அக்னி சொல்லியும் அவனை நம்பாத பார்வை பார்த்த கீர்த்தனாவின் முகம் போன போக்கில் வாய்விட்டு சிரித்தவன்,
“சத்தியமா, நான் இருக்கேன்னு சொல்றேன். நீ டவுட்டாவே பார்க்கற?…” என சொல்ல,
“அப்ப நீங்க தான் அம்மாவை அப்பாவை ஊருக்கு போக சொன்னதா?…” என்று இடுப்பில் கை வைத்து முறைத்தாள்.
“நான் ஒன்னும் போக சொல்லலை. அப்பாட்ட சொல்லி அங்க வரவழைச்சுக்கிட்டேன்…” என்று சாவாதானமாக சொல்ல,
“இதுக்கு பேர் தான் அம்மா வீட்ல கொண்டு வந்து விடறதா? இதுல கோபம் வேற…”
“அதுசரி, கூட்டிடு போன்னு போன்ல சண்டை போட்டு அந்த பேச்சு பேசிட்டு, என்னை கண்டமேனிக்கு திட்டிட்டு இப்ப என்னமோ வர இஷ்டமில்லாத மாதிரியும், நான் உன்னை கட்டாயப்படுத்தற மாதிரியும்ல பேச்சு இருக்கு…”
அவனும் அவளை போலவே முறைத்து பார்க்க கீர்த்தனாவிற்கு தான் திக்கென்று இருந்தது. எதுவும் தெரியாமல் வாயை விட்டுவிட்டோமோ?’ என யோசனையுடன் அவனை பார்க்க,
“என்ன?…” என்றான் சோபாவில் நன்றாக சாய்ந்து படுத்துக்கொண்டு.
“ரொம்ப திட்டிடேனா? அவ்வளவா திட்டினேன்? அதான் கிளம்பு உடனே வந்தீங்களா?…”
“திட்டினேன்னு சொல்றேன். புருஷன்ற மரியாதை இல்லாம நீ அவ்வளவு பேசியும் வந்தேன்ல உன் கூட தனிக்குடித்தனம் நடத்த. நீ கேள்வி மேல கேள்வி கேட்கத்தான் செய்வ…”
“எதே தனிக்குடித்தனமா?…” என கிண்டலுடன் அவனெதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தவள்,
“உங்களுக்கே இது ஓவரா இல்லை…” என்றவளை பார்த்து ஒருக்களித்து படுத்து ஒரு கையை தலைக்கு முட்டுக்குடுத்தவன்,
“என்ன செய்ய என்னோட கல்யாண ராசில எல்லாமே ஷார்ட் தான் போல. ஹனிமூனும் ஷார்ட் ஹனிமூன். தனிக்குடித்தனமும் ஷார்ட் தான். இன்னும்…” என்றவனை பேச விடாமல் குட்டி குஷன் பில்லோவை தூக்கி அவன் மீது வீசியவள்,
“மூச், அம்மாடியோவ் எவ்வளவு பேச்சு. இந்த தீப்பொறியா கைல கயிறு கட்டினதுக்கும், பைக் முன்னாடி விழ போனதுக்கும், சட்டையை பிடிச்சு இழுத்ததுக்கும் அந்த முறை முறைச்சு திட்டனது அவ்வளவு வேஷம்…” என்று அவனை பேச அடக்கமாட்டாமல் சிரித்தான்.
“நான் என்ன பச்சப்பிள்ளையா ஏ பி ஸி டி அப்டின்னு உன்கிட்ட பேச. புருஷன்டி. பொண்டாட்டிட்ட என்ன பேசனும் அதை தான் பேசனும்…”
“ஆமாமா, நீங்களும் பேசிட்டீங்க. நானும் கேட்டுட்டேன் இத்தனை நாள்ல…” என்று அவனை பரிகாசம் செய்ய,
“அப்ப கூட நீ என்னை பார்த்து பயப்படவா செஞ்சே. பயந்த மாதிரி ஆக்ட் தானே பண்ணின. அப்ப அதுவும் அழுங்குனி ஆட்டம் தான். ரெண்டுக்கும் சரியா போச்சு…” என்று இவன் பைசல் பண்ண வெகு இலகுவாய் சிரித்த முகமாய் பேசிக்கொண்டிருப்பவனை காண காண மனதிற்குள் ஜில்லேன்னும் உணர்வு.
