“ராகாம்மா, அந்த பாயை போட்டு மேல பெட்ஷீட் விரி. அதுல உட்கார்ந்துப்போம். தரை வேற ஜில்லுன்னு இருக்கு…” என மகளிடம் சொல்லியவர்,
“இந்த மழை திருவிழாவோட கடைசி நாள் தான் அடிச்சு ஊத்தும். இப்ப எல்லாமே மாறி போச்சு. (pacifictiregroup.com) எப்ப மழை பெய்யுதுன்னே தெரியாம கணிக்க முடியாம போயிருச்சு…” என பேசிக்கொண்டே மகள்களுடன் அமர்ந்தவர் இருவருக்குமாகவே ஊட்ட ஆரம்பித்தார்.
“ஒன்னும் வேண்டாம், என்கிட்டே குழம்பு வேண்டாம்னு பருப்பு ரசம், துவையல் மட்டும் செஞ்சீங்க தானே?…” என்று ராகா முறுக்கிக்கொண்டாலும் தந்தை கையிலிருந்து வெகுநாட்களுக்கு பிறகான உணவை வாங்கிக்கொண்டாள்.
அதற்குள் கனகா சாம்பிராணி எடுத்து வந்து கீர்த்தனாவின் கூந்தலுக்கு போட ஆரம்பித்தார். ராகா கூந்தலை பிரித்து தூபம் காண்பிக்க உதவ அன்று பள்ளியில் நிகழ்ந்தவற்றை சுவாரஸியம் குறையாமல் பேசி சிரித்தபடி உண்டு முடிக்க உடனே கீழே சென்று ஒரு டோலோ மாத்திரையை எடுத்து வந்து கொடுத்தவள்,
“இதை போட்டுட்டு அம்மாவோட ரசத்தை சுட சுட ஒரு டம்ளர் குடிச்சிடு தாயே. அப்பத்தான் ஒன்னும் வராம இருக்கும்…” என கீர்த்தனாவை சொல்லிவிட்டு தனக்கும் வாங்கிக்கொண்டாள்.
மழை குளிரில் அந்த ரசம் அமிர்ந்தமாக இறங்கியது அவர்களுக்குள். அந்த நால்வருக்கும் இருக்கும் இடம் பொருட்டல்ல. ஒன்றாக இருப்பதே பெரிது. அவர்களுக்கே உரித்தான சின்னஞ்சிறிய சுவர்க்கம் என்றும் சொல்லலாம்.
சந்தோஷத்துடன் நேரங்கள் கழிய மாலை ஸ்ரீநிவாஸ் வரும் வரை மாடியில் தான் இருந்தாள் ராகா.
கீழே பைக் சத்தம் கேட்கவும் மேலே இருந்து எட்டி பார்த்தவள் அங்க கூடவே பால் வண்டிக்காரரும் வந்து நிற்க உடனே அம்மாவிடம் சொல்லிகொண்டு கிளம்பினாள்.
“நான் சேர்த்து வாங்கறேன் ராகா. இங்க டீ போடறேன்டி. எதுக்கு தனியா போட போற?…” என கனகா கேட்க,
“போதும் போதும். உன் மருமகனுக்கு அவர் வீட்டு அடுப்ப நான் பத்த வச்சாதான் என்னை அவரோட குடும்ப குத்துவிளக்குன்னுவார். இல்லைன்னா இன்னுமாடி நீ தங்கதுரை பொண்ணுன்னு படுத்துவார். நீ போட்டு குடி. ரெண்டு டம்ளர் டீ. நான் போட்டுக்கமாட்டேனா? போம்மா….” என சொல்லிக்கொண்டு இறங்கிவிட்டாள்.
அவளுக்கு தெரியும் தன் குடும்பத்தின் தற்போதைய நிலை. தன் திருமணத்திற்கான கடன் இன்னும் அடையாமல் இருப்பதும், தங்கைக்கு சிறுக சிறுக சேர்ப்பதும். எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் தனக்கு செய்ய என்றுமே இன்றுமே அவர்கள் கணக்கு பார்த்ததில்லை என்று.
இருவருக்குமான பால் கணக்கு தான். ஆனாலும் அந்த காசையும் மிச்சம் பண்ண தன் தாய் ஏதாவது சிக்கனம் செய்வாள் என்று தெரிந்தே வேண்டாம் என்றாள்.
தன்னால் தான் குடுத்து உதவ முடியாது. இருப்பதையும் பிடுங்கவேண்டாம் என்றுதான் நினைத்தாள் ராகா.
