அவர்களை பார்த்து தலையசைத்துவிட்டு மெதுவாய் அந்த அறை நோக்கி செல்ல அது உட்புறம் இருந்த மாடிப்படிக்கு அந்த பக்கம் உள்ள அறை. சற்றே உள்ளடங்கி இருக்கும் அறை.
வெளியே ராகா அப்படியே நிற்க ஏன் உள்ளே செல்லாமல் இங்க இருக்கிறாள் என்று பார்த்து அவளை நெருங்கி பேச வாயை திறக்கும் முன் அவளின் வாயை கை கொண்டு பொத்திய ராகா ‘பேசாதே’ என்பதை போல தலையசைத்து தங்கையை தோளோடு அணைத்துக்கொண்டாள்.
உள்ளே மெல்லிய குரலில் கலக்கத்துடன் தங்கதுரை பேச பதிலுக்கு அவருக்கு ஆறுதலாய் கனகா பேச என கேட்டவர்களுக்கு நெஞ்சை பிசைந்தது.
“இங்க பாருங்க இந்த விஷயம் பொண்ணுகளுக்கு தெரியவேண்டாம். சின்ன மாப்பிள்ளைட்டையும் ஒரு வார்த்தை சொல்லிட்டு என்ன செய்யலாம்னு யோசிப்போம்…” என கனகா சொல்ல,
“அவர்க்கிட்ட எப்படி சொல்றதும்மா? மூத்தவர் தான் அவர் பேசிட்டு போனது யாருக்கும் தெரிய கூடாதுன்னு சொல்லிருக்காரே. இதை வச்சு ராகாவுக்கு பிரச்சனை குடுத்தா என் பொண்ணு தாங்குவாளா? அவ அழுதா எனக்கு தாங்குமா?…”
“இப்படி யோசிச்சு தான் நாம இங்க இப்படி இருக்கற சூழ்நிலைக்கு வந்துட்டோம்…” என கனகா சொல்ல,
“நமக்கு வேற என்ன வழி இருக்கும்மா? என் பொண்ணு வாழாம வந்து நின்னா எனக்கு ஆவி அடங்குமா? சொல்லு. சின்னவளை பத்தி கவலை இல்லை. நல்ல மனுஷன். இப்ப பெரியவ கவலை தான் மனச போட்டு அரிக்குது. கட்டிக்குடுத்த பின்னாடி அவசரப்பட்டுட்டோமேன்னு நினைச்சு வேதனைப்படாத நாளில்லை…”
“விரும்பி கேட்டாருன்னு நம்பிட்டேன். இப்ப என் பொண்ணு நல்லா இருப்பான்னு நினைச்சு தான் ஒன்னொன்னும் கஷ்டப்பட்டாச்சும் செஞ்சுட்டு இருந்தேன். இனி இதையும் செஞ்சுதானே ஆகனும்…”
“அதெப்படிங்க முடியும்? நம்ம காலத்துக்கு பின்னாடி நம்ம சம்பாத்தியமும் சொத்தும் ரெண்டு பொண்ணுங்களுக்கும் தான். ஆனா அதை இப்பவே பிடுங்கனும்ன்ற மாதிரி கழுத்துல கத்தியை வச்சு மொத்தமா கேட்டா…”
“குடுத்துருவோம்னு தோணுதுமா. குடுத்துட்டு இருக்கற வரைக்கும் நாம பொள்ளாச்சில இருப்போம். முடிஞ்சளவுக்கு உழைப்போம். முடியலைன்னா…” என்றவரின் பேச்சை போதும் என்பதை போல நிறுத்திய கனகா,
“எதையும் கேட்க எனக்கு திராணி இல்லைங்க. பேசாதீங்க. சம்பந்திங்க வேற வந்திருக்காங்க…” என அழுகையை அடக்கிக்கொண்டு சொல்லவும் அவரின் கையை பிடித்துக்கொண்டார் தங்கதுரை.
இன்னும் இன்னும் பெற்றோர்கள் பேச பேச ராகாவிற்கும், கீர்த்தனாவுக்கும் தெளிவாய் தெரிந்தது ஸ்ரீநிவாஸ் கிட்டத்தட்ட மிரட்டுவதை போல அந்த வீட்டை எழுதி கேட்டிருப்பது.
