கவிதை – 2
வந்தவன் அவளிடம் பேசவில்லை. அவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தவன் அவனும் நனைந்து கொண்டு தான் இருந்தான்.
கீர்த்தனாவுக்கோ அவன் வந்தத்தில் இருந்து அவன் அணிந்திருந்த சட்டை மேல் தான் கண். இள மஞ்சள் நிற காட்டர்ன் ஷர்ட்.
“இவர் என்ன பார்க்கிற நேரமெல்லாம் இந்த ஷர்ட்டையே போட்டுட்டு சுத்தறாரு?” என்னும் எண்ணத்துடன் தான் நிற்க அவளிடம் கை நீட்டி சொடுக்கிட்டவன் சுட்டுவிரலால் அருகில் வா என்பதை போல அழைக்க இப்பொழுது பயத்துடன் தனக்கு முன்னும், பின்னும் ஆள் இல்லாததை நினைத்து அப்படியே நின்றாள்.
“ப்ச்…” என அதிருப்தியுடன் சப்தமிட்டவன் மீண்டும் கை நீட்டி,
“பக்கத்துல வான்னு சொன்னா வரமாட்டியோ?…” என்றான் கடுகடுத்த குரலில்.
இப்பொழுது அவனின் அதட்டல் வேலை செய்ய மெதுவாய் அவனருகே வந்து நின்றதும் அவள் கையில் பிடித்திருந்த குடையை இழுத்து தனக்கும் சேர்த்து பிடித்தான்.
“அன்னநடை போட்டு போய்ட்டிருக்க? பஸ்ல கூட ஆளுங்க உன்னோட இறங்கிருப்பாங்க தானே? சேர்ந்து நடக்கறதுக்கு என்ன?…” என்று எரிந்து விழ “நீங்க ஏன் கேட்கனும்?” என்பதை போல எரிச்சலுடன் பார்வையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள்.
“வெய்ட்…” என அவன் சொல்ல மந்திரத்திற்கு கட்டுப்பட்டதை போல நின்றவள் அதுவும் ஒரு நொடிதான் மீண்டும் அவனிடமிருந்து பின்னால் செல்ல பார்க்க, அவன் தனது பைக்கில் மாட்டப்பட்டு இருந்த லெதர்பேக்கில் இருந்து மொபைலை எடுக்கவும் மீண்டும் குடையை அவனுக்கு நீட்டினாள்.
குனிந்தபடி இருந்தவன் இதழ்கள் லேசாய் நெளிய இருந்த அதனை மடித்து உதடுகளுக்குள் இறுக்கியவன் உடனே ஒரு எண்ணிற்கு அழைப்பு விட யாருக்கோ என்று அசட்டையாய் இருந்தவள் அவன் சொல்லிய பெயரில் திடுக்கிட்டாள்.
“ஸ்ரீநிவாஸ்…” என்று சொல்லவுமே “ஐயோ” என பதறி அவள் தடுக்கும் முன்,
“இன்னும் அஞ்சு நிமிஷத்துக்குள்ள நீ இங்க இருக்கனும். வரப்போ கார் எடுத்துட்டு வா…” என்று கட்டளை பிறப்பிக்க,
“போச்சு…” என்ற முனங்கலுடனே அவள் நிற்க மொபைலை மீண்டும் எடுத்த இடத்தில் வைத்தவன் கைகட்டி அப்படியே பைக்கில் அமர்ந்திருந்தான்.
அவனிதழ்கள் பாடல் ஹம்மிங் செய்வது போல தோன்ற காதை தீட்டிக்கொண்டு கேட்க அப்படி எதுவும் இல்லை என்பதை போல அமைதியாய் இருந்தான்.
கீர்த்தனாவிற்கு அவனுடன் ஆள் அரவமற்ற சாலையில் அப்படி தனித்திருப்பதில் உடன்பாடில்லை. முகமே எரிச்சலை காட்டியபடி இருந்தது.
அதுவும் அவன் இழுத்து வைத்த இந்த வேலை தேவையில்லாமல் வீட்டில் வாங்கிக்கட்டிக்கொள்ள போகும் சூழ்நிலையை இப்படி உருவாகிவிட்டானே என்று உள்ளுக்குள் அவனை போட்டு தாளித்தாள்.