“என்னடி அரட்டையா? குடும்பம் ஒண்ணு கூடிட கூடாதே? புருஷனை கண்டுக்க மாட்ட…” என்று கிண்டலாய் பேச,
“கண்டுக்காம தான் கீழே வந்தேனாக்கும்?…” என்று சொல்லி பால் வாங்க பாத்திரத்தை எடுத்துக்கொண்டு சென்றவள் வாங்கிவிட்டு வர,
“மாமா வீட்டுக்கும் சேர்த்து வாங்கு ராகா…” என சொல்லிய கணவனை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றவள் பாலை காய்ச்சி முதலில் மகனுக்கு தனியாக எடுத்து வைத்துவிட்டு இருவருக்கும் டீயை போட ஆரம்பித்தாள்.
“ராகா…” என கிட்சனிற்குள் வந்தவன் அவளின் கவலை தோய்ந்த முகத்தை கண்டு,
“சிரிடி, உன்னோட சிரிப்புக்காக தான தனியா வந்தோம். நீ சிரிச்சா தான் எனக்கு நிம்மதியா இருக்கு…” என அவளை பின்னிருந்து அணைத்து சொல்ல,
“சுவிட்ச் போட்டதும் சிரிப்பு வராதுங்க…” என்றாள் அமைதியான குரலில்.
அணைத்திருந்த கையை எடுத்தவன் அதற்கு மேல் அங்கிருக்கமுடியாமல் ஹாலுக்கு சென்று சோபாவில் அமர்ந்துவிட்டான்.
டீயை போட்டுக்கொண்டு வந்தவள் அவன் அமர்ந்திருக்கும் விதத்தை பார்த்தாள். அந்த மரசோபா ஆசை ஆசையாய் பார்த்து பார்த்து செய்ய வைத்தார் தங்கதுரை.
சற்று முன் மாடியில் குடும்பத்துடன் தரையில் பாய் விரித்து அமர்ந்திருந்த பொழுதில் இருந்த மகிழ்வு ஏனோ இங்கே உயர்த்தியான இருக்கையில் அமரும் பொழுது முள்மேல் இருக்கும் உணர்வை தான் தந்தது.
ஒரு பெருமூச்சுடன் அவனுக்கு டீயை தந்தவள் முகத்தை ஏறிட்டு பார்த்தவன் டீயை வாங்காமல் இருக்க வேறு வழியின்றி அவனுக்காக சிரித்து வைத்தாள். அவளின் கை பிடித்து தன்னருகே அமர்த்திக்கொண்டவன் அவளின் கையை பற்றியபடியே எதுவும் பேசாமல் குடிக்க ஆரம்பித்தான்.
அந்த புன்னகை தான் அவனை அவளிடத்தில் வீழ்த்தியது. அந்த புன்னகை தான் அவளுக்காக தாயிடத்தில் போராட வைத்து திருமணத்தை நடத்திக்கொண்டது.
அந்த புன்னகை ஒன்றே அவனுக்கான நிம்மதியை, ஒரு நிறைவை தந்தது. எதுவோ ஒன்று, ஆனால் அவனுக்கு ராகா சிரித்தபடி இருக்க வேண்டும்.
தம்ளர்களை எடுத்துக்கொண்டு மீண்டும் அவள் உள்ளே சென்றதும் ஸ்ரீநிவாஸ் போன் சத்தமிட எடுத்தவன்,
“என்னம்மா…” என்றான் எரிச்சல் குரலில்.
“அம்புட்டு சலிப்பாடா உனக்கு என்கிட்டே பேச? அதான பார்த்தேன். மாமனார், மாமியார், மச்சினிச்சி கூட குழாவிட்டு இருப்ப. அப்ப நான் பேசினா கசக்கத்தான் செய்யும்…” என்று அவனின் தாய் சாரதா பொறாமையில் புகைய,
“அவர் என்ன அடுத்தாளா? உன் கூட பொறந்த தம்பி தான? இன்னும் வீட்டுக்குள்ள நுழைஞ்சு ஆற அமர உட்காரல. அதுக்குள்ளே உனக்கு மூக்கு வேர்த்துடுச்சு. நான் இன்னும் மேல போய் பார்க்கலை. போதுமா? குளிர்ந்துடுச்சா?…” என அவன் கத்த உள்ளிருந்து கேட்டுக்கொண்டு இருந்த ராகாவிற்கு பற்றிக்கொண்டு வந்தது.
