ஆம்புலன்ஸ் கிளம்பி சென்று அக்னியும் அடித்து விரட்டி ரோட்டில் விட்டு சென்றதும் நடக்க கூட முடியாமல் அங்கே தெருவின் ஓரத்தில் மெதுவாய் சாய்ந்து நின்றிருக்க அதற்குள் அடித்துப்பிடித்து ஓடிவந்தனர் அவனின் பெற்றோர்.
“ஐயோ ஐயோ ஐயோ என் புள்ளையை இந்த அடி அடிச்சவன் விளங்குவானா?…” என புழுதி வாரி இறைத்து சாபம் குடுப்பதை போல பூட்டியிருந்த வீட்டை பார்த்து மண்ணை அள்ளி தூற்றியவர்,
“உன் கை என்னடா பூவா பறிச்சிட்டு இருந்துச்சு? இழுத்து நாலு சாத்து சாத்திருக்கவேண்டியது தானே? என் புள்ளை ஆம்பளை சிங்கம்…” என்றவர்,
“இங்க இத்தனை பேரு வேடிக்கை பார்த்துட்டு நின்னிருக்கீங்க? என்னன்னு எதுத்து கேட்க துப்பில்லை…” என்று அங்கே வேடிக்கை பார்த்தவர்களிடம் பாய்ந்துவிட்டு,
“போயி ஆட்டோவை கூட்டிட்டு வாங்க, வீட்டுக்கு போவோம்…” என கணவனை அனுப்பிய சாரதா,
“அம்புட்டு பொம்பளைகளும் கண்குளிர வேடிக்கையா பார்த்தாங்க? வரட்டும் ஒவ்வொருத்தியையும் ஆட்டுற ஆட்டுல எம்மவன் திசைக்கே வரக்கூடாது. உன்னை கட்டினவ கூடவா கமுக்கமா இருந்தா? சொன்னேனே கேட்டியா நீ?…” என்றவர் ஆட்டோவில் மகனை ஏற்றி கொண்டு வீடு வந்து சேர்ந்தார்.
“ஊரு உலகத்துல இல்லாத அழகியா அவ? சொன்னேனே கேட்டியா நீ? ஊமைக்கொட்டான். சிரிக்கத்தான் தெரியும். என்னானாலும் கம்முன்னு இருப்பான்னு சொல்லி அவளை கட்டின. இப்பவும் அவ நீ அடிவாங்கறதை பார்த்துட்டு கம்முன்னு தான இருந்திருக்கா…”
“இதத்தான் ஊமை ஊரை கெடுக்கும்னு சொல்லுவாங்க. பாத்தியா இப்ப அவளால என்னாச்சுன்னு? இப்ப என்ன மாமங்கற உரிமையில நீ லேசா தள்ளிருப்ப. அது ஒரு குத்தம்ன்னு தங்கச்சி புருஷனை விட்டு அடிக்கவிட்டாளாக்கும்? வரட்டும் அவ. கொண்டையை பிடிச்சு ஆஞ்சுவிடறேன்…”
“ம்மா, பேசாம இருங்களேன்…” என்று அப்போதுதான் வாயை திறந்தான்.
எந்த முகத்தை வைத்துக்கொண்டு மருத்துவமனை செல்வானாம்? ஊரே பார்க்க பொண்டாட்டியும், சகலையும் அடித்து துரத்தியிருக்க அவமானத்தில் குறுகிப்போய் இருந்தான் ஸ்ரீநிவாஸ்.
அதைவிட உடலில், காலில் நல்ல அடி. காலை ஊன்றவே அத்தனை சிரமமாக இருந்தது அவனுக்கு. லேசாய் அசைத்தாலே வலி உயிர் போனது. சாதாரணமாக நடக்கவே அவன் நான்கு நாட்கள் ஆகும்.
“எதுக்கும் நான் நம்ம கம்பவுண்டர்க்கிட்ட வீட்டுக்கு வந்து வலிக்கு ஊசி போட சொல்லி கூட்டிட்டு வரேன்…” என்று கிளம்பினார் அவனின் தந்தை.
