இன்னும் இரண்டு நாட்களில் ஆடி அழைப்பு இருக்க பொள்ளாச்சியில் இருந்து தங்கள் ஊருக்கு வந்துகொண்டிருந்தான் அக்னிசெல்வன். பின் இருக்கையில் தங்கதுரை சாய்ந்து உறங்கியபடி இருக்க கனகாவின் முகம் கவலையாக இருந்தது.
ஊரை நெருங்கவுமே மனைவிக்கு அழைப்பு விடுத்தவன் அவள் எடுக்க காத்திருக்க கீர்த்தனா வெளியே சுபாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தாள்.
“கீர்த்தி உன் போன் ரிங் ஆகிட்டே இருக்கும்மா. என்னன்னு பாரு…” என்ற சந்திரிகாவின் அழைப்பில் வாசலில் உள்ள பெஞ்ச் போன்ற இடத்தில் சுபாவுடன் அமர்ந்திருந்தவள்,
“இதோ அத்தை. நான் பார்க்கறேன்…” என எழுந்து செல்ல,
“சரி அங்கயே உட்காரு நீ. நான் எடுத்துட்டு வரேன்…” என்று எடுத்துக்கொண்டு வந்தவர் அவளிடம் தர,
“நானே வந்தேன் தானே அத்தை…” என சொல்லி வாங்கிக்கொள்ள
“வெளில இருந்தது போதும். பேசிட்டு உள்ள வந்து உட்கார்…” என சொல்லிவிட்டு சந்திரிகா சென்றுவிட அவரை பார்த்து சிரித்தபடி அழைப்பை ஏற்றவள்,
“சொல்லுங்க, என்ன இந்த நேரம்? லஞ்ச்க்கு வருவீங்கன்னு பார்த்தா வரலை. மெசேஜ்ல கூட பிஸின்னு அனுப்பினீங்களா அதான் நானா கூப்பிடாம இருந்தேன்…” என்று கீர்த்தனாவே பேச,
“கீர்த்தி நீ கிளம்பி உன் வீட்டுக்கு வா…” என அக்னி சொல்லவும்,
“என்ன? என்ன சொல்றீங்க? எங்க வரனும்? ஆமா ஏன் படபடன்னு பேசறீங்க?…” என கேட்டுக்கொண்டே வெளியே வந்து நிற்க,
“ப்ச், நான் மாமாவோட பொள்ளாச்சில இருந்து வந்துட்டிருக்கேன். கூட அத்தையும் வராங்க…” என்றதுமே பதட்டமாகிவிட்டது அவளுக்கு.
“என்னாச்சு? என்ன சொல்றீங்க? அப்பாவுக்கு ஏதும் முடியலையா?…” சில நாட்களாகவே அவரின் உடல்நல குறைபாடு இருப்பது தெரியும் அதனால் உடனே கவலையானது கீர்த்தனாவிற்கு.
“நீ பதட்டப்படற அளவுக்கு ஒன்னும் இல்லை. நான் ஊருக்கு போய்ருந்தேன். அதான் அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன். அவ்வளவு தான். நீ வந்தா நல்ல இருக்குமேன்னு வர சொன்னேன்…” என்றவன் பேச்சை மாற்றி ஒருவாறு சமாளித்தான்.
“அவ்வளவு தானே, வேற ஒண்ணுமில்லையே…” என்று நிம்மதியானவள்,
“ஓகே நான் அத்தைட்ட சொல்லிட்டு கிளம்பி வரேன்…” என்று சொல்லி போனை வைக்கவும் என்னவென சுபா கேட்க விஷயத்தை சொல்லியவள் சந்திரிகாவை தேடி போக சுபா அக்னிக்கு அழைத்துவிட்டார்.