வேண்டாம் என உதறித்தள்ளவும் முடியாமல், வீட்டிற்கு பாரமாகவும் முடியாமல் அவனுடன் ஒன்றி முழுமனதாக வாழவும் முடியாமல் ஏதோ என்று வாழ்ந்துகொண்டு இருந்தாள்.
திருமணம் பேசும் சமயம் வீட்டினர் கஷ்டப்படுகிறார்களே என்ற எண்ணம் இருந்தாலும் ஸ்ரீநிவாஸ் தன் மீது வைத்திருக்கும் அன்பில் கொஞ்சம் சமாதானம் ஆனாள்.
அவனிடம் பேசி சீர்வரிசை இவற்றை குறைக்க சொல்லவென அவள் பேச அவனோ அதிருப்தியில் முகம் சுண்டினான்.
“இங்க பாரு ராகா, உன்னை பெண் எடுக்கவே வீட்டில சம்மதிக்கலை. அம்மா முடியவே முடியாதுன்னு சொன்னாங்க. நான் தான் உன்னை மட்டும் தான் கட்டுவேன்னு பிடிவாதமா சம்மதிக்க வைச்சிருக்கேன். எனக்காக அவங்க வரப்போ அவங்களுக்காக நான் அமைதியா இருக்கறது தான் சரி…”
“அப்பா ரொம்ப கஷ்டப்படறார் மாமா…” என்று வருத்தம் மேலிட அவள் சொல்ல,
“பெண்ணை பெத்தவங்க எல்லாருமே கடந்து வர சூழ்நிலை தான் இது. அதுவும் மாமா பேங்க்ல வேலை பார்க்கறாங்க. சமாளிச்சுடுவாங்க…” என்று அந்த பேச்சை தட்டிக்கழிக்க அவளும் சமாளிப்பார் போல என்று நினைத்து அமைதியாகிவிட்டாள்.
வேண்டாம் என சொல்ல கூட முடியாமல் பெற்றோருக்காக திருமணத்தை செய்துகொண்ட பின்னர் தான் உண்மை நிலவரமே தெரிந்தது.
குடும்பத்தின் சூழ்நிலையே தலைகீழாக மாறி இருப்பதும், சமீபமாக தங்கை வேலைக்கு செல்வதும் என ராகாவை கூறுபோட்டது.
“இவர் என்னை விரும்பாமலே இருந்திருக்கலாம்” என்ற எண்ணம் பிறக்காமல் இல்லை.
“ராகா…” என்ற கணவனின் அழைப்பில் வேகமாய் வெளியே வந்து நிற்க,
“அம்மாவுக்கும், அப்பாவுக்கும் நைட் டின்னர் சேர்த்து செஞ்சிடு. இன்னைக்கு வினயை பார்த்துக்கிட்டதால அவங்களுக்கு முடியலையாம். அதனால சமைச்சிடு…” என்றவன் சொல்லி,
“கடைக்கு போய் தேவையானதை வாங்கிட்டு வரேன்…” என்று எழுந்துகொள்ள,
“மாவு இருக்குங்க. தக்காளி தேங்காய் எல்லாமே இருக்கு. இட்லி ஊத்தி சாம்பார் வச்சுடறேன். என்ன சட்னின்னு மட்டும் சொல்லுங்க…” என கேட்க,
“அதெல்லாம் வேண்டாமாம். பொங்கல் செய்வியாம். பொங்கலுக்கு சாம்பாரும் வடையும் செய்வியாம். கடலை பருப்பை ஊற போடு…” என்று சொல்லி ஒரு பையை எடுத்து மடித்துக்கொண்டு வெளியே செல்ல இப்பொழுதும் வெறுத்துப்போனது மனது.
இரவிற்கேனும் பெற்றோரை கணவனின் மூலமாக சாப்பிட அழைக்கலாம் என்று நினைத்திருக்க அதை பற்றியே நினைவில்லாததை போல நடந்து கொண்டதில் துக்கம் பொங்கியது.
அவளுக்கு தெரியும் தன் வீட்டில் அவர்களாகவும் வந்து சாப்பிட மாட்டார்கள் என்றும், தானாக கொண்டு போய் தந்தால் கூட வாங்க மாட்டார்கள் என்றும். அமைதியாக அப்படியே நிலைப்படியில் அமர்ந்துவிட்டாள்.
கணவனை பாம்பென்று தாண்டவும் முடியாமல், பழுதென்று அசட்டை செய்யவும் முடியாமல் நாளுக்கொரு நொடி போராடியபடியே தான் இருந்தாள்.
