“அப்போ எனக்கு எவ்வளவு கோபம் வரனும்? ஊர் உலகத்துல எவனுமே தொழில் பண்ணலையா? கல்யாணம் முடிஞ்சு பேக்டரில ப்ராப்ளம்னு ஆனதும் வெறும் சாப்பிட்டியா, தூங்கினியா, எந்திச்சியா இப்படி இந்த கேள்விகளை வச்சுத்தான் என்னால உங்கட்ட பேச முடிஞ்சது. இது போதுமா?…”
அவள் பேச பேச கேட்டவன் அவளை தடுக்கவில்லை. இன்றே அனைத்தும் வெளியே வரட்டும் என மௌனமாய் இருந்தவன் காரை கிளப்பி வேகமாய் ஓட்டினான்.
“ஒரே ஊர் பார்த்தோம், கல்யாணம் ஆச்சு. உங்களோட அந்த பத்துநாள் வாழ்க்கை. அதுவும் கூட முழுமையா பத்து நாள் இல்லை. பார்த்த இடத்துல ஒரு மரியாதையான சிரிப்போட நலம் விசாரிப்போட கடக்கறதுக்கும் ஒரே வீட்ல அவங்கவங்க குணநலன்களை தெரிஞ்சு அனுசரிச்சு நீக்குபோக்கா போறதும் ஒண்ணா?. என்னால உங்க வீட்டோட முடியலை…”
“புருஷனா எல்லாவிதத்திலும் என்னை நீங்களும், உங்களை நானும் அறிஞ்சு வச்சதை தவிர உங்க குடும்பத்தை பத்தியோ, உங்களை பத்தியோ வேற என்ன தெரியும் எனக்கு? வெறும் தாம்பத்தியம் மட்டும் போதுமா எல்லாமே தெரிஞ்சுக்க? எதாச்சும் சொல்லிட போறேன்…”
“என்னடி பேசற?…” என இடையே பேச,
“அப்படித்தான் பேசுவேன். கேளுங்க. கேட்டுத்தான் ஆகனும். கோவம் வேற வருதா உங்களுக்கு?…” என அவள் எகிற எகிற கப்பென்று வாயை மூடினான்.
‘என்னம்மா பேசறா இவ?’ என மனதிற்குள் வியந்தவனாய் அமைதி காக்க,
“நீங்க அப்பாட்டக்கராவே வாழ்ந்துட்டு போங்க. இருக்கட்டும். ஆனா உங்க வீட்டு தோட்ட வேலை பார்க்கற அக்கா எங்கப்பாவுக்கு தூரத்து சொந்தம். அவங்கக்கிட்ட நான் முதலாளியா காட்டிக்க முடியுமா? என்னால முடியாது. அப்ப நீங்க அப்படி பொண்ணை தான் பார்த்து கட்டிருக்கனும். செஞ்சிருக்க வேண்டியது தானே அப்படின்னு சொல்லி இப்ப இதை பேச முடியாது தான்…”
கீர்த்தனாவின் தெளிவில் அக்னியின் இதழ்களில் சிறு புன்னகை. ‘பேச்சு கூட கூடாதாமா?’ என மனதிற்குள் அவளை கொஞ்சிக்கொண்டான்.
“சுத்தமா முடியல. என்னால இங்க ஒத்துப்போக முடியவே இல்லை. ஒன்னொண்ணுக்கும் டிப்ளமேட்டிக்கா ப்ரோக்ராம் பண்ணின மாதிரி நீ முதலாளி முதலாளின்னு சொல்லி சொல்லி என்னை அசையவிடமாட்டிக்காங்க. மூச்சுமுட்டி செத்துடுவேனோன்னு ஆகிடுச்சு. என்னை என்ன செய்ய சொல்றீங்க?…”
“கீர்த்தி?…” என்று அவளின் பேச்சின் வீரியத்தில் இவன் கத்த,
“மூச், பேச கூடாது. நான் சொல்லி முடிச்சுடறேன். அப்பறமா என்ன பேசனுமோ பேசுங்க…” என கட்டளையாய் அவனை அதட்ட வாய் மூடி மௌனியானான்.