“அவருக்கு எதுவும் முடியலையா அக்னி?…” என கேட்க,
“சித்தி கீர்த்தி பக்கத்துல இல்லை தானே?…”
“இல்லைப்பா, உள்ள போயிருக்கா…”
“நல்லது, இன்னைக்கு காலையில மாமா வேலை பார்க்கிற பேங்க்ல இருந்து போன் வந்தது சித்தி. மாமா மயங்கி விழுந்துட்டார்ன்னு. அங்க தெரிஞ்ச பையன் வொர்க் பன்றான்னு சொல்லிருந்தேன்ல. அவன் தான் கால் பண்ணி விஷயத்தை சொன்னான். அதான் உடனே பொள்ளாச்சி கிளம்பிட்டேன்…”
“இப்ப எப்படி இருக்காங்க?…”
“இப்ப ஒன்னும் பிரச்சனை இல்லை. திடீர்ன்னு பிபி ரைஸ் ஆகிருக்கு. அதான் மயக்கம் வந்திருக்கு. ரெஸ்ட் எடுத்தா சரியாகிடும்…” என விளக்கமாய் அக்னி சொல்ல,
“இதை முதல்ல வீட்டுல யாருக்காச்சும் போன் பண்ணி சொல்லிருக்க வேண்டாமா? என்ன புள்ளை நீ? ஒரு நிமிஷம் கீர்த்தி முகமே மாறிடுச்சு…” என சுபா கடிய,
“அப்பாவுக்கு சொல்லிட்டேன். நம்ம ஊர்க்குள்ள நுழைஞ்சாச்சு. நீங்க கீர்த்தனா கூட வாங்க சித்தி…” என்றதும் அவரும் சரி என சொல்ல உடனே ராகாவிற்கு அழைத்தான்.
அவரின் நிலையை கண்டு கீர்த்தனாவும், ராகாவும் அழுதுவிட கனகா பொங்கி வந்த துக்கத்தை விழுங்கிக்கொண்டு பெண்களை தேற்றினார்.
“அவருக்கு ஒண்ணுமில்லை, கொஞ்சம் சோர்வா இருக்காரு. அழாதீங்க பொண்ணுங்களா. கேளுங்கடாம்மா…” என இருவரின் கண்ணீரையும் துடைத்துவிட,
“முதல்ல உள்ள கூட்டிட்டு போ அக்னி. அவரால நிக்கமுடியலை….” என சந்திரிகா சொல்ல,
“என்னை நல்லா புடிச்சுக்கோங்க மாமா…” என்றவனுக்கு ‘இவரை மாடிக்கு அழைத்து செல்ல முடியுமா?’ என்ற கவலை பிறக்க,
“அப்பா இங்க வாங்கப்பா, உங்களால மாடி ஏற முடியாது. உங்க வீட்டுக்குள்ள வாங்கப்பா…” என்ற மூத்த மகளை ஆதுரமாய் பார்த்தவரின் நடுங்கும் கரங்கள் அக்னியின் கையை இறுக்கமாய் பற்றியது.
“மேல போவோம் …” என பேசமுடியாமல் அவர் சொல்ல,
“சரி, இங்க வேண்டாம். நம்ம வீட்டுக்கு போவோம் மாமா. அங்க வர உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம். பாருங்க ஆளுங்க வேடிக்கை பார்க்க ஆரம்பிக்கறாங்க…” என்று சொல்ல,
“அப்பா இப்ப நீங்க உங்க வீட்டுக்குள்ள வரலைன்னா இனி எப்பவும் நானும் இந்த வீட்டுக்குள்ள போக மாட்டேன்…” என ராகா அத்தனை ஆவேசத்துடன் பேசவும் அதற்குள் அக்கம்பக்கத்தினர் வந்துவிடவும் யோசிக்காமல் அவரை அழைத்துக்கொண்டு கீழே வீட்டிற்குள்ளேயே சென்றான் அக்னி.
அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் உள்ளே வர வேடிக்கை பார்த்தவர்கள் என்னவோ என விசாரிக்க ஆரம்பித்தார்கள் கனகாவை வாசலிலேயே நிறுத்தி கேட்க மீண்டும் வெளியே வந்த அக்னி,
“அத்தை நீங்க உள்ள போய் மாமாவை பாருங்க. இதெல்லாம் இப்பவே சொல்லனுமா?…” என அவன் கேட்டதும் மற்றவர்கள் கலைந்து செல்ல கனகா உள்ளே சென்றார்.