கோபத்தில் அவனை இன்னும் பார்க்காமல் சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தவளின் கைகள் லேசாய் அக்னியை விட்டு நகர்ந்திருக்க சட்டென்ற அவனின் தும்மலில் திடுக்கிட்டு பார்த்தவள் மீண்டும் அவனுக்கு குடைபிடித்தாள்.
அவளின் கால்களை பார்த்தபடி நின்றவனின் இதழ்கள் இந்த செய்கையில் மெலிதாய் புன்னகை சிந்த அவனின் கண்களோ கால்களை தாண்டி மேலே சென்றது. அவளை பாதிவரை பார்த்தவனுக்கு சட்டென மூச்சடைக்க உடனே பார்வையை திருப்பிக்கொள்ள அவள் அதனை கவனித்தாள் இல்லை.
ஒருநொடி தானா இது? என்னும் எண்ணம் பிறக்க சட்டென விரல்கள் பைக்கில் உல்லாசமாய் தாளமிட துவங்கியது சத்தமின்றி.
மீண்டும் சுதாரித்தவனின் பார்வை இப்பொழுது அவளின் முகத்தில் நிலைக்க குடை பிடித்து நடந்து வந்திருந்தாலும் ஓரளவிற்கு நனைந்து விட்டிருந்தாள் தான். அடித்த காற்றில் மழைநீர் முகத்தில் அறைந்திருந்தது அவளுக்கு.
கூந்தல் முடிகள் முகத்தில் ஓவியமாய் சுழன்று இருக்க ஈரமுகத்துடன் அவளின் வதனம் அவனை கவர்வதை இதமான அதிர்வுடன் உள்வாங்கியவன் இப்பொழுது முற்றிலும் பார்வையை திருப்பிக்கொண்டான்.
“கிட்டத்தட்ட ஒன்றரை வருடமிருக்குமா இவளை இந்த ஊரில் பார்த்து?” என யோசித்தவன்,
“அக்னி இது தப்புடா. சுத்தமா பார்வை சரியில்லை. மாரியாத்தாவுக்கு தெரிஞ்சது வேப்பிலை தான் உனக்கு” என கழுத்தை தடவியபடி மீண்டும் பைக்கை கிளப்பி அவளை விட்டு தள்ளி திருப்பி நிறுத்தியவன் குடையுடன் தன்னை பார்த்தவளை பார்த்து,
“வேண்டாம்…” என்றான் ஒற்றை வார்த்தையில். அவன் சொல்லியதில் விடுதலை உணர்வுடன் நிம்மதியானவள்,
“புண்ணியமா போச்சு. இந்த திருவிழாவுல என் சார்பா அஞ்சு லிட்டர் பால் வாங்கி தரேன் ஆத்தா” என மனதார வேண்டிக்கொண்டாள் கீர்த்தனா.
மழை தூறலாய் மாறி காற்றுடன் வீச குளிரில் வெடவெடவென்று நின்றுகொண்டிருந்தாள். அழுகையாய் வந்தது.
விட்டால் நாலே எட்டில் வீடு போய் சேர்ந்திருப்பாள். இப்படி உயிரை வாங்குகிறானே என அங்குமிங்கும் நகரமுடியாமல் நிற்க அதற்குள் மாருதி ஷிப்ட் வந்து சேர்ந்தது.
“கீர்த்தி…” என அங்கிருந்து வேகமாய் வந்த ஸ்ரீநிவாஸ் முகத்தில் அவள் மீதான கோபம் தெறித்தது.