“எனக்கு கோவம் அப்படி வருது. யார் மேல காண்பிக்கனும்னு கூட தெரியலை. இங்க எங்கம்மாவை நான் ஒன்னு கேட்டு செஞ்சு குடுக்கலைன்னு நேத்து அத்தனை திட்டிட்டேன். உங்கக்கிட்ட காமிக்கமுடியாத கோபம் அம்மாவை பேசிட்டேன். எல்லாம் உங்களால. எனக்கு என்ன செய்யன்னே தெரியலை…”
“உங்க வீட்டுக்கு தான் வாழ வந்திருக்கேன். ஆனா இத்தனை நாள்ல எனக்கு அது நம்ம வீடுன்னு சொல்லவே வரலை. விருந்தாளியா வந்திருக்கற மாதிரி இருக்கு. நம்ம ரூமை தான்டி எனக்கு அங்க எதுவுமே சொந்தமா தெரியலை. என்னால உரிமையா அதை தொட முடியலை. எவ்வளவு அவஸ்தை தெரியுமா? ஏன் என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க?…”
“கல்யாணம் பண்ணுவீங்க. சேர்ந்து வாழ்வோம். அதுக்குள்ளே பிரச்சனை ஆகும். நான் பேசாம இருக்கனும். இருந்தேன். எங்கயும் போகாத, அதை செய்யாத இதை பண்ணாதன்னா உங்கம்மா என்னை மாதிரி ஒரு சிலையை செஞ்சு உங்களுக்கு கட்டி வச்சு உட்கார வைக்கிற இடத்துல உட்கார வைக்க வேண்டியது தானே? பொம்மையா நான்?…”
“எனக்கு அவ்வளவு ஆசை இருந்தது. உங்களுக்கு நான் சமைக்கனும், ஒரு டீ போடனும். அதுல சின்ன சின்ன குறையை கண்டுபிடிச்சு நீங்க என்னை சீரியசாகவோ, சீண்டலாகவோ திட்டனும். என் சமையலை ஒரு நேரமாவது நீங்க, உங்க வீட்டுல இருக்கறவங்கன்னு ரசிச்சு சாப்பிடனும் இப்படி அவ்வளவு ஆசை.
“இது எதுக்குமே எனக்கு வாய்ப்பில்லை. அட்லீஸ்ட் கிட்சனுக்குள்ள என்ன இருக்குன்னாவது தெரிஞ்சுக்கனும். எதுவுமே இல்லை. கிட்சன் பக்கம் போனா கூட என்னவோ பெரிய தப்பு பண்ணின மாதிரி பேசறாங்க. அப்போ நான் என்ன அங்க விசிட்டர் பாஸ்ல பொண்டாட்டியா இருந்துட்டு போக வந்திருக்கேனா? வந்ததை மட்டும் பார்த்துட்டு இருக்கனும்னா அப்ப நமக்கான அந்த ரூம்ல மட்டும் தான் நான் இருக்கனும்….”
“இன்னும் அங்க இருந்திருந்தா கூச்சல் போட்டு ரகளை பண்ணி கண்டிப்பா உண்மையான பிரச்சனை ஆகியிருக்கும். அதுக்கப்பறம் அங்க உங்களுக்கு என்ன மதிப்பு? எனக்கும் தான் என்ன மதிப்பு? எங்க பைத்தியமா மாறிடுவேனோன்னு பயந்து தான் இங்க வந்தேன்…”
“அப்பவும் உங்களை விட்டு மொத்தமா வரனும்னா நினைச்சேன். என்னவோ பெருசா பேசறீங்க விட்டுட்டு போய்ட்ட, விட்டுட்டு போய்ட்டன்னு. அப்ப போக வர கூட நான் முடிவு பண்ண கூடாதா? இல்லை அந்த ரைட்ஸ் எனக்கு இல்லையா? அதையும் இப்பவே சொல்லிடுங்க…”
“இப்பவும் நான் வந்தது என்னால இந்த நிலமையில உங்களை விட்டு தள்ளி இருக்க முடியாதுன்னு தான். உங்க வீட்டுல என்னால ஒன்னொண்ணுக்கும் உங்களை தேட தோணும். இப்ப இன்னும் அதிகமாகவே. அப்போ பக்கத்துல இல்லைன்னா எனக்கு கஷ்டமா இருக்கும் தானே?. இங்க வந்தது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்க மட்டும் தான்…”