“அக்கா…” என கீர்த்தனா கீழே வரும் குரல் கேட்கவும் சட்டென முகத்தை துடைத்துவிட்டு எழுந்தவள்,
“வா கீர்த்தி…” என்று மலர்ந்த முகத்துடன் அழைக்க,
“நீ கூப்பிடலன்னாலும் வருவனே. சரி அம்மா உனக்கு நைட்டுக்கு சேர்த்து சமைக்கறேன்னு சொல்ல சொன்னாங்க…” என சொல்ல,
“இல்லை கீர்த்தி, அத்தை வீட்டுக்கு சேர்த்து செய்யனும். நானே செஞ்சுக்கறேன். நீ அம்மாக்கிட்ட சொல்லிடு…” என சொல்லவும் அவளிடம் மேலும் சில நொடிகள் அமர்ந்து பேசிவிட்டு மேலே சென்றுவிட்டாள் கீர்த்தி.
சொந்த வீடு, கீர்த்தனாவிற்கும் உரிமை உள்ள வீடு. ஆனால் அவர்கள் இந்த வீட்டுக்கு குடி வந்ததில் இருந்து அந்த ஹாலை தாண்டி யாரும் உள்ளே வருவதில்லை. தங்கை சென்ற பத்து நிமிடத்தில் ஸ்ரீநிவாஸ் உள்ளே வரவும் வேலை இருப்பதை போல திரும்பிக்கொள்ள,
“ராகா பூ வாங்கிட்டு வந்தேன். எடுத்து வச்சுக்க…” என்று சொல்லிவிட்டு காய்கறியை அங்கே ஓரிடத்தில் வைத்தவன் அவள் இன்னும் அமைதியாக இருக்கவும்,
“வா போய் மாமாவை அத்தையை பார்த்துட்டு வருவோம்…” என சொல்ல வேகமாய் திரும்பியவளின் முகம் உண்மைக்கும் மலர்ந்துவிட அவளின் கன்னத்தை தட்டிவிட்டு,
“வா போவோம். போய் கொஞ்சம் நேரம் பேசிட்டு இருந்துட்டு வந்து சமைக்கலாம்…” என சொல்லவும் அவனுடனே சிரிப்புடன் மாடி ஏறினாள் ராகா.
————————————————
“அக்னி, அப்பா உன்கிட்ட பேசனும்னு சொன்னார்…”
மகனிடம் வீட்டிலிருந்த அலுவலக அறையில் வைத்து அவனின் தாய் சந்திரிகா சொல்ல,
“வரேன்ம்மா, அப்பா இங்க வருவாங்கன்னு வெய்ட் பண்ணினேன்…” என சொல்லி தனது லேப்டாப்பை மூடிவிட்டு எழுந்துகொள்ள,
“நான் தான் இங்க வேண்டாம்னு சொன்னேன். நீ வா அங்க. ரூம்ல பேசிப்போம்…” என்று சொல்லிவிட்டு செல்லவும் தானும் பின்னால் சென்றான்.
“அக்னி, ஒரு முக்கியமான விஷயம் பேசனுமே…” என அவனை தடுத்து நிறுத்தி கேட்டான் சுரேந்திரன். சந்திரிகாவின் உடன்பிறந்த தங்கை மகனானவன்.
“என்ன விஷயம்?…” என்று அவன் நிற்கவும் மகனை திரும்பி பார்த்த சந்திரிகா பேசிவிட்டு வா என்பதோடு சென்றுவிட,
“சொல்லு சுரேன்…” என நிற்க,
“இதென்ன நீ? அப்படி எங்க ஓடற? முக்கியமான விஷயம்னு சொல்றேன். அசால்ட்டா சொல்லுன்னு சொல்ற?…” என்றான் விஷயத்தை சொல்லாமல்.
“இதுவரைக்கும் அந்த முக்கியமான விஷயத்தை நீ சொல்லவே இல்லை. நீ சொன்ன பின்னால தான் முக்கியமா முக்கியம் இல்லையான்னே தெரியும் எனக்கு…” என அமர்த்தலாக பேச,
“இப்ப நீ மூட் சரியில்லைன்னு நினைக்கறேன்…”
“அப்போ ஓகே…” என அக்னியும் நகர பார்க்க,
“ப்ச், அட நில்லுப்பா, பேச்சுக்கு கூட உன்கிட்ட பேச முடியாது போல…”
“அப்போ இவ்வளோ நேரம் யார்க்கிட்ட பேசிட்டு இருந்த?…” என்றான் எரிச்சலை மறைக்காமல்.
