“இல்ல ஸார், அதுக்கில்லை, தெரிஞ்சா சந்தோஷம் தான். அதான்…”
“இப்ப தெரிஞ்சிருச்சு தானே?…” என அக்னி கேட்க,
“அதான் ஸார், ஸ்வீட் குடுக்கலாம். இந்த நல்ல விஷயத்துக்கு ட்ரீட் வைக்கலாம். என் சந்தோஷத்தை காமிக்கலாமேன்னு…” என்றான் அவன்.
அந்த பிரச்சனையின் பின்பு அக்னியின் முறைப்பும் பேச்சும் எதுவும் ஸ்ரீநிவாசை அங்கே நிம்மதியாக இருக்கவிடவில்ல. தன்னுடைய பெயர் கெட்டதோடில்லாமல் அங்கே தனது மதிப்பு குறைந்துவிட்டதாகவே எண்ணினான்.
அந்த மதிப்பை மீண்டும் பெரும் வாய்ப்பாக இதனை நினைத்தவன் அக்னியின் மனம் குளிரவென பேச ஸ்ரீநிவாசை அறியாதவனா அக்னி?
“ஓஹ், ட்ரீட். வாவ்…” என்று அக்னி சிரித்ததும் அவன் ‘நிஜமாகவே மகிழ்ந்தானா இல்லை பரிகாசமா’ என பிரித்தரியமுடியாமல் ஸ்ரீநிவாஸ் தடுமாற,
“ஓகே, நீங்களே ட்ரீட் குடுக்கனும்னு ஆசைப்படறீங்க. எங்க குழந்தையோட பெரியப்பா வேற. மூத்த மாப்பிள்ளை. அப்ப உங்க ஆசைக்கு மதிப்பு குடுக்க வேண்டியது என்னோட கடமை ஸ்ரீநிவாஸ்…” என சொல்ல என்ன சொல்ல போகிறானோ என ஸ்ரீநிவாஸ் பார்க்க,
“அப்போ இன்னைக்கு நம்ம பேக்டரி வொர்க்கர்ஸ் எல்லாருக்கும் உங்க சார்பா உங்க செலவுல பிரியாணியும், ஸ்வீட் பாக்சும் குடுத்திருங்க. இன்னைக்கு இல்லைன்னா கூட நாளைக்கு குடுக்கலாம்…” என்று அக்னி சொல்லவும் மாட்டிக்கொண்ட பாவனையில் அவன் விழித்தான்.
‘இம்புட்டு பேத்துக்கும் பிரியாணி ஸ்வீட் பாக்ஸா?’ என அதை நினைத்து பார்க்க அதற்கு ஆகும் செலவை கணக்கிட தலைசுற்றி போனது அவனுக்கு.
“என்ன ஸ்ரீநிவாஸ், நீங்க பெருசா செய்ய சொல்லுவேன்னு நினைச்சீங்களா? இப்போதைக்கு இது போதும். உங்களோட உரிமையை எந்த சூழ்நிலையிலும் நான் தடுக்க மாட்டேன். என் குழந்தைக்கு நீங்க என்ன செய்யனுமோ அதை நானே கேட்டு வாங்கவும் யோசிக்கமாட்டேன். ஒன்னுக்குள்ள ஒன்னாகிட்டோம் பாருங்க…”
அக்னி பேச பேச மனதிற்குள் கடுகடுத்து நிற்கும் தன் நிலையை அறவே வெறுத்தான் ஸ்ரீநிவாஸ்.