அக்னி பன்னீர்செல்வத்திற்கு காலை கிளம்பும் போதே விஷயத்தை சொல்லியிருக்க இப்போது அழைத்து அவரிடம் வந்துவிட்ட தகவலை சொல்லிவிட்டு,
“ஸ்ரீநிவாஸ் என்ன பன்றார் அப்பா?….”
“இங்க தான் ப்ரடேக்ஷன் செக்ஷன்ல பேசிட்டு நிக்கறான். அனுப்பிவிடவா?…”
“அப்பா இப்ப மாமாவை கீழே உள்ள வீட்டுல தான் ரெஸ்ட் எடுக்க வச்சிருக்கோம்…”
“அதுவும் அவர் வீடு தான் அக்னி…”
“சம்திங் ராங் அப்பா. நேத்து ஸ்ரீநிவாஸ் பொள்ளாச்சி போய் மாமாவை பார்த்திருக்கார்…”
“அக்னி…”
“என்ன பேசினார்ன்னு தெரியலை. அத்தைக்கு தெரியுமான்னும் தெரியலை. ஆனா இந்த வீட்டுக்குள்ள வரவே அவ்வளவு யோசிக்கறார்…”
“ஓகே, இதுல நாம என்ன பண்ண முடியும்னு தெரியலை. பார்த்துப்போம்…” என அவரும் சொல்ல,
“ஓகே நான் கிளம்பி வரேன்…” என்று மீண்டும் உள்ளே வர தங்கதுரையின் காலடியில் அமர்ந்து அவரின் காலை பிடித்தபடி கீர்த்தனா அழுதுகொண்டு இருக்க,
“தாத்தா…” என வினய் அவரின் கன்னத்தை தொட்டு தொட்டு அழைத்துக்கொண்டு இருக்க கனகாவிடம் மற்ற பெண்கள் பேசிக்கொண்டு இருந்தார்கள்.
“கீர்த்தி…” என்றதும் அவனை பார்த்தவளின் முகம் இன்னும் அழுகையில் கரைய,
“என்ன இது? மாமாவுக்கு ஒன்னும் இல்லை. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்தா சரியா போய்டும். இதை போய் நீ பெருசா எடுத்துட்டு. கண்ணை துடை. அழுதழுது அவருக்கு பெருசா என்னவோனு நினைக்க வச்சிடாதீங்க…” என அவளின் விழிநீரை துடைத்தவன்,
“அழாம இருக்கும்னா இங்க இரு. இல்லைன்னா என்னோட வீட்டுக்கு புறப்பட்டு வா. என்ன சொல்ற?…” என கீர்த்தனாவிடம் சொல்லவும்,
“இப்படியே, அழுதுட்டே. கொஞ்சம் நேரமே பார்க்க முடியலை. இதுல காலையில இருந்து. உன்னை பார்ப்பேனா? இவரையா?. சரி சரி. அவர் தூங்கட்டும் கீர்த்தி. ரொம்ப டயர்டா இருக்கார்…” என அவளை கட்டிலில் இருந்து எழுப்பி கூட்டிக்கொண்டு வந்தவன்,
“அம்மா நான் வீட்டுக்கு கிளம்பறேன், வரீங்களா?…” என கேட்க,
“இல்லப்பா கொஞ்சம் நேரம் இருந்துட்டு வரேன். தனியா இருப்பாங்கல. மாலதிட்ட சொல்லி நைட்டுக்கு எல்லாருக்கும் சேர்த்து சமைக்க சொல்லு…” என்றதும்,
“அதெல்லாம் இருக்கட்டும் அத்தை, நான் சமைச்சுப்பேன்…” ராகா சொல்ல,
“அக்காவும் தங்கச்சியும் இதுல ஒன்னு. இன்னைக்கு ஒரு நாள் சாப்பிடலாம். தப்பில்லை…” என ராகாவை கடிந்தவர்,
“என்ன கீர்த்தி சரிதானே?…” என்றதும் அவரின் கையை பிடித்தபடி கண்கலங்க,
“அக்னி பேசாம கீர்த்தியை உன்னோட கூட்டிட்டு போய்டேன். இங்க இருந்து அழுதுட்டே இருக்கா…” என சுபா சொல்லவும் வேகமாய் கண்ணை துடைத்துக்கொண்ட கீர்த்தனா,
“இல்லை நான் இங்கயே இருக்கேன். பாருங்க, கண்ணுல ஒண்ணுமில்லை…” என அவசரமாய் புடவை தலைப்பில் முகத்தை துடைத்துவிட்டு அக்னியை பார்த்து கேட்க,
“அப்படியே ஸ்கூல் பொண்ணு மாதிரி மிஸ் மிஸ்ன்னு நிக்கிறது…” என தலையை பிடித்து ஆட்டியவன்,
“சரி, இப்ப வீட்டுக்கு தான் போறேன். எதுவானாலும் போன் பண்ணுங்க வரேன்…” என கிளம்ப அவனின் பின்னோடு வந்தாள் கீர்த்தனா.