மீண்டும் கீர்த்தனாவின் போன் இசைக்க எடுத்தவள் அதில் தெரிந்த நம்பரை உத்து பார்த்து,
“கீழே விழுந்ததுல டிஸ்ப்ளே போச்சு போல…” என சொல்லிக்கொண்டே அட்டன் செய்தாள்.
“இப்ப என்ன?…” என்று குரலில் குதூகலத்தை மறைத்தபடி சிரமத்துடன் தான் பேசவேண்டி இருந்தது.
“அதானே எங்களுக்கு என்ன? நீ கேட்க தான் செய்வ? இப்ப என்னவாம்ல…” என்ற குரல் சாதனாவுடையது.
“சாதனாக்கா நீங்களுமா?…” என்று கீர்த்தி சிணுங்க அவர்கள் பேசட்டும் என்று அக்னி எழுந்து உள்ளே சென்றான் அந்த வீட்டை சுற்றி பார்ப்பது போல.
“அப்புறம் மாசத்துக்கு ஓர் ஹனிமூன், அசத்துற கீர்த்தி…” என்று சாதனா சொல்ல,
“அப்படிலாம் ஒன்னும் இல்லை. இதெல்லாம் ஹனிமூனா? வீட்ல தான இருக்கோம்…” முனங்கலாய் வந்த கீர்த்தனாவின் குரலில் சகோதரிகள் சிரிக்க,
“அடியேய் கீர்த்தி பொண்ணு யாருமே இல்லாத இடத்துல புருஷனோட தனியா இருக்கறதுக்கு பேர் தான் ஹனிமூன். அது வெளியூரா தான் இருக்கனுமா என்ன? வீடா கூட இருக்கலாம்…” என விளக்கம் தர,
“போதும் நான் வைக்கறேன். இதென்ன பேச்சு?…” என கீர்த்தனா தப்பிக்க பார்க்க,
“உனக்கு வீட்ல ஒரு கரடி இருந்தேன். இப்ப போன்ல ரெண்டு கரடி. அப்ப நீ விரட்டத்தான் செய்வ…” எத அதற்கும் கேலி பேச,
“ஐயோ போதும் அக்கா…” என்றவளை மேலும் சோதிக்காமல்,
“சரி சரி, அம்மா சொல்ல சொன்னதை சொல்லத்தான் தான் போன் பண்ணினேன்…”
“அதை அம்மா சொல்லமாட்டாங்களா?…”
“ம்ஹூம் சொல்லமாட்டாங்க. நான் சொல்றதை கேட்டுக்கோ. நீ காய்கறி வாங்கறேன்னு வெளில எங்கயும் போக வேண்டாமாம்…”
“நான் ஏன் வெளில போக போறேன்?…” கீர்த்தி திரும்ப கேட்க,
“அதானே இனி அவ ஏன் வெளில போக போறா? அக்னி மாமா வீட்ல இருக்கும் போது…” இடையே சாதனா வர,
“நான் அப்படி சொல்லலை….” என கீர்த்தனா சிணுங்க,
“கண்டினியூ ராகா. தேவைப்படுபோது இன்டராக்ட் பண்ணுவேன்…” என சாதனா சொல்ல,
“முதல்ல நான் சொல்றதை அவளுக்கு சொல்லிடறேன். அப்பறம் பேசுங்கப்பா…” என்ற ராகா,
“பக்கத்து வீட்டு சம்பூரணம் அக்கா எல்லாம் வாங்கி கேட்டுக்குள்ள சந்தனமுல்லை கொடி பக்கத்துல வச்சிருவாங்க. எடுத்துப்பியாம். வெய்ட் எதுவும் தூக்காத…”
“ஹ்ம்ம்…”
“அவருக்கு என்ன பிடிக்கும்னு கேட்டு ஒழுங்கா சமைப்பியாம்…”
“ஹம்ம்ம்…” இந்த ஆமோதித்ததில் சற்று சூடு பறந்தது. ‘அதென்ன ஒழுங்கா?’ என்று ராகாவை திட்டியவள் மேலும் கேட்க,
“போன்ல பேசறது நாம மூணுபேர் தான். இதுல உனக்கு ஹஸ்கி வாய்ஸ். அப்டியே மண்டையில ரெண்டு போட்டா தெரியும்…” என்று ராகாவை மேலும் கலாய்க்க,
“அக்கா நான் போனை வைக்கட்டா…” என சாதனாவின் ஆர்ப்பாட்டம் தாங்காமல் கீர்த்தி கேட்க,
“நீ இன்னுமா லைன்ல இருக்க? வச்சிட்டு போய் புருஷனை பாரும்மா. கொஞ்சம் கவனிக்கறேன்னு ரொம்ப கவனிச்சிடாம கேப் விட்டு கவனி. சரியா?…” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே கீர்த்தனா போனை வைத்துவிட்டாள்.