“பயந்துட்டீங்களா?…” என சிரிப்பை துடைத்துவிட்டு அக்னி பேச அவனின் குரல் பேதத்தில் நிமிர்ந்து பார்த்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
“இல்லை இந்த ட்ரீட்டை குடுக்கனுமேன்னு பயந்துட்டீங்களான்ன்னு கேட்டேன்…” என நக்கலாக அக்னி கேட்க,
“முதல்ல உங்களுக்கு குடுக்கப்பட்ட வேலையை பிசிறில்லாம தப்பில்லாம செய்ய பாருங்க. அதுக்கு உண்மையா இருங்க. அதுக்கப்பறம் இந்த ட்ரீட் குடுக்கலாம். ஏன் உங்களுக்கா நானே குடுக்கறேன்…” என்ற அக்னி,
“போன்ல பேசறப்போ எங்க நின்னு பேசறோம் என்னன்னு முதல்ல யோசிக்கனும். இப்படி வாஷ்ரூம் வாசல மறைச்சு நின்னுட்டு தன்னை மறந்து பேசினா உள்ள இருக்கறவங்களும் கேட்பாங்க. வரவங்களும் கேட்பாங்க…” என கூடுதலாய் அறிவுரை வேறு சொல்லிவிட்டு செல்ல காதில் புகை வந்தது ஸ்ரீனிவாசிற்கு.
“இவன் மட்டும் என் முன்னாடியே பொண்டாட்டிட்ட பிரச்சனைன்னு சண்டை போடலாம். நான் சண்டை போட்டா தப்பா? இந்த வாய்க்கு தான் கல்யாணம் ஆகி ஒரு வாரத்திலையே பிரச்சனைன்னு புலம்ப வேண்டியதாகிடுச்சு. கடவுள் இருக்கான்டா…” என முணுமுணுப்புடன் வாஷ்ரூமினுள் சென்றான் ஸ்ரீநிவாஸ்.
தலை வலிப்பதை போல இருக்க சுரேனிடம் பேசிவிட்டு வீட்டிற்கு கிளம்பினான் அக்னி. தலையை பிடித்துக்கொண்டே ஹாலில் இருந்த சோபாவில் அமர சந்திரிகா வந்தார்.
“என்ன அக்னி தலை வலிக்குதா? காபி குடிக்கிறியா?…” என கேட்க தலையை அசைத்தவன் மனக்கண்ணில் கீர்த்தனா வீட்டில் வீட்டிற்குள் நுழைந்ததுமே தண்ணீர் கொண்டு வந்து தந்த நிகழ்வு விரிந்தது.
அப்போது தான் கீர்த்தனாவோடு மாமனார் வீட்டிற்கு மறுவீடு சென்றிருந்த பொழுதும் வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் கேட்காமலே தண்ணீர் குடிக்க கொண்டு வந்து தந்த மனைவியும், மாமியாரும் நினைவில் வந்தார்கள்.
தொண்டை வறண்டு தாகம் எடுப்பதை போல இருக்க எழுந்தவன் நேராக டைனிங்டேபிளில் இருந்த தண்ணீரை எடுத்து குடிக்க,
“சொல்லிருந்தா மாலதியை கொண்டு வர சொல்லிருப்பேன்ல அக்னி. நீ ஏன் இதை எல்லாம் பன்ற?…” என சந்திரிகா கேட்க,
“எனக்கு என்ன வேணும்னு கவனிக்கிறது தான் மாலதி வேலையா?…” என்றான் இருந்த தலைவலியில்.
“ஆமா, அதுக்குத்தான அவளை வேலைக்கு வச்சிருக்கோம்…”
“ப்ச், என் வேலையை என்னை பார்க்க விடுங்க. அது போதும்…” என்றுவிட்டான் சட்டென.
“சரி, நீ டென்ஷனா இருக்க. உட்கார்…” என்றவர்,
“மாலதி, காபி கொண்டு வா…” என்று சொல்லவும் சற்று நேரத்தில் காபியுடன் வந்துவிட்டாள் மாலதி.
