“இந்த வாய்க்கு இவ்வளவு பேச வருமாடி. சும்மா என்னை தெறிக்கவிட்டுட்ட. அவ்வளவு பேசினவளுக்கு டாக்டர் சொல்லிருக்காங்க, தள்ளி இருன்னு சொல்ல வாய் வரலை…” என முணுமுணுக்க மீண்டும் அழைப்பு அவனின் போனிற்கு.
“ப்ச், கொஞ்சம் நேரம் நிம்மதியா இருக்க விடறாங்களா?…” என்ற எரிச்சலுடன் புலம்பிக்கொண்டே கீர்த்தனாவை சரியாய் அலுங்காமல் படுக்க வைத்துவிட்டு எழுந்து வெளியே வந்து போனை எடுக்க சந்திரிகா தான் அழைத்திருந்தார்.
“அக்னி நீ பொள்ளாச்சி போய்ருக்கியா?…” என எடுத்ததுமே கேட்க தலையை ஒரு விரலால் நீவிக்கொண்டவன்,
“ஹ்ம்ம், ஆமாம்மா, காலையில வந்தேன்…”
“சொல்லிட்டு போய்ருக்கலாம்ல. சரி எப்போ கீர்த்தனாவோட கிளம்பி வருவ? கீர்த்திக்கு லைட்டா சமைக்க சொல்லிடறேன் மாலதிட்ட…” என்று சொல்ல,
“அம்மா, நான் வர மூணு நாள் ஆகும். அதனால நீங்க மாலதிட்ட சொல்லி எதுவும் சமைக்க வேண்டாம்…” என்றான் பட்டென்று.
“என்ன அங்க தங்க போறியா? அக்னி உனக்கு அங்க வசதிப்படுமா? அந்த இடத்துல உனக்கு பழக்கம் இருக்காதேப்பா…”
“இனிமே பழகிக்க வேண்டியது தான். எனக்கு இங்க எதுவும் குறையா இருக்கறதா தெரியலை…”
“அங்க எல்லாமே நீங்களே செஞ்சுக்க வேண்டியதா இருக்கும். ரொம்ப கஷ்டம். வேணும்னா ஒன்னு பண்ணு இன்னைக்கு அங்க தங்கிட்டு நாளைக்கு காலையில இங்க வந்திடேன் கீர்த்தியோட…” என சந்திரிகாவும் விடாமல் பேச,
“அம்மா, மூணு நாள் இருக்கனும்னு ப்ளான் பண்ணிட்டேன். முடிவெடுத்துட்டா மாத்தமாட்டேன்னு உங்களுக்கே தெரியும்…”
“இல்லப்பா, திடீர்ன்னு தான் கிளம்பிருக்க, உனக்கு ட்ரெஸ்…”
“அதை நான் பார்த்துக்கறேன்…” என சொல்லி வைத்துவிட்டான் அவன்.
உடை எதுவும் எடுத்து வரவில்லை தான். யாரையும் தன் அறைக்கு சென்று தனது உடைகளை எடுத்து வர சொல்ல முடியாது. புதிதாக எடுத்துக்கொள்ளலாம் என்ற யோசனையுடன் தண்ணீர் தாகமெடுக்க கிட்சனிற்கு சென்று தண்ணீரை தேடினான்.
அங்கே பானைகளில் குடிநீர் தனியாக, சமைக்க தனியாக என பிடித்து வைத்திருக்க அனைத்தும் ஒரே போல இருக்க எதில் தண்ணீர் குடிப்பது என பார்த்தவன் பின் ஒரு சொம்பை எடுத்து ஒரு பானையில் குடிக்க அது கொஞ்சம் சப்பென்று இருந்தது.
“இது குடிக்கிறது மாதிரியே இல்லை. சாப்பிட்டு குடிச்ச தண்ணி வேறயா இருந்துச்சே…” என தானாக பேசியபடி ஒரு தம்ளரை எடுத்துக்கொண்டவன் ஒவ்வொரு பானையிலுமாக கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்து குடித்து பார்த்து ஒன்றை கண்டுகொண்டான்.