“அக்கா…” என்ற கீர்த்தனாவை அழைத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்த ராகா அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு,
“இங்க பார், நாம எதையும் கேட்கலை. கொஞ்சம் நேரம் அமைதியா இரு. அம்மா கேட்டா கேட்ட மாதிரியே காமிச்சுக்க கூடாது…”
“அக்கா, நீ என்ன நினைக்கிற? அதை முதல்ல சொல்லு. எனக்கு உன் முகம் பார்க்கவே பயமா இருக்கு. என்னக்கா…” என ராகாவை உலுக்க,
“கீர்த்தி…” என தேடி வந்தார் கனகா.
அழுது சிவந்த முகம் வீங்கி இருக்க முகத்தை அழுந்த துடைத்த தடத்துடன் வந்து நின்றவர் மகள்களை பார்த்து புன்னகைத்து,
“அப்பா முழிச்சுட்டார்…”
“எங்களை கூப்பிட்டிருக்கலாம்லம்மா…” என்றாள் ராகா.
“இல்லம்மா, இப்ப இப்பத்தான் முழிச்சார். அதான் பால் எடுத்துட்டு போகலாம்னு வந்தேன்…” என்றவர்,
“அங்க அவங்க ரெண்டு பேரும் தனியா இருக்காங்க. நீங்க இங்க என்ன பன்றீங்க? போய் பேசிட்டு இருங்க…” என்று அவர்களை அனுப்ப இருவருமாக தந்தையை தேடி சென்றார்கள்.
அங்கே தங்கதுரை வினயுடன் கதை பேசிக்கொண்டு இருந்தார். அவனுக்கு அந்த வீட்டை பற்றி சொல்லிக்கொண்டு இருக்க அவனும் கன்னத்தில் கை வைத்து கேட்டுக்கொண்டு இருந்தான்.
“எங்கம்மாவும், எங்கப்பாவும் இந்த அறையில தான் இருந்தாங்க. கடைசி வரைக்கும். அம்மாவுக்கு இந்த அறைன்னா அம்புட்டு இஷ்டம். அப்பா போன பின்னால அவங்களும் இங்கயே தான் இருந்தாங்க…”
அவர் சொல்லும் பொழுது கண்கள் நிராசையில் கலங்குவதை பார்த்தபடி இருவரும் நிற்க,
“வாங்கடாம்மா…” என்று அழைத்தவர்,
“அப்பாக்கு என்னமோன்னு ரொம்ப பயந்துட்டீங்களா?…” என்று கேட்டு சோர்வாய் புன்னகை சிந்த இருவரும் இரண்டு பக்கங்களில் அமர்ந்து அவரை கட்டிக்கொண்டனர்.
உண்மையில் தங்கதுரை பயந்துதான் போனார். உயிரோடு வீடு திரும்புவோமா என்ற உயிர்பயம் அவரை கவ்விக்கொண்டது.
படபடத்து வரும் பொழுதே கண்களுக்குள் மனைவியும், மகள்களும் தான் வந்து நிற்க இன்னுமே அரண்டு போனார்.
“எப்படி இருக்கீங்க சம்பந்தி?…” என கேட்டுகொண்டு சந்திரிகாவும், சுபாவும் வர,
“வாங்க வாங்க சம்பந்தி. இப்ப பரவாயில்லைங்க…” என்று சிரித்தவர்,
“உட்காருங்கம்மா…” என நாற்காலியை எடுத்து போட சொல்லவும் அவர்கள் அமர்ந்து அவரின் உடல்நிலையை பற்றி பேசிக்கொண்டு இருக்க கனகாவும் வந்துவிட்டார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு,
“சரிங்க நாங்க வெளில இருக்கோம், நீங்க ரெஸ்ட் எடுங்க…” என சந்திரிகா சொல்ல கீர்த்தனா தன் மாமியாரை பார்த்தாள்.
சில நேரங்களில் தங்களின் கணிப்புகள் கூட வேறொரு பிம்பங்களாய் மாறுபடும் என்பதை புரிந்துகொண்டாள் சிலநாட்களில். சந்திரிகாவையும் புரிந்துகொண்டாள்.
மனமுவந்த அனுசரிப்புகள் சில கசப்புகளுக்கு, விரிசல்களுக்கு வழிவகுக்காமல் சுமூகமாக செல்ல உதவும் என்பதை உணர்ந்துகொண்டாள்.
ஆனாலும் கீர்த்தனாவின் ஆட்டம் எல்லாம் அக்னியிடத்தில் எல்லையின்றி நடந்தேறும்.
அவரை படுக்க சொல்லிவிட்டு மற்றவர்கள் வெளியே வர சுபா தான் ராகாவிடம் கேட்டார்.