“இப்பவும் வெக்கத்தை விட்டு உங்களை பிரிஞ்சு இருக்க முடியலைன்னு நானே தான் கூட்டிட்டு போங்கன்னு நிக்கறேன். ரொம்ப வாமிட்டிங். உங்க தோள்ள சாய்ஞ்சுக்கனும்னு தோணுது. என்னோட நெத்தியை நீங்க பிடிச்சுவிட்டு என்னை தாங்கணும்னு தோணுது…”
“சோர்வா நான் படுத்துருக்கும் போது என் வயிற்றை தடவிக்குடுத்து ஏன்டா குட்டி அம்மாவை படுத்தறன்னு சொல்லி குழந்தையை செல்லமா நீங்க மிரட்டனும்னு தோணுது. கல்யாணம் ஆனப்போ நம்ம பெட்ரூம்ல வச்சு எனக்கு சாப்பாடு கொண்டு வந்து சாப்பிட வச்சீங்களே அப்படி திருட்டுத்தனமா உங்களோட சாப்பிடனும்னு தோணுது…”
“உங்களுக்கு நிறைய முத்தம் குடுக்கனும்னு தோணுது. உங்களோட பிரச்சனைகளை கேட்டுட்டே இருக்கனும்னு தோணுது. எல்லாத்தையும் விட இப்போ, இப்போ நீங்க டாப்ஸ்லிப் கூப்பிட்டா கூட உடனே கிளம்பி உங்களோட அங்கயே எவ்வளவு நாள் இருக்க முடியுமோ அவ்வளவு நாளும் அந்த மரவீட்டுல இருக்கனும்னு தோணுது. லாஸ்ட் டைம் மாதிரி பயந்துட்டு உங்களை கூட்டிட்டு வந்திட மாட்டேன். போதுமா போதுமா? இதுக்கு மேல என்ன சொல்லனும் நான்?…”
ஆசைகள், அவளின் சின்ன சின்ன எளிமையான ஆசைகள். தன்னால் சொடக்கிடும் நேரத்தில் நிறைவேற்றக்கூடிய ஆசைகள். ஆனால் அதற்கே ஏங்க வைத்திருக்கிறேனே? மனசாட்சி சுட்டு பொசுக்கியது அவனை.
“இவ்வளவுக்கு மேலையும் உங்களுக்கு கூப்பிட வர தோணலைன்னா போங்களேன். அப்படியே அங்கயே இருந்துக்கோங்க. நான் உங்களை வாங்கன்னு கூப்பிடவே மாட்டேன். மாட்டேன்…” என கத்தியவளின் தோள் தொட்டு திருப்பிய நொடி இறுக்கமாய் அவளை அணைத்துக்கொண்டான்.
அவன் வந்து தன்னை கட்டிக்கொண்டதை கூட உணரமுடியாமல் அவனின் அணைப்பிற்குள் அடங்கியவள் இன்னுமின்னும் பேசிக்கொண்டே இருக்க கையிலிருந்த மொபைல் கீழே விழுந்து உடைந்தது.
“இனி இங்கதான் இருக்கனும்னா இருந்துக்கறேன். நீங்க வர வேண்டாம். வர வேண்டாம். வேண்டாம்…” என மனம் போன போக்கில் பிதற்ற அவளின் தலையை ஆறுதலாய் தடவிக்கொண்டே,
“கீர்த்தி இங்க பார். பாரு கீர்த்தி. நான் வந்துட்டேன் பாரு. நிமிர்ந்து பாருடி…” என்று நான்கைந்து முறை அவளை அதட்டிய பின்பு தான் அவனின் அணைப்பில் நிற்பதை கண்டு தன்னுணர்வு வந்தவள் ‘நிஜமாகவே வந்துவிட்டானா?’ என அவனின் கையில் கிள்ளி வைத்து அவன் லேசாய் கத்தவும்,
“தீப்பொறி…” என கட்டிக்கொண்டாள். அவளின் விளிப்பில் சிரித்தவன்,
“சொல்லுங்க திருமதி தீப்பொறி…” என சீண்ட நொடியில் அனைத்தும் ஞாபகத்திற்கு வரவும் அவனை ஒரே தள்ளாக தள்ளியவள்,
“என்ன பரிதாபப்பட்டு போனா போகுதுன்னு கூட்டிட்டு போக வந்திருக்கீங்களா? நான் வரமாட்டேன்…” என முறுக்கிக்கொள்ள,
“சரி, நீ வரவேண்டாம். நான் உன் கூட இருக்கேன்…” என்று சாவகாசமாய் சோபாவில் அமர்ந்தான்.