“ஹப்பா ஒரு தண்ணி குடிக்கிறதுல கூட இவ்வளவு இருக்கா?…” என சிரித்துக்கொண்டவன் பன்னீர்செல்வத்திற்கு பேசிவிட்டு கீர்த்தனாவின் சில பேச்சுக்களை மட்டும் அவரிடம் மேம்போக்காக பகிர்ந்துகொண்டான்.
“நான் இதுவாவும் இருக்கலாம்னு எதிர்பார்த்தேன் அக்னி. சந்திரிகாவை நான் பார்த்துக்கறேன். இப்போ பேசினதால மட்டும் கீர்த்தி ரிலாக்ஸ் ஆகிட்டா மனசுல இருக்கறதை கொட்டிட்டான்னு விட்டுட கூடாது. திரும்ப இங்க வந்து அதே மனஅழுத்தம் வராம பார்த்துக்க வேண்டியது உன்னோட கடமை…” என்றவர்,
“நீ கீர்த்தியை கல்யாணம் செய்யனும்னு சொன்னப்போ உனக்கு நான் ஒன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா? மனைவியை பேச வைக்கறது மட்டும் முக்கியமில்லை, நாமளும் அதுக்கு ஈடுகொடுத்து பேசனும். உன்னோட ஒவ்வொரு வார்த்தைகளும் தான் கீர்த்தனாவுக்கு பூஸ்ட்…”
“புரியுதுப்பா, இனி நான் விழ மாட்டேன்…” என சொல்ல,
“நீ ஏற்கனவே விழுந்தாச்சு மகனே. அதான் இப்ப என்னை வச்சே உன் மாமனார் மாமியாரை பேக் பண்ண வச்சிருக்க…” என்று அவர் சிரிக்க உதட்டை மடக்கி சத்தமின்றி சிரித்துக்கொண்டவன்,
“ஓகேப்பா, பை…”
“அக்னி, அடைக்கலம் தம்பி உனக்கு பேசனும்னு சொன்னாங்க…”
“இப்ப பேசிடறேன்…” என சொல்லி வைத்தவன் அடைக்கலத்திற்கு அழைத்தான்.
“உனக்கு ட்ரெஸ் அனுப்பிருக்கேன். ஒரு அரைமணி நேரத்துல நம்ம பேக்டரி ஆளு அங்க வருவான். பார்த்து வாங்கிக்க. மூணு நாள் கம்முன்னு அங்க இருக்கனும். சும்மா சும்மா போன் பண்ணிட்டு இல்லாம. வை…”
அக்னி பேசவே இடமளிக்காமல் அவர் பேசி வைத்துவிட சிரித்தபடி வைத்துவிட்டு மீண்டும் வந்து கீர்த்தனாவின் அருகே படுத்துக்கொண்டான். உறக்கம் தான் வரவில்லை.
மணியை பார்க்க இரண்டரை என்றது. பதினோரு மணிக்கு சாப்பிட்டது. மீண்டும் பசிக்க எழுந்தமர்ந்தான்.
அங்கே ஆப்பிளும், வாழைப்பழமும் இருக்க எடுத்து சாப்பிட்டபடி இருந்தவன் டீ குடித்தால் என்னவென்று எழுந்து கிட்சனிற்குள் செல்ல எதில் டீ போடுவது? எப்படி போடுவது என யூட்யூப்பில் ஒவ்வொன்றாய் தேடி பார்த்தவனின் அடுத்த தேடல் அந்த வீட்டில் டீ தூளும், சர்க்கரையும் எங்கே இருப்பதென தேடுவதில் ஆரம்பித்தது.
“இங்க என்ன பன்றீங்க?…” என அவனின் பின்னால் வந்து கிசுகிசுப்பாக கேட்டதும் ஒருநொடி பக்கென்றானது அவனுக்கு.
