பேச அவனின் கோபம் கூட அவளின் மனதிற்கு அத்தனை இதமாய் இருந்தது.
“என்ன?…” என கேட்க,
“பார்த்து கிளம்புங்க. பத்திரமா கவனமா காரை ஓட்டிட்டு போங்க. அங்க போனதும் கால் பண்ணுங்க…” என வரிசையாய் சிரித்துக்கொண்டே அவள் சொல்ல சொல்ல தொண்டைக்குழி விம்மியது.
கட்டிக்கொள்ள கூட முடியாமல் நடுவீதியில் நின்றுகொண்டு அவள் இப்படி பேச உடன் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டால் தான் என்னவென்றே எண்ணம் வலுக்க தொடங்கியதும் காரில் ஏறி கிளப்பியவன்,
“பார்த்துக்கோ கீர்த்தி…” என அவளிடம் சொல்லிவிட்டு சென்றுவிட அவன் சென்ற பின்னர் தான் அவனின் அருகாமையை இன்னும் அதிகமாய் தேடினாள் அவள்.
வாசலிலேயே நிற்க மீண்டும் அவளின் அருகே காரை கொண்டு வந்தவனை நம்பமுடியாமல் பார்த்தவள் சந்தோஷத்தில் முகம் மின்ன அவனை பார்க்க,
“கிட்ட வா…” என இறங்காமல் அழைக்க,
“என்னங்க, திரும்ப வந்துட்டீங்க?…” என கேட்டவளின் குரலில் அப்பட்டமான மகிழ்ச்சி.
அவளின் முகத்தை பார்த்தவன் காரின் டாஷ்போர்டில் இருந்து இரு சாமி கயிற்றை எடுத்தவன்,
“கட்டிவிடு…” என்றான் அவளிடத்தில்.
“என்ன இது? ஏதாவது வேண்டுதல்னா கட்ட வேண்டியது தான். சும்மா சும்மா இதை கட்டிட்டு…” என அலுத்துக்கொண்டே அவனின் கையில் கட்டி முடிக்க இன்னொன்றை அவளின் கையில் கட்டிவிட்டான்.
“பத்திரம்டி, நீயும், குழந்தையும்…” என சொல்லிக்கொண்டு மீண்டும் கிளம்பிவிட்டான்.
அவன் சென்ற திசையை பார்த்தபடி இருந்தவள் வீட்டிற்குள் வந்ததும் தனது மொபைலை எடுத்து அவனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவைத்தாள்.
“சீக்கிரமே என்னை வந்து கூட்டிட்டு போய்டுங்க தீப்பொறி…” என அனுப்பி வைக்க,
“இப்பவே வரேன்னு சொல்லுடி. காரை திருப்பறேன்…” என அவனும் பதிலுக்கு அனுப்ப,
“காரை நிறுத்திட்டு மெசேஜ் பண்ணுங்க. இல்லைன்னா வீட்டுக்கு போய் பேசுங்க…” என மீண்டும் அனுப்ப,
“ரொம்பத்தான் அக்கறை. வந்து அந்த போனையும் தூக்கி போட்டு உடைச்சிடறேன்…” என கோபத்துடன் அனுப்பி வைக்க அவளோ பதிலுக்கு துடிக்கும் இதயம் போன்ற ஸ்மைலியை அனுப்பிவைத்தாள்.
“ஓஹ்ம் கீர்த்தி…” என மொபைலை வைத்துவிட்டு புன்னகையுடன் சாலையில் கவனமானான்.
இருவருமே ஒருவரின் அருகாமையை வெகுவாய் தேடினார்கள். அருகில் இருக்கும் பொழுது இல்லாத இந்த தவிப்பு அக்னிக்கு இப்பொழுது தீ பற்றியதை போல இருந்தது.
தொழிலை சீர் செய்து பழைய நிலைக்கு கொண்டுவந்தவனின் மனம் மனைவியை தேட இப்பொழுது அவள் அருகில் இல்லை.
இருவரின் எண்ணங்களும் அந்த கயிற்றின் மீது நிலைத்தது. அந்த கயிறால் உருவான பந்தம் அன்றைய நாளுக்கு இழுத்துக்கொண்டு சென்றது.
அது ராகாவின் திருமணத்திற்கு ஒருவாரத்திற்கு முன்பு நடந்த கோவில் கும்பாபிஷேக விழா.