சந்திரிகாவின் தலையீடு அதிகமில்லாமல் தனக்கு தேவையானதை மாலதியிடம் சொல்லி செய்ய கற்றுக்கொண்டாள் கீர்த்தனா.
உடல்நிலை மாற்றம் வேறு, பிள்ளை உண்டான அயர்வு, சில நேரங்கள் எரிச்சலும் கோபமுமாய் தான் அவனிடம் நடந்துகொள்வாள்.
கைகால் குடைச்சல், சரியான தூக்கமின்மை என்று அக்னியை படுத்த ஆரம்பித்திருந்தாள் கீர்த்தனா.
“எனக்கு சுத்தமா முடியலைங்க…” என முகம் சுருக்கி சொன்னதும் அவன் கவனிக்கவில்லை என்றாலே சிறுசிறு கோவிப்புகள் அவளிடத்தில்.
அதே நேரம் சட்டென சமாதானமாகி அவனுடன் இழைந்துகொள்வாள். மருத்துவ ஆலோசனையில் இந்தமாதிரி சிலருக்கு உடல் உபாதைகளால் சில சிரமங்கள் ஏற்படும் என்றும் பொறுமையாக் பார்த்துக்கொள்ளுமாறும் சொல்லியிருக்க அக்னியும் அமைதியாக இருந்தான்.
மாலை அவளுடன் தங்கள் வீட்டு தோட்டத்தில் சிறு நடைபயிற்சி செய்வதாகட்டும், அவ்வப்போது அடுக்களையில் அவளுடன் சேர்ந்து எதையாவது செய்வதாகட்டும் என முற்றிலும் சந்திரிகாவிற்கு புதிதாய் தெரிந்தான் அக்னி.
“இதெல்லாம் என்ன பழக்கம் அக்னி?…” என்ற சந்திரிகாவை ஒற்றை பார்வையில் அவன் அடக்க, பன்னீர் செல்வமோ,
“புருஷன் பொண்டாட்டி என்னமோ செய்யட்டும் உனக்கென்ன? இனி நீ வாயை திறந்த பார்…” என்று எச்சரித்தேவிட,
“இங்க பாருக்கா, கீர்த்தி அவ மனசுக்கு படறதை இப்ப செய்யட்டும். இதனால என்ன குறைஞ்சிட்ட போகுது? நீயே நல்லா யோசி, ஒருசில பொண்ணுங்க இப்படி வாழ்க்கை கிடைச்சா உடனே அதிகாரம் செய்யத்தான் பார்ப்பாங்க. கீர்த்தி அப்படி இல்லை. நீ அவளை சும்மா ஏதாவது சொல்லிட்டே இருக்காத…”
“இல்ல சுபா, இங்க வேலைக்காரங்க எல்லாம் எதுக்கு இருக்காங்க. மருமக பொண்ணை வசதி குறைவா வந்துட்டான்னு நாம வேலை பார்க்க வச்சோம்னு நாலு விதமா பேச மாட்டாங்களா? அதோட என் மருமக என்னை மாதிரி இருக்கனும்னு நினைக்கறேன். கூடாதா?…”
“உன்னை மாதிரி அவளுக்கும் சில ஆசை இருக்கும்ல. விடு, இன்னும் கொஞ்சம் நாள்ல குழந்தை பிறந்திடும். அப்பறம் குழந்தையை பார்க்கவே சரியா போய்டும் அவளுக்கு. அதனால நீ விட்டு தள்ளு. அவ சந்தோஷமா இருக்காளா அதை பாரு. இப்ப அவ சந்தோஷமா இருக்கனும். நம்ம அக்னியும் கூட…”
சுபா சொல்லவும் அவர்களை எதுவும் சொல்வதில்லை சந்திரிகா. என்றாவது சமைக்கிறேன் என இழுத்துபோட்டு கீர்த்தி செய்யும் பொழுது தான் பதறி போவார்.
“இந்த பொண்ணு வயித்துல புள்ளையை வச்சுட்டு இங்கிட்டும் அங்கிட்டும் வேகமா போகுதே…” என சுபாவிடம் புலம்பி கடைசியில் அவளுக்கு உதவவென சுபாவும், சாதனாவும் உடன் சென்று நிற்க ஒருகட்டத்தில் சந்திரிகாவும் சேர்ந்துகொண்டார்.
ஆனால் எதையும் தொடவும் மாட்டார். உதவவும் மாட்டார். அவருக்கருகிலேயே மாலதியை நிறுத்திக்கொண்டு கீர்த்தனா கேட்பவற்றுக்கெல்லாம் மாலதி தான் அவருக்கு.