அவர் செல்லவும் தான் மகனின் கையில் இருந்த திருமாங்கல்யத்தை அப்போதுதான் பார்த்தவராக அதற்கும் ஒருமூச்சு ஆடித்தீர்த்தார் சாரதா. எதுவும் மகனை சொல்லவிடவில்லை.
“ம்மா அவ அப்பா கீழே விழுந்தப்போ நான் இதை அவ கழுத்துல நெருக்கி பிடிச்சிருந்தேன். அவ என்னை தள்ளிவிட்டு விலகின வேகத்துல கையோட அறுந்து வந்திருச்சு…” என்று ஸ்ரீநிவாஸ் சொல்ல,
“என்ன? இல்ல இப்ப என்னங்கேன்? ஆம்பளை நீ அப்படியப்படித்தான் இருப்ப. பொண்டாட்டியா லட்சணமா அவ தான அனுசரிப்பா போகனும். நீ செஞ்சதுல ஒரு தப்பும் இல்ல….”
“ம்மா என்ன சொல்றீங்க?…” என தாயை பார்க்க,
“உனக்கு உரிமையானதை நீ கேட்ட. அம்புட்டுத்தான? நீ பேசாம இரு. கழுத கெட்டா குட்டிச்சுவரு. தானே வரட்டும். எங்க போவா? உன் கால்ல வந்து விழுவா பாரு…” என்று மகனின் தவறை உணரவிடாமல் சாரதா பேச ஸ்ரீநிவாஸ் மனது ஏற்றும் ஏற்காத நிலை.
ஆனால் அவன் கீர்த்தனா, தங்கதுரையை பார்க்க நினைக்கவே இல்லை அங்கே செல்லவும் விரும்பாததை போல இருந்தான்.
ஆனால் அன்றிரவே தங்கதுரையின் உடல்நிலை மோசமாகி கோவை கொண்டுசெல்லப்படுகிறார் என்னும் தகவலில் தான் அரண்டு போனான்.
———————————————————–
“இன்னைக்கு கீர்த்தனா இங்கயே இருக்கட்டும் சித்தி. நீங்க கூட இருங்க. நாங்க கிளம்பறோம்…” என்ற அக்னி மனைவி இன்னும் மயக்கத்தில் இருக்க அவளின் தலையை வருடியவன்,
“பார்த்துக்கோங்கம்மா…” என தாயிடமும் சொல்லிவிட்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தான்.
“அக்னி எல்லாமே பக்கா ரெடி. கோயம்பத்தூர்ல சாதனா அப்பாட்டையும் பேசியாச்சு. என்னோட ப்ரெண்ட் ஒருத்தனுக்கும் சொல்லிருக்கேன். ஹாஸ்பிட்டல்க்கும் இன்பார்ம் பண்ணியாச்சு. கிளம்பவேண்டியது தான் பாக்கி…” என வந்த சுரேன்.
“நம்ம பேரை சொன்னாலே எல்லாம் நடக்கும்டா. எதுக்கு சனாவோட அப்பாட்ட சொல்ல சொன்ன?…” என சுரேன் கேட்க,
“இல்ல சுரேன், அது அவர் ஊரு. என்ன இருந்தாலும் என் மேல அவருக்கு ஒரு அதிருப்தி இருக்குது. இப்ப என் மாமனாருக்கு அங்க வைத்தியம் பார்க்க போறோம். அப்போ அவர்க்கிட்டையும் பொதுவா சொல்லிவச்சா நம்மை மதிச்சு சொல்றாங்கன்னு பழசை மறந்துட்டு முன்ன நிப்பாரு…”
“அவரு நின்னுதான் நமக்கு எதுவும் ஆகபோறதில்லை தான். இருந்தாலும் இந்த மாதிரி நேரத்துல யாரா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமேன்னு தான் தானா முன்னுக்க உதவ வருவாங்க. அவர்க்கிட்ட சொன்னதால அவருக்கும் நல்லதா படும். பாரு நாம போறதுக்குள்ள அங்க அவர் நிப்பார்…” என்றான் அக்னி.