அவனை முறைத்தபடி நின்றவள் பின் உள்ளே சென்று குடிக்க தண்ணீர் கொண்டுவந்து தரவும் அத்தனை நேரம் இருந்த படபடப்பு குறைவதை போல இருந்தது அந்த குளிர்ந்த நீரை அருந்தியதும்.
ஆசுவாசமாய் கண்ணை மூடி சாய்ந்துகொண்டவன் மனதில் கீர்த்தனாவின் பேச்சுக்கள் ஒவ்வொன்றும் ஆணியடித்ததை போல பதிந்திருந்தது.
“ஏதாவது சாப்பிடறீங்களா?…” என கேட்க கண்ணை திறந்து பார்த்தவன்,
“இங்க வா…” என்றழைத்தான்.
மெதுவாய் அவனருகே சென்று அமர தன் தோளில் சாய்த்துக்கொண்டவன் அமைதியாய் இருந்தான் அந்த நிமிட அருகாமையை ரசித்தபடி.
ஆனாலும் மனதிற்குள் சுருக்கென்று குத்தியது அவளின் குற்றசாட்டுக்கள். அவளுக்கு இன்ப அதிர்ச்சி தர எண்ணி இப்பொழுது முழுவதும் தலைபிரண்டு போய் இருப்பது தன்னிலை தான்.
“ப்ச், உட்காருன்னு பேசாம இருந்தா என்ன அர்த்தம்? என்னை திட்டனும்னா திட்டிக்கோங்க. இப்படி பேசாம இருக்காதீங்க. இந்த சைலன்ட் எனக்கு வேண்டாம். அப்படியே நான் மட்டுமே காட்டுக்குள்ள இருக்கற மாதிரி இருக்குது…” என்று தவிப்புடன் சொல்லியவளை தேற்ற வார்த்தையின்றி இவன் இருக்க,
“பசிக்குது, நான் எதாச்சும் சாப்பிடறேன். உங்களுக்கு எடுத்துட்டு வரட்டுமா?…” என கேட்க,
“இல்லடா நீ சாப்பிடு. ஒரு போன் பண்ணிட்டு வரேன்…” என்று அவன் எழுந்ததும்,
“போனா? கிளம்பனும்னா இப்பவே கிளம்பிடுங்க. அப்பறம் கொஞ்சம் நேரம் இருந்துட்டு என்னை சமாதானம் செய்துட்டு விட்டுட்டு போவீங்க….” என்று முகத்தை மூடிக்கொண்டு திரும்பி அமர்ந்துகொள்ள.
“கொஞ்சம் நேரம் வாய மூடேன். இன்னைக்கு நீ பேசினதே போதும். இதுக்கு மேல பேச உனக்கும் தெம்பில்லை. கேட்க எனக்கும் தெம்பில்லை…” என்று அதட்டியவன்,
“பேசிட்டு வரேன். நீ போய் சாப்பிடு…” என்று போனை எடுத்துக்கொண்டு சென்றவன் தன் தந்தைக்கு அழைத்து பேசிவிட்டு பத்துநிமிடத்தில் வந்து அமர்ந்தான்.
ஹாலில் சோபாவில் அமர்ந்து சம்மணமிட்டு இடது கையில் தட்டை பிடித்தபடி டிவி பார்த்துக்கொண்டே அவள் சாப்பிட்டுக்கொண்டு இருக்க பார்க்கவே வித்தியாசமாக இருந்தது.