வாங்கி குடித்தவனுக்கு ஒப்பவே இல்லை. காபி சுவை குறைவாக இருப்பதை போல தோன்றவும்,
“ப்ச், என்ன இது ? டிகாஷனே இல்லை. எனக்கு வேண்டாம். காபி குடிச்சா தலைவலி குறையுமேன்னு பார்த்தா ச்சே…” என சொல்லி கீழே வைத்துவிட,
“மாலதி எடுத்துட்டு போய் ஸ்டாராங்கா கொண்டுவா…” என சந்திரிகா சொல்லி அவளை அனுப்ப,
“ம்மா, எனக்கு காபி வேண்டாம்…”
“தலை வலிக்குதுன்னா காபி குடிச்சா கொஞ்சம் பெட்டரா இருக்கும் அக்னி…”
“அப்ப நீங்க போட்டு தருவீங்களா? சும்மா இருங்கம்மா. எனக்கு வேண்டாம். அவ்வளவு தான்…” என சொல்லிவிட்டு எரிச்சலுடன் எழுந்து செல்ல திகைப்புடன் அமர்ந்திருந்தார் சந்திரிகா.
அக்னி இப்படி பேசுபவனில்லையே. இன்று எரிந்துவிழுவதை போல பேச இதை சுத்தமாய் அவர் எதிர்பார்க்கவில்லை.
தன் அறைக்கு சென்று பன்னீர்செல்வத்திற்கு அழைத்தவர் அவர் எடுத்ததும் நடந்த விஷயத்தை சொல்ல அமைதியாக கேட்டுக்கொண்டார் அவர்.
“என்னங்க எதுவுமே பேசலை…”
“என்ன பேச சொல்ற? அவன் தண்ணி எடுத்து குடிச்சதை கூட நீ மாலதிட்ட வாங்கி குடிக்கனும்னு சொல்லிருக்க. அவன் கோபம் நியாயம் தானே?…”
“ஆனா இத்தனை நாளா அவன் அதைத்தான பண்ணினான். இன்னைக்கு மட்டும் என்ன?…”
“சந்திரிகா முதல்ல நிலமையை புரிஞ்சுக்கோம்மா. கல்யாணம் ஆகி கொஞ்சம் நாள் தான் ஆகுது. ரொம்ப ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணினான். இன்னைக்கு பொண்டாட்டியை கொண்டு போய் மாமியார் வீட்டில விட்டிருக்கான். கீர்த்தி இல்லாம அவனுக்கு கஷ்டமா இருக்குது. இதை நாம தான் புரிஞ்சுக்கனும்…”
“இதுக்குதான் மருமகளை அங்க அனுப்ப வேண்டாம்னு சொன்னேன்…”
“இப்ப இது ஒரு பிரச்சனையா? நீ கொஞ்சம் விட்டுபிடிச்சாலே எல்லாம் சரியாகிடும். போட்டு இறுக்கி பிடிக்காதம்மா. இப்ப போனை வைக்கறேன்…” என சொல்லி கட் செய்துவிட புரிந்தும் புரியாதநிலை சந்திரிகாவிற்கு.
அக்னிக்கு தங்கள் அறைக்குள் நுழைந்ததுமே கீர்த்தனாவின் வாசனை. அருகில் இருப்பதை போலவே ஒரு உணர்வு. ஆனாலும் அவள் இல்லாத அவனின் நிலை.
கண்முன் இருந்தவள் உருவம் காற்றில் கலைவதை போல இருந்தாலும் அள்ளி அணைக்க முடியவில்லை.
“கீர்த்தனா…” என உதடுகள் முணுமுணுக்க அவளின் அருகாமைக்கு அலைபாய்ந்த மனதுடன் சோபாவில் விழுந்தவன் அப்படியே உறங்கி போனான்.
வெகுநேரமாய் போன் இசைக்கும் சத்தத்தில் கண்களை சுருக்கி மெதுவாய் கண்விழித்தவன் எடுத்து பார்க்க கீர்த்தனா தான் வீடியோ காலில்.
படுத்தபடியே சோம்பலுடன் அட்டன் செய்தவன் அதில் தெரிந்த அவளின் முகத்தை பார்த்தபடி இருந்தான்.
“என்னாச்சு கண்ணெல்லாம் சிவந்திருக்கு? என்ன செய்யுது உங்களுக்கு?…” என்றதும் சுறுசுறுவென கோபம் பொங்கியது.