“ஸ்ரீநிவாஸ்…” என்ற அக்னியின் அழைப்பில் முகத்தை மாற்றிக்கொண்டவன்,
“எஸ் ஸார்…” என திரும்பி கேட்க,
“நீ உள்ளே போய் உட்காரும்மா…” என்று அவளை போக சொல்லவும் இவனின் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என ஏறி அமர்ந்துகொண்டாள். ஆனாலும் என்ன பேசுகிறார்கள் என கேட்க ஜன்னலை லேசாய் திறந்து வைக்க,
“ஊர்ல இருந்து வராங்கன்னா பொறுப்பு வேண்டாமா ஸ்ரீநிவாஸ்? வயசு பொண்ணு இப்படி ஒத்தையா நடந்து வரது நல்லதில்லைன்னு உங்களுக்கு தெரியாதா?…” என கேட்க,
“போச்சு நான் தானே வேண்டாம்னு சொன்னேன். இப்ப மாமாவை இந்த வாங்கு வாங்கறாரே…” என நகத்தை கடித்தபடி பார்க்க,
“இல்லை ஸார், ஆபீஸ்ல…” என சமாளிக்க,
“எந்த சப்பைக்கட்டும் வேண்டாம். இனி இப்படி நடந்துக்காதீங்க. ஊருக்குள்ள பஸ் வந்தா பிரச்சனை இல்லை. இந்த மாதிரி சூழ்நிலையில இது ரொம்ப பொறுப்பில்லாத செயல். கிளம்புங்க…” என திட்டி பைக்கை ஸ்டார்ட் செய்தவனை பார்க்கு பொழுது கீர்த்தனாவிற்கோ,
“தாலே லாலலலாலா…” என மண்டைக்குள் வடிவேலு நடந்து செல்வதை போல விஷுவல் மின்னி மறைந்தது.
“இது மட்டும் அம்மாவுக்கு தெரிஞ்சது நீயெல்லாம் என்ன பிள்ளைகளுக்கு சொல்லி குடுத்து கிழிச்சன்னு வைவாங்க…” என அவளே சிரித்துக்கொள்ள நொடிபொழுதேனும் சட்டென அவளை திரும்பி பார்த்தவனின் பார்வை மின்னல்வெட்டென அவளின் அந்த புன்னகையை சுருட்டியபடி இவளை தொட்டுவிட்டு சென்றது.
அவன் பார்த்தது கூட இவளின் கவனத்தில் பதியவில்லை. பார்வை தன் மாமாவிடம் இருக்க அவன் கடுகடுவென வந்து காரை கிளப்ப,
“மாமா நான்…”
“போதும் தாயே? நான் உனக்கு கால் பண்ணி கேட்டேன் தானே? ரோடு போடற ப்ராசஸ்ல பஸ் வராது. வந்து கூப்பிட்டுக்கறேன்னு. நீ தான அக்னி சார்க்கிட்ட பர்மிஷன் கேட்டு ஒன்னும் வர தேவையில்லைன்னு சொன்ன…” என்று எரிந்து விழ,
“அது இவர் உங்களை திட்டுவாரேன்னு தான் வேண்டாம்னு சொன்னேன்.இல்லைன்னா வேண்டாம்னு நான் ஏன் சொல்ல போறேன்?…” என அவளும் சொல்ல,
“அவர்கிட்ட நான் வாங்கனும்னு இருந்தா வாங்கித்தான் ஆகனும்…”என்றவன் எதுவும் பேசவில்லை. அமைதியாகவே வர கீர்த்தனாவும் வாயே திறக்கவில்லை.
இவர்கள் வீட்டை அடையும் பொழுது கீழே திண்ணையில் அமர்ந்து ராகாவுடன் பேசிக்கொண்டிருந்தார்கள் அவளின் பெற்றோர்.
“கீர்த்தி…” என இவளை பார்க்கவும் எழுந்து வந்து அணைத்துக்கொள்ள,
“என்னடி இது கார்ல வர, ஆனா நனைஞ்சு இருக்க? போ போயி முதல்ல தலையை துவட்டி ட்ரெஸ் மாத்து…” என்ற ராகா கணவனை திரும்பி பார்த்தாள்.
“என்னங்க நீங்க கூப்பிட போறதா சொல்லவே இல்லை…” என்று கேட்டு அருகில் வர,
“ஹ்ம்ம் வேண்டுதல். போவியா…” என எரிச்சலாக சொல்லிவிட்டு காரை கிளப்பி செல்ல,
“இது ஆபீஸ் காராச்சே. மழைன்னு எடுத்துட்டு போயிருப்பார் போல…” என சொல்லிக்கொண்டு அவன் கிளம்பவும் திரும்பி வர அதற்குள் மாடிக்கு சென்றிருந்தாள் கீர்த்தனா.