“என்னடி இது குழம்பு?…” என கேட்டு அருகே அமர,
“இதுக்கு பேரு பிச்சுப்போட்டு…”
“யாரை பிச்சுப்போட்டு?….” என கிண்டலுடன் அவன் கேட்க முறைத்தவள்,
“இதுக்கு பேரே அதான். கருவாடு, கத்தரிக்காய், மாங்காய், சின்னவெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், முருங்கைக்காய் எல்லாத்தையும் நறுக்கி அப்படியே வதக்காம புளித்தண்ணி ஊத்தி உப்பு போட்டு கடைசில தேங்காய் எண்ணையை வெறுமனே காய வச்சு இந்த குழம்புல ஊத்திடுவாங்க. அதான் பிச்சுப்போட்டு….”
“அம்மா நல்லா செய்வாங்க. இன்னைக்கு நானே செஞ்சேன். இந்த மாதிரி நேரத்துல இதையெல்லாம் தான் சாப்பிட தோணுமாம். அம்மாவும் அப்படித்தான் சாப்பிட்டாங்களாம்…”
“அப்போ நானும் சாப்பிடறேனே…” என அவள் எடுத்து வைத்திருந்த கவளத்தை தன் வாய்க்குள் வாங்கிக்கொண்டான்.
புதுவித சுவையாக இருக்க பச்சை மிளகாயின் காரமும், புளிப்பும் இன்னும் வேண்டுமென்று நாக்கில் தாளமிட்டது சுவை உணர்வுகள்.
“இதையே கருவாடு சேர்க்காம காய்கறி மட்டும் போட்டு செய்வாங்க. அதுவும் கூட நல்லா இருக்கும். ஈஸி, சிம்பிள், சட்டுன்னு ரெடி ஆகிடும். வெந்ததை நல்லா கடைஞ்சு விடனும் ஒன்னுக்கு ரெண்டா. மசிஞ்ச மாதிரியும் இருக்கனும். மசியாத மாதிரியும் இருக்கனும்…” என அவனிடம் குறிப்புகளை சொல்லிக்கொண்டே இன்னும் சாதம் போட்டுவிட்டு வந்து ஊட்ட,
“நீயும் சாப்பிடு…” என்று அவளுக்கு தர போக,
“ம்ஹூம், நான் அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன். இல்லைன்னா வாமிட் வந்திரும். அம்மா சொல்லிக்குடுத்தது…” என அதையும் சொல்ல சிரிப்புடன் கேட்டபடி இன்னும் அவளை பேச வைத்துகொண்டு இருந்தான்.
கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் ஆகிவிட்டது அக்னி வந்து. கீர்த்தனா அவனிடம் பேசிக்கொண்டு இருந்தாலும் நொடிக்கொருதரம் இதோ கிளம்பிவிடுவான் என்று கடிகாரத்தை பார்த்துக்கொண்டே இருந்தாள்.
“கீர்த்தி உன் போன் ரிங் ஆகுது பார்…” என்று அவன் சொல்லவும் எடுத்து பார்க்க கனகா தான் அழைத்திருந்தாள்.
“என்னம்மா இன்னுமா நீ விசேஷ வீட்டுல இருந்து கிளம்பாம இருக்க?…” என கேட்க,
“ப்ச், கீர்த்தி நானும் அப்பாவும் அவசரமா நம்ம ஊருக்கு வந்துட்டோம். ரெண்டுமூணு நாள் ஆகும் நாங்க அங்க வர. பத்திரமா இரு…” என சொல்லி வைத்துவிட,
“என்ன?…” என இன்னும் திகைப்பில் இருந்து வெளிவராமல் அவள் நிற்க,
“என்னாச்சு கீர்த்தி?…” என வந்தான்.
“இல்லை அப்பாவும், அம்மாவும் ஊருக்கு போய்ட்டாங்களாம். ஏன் என்னை இங்க விட்டுட்டு போனாங்க? இங்க யார் கூட இருக்கிறதாம்? நீங்க போறப்ப என்னை அங்க கொண்டு போய் விடறீங்களா?…” என கேட்க,
“ஏன் நான் இருக்கேன்ல. அவங்க வர வரைக்கும் இங்க இருப்போம்….” என்று இலகுவாய் சொல்லியவனை இன்னும் நம்பமுடியாமல் பார்த்தபடி நின்றாள் கீர்த்தனா அக்னிசெல்வன்.