“உன் மாமியார் வீட்டுக்கு சொல்லிட்டியாம்மா?…” என கேட்க,
“ம்ஹூம் இல்லை அத்தை. சொன்னாலும் உடனே வந்திட மாட்டாங்க…” என்று உணர்வின்றி சொல்ல,
“என்னாச்சும்மா உனக்கு?…” என்று அவளின் முகமாற்றத்தில் கேட்க,
“ஒண்ணுமில்லை அத்தை. அப்பாவை நினைச்சு தான்…”
“அதான் நாங்க எல்லாரும் இருக்கோமே ராகா. ஏன் கவலை படற? அப்படியேவா விட்டுடுவோம்?…” என்று அவளை தேற்ற கீர்த்தனா சுவற்றில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள்.
ஸ்ரீநிவாஸ் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டதும் கீர்த்தனாவை திரும்பி பார்த்த ராகா பின் சுபாவிடம்,
“அத்தை பெரியத்தையோட அம்மா கூட இருங்களேன். நான் அவர்க்கிட்ட சொல்லிட்டு வரேன்…” என சொல்ல எதற்கென்று தெரியாவிட்டாலும் சரி என உள்ளே செல்ல அவர்கள் நகர்ந்ததும் புடவையை இழுத்து சொருகியபடி ஸ்ரீநிவாஸ் உள்ளே வரும் முன்னே வாசலை சமீபித்தாள் ராகா.
“என்னாச்சு ராகா மாமாவுக்கு உடம்புக்கு முடியலையாம்? நீ என்னன்னா கீழே இருக்க?…” என கேட்டுக்கொண்டே செருப்பை கழட்டியவன்,
“ஆமா யார் வந்திருக்காங்க இத்தனை செருப்பு இருக்குது?…” என அவளை தாண்டிக்கொண்டு உள்ளே நுழைய பார்க்க ராகா கையை கொண்டு வழியை மறைத்தாள். அவளின் செயலில் பதறிய கீர்த்தனா எழுந்து நின்று பார்க்க அப்போதுதான் அவளை பார்த்த ஸ்ரீநிவாஸ்,
“கீர்த்தி இங்க என்ன பன்றா?…” என்றான்.
“இது அவ வீடும் தான். இங்க என்ன வேணாலும் அவ பண்ணுவா…”
“ராகா, என்ன இது? வழியை விடு. நானே டயர்டா வந்திருக்கேன்…” என்று அவளின் கையை தட்டிவிட்டு உள்ளே நுழைய,
“நில்லுங்க, எங்கப்பாக்கிட்ட நேத்து என்ன பேசினீங்க?…” என்றாள் நேரடியாக.
அவளின் கேள்வியில் ஒரு நொடி திடுக்கிட்டவன் கீர்த்தனாவை பார்த்துவிட்டு பின் இருவரின் முகத்தில் இருந்த கோபத்தையும் கண்டுகொண்டவன் பின் அலட்சியமாக,
“ஆமா பார்த்தேன். அதுக்கென்ன இப்போ? எனக்கு உரிமை. கேட்டேன்….” என்றான் விட்டேற்றியாக.
“உங்களுக்கு இதை சொல்ல வெக்கமா இல்லை. உரிமையாம் உரிமை. என்ன உரிமை இருக்கு உங்களுக்கு?…”என ஆத்திரத்துடன் கை நீட்டி ராகா கேட்க ஸ்ரீநிவாஸ் ஆத்திரம் தலைக்கேறியது.
அதிலும் கீர்த்தனாவை வைத்துக்கொண்டு அவளின் முன்னே தன்னை மட்டம் தட்டி மரியாதையின்றி பேசும் மனைவி மீது கோபம் கொதித்தெழ,
“ராகா, என்னை வெறியேத்தாத. பேசாம போயிரு…” என அடக்க பார்க்க,
“அப்படித்தான் பேசுவேன். நானும் பொறுமையா போய் போய் மண்ணோடு மண்ணானது தான் மிச்சம். என்ன கிடைச்சிருச்சு எனக்கு?…”
“என்னடி கிடைக்கலை? இப்படி ஒரு வாழ்க்கை கிடைச்சிருக்கே. உன்னை ராணி மாதிரி உட்கார வச்சு சோறு போடறேன். இது போதாதா?…”
“கூலி வேலைக்கு போறவன் கூட தான் மூணுவேளை சோறு போடுவான். பிச்சை எடுக்கறவன் கூடத்தான் தான் சோறு போடுவான். ஆனா நீங்க எங்கப்பாம்மாவோட நிம்மதியை ரத்தத்தை உறிஞ்சற மாதிரி உறிஞ்சறீங்க…”
“ஓஓஹோ இப்ப புரியுதுடி, உங்கப்பா கமுக்கமா இருந்துட்டு இப்ப வீட்டை குடுக்கனுமேன்னு உடம்புக்கு முடியலைன்னு நாடகமாடறாரா? என்ன மனுஷன் அந்தாளு…” என்ற நொடி அவனின் சட்டையை பிடித்துவிட்டாள் ராகா.