“ஹ்ம்ம், அதுவும் சரிதான். நான் எதுக்கும் இருக்கட்டும்னு தான் என் ப்ரெண்ட்கிட்ட சொல்லிவச்சேன். ஏதாவது ஒரு ஹெல்ப்க்கு ஆகும்ல…” என்றவன்,
“ஆம்புலன்ஸ்ல கனகா அத்தை கூட நானும் போறேன். குழந்தையை வச்சுக்கிட்டு ராகா ஆம்புலன்ஸ்ல வரவேண்டாம்னு தோணுது…” என சொல்ல அப்போதுதான் குழந்தை ஞாபகமே வந்தது அக்னிக்கு.
“வினய்க்கு சாப்பிட ஏதாவது குடுத்தாங்களான்னே தெரியலையே சுரேன்…” என அவனுடன் சேர்ந்து செல்ல கனகாவின் அருகே சாதனா அமர்ந்திருக்க ராகாவோ இன்னும் இரண்டு இருக்கை தள்ளி சுவற்றை வெறித்தபடி வினயை நெஞ்சோடு அணைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
பார்வை நிலைகுத்தி ஓரிடத்திலேயே இருக்க முற்றிலும் ஒரு நிராதரவான தோற்றம் அவளிடத்தில்.
“ராகா…” என்ற அக்னியின் அழைப்பும் கூட அவளை எட்டவில்லை.
ஊமையாய் செவிடாய் ஒரு ஜடம் என்பதை போல அசையாது இருந்தவள் கைகளுக்குள் லேசாய் உறக்கத்தில் தேம்பியபடி சாய்ந்திருந்தான் வினய். வந்ததும் அவள் அமர்ந்தது அமர்ந்தபடி இருக்க இருந்த கவலையில் அவளை கவனிக்க மறந்திருந்தனர்.
“ராகா இங்க பாருங்க…” என்று அவளின் தோளில் தட்ட,
“சனா, இங்க வந்து பாரு…” என்று சுரேன் சாதனாவை அழைத்ததும் அவள் வரும் முன் ராகாவும் நிமிர்ந்து பார்த்தாள்.
“அப்பாவுக்கு என்னாச்சு? அப்பாவுக்கு என்னாச்சு?…” என்று பதறி கேட்டவள் உடல் நடுங்க உதடுகள் ஈரப்பதமின்றி காய்ந்திருந்ததில் லேசாய் வெடித்து ரத்தம் கசிந்து உணர்விழக்க ஆரம்பித்தாள்.
“ராகா…” என்று அவளின் கன்னத்தில் பலமாய் தட்ட சாதனாவுடன் கனகாவும் வந்து அவளை தாங்கிக்கொள்ள வினயை தூக்கிக்கொண்டான் அக்னி.
அவன் தூக்கியதுமே உறக்கம் தடைபற்று லேசாய் கண்விழித்தவன் தோளில் சாய்ந்தபடி பின்னந்தலையை பார்த்து தன் தந்தை தான் தூக்கியிருக்கிறானோ என்ற அச்சத்தில் கையை, காலை உதறி ஹாஸ்பிடல் அதிரும்படி கத்தி ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தான்.
கண்ணை கூட திறவாமல் ‘ம்மா ம்மா அழா. பா வேணா வேணா’ என்று அழுது அக்னியை அடிக்க அதற்குள் ராகாவிற்கு தண்ணீர் கொடுக்கப்பட்டு கொஞ்சம் தெளிவானவள் முகத்தில் தண்ணீரை அறைந்து தெளித்தாள்.
மகனின் அழுகுரலில் எழுந்து செல்ல முடியாமல் கால்கள் தடுமாறியது. எழுந்தவள் மீண்டும் மடங்கி அமர்ந்து குழந்தைக்கு கை நீட்ட அதற்குள் அக்னி சமாளித்திருந்தான் அவனை.