“ரொம்ப அக்கறைடி உனக்கு என் மேல. போயிரு பார்த்துக்க. அதான் அங்க போய்ட்டேல. அப்பறம் இங்க நான் எப்படி இருந்தா உனக்கென்ன?…” என கடுகடுத்தான்.
“என்ன ஆச்சுன்னு கேட்டா கத்தறீங்க?…” என்றவள் வேகவேகமாய் ஹெட்போனை மாட்டிக்கொண்டு அமர அவளின் முகத்தில் தெரிந்த பதட்டத்திலும் எங்கே தான் பேசியது அவளின் பெற்றோர்கள் கேட்டுவிடுவார்களோ என்ற பயத்தில் நொடியில் பூத்த வியர்வையிலும் எழிலாய் இருந்தவள் இவனின் கண்களை திருடிக்கொண்டாள் அவள்.
“சும்மா தான் இருக்கேன். உங்கட்ட பேசிட்டு…” என அவனின் பார்வை பேதத்தையும், குரலையும் உணர்ந்துகொண்ட மனைவியாய்.
“என்னை என்ன பன்றன்னு கேட்டேன்…” என மீண்டும் அவன் கேட்க,
“நானா? ஒன்னும் இல்லையே. என்ன? என்ன?…” என புரியாமல் கேட்க அமிழ்ந்திருந்த கோபம் வலுபெற்றது. தவிப்பும், ஏக்கமும் தனக்குத்தானா அவளுக்கில்லையா என்ற ஆதங்கத்தில்,
“நீ ஒண்ணுமே பண்ணலையா. அப்ப போனை வை. கால் பண்ணாத…” என கட் செய்துவிட என்னவோ என்று பயந்து மீண்டும் அழைத்தாள்.
கீர்த்தனாவிற்கு மீண்டும் தொழிலில் பிரச்சனையோ? இப்படி ஒரு சூழ்நிலையில் அவனுடன் இல்லாமல் வந்துவிட்டேனே? என நினைத்தவளாய் அழைக்க பத்து அழைப்புகளுக்கு பின்னர் தான் மீண்டும் எடுத்தான். எழுந்து அமர்ந்திருந்தவன் இவளை பார்த்ததும்,
“எனக்கு முடியலை தான். உடனே வந்திட போறியா? இல்லைல்ல. ஆமா நான் உன்னை தேடறேன். போதுமா? நல்லா தூங்கு…” என சொல்ல,
“நான் வேணும்னா கிளம்பி வரட்டுமா?…” என கேட்டதும் இன்னும் கோபம் பெருக,
“என்ன விளையாடறியா? உனக்கு வேணும்னா போகனும்ப. வேணும்னா வரனும்ப. என்னை பார்த்தா உனக்கு என்ன தோணுது?…” என்று எரிந்துவிழ,
“நீங்க ஒன்னும் கூட்டிட்டு வர வேண்டாம். நானே அப்பாவோட வரேன்…”
“வாய மூடு கீர்த்தி, இதையே பேசின மனுஷனா இருக்க மாட்டேன் நான். பேசாம அங்க இரு…” என்று வைத்துவிட அதற்கு மேலும் கீர்த்தியால் அங்கே இருக்கமுடியவில்லை.
அதற்கு பிறகான இரண்டு நாட்களும் அவளிடம் அக்னி பேசினாலும் அவளின் உடல்நிலை பற்றியும் என்ன செய்கிறாள் என்றும் மட்டுமே பேச வந்து அழைத்து போ என கீர்த்தனா கேட்டும் காதில் வாங்காமலே இருந்தான்.
கொஞ்சம் கொஞ்சமா பொறுமையிழந்துகொண்டு இருந்தாள் அவள். வந்து முதல் நாள் கூட நன்றாக சென்றது. இரவு கணவனுடனான சண்டையில் அவனின் தேடல் உணர்ந்தவள் அவனை தேட துவங்கினாள்.