“உன் கொலுசு என்னாச்சு? சத்தமே கேட்கலை…” என அவன் பயந்ததை மறைக்க அவளிடம் கேட்க,
“ஒரு செகேன்ட் ஷாக் ஆனீங்க தானே?…” என சிரித்தவள்,
“நீங்க இங்க என்ன பன்றீங்க?…” எனவும் அவளின் தோளில் கை போட்டு அணைவாய் நிறுத்திக்கொண்டவன்,
“உனக்கு தான் டீ போடலாம்னு வந்தேன். நீயே எழுந்து வந்துட்ட…”
“நம்பிட்டேன்…”
“ஓகே, நோ ப்ராப்ளம்…” என அவன் தோளை குலுக்கிவிட்டு மீண்டும் சுற்றிலும் தேட ஆரம்பித்தவன் ஒவ்வொன்றையும் திறந்து பார்க்க,
“நானே எடுத்து தரேன்…” என டீ தூள், சர்க்கரை டப்பா, பால், அதற்கு பாத்திரம் என அவனின் முன்னால் எல்லாம் எடுத்து வைத்துவிட்டு என்ன செய்கிறான் என பார்க்க,
“இதெல்லாம் தான் டீக்கு…” என்று பார்த்துக்கொண்டே நின்றவன் தான் பார்த்த வீடியோவை ஒருநொடி மனக்கண்ணில் ஓட்டிப்பார்த்தான்.
“தண்ணி ஊத்தனும், கொஞ்சம் பாலும், டீ தூள் போடனும், சர்க்கரை சேர்க்கனும். கொதிச்சதும் இறக்கி பில்ட்டர் பண்ணனும்…” என்று அவனுக்கு சொல்வதை போல அவளிடம் சொல்ல,
“இன்னைக்கு டீ வராது போல. இதுக்குத்தான் அம்மா இருந்தா…” என கீர்த்தனா ஆரம்பிக்க,
“போதும் உன் பாடத்தை நிப்பாட்டுத்தா. இதுக்கு நேராவே என்னை டாக்டர்ன்னு சொல்லிருக்கலாம் நீ…” என்று கடுப்படித்தவன் அடுப்பை பற்ற வைக்க தடுமாற,
“ஊருக்கே பெரிய ஆளு. ஒரு அடுப்பை பத்த வைக்க தெரியலை…” இன்னுமே அவனை ஓட்டிக்கொண்டே இருந்தாள் கீர்த்தி.
“ரொம்ப பண்ணாதடி. கத்துக்கத்தான வந்திருக்கேன்…” என அவளின் இடையோடு லேசாய் அணைக்க,
“தள்ளி போங்க…” என அவள் நெளிய,
“அந்த தள்ளி வேற. இந்த தள்ளி எல்லாம் தள்ளில சேர்த்தி கிடையாது. பேசாம இரு நீ. சோதிக்காம…” என்று அவளை தன் பிடிக்குள் நிறுத்தியபடியே டீயை போட்டு முடித்தவன் இருவருக்கும் ஊற்றி முடித்து அவளுடன் ஹைபை அடித்துக்கொண்டான்.
அங்கிருந்த நாட்களை அனுபவித்து தான் வாழ்ந்தார்கள். அவளுடைய வாழ்க்கை முறை அவனை முற்றிலும் புதியவனாய் உயிர்ப்பித்தது.
ஆளும் இரகத்தை சேர்ந்தவர்கள். ஆள மட்டுமே பிறந்தவன் என்னும் விதமாய் வளர்க்கப்பட்டு, அப்படியே வளர்ந்தவனுக்கு கீர்த்தனாவின் வாழ்க்கை முறையில் இருந்த உயிர்ப்பு சிலிர்க்கவைத்தது. நிரம்ப பிடித்தது.
அவனின் விவரம் தெரிந்து அவனுக்கு தேவையானதை யாரையாவது உத்தரவிட்டு தான் பெற்றுகொண்டிருந்தான்.
தான் தந்தைக்கு தாய் காபி கொடுத்து கூட பார்த்ததில்லை. அதுதான் வாழ்க்கை என்று இருந்து வந்தவனுக்கு அந்த சிறிய வீட்டின் சின்ன சின்ன வேலைகளும் எளிமையான சாப்பாடும், முற்றத்தின் சந்தனமுல்லை அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் பேச்சுக்களும் என ரம்யமாய் இருந்தது.
காலை எழுந்ததில் இருந்து அவளுடன் சேர்ந்து சமைக்க, அதை சுத்தம் செய்ய, அவளுக்கு உதவ, தெரியாதவற்றை கேட்டு செய்ய என கொஞ்சம் கொஞ்சமாய் பழகிக்கொண்டான்.