“அக்னி, இது உன்னோட ப்யூச்சர் பத்தின விஷயம்…”
“உன் எதிர்காலத்தை கூட நீ தானே டிஸைட் பண்ணின சுரேன்?…” என்றவனின் கேள்வியில் லேசாய் சிரித்த சுரேந்திரன்,
“இல்லைன்னு சொல்லலை. ஆனா நான் சூஸ் பண்ணின லைஃபும், நீ சூஸ் பண்ணிருக்கற லைஃபும் ஒண்ணில்லை…” என்றான் சற்று மிதப்பு தூக்கலாக.
“அதை நீ முடிவு பண்ணாத சுரேன்…” இப்பொழுது கோபம் கனன்ற குரலில் அவன் சொல்ல,
“உன் மேல உள்ள அக்கறைல தான் சொல்றேன் அக்னி. புரிஞ்சுக்கோ…”
“அப்படியா?…” என்றவன் அங்கிருந்து நகர்ந்துவிட சுரேனுக்கு அந்த பேச்சுவார்த்தையே பிடிக்கவில்லை.
என்றுமே அக்னி எடுக்கும் முடிவுகள் தான் அந்த வீட்டில் பிரதானமாய் அரங்கேறும். ஆனால் இதுவும் அப்படி ஆக ஏனோ விரும்பவில்லை.
தொழிலுக்கு உதவியாக இருக்கத்தான் தன் பெரியம்மாவின் குடும்பத்துடன் சேர்ந்து தங்கள் குடும்பமும் வசிப்பது. இதுவரை எந்த மனஸ்தாபமும் இன்றி வாழ்ந்து வந்தவர்களுக்குள் லேசான சலசலப்பு.
தனது தாயும், தந்தையும் கூட அவனின் முடிவு அவனின் வாழ்க்கை, நன்றாக இருந்தால் போதும் என்றுவிட்டனர். மனைவியோ அதை பற்றி பேசுவதே இல்லை. அவர்கள் விருப்பம், இப்படி இன்னொருவர் முடிவில் தலையிடுவது அநாகரீகம் என ஒதுங்கிக்கொண்டாள். ஆனால் அவனால் அப்படி இருக்கமுடியவில்லை.
தன் பெரியப்பாவின் அறைக்குள் நுழையும் அக்னியை பார்த்தபடி பெருமூச்சுடன் நின்றான்.
“அப்பா…” என உள்ளே வந்த மகனை பார்த்த பன்னீர்செல்வம்,
“உள்ள வா அக்னி…” என்று அவனை அமர சொல்லி கையில் இருந்த புத்தகத்தை மேஜையில் வைத்தார்.
“தங்கதுரை குடும்பம் திருவிழாவுக்கு வந்துட்டாங்க போல?…” என கேட்க அக்னியின் முகத்தில் கீற்றாய் புன்னகை.
“இப்பவும் ஒன்னும் ஆகிடலை. யோசிச்சுக்கோ. இது உனக்காக சொல்லலை. அந்த பொண்ணுக்காக, அவ குடும்பத்துக்காக…” என சொல்ல,
“நான் எடுத்த முடிவில் இருந்து பின் வாங்கினதா ஞாபகம் இல்லைப்பா…” என்றான் அதே புன்னகையுடன்.
அழகாய் இருந்தது மகனின் முகத்தில் வீற்றிருக்கும் அந்த புன்னகையும் அதன் ரகசிய பாஷைகளும். ரசித்து பார்த்தவர்,
“ஹ்ம்ம், ஓகே. திருவிழா முடியவும் பேசிருவோம்…” என்றவர் சந்திரிகாவை பார்க்க,
“உங்க விருப்பம்…” என்றார் அவர் அரைமனதுடன். அதை விட்டுவிட்டு மகனிடம் திரும்பியவர்,
“மருமகளை இன்னைக்கு பார்த்த போல?…” என கேட்க,
“ஆமா…” என்றவனின் ஒற்றை வார்த்தை பதிலில்,
“எப்பவுமே இப்படி ஒரே வார்த்தைல பதில் சொல்றதை விடு அக்னி. திருமண பந்தத்தோட ரகசியத்தை சொல்றேன் தெரிஞ்சுக்கோ. எப்பவும் நிறைய பேசனும், பேசவும் வைக்கனும். இனி பழகிக்கோ…” என மனைவியை பார்த்தபடி அவர் சொல்லவும் சந்திரிகாவும் புன்னகையுடன் அவரின் தோளில் கை வைத்து சிரிக்க இருவரையும் இதழ்பிரியா முறுவலுடன் பார்த்திருந்தான் அக்னிசெல்வன்.