ஸ்ரீநிவாஸ் கூட யோசிக்கவில்லை அக்னிசெல்வன் காரை எடுத்துக்கொண்டு வந்து கீர்த்தனாவுக்காக காத்திருந்து அழைத்து செல்ல சொல்லியதை. அவனுக்கு அவனிடம் இன்றும் திட்டு வாங்கிவிட்ட எண்ணமே பிரதானமாக இருக்க வேறு எதையும் யோசித்து பார்க்கும் எண்ணமில்லை.
வீட்டினருக்கோ ஸ்ரீநிவாஸ் அழைத்து வந்ததனால் எதுவும் தோன்றவில்லை. எந்த இடத்திலும் அக்னிசெல்வன் குடும்பத்தினர் அவர்கள் எல்லைக்குள் தான் இருப்பார்கள். அதனால் வேறு நினைக்க இடமில்லாது போனது.
“அம்மா, நீ போய் அவளை பாரு. நான் குழம்பு எடுத்துட்டு வரேன். அவளுக்கு சுண்டவத்த குழம்பு புடிக்கும்ல. இந்த குளிருக்கு அவளுக்கு நல்லா இருக்கும். போ நான் சூடு செஞ்சு கொண்டு வரேன்…” என்று தாயை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் சென்றுவிட கனகாவும் மாடிக்கு சென்றார்.
“எங்க கீர்த்தி?…” என கேட்க,
“குளிக்க போயிருக்கா. அவளுக்கு நைட்டி எடுத்து குடு கனகா. ஒரு கிண்ணத்துல சாதத்தை போட்டு இட்லி குண்டாவுல சூடு பண்ணு அவ வரதுக்குள்ள…” என்று சொல்லிவிட்டு ஓரமாய் இருந்த கட்டிலில் அமர்ந்துகொண்டார்.
“அம்மா…” என அதற்குள் ராகா வந்துவிடவும்,
“நீயும் கொஞ்சம் கீர்த்தியோட சேர்ந்து சாப்பிடேன்டி. உனக்கும் சேர்த்து சாதத்தை சூடு செய்யட்டா?…” என கேட்டுக்கொண்டே கனகா ஒரு பெரிய கிண்ணத்தில் வடித்து வைத்திருந்த சாதத்தை போட்டுக்கொண்டே கேட்க,
“அம்மா உன்னோட தான சாப்ட்டேன். எனக்கு வேண்டாம்…” என்று சொல்லி குழம்பை தந்தவள்,
“ஒரு நாள் என்கிட்டே வாங்கி சாப்பிட்டா தான் என்னவாம் உனக்கு? ரொம்பத்தான் பன்ற?…” என ராகா நொடித்துக்கொள்ள,
“இப்ப என்னடி இங்க நான் வெட்டி முறிக்கறேன்? வீட்டையும் நீயே ஒதுங்க வச்சு துடைச்சு வச்சிட்ட. வேற வேலையும் இல்லை. சமைக்கிற வேலை ஒண்ணுதான் எனக்கு. அது பொறுக்கலையா?…” என்று நாசூக்காய் மறுத்தார் கனகா.
மகள் வீடே ஆனாலும் அதனை அளவுடன் நிறுத்திக்கொண்டார் கனகா. கணவரின் அக்காவின் குணம் அறிந்து வைத்திருந்தார். ஒருநாள் சாப்பிட்டாலும் ஒரு மாமாங்கத்திற்கு சொல்லி காண்பித்துவிடும் குணமுடையவரிடம் தேவையின்றி பேச்சு கேட்க விருப்பமில்லை கனகாவிற்கு.
இன்னொன்று அவர் வரும் பொழுதே அங்கே சமைக்க தேவையானதை எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் கொண்டு வந்திருந்தார். அதை வீணாக்கவும் விரும்பவில்லை.