“என்ன சொன்ன? என்ன சொன்ன? எங்கப்பா உனக்கு அந்தாளா?…” என்று பிடித்து உலுக்க,
“ஆமாடி, அந்தாளுதான். என்னன்ற இப்ப? என்னையே சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கறியா நீ?…” என்று அவளின் கையை பிடித்து அடிக்க கீர்த்தனா வந்து தடுத்தாள்.
“அக்கா, நீ விடு. இவர் மனுஷனா இருந்தா பேசலாம். மிருகம் மாதிரி நடந்துக்கறவர்ட்ட என்ன பேச்சு உனக்கு? விட்டு தொலை…” என்று சொல்ல,
“என்ன ரெண்டு பேரும் சேர்ந்து நாடகாமா போடறீங்க. வெளில போங்க. ஒருத்தரும் இங்க இருக்க கூடாது வெளில போங்க…” என்று ஸ்ரீநிவாஸ் கத்த,
“இது எங்க வீடு. நாங்க வெளில ஏன் போகனும்? எங்களுக்கு தான் இங்க இருக்கற எல்லா உரிமையும் இருக்குது. எங்களை வெளில போக சொல்ல நீங்க யார்?…” என கீர்த்தனா கேட்டுவிட,
“இதை யார் கட்டினான்னு உங்கக்காட்ட கேளேன். நான் இல்லைன்னு சொல்லிடுவாளா அவ?…” என்றவன்,
“சொல்லுடி, ஏய் சொல்லுடி…” என அந்த தாலியோடு அவளின் கழுத்தை இறுக்க,
“விடுடா விடுடா…” என அவனின் கையை அடித்து கத்த ஆரம்பித்தாள் கீர்த்தனா. அதில் வீட்டிற்குள் இருந்தவர்கள் அந்த சத்தத்தில் வெளியே வர இந்த காட்சியில் அதிர்ந்து போனார்கள்.
ஏற்கனவே மிருகமாய் மாறியிருந்தவன் கீர்த்தனாவின் அடியில் எரிச்சலாகி அவளை பிடித்து தள்ள சோபாவின் விளிம்பில் மோதி விழுந்தவள் அப்படியே மயங்கி சரிந்தாள்.
“கீர்த்தி…” என கனகாவும், சுபாவும், சந்திரிகாவும் ஓடிவந்து கீர்த்தனாவை தூக்க அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் ஸ்ரீநிவாஸ் இல்லை.
மிகவும் மோசமான ராட்சசனாக மாறி இருந்தான். அத்தனை நாள் சேர்த்து வைத்திருந்த வன்மமும், துவேஷமும் அவனின் தலைக்கு ஏறியிருக்க ராகாவின் பேச்சு சினத்தை வளர்த்திருக்க அவளை இன்னும் நெருக்கினான்.
“என்னையே எதிர்த்து பேசற அளவுக்கு வந்துட்டியா நீ? உன்னையெல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வச்சிருக்கனும்டி…” என்று சொல்ல தங்கதுரை தட்டு தடுமாறி வந்து அவனின் கையை பிடித்து கெஞ்ச ஆரம்பிக்க கனகா எழுந்து வந்து அவனின் கையை பிடித்து மகளை விட்டுவிடும் படி மன்றாடினார்.
இருவரையும் உதற இவை எல்லாம் தாதாங்கும் சக்தியற்ற தங்கதுரையின் பலவீனமான இதயம் அளவுக்கதிகமான தாக்குதலில் நிலைகுலைந்து போனது. நெஞ்சை பிடித்துக்கொண்டு ‘என் பொண்ணுங்கள காப்பாத்து ஆண்டவா’ என்ற கதறலுடன் சரிய,
“அப்பா…” என ராகா கத்தவும் தான் ஸ்ரீநிவாஸ் சற்று நிதானத்திற்கு வந்தான்.