மழையடித்து ஓய்ந்ததை போல இருந்தது அங்கே. மனதிற்குள் வெட்கமும் படபடப்பும் போட்டி போட கண்ணுக்கு முன்னே ‘டாக்டர்’ என்ற சத்தத்துடன் சாதனா மருத்துவ உடையில் இருப்பதை போன்று கற்பனை விரிய அதில் அடக்கமாட்டாமல் சிரித்தாள் கீர்த்தனா.
“அப்படி என்ன பேசின? இந்த சிரிப்பு சிரிக்கிற?…” என உள்ளே இருந்து வந்தான் அக்னி.
“அது ரகசியம்…” என சொல்லியவள்,
“இன்னும் டேப்லட் போடலை…” என எழுந்து சென்று மாத்திரைகள் அடங்கிய டப்பாவுடன் வந்து அமர்ந்தவள் தண்ணீரை கொண்டு வந்து போட ஆரம்பிக்க அது எதற்கென்று ஒவ்வொன்றாய் கேட்டு தெரிந்துகொண்டான்.
“கொஞ்சம் நேரம் தூங்கறேன். டயர்டா இருக்குது. நீங்களும் தூங்கறீங்களா?…” என்றவள் தான் அறைக்குள் சென்று படுக்கை விரிப்புகள் எல்லாம் வேறு மாற்றினாள்.
“இங்க உங்களுக்கு ஓகே தானே?மெத்தை புதுசு தான். அங்க உங்க ரூம்ல…”
“என்னது?…” என அறை வாசலில் நின்று முறைக்க,
“நம்ம ரூம் போதுமா…” என திருத்திக்கொண்டாள்.
“அங்க மாதிரி இருக்காது. கட்டிலும் சின்னது…” என்று அவனுக்கு விளக்கம் கொடுக்க,
“இதுவே போதும்…” என்றவன் சட்டையை கழற்றிவிட்டு படுத்துக்கொண்டவன் கீர்த்தனா அங்கேயே நிற்பதை பார்த்து,
“என்ன பார்க்கற? தூக்கம் வருதுன்ன?…” என்று கேட்க,
“ஆங், அது, வந்து.. டாக்டர், வந்து…” என்று அடுத்தடுத்து சொல்லி உளறி வைக்க இதழ்களுக்குள் புன்னகையை மறைத்தவனுக்கு அவள் சொல்லியதன் அர்த்தம் புரியாமல் இல்லை.
“டாக்டர்னா ஆயிரம் சொல்லத்தான் செய்வாங்க. அதையெல்லாம் இந்த காதுல வாங்க அந்த காதுல விடனும். புரியுதா? வா…” என அக்னி அவளை கை நீட்டி அழைத்து கலவரப்படுத்த திகைத்து போய் பார்த்தாள்.
‘கீர்த்தனா’ என மனக்கண்ணில் சாதனாவும் ராகாவும் வர இவனானால் இப்படி பேசுகிறானே என்று திருதிருவென விழித்து நின்றவள்,
“இல்லை நீங்க இங்க தூங்குங்க. நான் டோர் லாக் பண்ணிட்டு கொஞ்சம் நேரம் டிவி பார்த்துட்டு வந்து தூங்கறேன்…” என சமாளிப்பாய் சொல்லி அறையிலிருந்து வெளியேறியவளுக்கு அப்பொழுதுதான் மூச்சே வந்தது.
வெளியே சென்று அந்த சிறிய கேட்டை பூட்டியவள் உள்ளே முதல் கதவையும் பூட்டிவிட்டு வந்து டிவியை போட்டுவிட்டு திரும்ப,
“தூங்க வா…” என அவளை நெருக்கிக்கொண்டு நின்றான் அக்னி.
“இல்லை தூக்கம் வரலை…” என்று அவள் பின்னால் நகர,
“நாலு நாளா சரியா தூக்கமே இல்ல. வான்னா ஓவரா பிகு பன்ற…” என அலேக்காய் தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்.
“சும்மா பேசாம இருந்த நானும் நல்ல பையனா இருப்பேன். அசையாம படு…” என சொல்லி அவளை அணைத்துக்கொண்டு இவன் படுக்க சிறிது நேரம் பார்த்தவளுக்கும் கண்களை சுழற்றிக்கொண்டு வந்தது உறக்கம்.