“இப்ப என்ன ஒரு மூணு நாளைக்கு நீயும் மாப்பிள்ளையும் இங்க சாப்பிடுங்க. சேர்த்தே நான் சமைக்கறேன்…” என்று பேசிக்கொண்டே கனகா வேலையில் இருக்க ராகாவிற்கு கண்கள் கலங்கியது.
அதை தாயிடம் காண்பித்துக்கொள்ளாமல் புன்னகையுடன் மறைத்துக்கொண்டவள் தந்தை அருகே சென்று அமர்ந்துகொண்டாள்.
கீழ் வீடு அளவிற்கு மாடியில் அறை எடுத்திருக்கவில்லை. பாதி வீட்டை அடைக்கும் அளவிற்கு பெரிய ஹால் ஓரத்தில் கிட்சன், பக்கத்து மேஜையில் சாமி படங்கள் வைத்து அதை பூஜை இடமாக்கி இருந்தார்.
சிறியதாய் ஒரு ரூம். அதில் கீழே இருக்கும் பொழுது தாங்கள் பயன்படுத்திய பாதி பழைய பொருட்கள். உபயோகப்படுத்தும் பொருட்களே என்றாலும் அதனை கவனமாக அடுக்கி வைத்திருந்தார். பாதி வீட்டிற்கு வெளியே மொட்டை மாடியும் அதை ஒட்டியபடி பாத்ரூம் வசதியும் இருந்தது.
அந்த பெரிய ஹாலிலேயே இன்னொரு மூலையில் தடுப்பு கட்டப்பட்டு சமையலறை போல செய்திருந்தார்கள். அதை ஒட்டியே ஸ்டாண்ட் பொருத்தி அதில் பாத்திரங்கள் வைத்திருந்தார்கள். கை கழுவ, பாத்திரம் கழுவ எல்லாம் வெளியே தான்.
அவர்களை பொறுத்தவரை வசதிக்கு மேலே குறைவில்லை என்றாலும் கீழே உள்ள வீடு பெரியது. மூன்று படுக்கை அறையும் அததற்கு தனியே அமைப்பாக இருக்க கனகாவிற்கு இப்பொழுது நினைத்தலும் மனதிற்கு வருத்தமாக இருந்தது.
பொள்ளாச்சியில் இருக்கும் வீடு ஒண்டுக்குடித்தனம் போல தான். வாடகை குடுத்து மாளாமல் கையை கடிக்காத கணிசமான தொகைக்கு ஒரு வீடு சல்லிசாக வரவும் அப்போதைக்கு என்று வாங்கி போட்டுவிட்டார். கடைசியில் அதுவே நிரந்தரமாகியது.
அப்போதைய தேவைக்கு அது பெரிதாக தெரியவில்லை. ஆனால் பிள்ளைகள் வளர வளர அந்த வீடு நிறைவில்லாமல் போனது.
“வாக்கா. எங்க உன் பையனை?…” என கேட்டபடி தலையை துவட்டிக்கொண்டு வந்து நின்றாள் கீர்த்தனா.
“அவன் அத்தை வீட்டுக்கு காலையிலையே தூக்கிட்டு போய்ட்டாங்க கீர்த்தி. நைட் தான் அனுப்பறேன்னு சொல்லிருக்காங்க…” சற்று தயக்கத்துடன் சொல்லவுமே,
“அதுக்கு ஏன் மூஞ்சியை வாட்டமா வச்சிருக்க? நைட் வருவான்ல அப்ப நாங்க பார்த்துக்கறோம். சிரிடி…” என அக்காவின் கன்னத்தை பிடித்து ஆட்டவும் தங்கைக்காக சிரித்தவளின் புன்னகை கண்களை எட்டவில்லை.
தாயும் தந்தையும் வருகிறார்கள் என்று தெரிந்ததுமே அவர்களுக்கு முன்பே வந்து பிள்ளையை தூக்கி சென்றுவிட்ட மாமனாரை சொல்லவா? இல்லை அதற்கு மறுப்பு தெரிவிக்காத கணவனை சொல்லவா? என நொந்துகொண்டு இருந்தாள்.