கீர்த்தனா ஒருபுறம் விழுந்திருக்க, தங்கதுரை நெஞ்சை பிடித்துக்கொண்டு துடிக்க செய்வதறியாமல் வயிற்றுக்குள் பயப்பந்து சுழன்றது. ராகா ஆவேசம் கொண்டவளை போல எழுந்து அவனை அடித்தவள்,
“வெளில போ, வெளில போடா. எங்க குடும்பத்தையை நாசம் பண்ணிட்டியே. வெளில போடா. இனி நான் செத்தாக்கூட என் மூஞ்சில முழிக்காத…” என தெருவின் நடுவில் வரை அவனை அடித்து துரத்த வாசலில் ஆம்புலன்ஸ் வந்து நிற்கும் சத்தத்தில் மீண்டும் வீட்டிற்குள் ஓடினாள்.
பின்னால் அக்னியும் வந்துவிட அவசரமாக அவர்களை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பியவன் கண்களுக்குள் கீர்த்தனாவின் தலையில் வழிந்துகொண்டிருந்த ரத்தம் உயிரை அறுத்தது.
“அக்னி…” என அவனின் தோளில் கை வைத்த அடைக்கலத்திடம்,
“என்கிட்டே கிளம்பும் போது கூட இருக்க சொன்னா சித்தப்பா. நான் தான் கேட்கலை. இப்படி ஆகும்னு நான் நினைக்கலை. சத்தியமா நினைக்கலை…” என்று தலையில் அடித்துக்கொள்ள,
“முதல்ல நாம கிளம்புவோம். சுரேன் மட்டும் தான் போயிருக்கான். வா…” என,
“மாமாவோட ரிப்போர்ட்ஸ் இருக்குது. இருங்க எடுத்துட்டு வரேன்…” என்று உள்ளே சென்று எடுத்துக்கொண்டு வெளியே வர ஹாலில் பதட்டத்துடன் நின்றான் ஸ்ரீநிவாஸ்.
“ஸாரி ஸார், தெரியாம…” என்றவனின் கன்னம் அடுத்த வார்த்தை பேசும் முன்னர் எரிந்தது. உதடு கிழிந்து ரத்தம் வர அங்கே கத்த கூட முடியாத அளவிற்கு அக்னியிடம் அடி வாங்கினான் ஸ்ரீநிவாஸ்.
“நீயெல்லாம் மனுஷ ஜென்மமாடா. உனக்கெல்லாம் கொஞ்சமும் இரக்கம்ன்றதே இல்லையா?…” என சொல்லி சொல்லி அவனை அடிக்க அடுத்து அடி வாங்குவதற்கு கூட திராணியற்று அவமானத்தில் குற்றிப்போய் சுருண்டு விழுந்தான்.
“சித்தப்பா, இவன் என் கண்ணுலையே பட கூடாது….” என ஆத்திரத்துடன் அவனை அடித்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்து வெளியேற போனவன்,
“இந்த வீட்டுக்காக தான அத்தனை பேசின? வெளில போடா. போடா வெளில…” என இழுத்துவந்து வெளியே தள்ளி கதவை பூட்டி சாவியை எடுத்துக்கொண்டான்.
ஸ்ரீநிவாஸ் இவை எல்லாம் நடக்கும் என சற்றும் நினைத்து பார்க்கவில்லை. கையில் எதுவோ உறுத்த அதுவரை இறுக்கமாய் பிடித்திருந்த கைகளுக்குள் ராகாவிற்கு அவன் அணிவித்த திருமாங்கல்யம் அறுந்து அவனின் விரல்களுக்குள் சிக்கி இருந்தது.
“அக்னி கொஞ்சம் நிதானமா இரு. இவனை மாதிரி ஆளுங்களை அடிச்சு நம்ம தரத்தை இறக்கிக்க வேண்டாம்ப்பா…” என சொல்லி அவனை அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல அங்கே அவசர சிகிச்சை பிரிவில் தான் இருந்தனர் இருவரும்.
யாருக்கேன கண்ணீர் சிந்துவது என்று தெரியாமல் மொத்த குடும்பமும் பரிதவித்து இருக்க அடுத்த இரண்டு மணிநேரமும் போராட்டம் தான்.
கீர்த்தனாவுக்கு அவசரமாக அனைத்து பரிசோதனைகளையும் முடித்து ஒருவழியாய் அவளுக்கும், வயிற்றில் உள்ள குழந்தைக்கும் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று தெரியவர அதில் மகிழ கூட முடியாமல் தங்கதுரையின் உடல்நிலை கவலைக்கிடமாக அங்கே பார்க்கமுடியாதென்று கோவைக்கு கொண்டுசெல்லும்படி சொல்லிவிட நம்பிக்கையற்றுவிட்டார்கள் குடும்பத்தினர்.
கொஞ்சமும் தாமதிக்காமல் உடனடியாக தங்கதுரையை கோவை மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல ஏற்பாடாகியது.