“அத்தை, அதான் நாம இருக்கோமே. அப்பறம் எதுக்கு மாலதி. சமையலை முடிச்சுட்டு கூப்பிடுவோம். அப்பறமா அவங்க வந்து க்ளீனிங் மத்த வேலையை எல்லாம் பார்க்கட்டும்…” என்று சாதனா சொல்லிவிடுவாள்.
சாதனாவிற்கும் சமையலுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. ஆனால் கீர்த்தனா சமைக்கும் போது அந்த பதார்த்தத்தை ரசித்து சில்லாகித்து அதன் ருசியை சொல்லி சொல்லி அதை கேட்க சமைக்கும் ஆர்வம் அவளுக்கும் ஒட்டிக்கொள்ள இருவரின் கூட்டணிக்கு சுபா தலைமை ஏற்றார்.
“நான் எப்ப சமைச்சேன்னு எனக்கே தெரியாது…” என்று சுபாவும் கலகலக்க அவர்களுடன் ஒட்டமுடியாமல் சந்திரிகா வறட்டு கௌரவத்துடன் நிற்பார். ஆனாலும் வேலையாட்களின் சமையலை விட மருமகளின் கைப்பக்குவம் சந்திரிகாவின் சுவை நரம்புகளை சுண்டி இழுக்கும்.
“இதையெல்லாம் சாப்பிடுவாங்களா?…” என சாம்பார் சாதமும் சேப்பங்கிழங்கு வருவலும் மட்டும் ஒருநாள் கீர்த்தனா செய்திருக்க,
“ஒரே ஒரு டிஷ் தானா? ப்ச்…” என சலித்துக்கொண்டவர் பன்னீர்செல்வத்தின் முறைப்பில் அடங்கி சாப்பிட ஆரம்பிக்க அதன் சுவையில் வேறெதையும் தேடவே இல்லை அவர்.
இப்படி வீட்டின் சில கட்டுப்பாடுகள் சந்திரிகாவால் போடப்பட்டிருந்த வேலிகள் கீர்த்தனாவால் கீர்த்தனாவுக்காக தளர்த்தப்பட்டது.
மாதங்கள் கடக்க கடக்க இதோ ஐந்தாவது மாதம் தொடங்க ஆரம்பித்தது. நித்தமும் எதையாவது செய்கிறேன், நேரத்தை கடத்துகிறேன் என்று வேலையை எதையாவது செய்ய உடன் சாதனாவும் சுபாவும் கலந்துகொள்ள அந்த குஷியில் செய்துவிடுவாள்.
அறைக்கு வந்த பின்னர் தான் அங்கே நோவுது, இங்கே வலிக்குது, அது செய்கிறது, இப்படி இருக்கிறது என அக்னியின் தலையை உருட்டுவாள்.
கீர்த்தனாவை அழைத்துக்கொண்டு வந்த பின்னால் கூட அவன் அவளை கவனித்து அவளுக்கென நேரம் ஒதுக்கி, அவளுக்கே பார்த்து செய்ய அவளானாள் அதற்கும் கூட சில நேரங்களில் அர்த்தம் பார்த்தாள்.
தனக்கு முடியவில்லை என்னும் பொழுது அவன் லேசாய் கவனியாது விட்டுவிட்டால் மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறும் கதை தான். மன அழுத்தம் போய் உடல் நோவு புதிதாய் சேர்ந்துகொள்ள அக்னி பாடுதான் திண்டாட்டம் ஆனது.
“உன்னை யாரு இதை எல்லாம் செய்ய சொன்னா? அவ்வளவு நேரம் நின்னுட்டே இருந்தா கால் குடையாம என்ன செய்யும்? ஆசைப்படறியேன்னு செய்யட்டும்னு விட்டா இழுத்து வைக்கிற நீ…” என்று அவளின் பாதத்தில் சூடுபறக்க எண்ணையை தேய்த்துவிட்டு காலை நீவிக்கொண்டே அவன் கத்த,
“அப்போ நானா கேட்டதால தான் இத்தனையும் செய்யறீங்க? இல்லைன்னா இதுவும் கிடையாது. எதுவுமே வாயை திறந்து கேட்கனுமோ? கேட்டு கேட்டு தான் எல்லாம்ன்னா எதுக்கு என்னை கல்யாணம் பண்ணினீங்க?…” என அவனின் தலையை போட்டு உருட்டினாள் கீர்த்தனா.