ஸ்ரீநிவாஸ் தனியாக இருக்கும் வரை மிக மிக நல்லவன் தான். உண்மையை சொல்ல போனால் அங்கே தாய் தந்தையுடன் இருக்க முடியாமல் மண்டை சூட்டில் சண்டையிட்டு அவனே தான் தன்னை தனியாக அழைத்து வந்துவிட்டான். அது அவனுக்காக மட்டுமில்லை.
“உன்னை சிரிச்ச முகமாவே பார்த்துட்டு எங்க வீட்டுல மருந்துக்கும் சிரிப்பில்லாம பார்க்க முடியலை ராகா…” என உள்ளார்ந்த வருத்தத்துடன் கணவன் சொல்லும் பொழுதெல்லாம் அவளுக்கு மனைவியாய் உருகிவிடும். அதே நேரம்,
“நமக்காக எவ்வளவோ விட்டு குடுக்காங்க. தனியா இருக்க விட்டிருக்காங்க. நாம தான் சிலவிஷயத்தை அனுசரிச்சு போகனும்…” என்று சொல்லி சொல்லி அவளின் சிரிப்பை எல்லாம் அவனே கொஞ்சம் கொஞ்சமாய் குறைத்துகொண்டு இருந்தான்.
தன்னால் தான் மட்டுமல்லாது தனது பெற்றோரும், உடன் பிறந்தவளும் சேர்ந்து அவதிப்படுவதை தான் பொறுக்க முடிவதில்லை அவளுக்கு. சண்டையிடும் அளவிற்கு மோசமானவனும் இல்லை.
காலை பெற்றவர்கள் வருகிறார்கள் என்றதும் ஊருக்குள் இருந்து ஒரு ஆட்டோவை அமர்த்தி அனுப்பி வைத்தான். அவர்களுக்காக சிலவிஷயங்கள் பார்த்து செய்வான் தான். அதுவே அவனின் அம்மா தலையிட்டுவிட்டால் எதுவும் நகராது.
அதற்காகவேணும் பொறுமையாய் இருந்து கொள்வாள் இந்தளவிற்கேனும் நல்லமுறையில் முகம் திருப்பாமல் தன் குடும்பத்துடன் நடக்கிறானே என்று. இதோ திருவிழாவிற்கு அவனின் அம்மாவிற்கு தெரியாமல் தான் உடை எடுத்து கொடுத்து ராகாவிடம் அனுப்பிவைத்தான்.
“என்னக்கா கனவா? கனவுல நீதானேன்ற மாதிரி உன் மாமியார் தானே?…” என்று கீர்த்தனா சிரிக்க,
“என்னடி உன் கை எல்லாம் இப்படி சுருங்கிருக்கு? தண்ணில ரொம்ப ஊறிடுச்சு. உட்காரு…” என்று தங்கையுடன் சேர்ந்து அமர்ந்த ராகா அவளின் கையை தேய்த்துவிட,
“ப்ச் எல்லாம் கொஞ்சம் நேரத்துல சரியாகிடும்…” என்று உருவ பார்க்க,
“சும்மா இருடி, உனக்கு ஈரமே ஒத்துக்காது. இழுத்து வச்சுக்காத திருவிழா நேரத்துல…” என்று கடிந்தவள் உடனே எழுந்து சென்று தேங்காய் எண்ணையை எடுத்து வந்து தங்கையின் கையில் சூடு பறக்க தேய்த்துவிட்டாள்.
வரும் பொழுதே கீர்த்தனாவின் உடல் நடுங்கி கொண்டுதான் இருந்தது. வந்ததும் உடலிலும் உடையிலும் சேறு ஒட்டியிருக்க லேசாய் ஈரத்துடன் ஈரமாய் குளித்து வந்துவிட்டாள். இப்பொழுது உடல் லேசாய் நடுங்க ஆரம்பித்தது.
“கனகா எந்த சாப்பாட்டை என்கிட்டே குடுத்து அடுப்புல கரிக்கட்டையை போடு. இவளுக்கு தலைக்கு சாம்பிராணி போட. இல்லைன்னா சளி புடிச்சா விடாது…” என தட்டை தன் கையில் வாங்கிக்கொண்டார் தங்கதுரை.