“இங்க பாரு குட்டி. வினய்க்குட்டி. சித்தப்பாடா. இங்க பாரு. கண்ணை திறந்து என்னை பார்ப்பியாம். கார்ல டுர்ர் போவோம்ல. சித்தி கூட ஹைட் அன்ட் சிக் விளையாடுவோம்ல…” என்று சொல்லி சொல்லி ஞாபகப்படுத்தவும் பிள்ளை சற்று கட்டுக்குள் வந்தவன் தொய்ந்து அக்னியின் தோளில் சாய்ந்துகொண்டான்.
“பா பேட். தாத்தா அழா. ஊசி. ம்மா பெய்ன். ம்மா ம்மா…” என மீண்டும் தாயை தேடியவனை இங்குமங்கும் தோளில் போட்டு நடக்க,
“புவ்வா ம்மா, புவ்வா…” என தோளில் சாய்ந்தபடி பசியில் குழந்தை கேட்கவும் கண்கள் கலங்கியது அக்னிக்கு.
“என்னடா நீ?…” என்று அவனை கடிந்துகொண்டான் சுரேன்.
“என்கிட்டே தா. புள்ளையை வச்சிட்டு அழுதுட்டு…” என சுரேன் கை நீட்டவும் அவனிடம் போகாமல் அக்னியின் முகத்தை பார்த்து,
“ம்மா புவ்வா…” என்றான் மீண்டும்.
“உனக்கு என்ன வேணுமோ நான் வாங்கி தரேன்டா வினய் குட்டி. நானும் உனக்கு சித்தப்பா தான்…” என்றதும் அக்னியிடம் அனுமதி கேட்பதை போல பார்க்க,
“ரொம்ப பண்ணாதடா சின்ன பையா…” என்று வினயை வாங்கிக்கொண்டவன் கைகளும் நடுங்கின.
அந்த சிறு குழந்தை சுரேனின் மனதை வெகுவாய் அசைத்திருந்தான். ஒரு குடும்பத்தின் பிரச்சனைக்குரிய சூழ்நிலை எந்தளவிற்கு குழந்தையை கூட பாதிக்கிறது என்பதை அன்று தான் உணர்ந்தான்.
“நீயும் கூட வா. இவன் என்ன சாப்பிடுவான்னு தெரியலை. ஆம்புலன்ஸ் ரெடியாகி ரிப்போர்ட்ஸ் பார்மாலிட்டீஸ் எல்லாம் வர இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும். வா…” என்று அங்கிருந்த சிறிய கேண்டீன் பகுதிக்கு வந்தவன் சாதனாவிற்கு அழைத்தான்.
“அங்க குடிக்க டீ, பால் ஏதாவது குடுத்தனுப்பறேன். சாப்பிட வை அவங்களை…” என்றதும் சரி என்றாள் அவள்.
ஒரு உதவியாளரை அழைத்து அவர்களிடம் குடுத்தனுப்பிவிட்டு வினய்க்கு உணவுக்கு சொல்லிவிட்டு ஓரிடத்தில் வந்து அமர்ந்தனர். இன்னும் வினய் சுரேனின் மடியில் அவனின் சட்டையை பிடித்துக்கொண்டு கண்மூடி சாய்ந்திருந்தான்.
“இதையெல்லாம் நாம பார்க்காம வளர்ந்ததால இதோட வீரியம் நமக்கு புரியலைலடா அக்னி. ஈஸியா மிடில் கிளாஸ் தானேன்னு நான் ரொம்ப கம்மியா நினைச்சுட்டேன். என் ஜட்ஜ்மென்ட் எவ்வளோ தப்பு…” என்று வருத்தமாய் சுரேன் சொல்ல,
“இப்ப ஏன்டா இதெல்லாம் பேசற?…”
“பேசனும்டா. எல்லாம் இருந்தும் நாம நம்ம தொழில்ல ஒரு பிரச்சனைன்னதும் எவ்வளவு இடிஞ்சு போனோம். இவங்க வாழ்க்கையை பாரு நித்தமும் ஒரு பிரச்சனையை சமாளிச்சுட்டு இருக்காங்க. இந்த குழந்தை கூட…” என்றவனின் கை வினயை வருடியது.