கட்டிக்கொண்டு ஒட்டிக்கொண்டு இருப்பதை விட அவனின் அருகே இருந்தால் கூட போதுமாக தோன்றியது அவளுக்கு.
“ஒரு மணிநேர ட்ராவல். முடியாதாமா?…” என்று நான்காம் நாள் காலையே சண்டையை துவங்கியிருந்தாள் கீர்த்தனா.
“இவ்வளோ கத்தி பேசற, வீட்ல யாரும் இல்லையா?…” என இவன் கிண்டல் பேச,
“அம்மா ஒரு விசேஷ வீட்டுக்கு போய்ருக்காங்க. வர மத்தியானம் ஆகும். அப்பா பேங்க்…”
“தனியாவா இருக்க?…” என்றபடி அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்தவன் அடைக்கலத்தை அழைத்து ஒரு பேப்பரில் எழுதிக்காட்டியவன் கீர்த்தனாவுடன் பேசிக்கொண்டே காரை கிளப்பி ப்ளூட்டூத்தில் கனெக்ட் செய்துவிட்டு பொள்ளாச்சியை நோக்கி கிளம்பினான்.
அவனாலும் அதற்கு மேலும் அவளை பிரிந்து இருக்கமுடியும் என தோன்றவில்லை. ஆனாலும் வருவதாய் அவளிடம் சொல்லாமல் கிளம்பினான் அவளுக்கு இன்ப அதிர்ச்சி தர. அவள் தந்தாள் இவனுக்கு அதைவிட அதிர்ச்சி.
“தனியா இருந்தா மட்டும் வந்துருவீங்களா?…” என்று அவள் எரிச்சல் அதிகமாகிக்கொண்டே இருந்தது.
“ஏன் வரனும்? என்னை கேட்டா அங்க போகனும்னு சொன்ன? நீயா விருப்பப்பட்டு போன..”
“இப்பவும் நானா தான விருப்பப்பட்டு வரேன்றேன். அதுவும் கூடாதுன்னா. இது சரியில்லைங்க…” குரலில் காரம் தூக்கலாக இருக்க அக்னிக்கு கொண்டாட்டமாக இருந்தது.
தன்னுடன் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கிறாள் என சிரிப்புடன் நினைத்தவன் ‘கோபப்படட்டும். திட்டட்டும். அப்பத்தான் நான் போனதும் ஷாக் ஆகி நிப்பா’ என நினைத்துக்கொண்டான்.
“ஆமா, கூடாது தான். எனக்கு என்னைக்கு உன்னை கூட்டிட்டு வரனும்னு தோணுதோ அப்போதான் வருவேன். அதுவரைக்கும் அங்கயே இரு. என்னவோ இங்க நாங்க உன்னை கட்டி போட்டு வச்சிருக்கற மாதிரி தப்பிச்சு ஓடற மாதிரி போன தானே?…” என விளையாட்டு போல கேட்டுவிட,
“ஆமா கட்டி தான போட்டு வச்சிருந்தீங்க. இல்லைன்னு சொல்ல முடியுமா? சொல்லிடுவீங்களா? அங்க நிக்காத, இங்க உட்காராத. அதை செய்யாத, இதை பண்ணாதன்னு என்னோட ஒவ்வொரு அசைவையும் கட்டி தான் போட்டு வச்சிருந்தீங்க…” என்று வெடிக்க காரை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியவனின் மனது அவளின் பேச்சில் துணுக்குற்றது.
“கீர்த்தி…”
“கீர்த்தியே தான், கல்யாணம் பண்ணி ஒரு வாரத்துல என்னை கண்டுக்காம விட்ட அதே கீர்த்தியே தான். நாலு நாள் விட்டுட்டு போய்ட்டேன்னு அவ்வளவு கோபம் வருது உங்களுக்கு. ஒரு வீட்டுல ஒரு ரூம்ல இருந்தாலும் நீங்களும் அப்படித்தான என்னை வச்சிருந்தீங்க. என்னோட பேச கூட நேரமில்லாத அளவுக்கு…”