அதைவிட தன்னிடம் அவளின் உரிமையின் அளவும், தனக்கென செய்வதில் அவளுக்கிருந்த அளவற்ற ஆசையும் அவளின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலித்தது. அவனுக்கு அந்த உன்னதங்களை கீர்த்தனா அவளறியாமலே அவனுக்கு கற்றுகொடுத்துக்கொண்டு இருந்தாள்.
சாப்பிட்டு முடித்து உறக்கம் வராமல் சந்தனமுல்லை பந்தத்தில் இருக்கும் பூக்களை எல்லாம் கீர்த்தனா பறித்துக்கொண்டு இருக்க அவளுடன் சேர்ந்து அந்த பூக்களை பறிக்க ஆரம்பித்தான்.
சந்தனமுல்லையின் வாசமும் மொட்டாய் மலராத அந்த பூக்களும் கண்களை அள்ளிக்கொண்டது.
“இவ்வளவு பறிச்சு என்ன பண்ண போற?…” என கேட்டுக்கொண்டே மொட்டுக்களை பறித்துக்கொண்டு இருக்க,
“ஏன் கட்டாம? நானும் அம்மாவும் ஒரு கல்யாணத்துக்கு தேவையான பூவையே கட்டி குடுத்திருக்கோம். இங்க அக்கம்பக்கத்துல எங்கட்டதான் எல்லா விசேசத்துக்கும் கட்ட குடுப்பாங்க…” என்றவள் அதற்கு விளக்கங்களும், எவ்வளவுக்கு எவ்வளவு என்னும் விபரங்களையும் சொல்லிக்கொண்டே பூவை கொண்டு வந்து ஹாலில் கீழே அமர்ந்து கட்ட ஆரம்பித்தாள்.
அவளை பொறுத்தவரை சிறு பகிர்தல் தான். ஆனால் கேட்டவனுக்கு அப்படியல்ல. ஏற்கனவே அரசல்புரசலாக அவன் கேட்டது தான்.
இன்று அவள் சொல்ல சொல்ல அவளையே அசையாமல் பார்த்தபடி இருந்தான் அக்னி.
“இன்னொன்னு இந்த மாதிரி பூவை கட்டும் போது மனசுக்கு கொஞ்சம் லேசா இருக்கும். பூன்னாலே அதை பார்த்தாலே மனசுக்கு இதமா இருக்கும். அதுவும் உங்க வீட்டுல அத்தனை விதவிதமா பூ. எனக்கு கை துறுதுறுன்னு இருக்கும். பறிச்சு கட்டுறதுக்கு…”
“நானே பறிச்சு அதை சாமிக்கு போட்டு தலைக்கு வச்சுக்கும் போது அது ஒரு பீல். ரொம்ப ரொம்ப இஷ்டம் எனக்கு. ஆனா அத்தை பூ செடி பக்கத்துல போய் நின்னா கூட மாலதின்னு ஏலம் விட்டுடறாங்க. அங்க கூட போய் நிக்க மாட்டேன் நான்…” என சொல்லிவிட்டு நாக்கை கடித்துக்கொள்ள,
“அதான் சொல்லிட்டியே…” என அவளின் தலையில் சிரித்தபடி லேசாய் குட்டியவன்,
“இவ்வளவும் கட்டிடுவியா? உனக்கு என் கையில கயிறு மட்டும் தான் கட்ட தெரியும்னு நினைச்சேன். பூ கூட கட்டுற…”
“ஏன் உங்களை கூட தான் கட்டிருக்கேன்…” என அவனுடன் சரியாய் வாயடிக்க,
“இதுல நான் என்ன ஹெல்ப் பண்ண முடியும்?…” என்றவனிடம்,
“இதுல ரெண்டு ரெண்டு பூவா எடுத்து வைங்க. நான் கட்டுவேன். சீக்கிரமும் முடியும். உங்களுக்கும் பொழுது போகும்…” என அவனுக்கு சொல்லித்தர இருவரும் பேசிக்கொண்டே அந்த பூவை கட்டி முடித்தனர்.