“ஊர்ல பெரிய குடும்பம்னு இருந்து அதுக்கு இணையில்லாத பொண்ணை கல்யாணம் பண்ணினா நாங்க எதுவும் ஆசைப்பட கூடாதோ?…” என அவனை பந்தாடினாள்.
என்னதான் அவன் தன்னுடன் தங்கி தன் ஆசைகளுக்கு மதிப்பு கொடுத்து வந்தாலும் அதன் ஆரம்பப்புள்ளி தான் போனில் அன்று சண்டையிட்டதால் தான் என்ற எண்ணம் அவளிடம் அவ்வப்போது தலைதூக்க ஆரம்பித்தது.
சிறு முத்தம் கூட தான் அன்று தனது மனதை வெளிப்படுத்தியதால் தானோ என நினைத்து நேரம் கிடைக்கும் போது இரண்டு மாதம் கவனியாமல் விட்டதற்கு பத்துமாதமும் வைத்து செய்வதை போல இருந்தது அவளின் நடவடிக்கை.
அவனுக்குமே அவள் வேண்டுமென்று சொல்கிறாள் என்று தோன்றவில்லை. இந்த மாதிரி நேரங்களில் இப்படி பேச்சுக்கள் சகஜம் என்பதை போல தெரிந்ததால் அவனும் சிறு முறைப்பும் பின் சமாதானமுமாய் அவளை சரி செய்வான்.
ஆடி பிறக்க இன்னும் ஒருவாரமே இருக்க ஆடிக்கு அழைக்கவென அன்று கீர்த்தனாவின் குடும்பத்தினர் வந்துவிட்டனர்.
காலையே அவர்கள் வந்ததும் உபசரித்து விவரத்தை கேட்க ஆடிக்கு அழைக்க என்று பொதுவாய் அவர்கள் சொல்ல,
“அதெல்லாம் வேண்டாம் மாமா, கீர்த்தியை நான் இங்கயே வச்சு பார்த்துக்கறேன். நீங்க வற்புறுத்த கூடாது…” என அக்னியே வாயை விட அனைவருமே அவனை கேலியை பார்த்தனர்.
“இல்ல மாப்பிள்ளை இது சம்பிரதாயம், அதுக்காக தான்…”
“ஆடிமாசம் முழுக்க அவளை அங்க விட்டுட்டு. அதெல்லாம் முடியாது. இங்க செக்கப் இருக்கு. அதனால அலைய வைக்க முடியாது மாமா. தப்பா நினைக்காதீங்க…” என்றவன் கீர்த்தனாவை பார்த்து ‘போகவில்லை என சொல்’ என்பதை போல பார்வையால் மிரட்டினான்.
பன்னீர்செல்வம் தலையில் கை வைத்து அமர்ந்து சிரிப்பை அடக்க சந்திரிகாவும், சுபாவும் கனகாவுடன் சேர்ந்து சிரித்துக்கொண்டனர். தங்கதுரை தான் அப்பாவியாய் மருமகனை பார்த்தபடி இருந்தார்.
முதல் நாளே கீர்த்தி ஆடிக்கு அழைத்து செல்ல பெற்றோர் வருவதாய் அவனிடம் சொல்லி அங்குதான் ஒரு மாசமும் என சொல்லியிருக்க,
“ஏற்கனவே உண்டான குழந்தைக்கு என்னத்துக்கு ஆடிமாசம் சம்பிரதாயம்லாம். வேணும்னா அடுத்த வருஷ ஆடிக்கு அழைக்க முடியுதானு பார்க்க சொல்லு. அதெல்லாம் போக வேண்டாம். இங்க இருந்தா மட்டும் என்ன பண்ணிடுவேனாம்?…” என்று அவளிடம் முதல் நாளே ஆடியிருந்தான்.
“அக்னி அவர் என்ன சொல்றாருன்னு முழுசா கேளுப்பா…” அடைக்கலம் சொல்ல,
“ஆடிக்கு போக முடியாது சித்தப்பா. வேணும்னா சம்பிரதாயத்துக்கு ஆடி அன்னிக்கு போய்ட்டு வந்திடறோம்….”
“அவ்வளோ தான். அதைத்தான் அவரும் பேச வந்திருக்காரு. உனக்கு யார் சொன்னா கீர்த்தனாவை ஒரு மாசம் அழைச்சிட்டு போறாங்கன்னு?…” என கேட்க அக்னி முறைப்பு கீர்த்தனாவிடம் பலமாய்.