“நாமலாம் இருக்கறதை வச்சு அதிகாரம் செஞ்சு வாழ்ந்துட்டு இருக்கோம். இவங்க இல்லைன்னாலும் உருவாக்கி அதை வச்சு வாழறாங்க. உண்மையான போராட்டம் இது. இவங்களும் நிஜமான பைட்டர்ஸ்டா அக்னி…” என்றான் உணர்ச்சி பிழம்பாய்.
“இவ்வளவு எமோஷனல் ஆகாத சுரேன். அங்க பாரு வினய் உன்னையே தான் பார்க்கறான்…” என்று அக்னி சொல்லவும் குனிந்து பார்க்க வினய் வாயை திறந்து எதுவோ பேசும் முன் அவனின் கன்னத்தில் முத்தமிட்ட சுரேன்,
“பசிக்குதுன்னு கேட்டுடாதடா குட்டி. சத்தியமா உடைஞ்சிடுவேன். இப்ப உனக்கு வந்திடும் பாரு…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுதே சூடாக இட்லியும் சாம்பாரும் வந்துவிட அவனே குழந்தைக்கு ஊட்ட ஆரம்பித்தான்.
அக்னி அவர்களை பார்த்தபடி டீயை குடித்துக்கொண்டு இருந்தவனின் மனது நிறைவாய் இருந்தது.
“சீக்கிரம் ஒரு குழந்தையை பெத்துக்கோ சுரேன். நீ ரொம்ப அழகா இவனை ஹேண்டில் பன்ற…” என்று சொல்லிக்கொண்டு இருக்க பசியில் வேக வேகமாய் சாப்பிட்டான் வினய்.
“பின்ன பதினோரு மணி ஆகிடுச்சு. பிள்ளைக்கு எப்படி இருக்கும்? இவ்வளவு நேரம் கேட்காம இருந்ததே பெருசு…” என சுரேன் சொல்லிவிட்டு அவனிடம் இன்னும் வேறு வேண்டுமா என கேட்டு அவன் மறுக்கவும் குடிக்க தண்ணீர் தந்துவிட்டு தனக்கும் டீ சொல்லி குடிக்க,
“கேட்டிருப்பான். ராகா அதை கேட்கிற மனநிலையில் இல்லை…”
“நீ ஏன்டா அவனை சும்மா விட்டு வந்த? நானா இருந்தா நாரா கிழிச்சிருப்பேன். ராஸ்கல். வரட்டும் அவனுக்கு இருக்கு…” என்று ஆத்திரத்துடன் மேஜையில் சுரேன் குத்த,
“நோ பைட், அடி வேணா வேணா…” என்று வினய் பதறி அவனின் மார்பில் முகம் புதைத்து அவனின் சட்டையை பிடித்துக்கொள்ள,
“அக்னி, இவன் ரொம்ப பயந்திருக்கான்டா…” என கவலையுடன் அவனை அணைத்துக்கொண்டு,
“என்னடா பண்ணினாங்க பச்சை பிள்ளையை இந்த பிரச்சனையை வேடிக்கை பார்க்கவிட்டு…” அதற்கும் அவன் கொதிக்க,
“கிளம்புவோம் சுரேன். நேரமாகிடுச்சு…” என்று அக்னி எழுந்து கொண்டதும் அவன் மீது தாவிக்கொண்டான் வினய்.
அங்கே கனகாவின் மடியில் தான் ராகா படுத்திருக்க பன்னீர்செல்வமும், அடைக்கலமும் டாக்டரிடம் பேசியபடி வந்தனர்.
“கிளம்பலாமாப்பா?…” என்று அக்னி கேட்கவும்,
“ஆம்புலன்ஸ்ல ரெண்டு பேர் போகலாம். அதனால நீயும் கனகாவும் ஆம்புலன்ஸ்ல போங்க…”