“எதாச்சும் சொல்லனுமா கீர்த்தி…” என கேட்டுக்கொண்டே நடக்க,
“கொஞ்சம் நேரம் இருக்கலாம் தானே நீங்க?…”
“இல்லம்மா, நான் மட்டும் இருந்து என்ன பண்ண? அதான் லேடீஸ் இத்தனை பேர் இருக்கீங்களே? ஸ்ரீநிவாஸ் வரவும் கால் பண்ணு. வரேன்…” என்று சொல்லிவிட்டு அவளின் கன்னம் தட்டி சென்றான் அவன்.
கனகாவிடம் சந்திரிகா பேசிக்கொண்டு இருக்க சுபாவும் ராகாவும் உள்ளே டீ போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
“அக்கா…” என உள்ளே கீர்த்தனா வரவும்,
“அப்பா முழிச்சாச்சா கீர்த்தி. எழுந்துட்டா ஏதாவது குடுக்கனும். அம்மாட்ட என்ன செய்யட்டும்னு கேட்கனும்…”
“அதான் டின்னருக்கு சொல்லியாச்சே ராகா…” என்ற சுபா சகோதரிகள் இருவரின் முகத்தையும் பார்த்துவிட்டு,
“சரி நீங்க பேசிட்டு இருங்க, நான் போய் உட்காருறேன். என்னானாலும் கேளுங்கடாம்மா…” என சொல்லிவிட்டு அவர்களுக்கு தனிமையை கொடுத்துவிட்டு நகர்ந்துவிட்டார்.
“சொல்லு கீர்த்தி, ஏன் ஒரு மாதிரியா இருக்க?…” என கேட்டுக்கொண்டே சர்க்கரை டப்பாவை எடுத்து திரும்பினாள்.
“இல்லக்கா, இன்னும் கொஞ்சம் நேரத்துல மாமா வந்திருவாங்க…”
“ஹ்ம்ம் வரட்டும், பார்த்துக்கலாம்…” என்று சொல்ல,
“எதுவும் சொல்லமாட்டாரா?…”
“அவர் ஏன் சொல்லனும்? சொல்ல எதுவும் இல்லை…” என்றவள் டீயை தம்ளர்களில் ஊற்றி,
“சரி விடு. அதை அப்போ பார்த்துப்போம். இந்த டீயை எடுத்து குடி. நான் போய் அத்தைங்களுக்கு குடுத்துட்டு வரேன்…” என்று எடுத்துக்கொண்டு செல்ல அந்த அடுப்படியை சுற்றி பார்த்தபடி நின்றாள் கீர்த்தனா.
எத்தனை வருடங்கள் இங்கே நின்று தாயின் சமையலில் உதவிக்கொண்டு இங்கமார்ந்தே சாப்பிட்டு என பல இனிப்பான தருணங்களை சுமந்திருந்த அந்த அடுப்படியை பார்த்தபடி டீயை எடுத்தவள் சூடாக இருக்க சற்று ஆறட்டும் என வைத்துவிட்டு ஹாலிற்கு சென்றாள்.