“முதல் நாளே வந்திடனும் மாப்பிள்ளை….” என இருவருமாய் சொல்லிவிட்டு செல்லவும் சாதனாவும், கீர்த்தனாவும் கை கோர்த்துக்கொண்டு சிரிக்க,
“எல்லாம் கூட்டணி செய்ற வேலைடா அக்னி. அண்ணிக்கு அவ்வளவு பேச தெரியாது. எல்லாம் சாதனா ட்ரெய்னிங்…” என அக்னியுடன் சுரேன் சேர்ந்துகொள்ள,
“உன் அண்ணிக்கு பேச தெரியாதா? அட போடா…” என சலித்துக்கொள்ள,
“பேக்டரிக்கு கிளம்புவோமா? இன்னைக்கு ஸ்ரீநிவாஸ் பர்த்டே…” என சொல்லி சுரேன் கிளம்ப உடன் அக்னியும், அடைக்கலமும் சேர்ந்தே கிளம்பினார்கள். அங்கே சென்றதுமே ஸ்ரீநிவாஸ் வந்து நின்றான்.
அவனை பார்த்ததும் சுரேன் அறையை விட்டு வெளியேறிவிட அவன் சென்ற பின்னர் தான் அக்னியிடமும் அடைக்கலமிடமும் காலை வணக்கத்தை சொல்லிவிட்டு,
“ஸ்வீட் எடுத்துக்கோங்க ஸார்…” என நீட்ட எடுத்துக்கொண்ட இருவருமே அவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர். நன்றி சொல்லியவன் அடைக்கலத்திடம்,
“ஸார் ஆனி மாசம் முடிய போகுது. உங்க பிறந்தநாள் என்னைக்கு ஸார்…” என்று கேட்க அக்னி வாய்க்குள் சிரித்தவன் லேப்டாப்பில் கவனமாய் இருப்பதாக காட்ட,
“அதுக்கு நான் ஆனியில பிறந்திருக்கனுமே ஸ்ரீநிவாஸ்….” என்று அடைக்கலம் சிரிக்க ஸ்ரீநிவாஸ் முகம் போன போக்கில் வெடித்து வந்த சிரிப்பை உதட்டை கடித்தபடி அடக்கிக்கொண்டான் அக்னி.
அடைக்கலமோ அசராமல் அவனை பார்த்தவர் எழுந்து வந்து ஸ்ரீநிவாஸ் தோளில் கை போட்டு,
“என்கிட்டே ஆனியில பிறந்தேன்னு நீ சொன்னியா. நீ ஒத்தையில நின்னுட கூடாதேன்னு நானும் தான்னு உனக்கு பேச்சு துணைக்கு சொன்னேன். நீ உண்மைன்னு நினைச்சுட்டியா?…”
“அப்ப நிஜமாவே ஆனி இல்லயா?…”
“ஆணியே இல்லை…” என சுரேன் வந்தான்.
“என்னடா?…”
“சுவத்துல அறைய இங்க ஒரு ஆணி கூட இல்லை. அதான் தேடி வந்தேன்…” என்று அவன் பேச,
“ஹேப்பி பார்த் டே…” என சுரேன் கை நீட்டி சொல்ல அவனின் கையை பற்றி குலுக்கியவன் நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான் அடைக்கலம் குடுத்த எபெக்ட்டில்.
அவன் சென்றதும் அக்னியும், சுரேனும் அதுவரை அடக்கிவைத்திருந்த சிரிப்பை அடக்கமாட்டாமல் சிரிக்க,
“ப்ச், சிரிக்காதீங்கடா. அன்னைக்கு ஒத்தையில நின்னு ஆனில பொறந்தேன்னு சொன்னானா, பாவம் மனசு பொக்குன்னு போக கூடாதேன்னு துணைக்கு அந்த நேரம் இன்ஸ்டண்டா பொறந்தேன்…” என சிரிக்காமல் அடைக்கலம் சொல்ல,
“அப்பா உங்களை அடிச்சுக்க முடியாது போங்க. எனக்கே பாவமா இருக்குது அவனை பார்த்து…” என்று சுரேன் சொல்லவும் மூவருமாய் ஸ்ரீநிவாஸ் முகத்தை பார்த்தனர்.
பாவப்படக்கூடிய செயலை அவன் செய்ய போவதில்லை என்பதை அடுத்தவாரமே மொத்த குடும்பமும் அதிர்வுடன் அறிய நேரிடும் பொழுது இந்த மகிழ்ச்சி என்பது அவர்களிடம் துளியேனும் இருக்குமா என்பதில் ஐயமே.