“ஓகே அத்தை, உங்க பாய்ண்ட்கே வரேன். பொண்ணை குடுத்தாச்சு சரி. அதுக்குன்னு கேட்க கேட்க அள்ளி குடுத்தா எப்படி? செஞ்ச தப்பையே திரும்ப திரும்ப செஞ்சீங்க. ஏன் என் விஷயத்துல கூட தான். நான் கேட்டதும் சரின்னு சொன்னீங்க. தப்பில்லை. ஆனாலும் பொண்ணை பெத்தவங்களா வர வரன் எப்பேர்ப்பட்டதா இருந்தாலும் விசாரிச்சு பொறுமையா தான் குடுக்கனும். நானும் ஸ்ரீநி மாதிரி இருந்திருந்தா?…”
அக்னி கேட்டதும் கனகாவிற்கு சர்வமும் நடுங்கியது. ஒரு ஸ்ரீநிவாஸ்கே குடும்பம் சிதறியது. இதில் இன்னொரு மகளுமா?
“அப்போ எப்படி தெரிஞ்சும் திரும்ப ராகாவை அங்க அனுப்ப முயற்சி செய்யறீங்க?…” என்ற அக்னியின் கேள்விக்கு எதிர்கேள்வியாக,
“அப்போ அவ எதிர்காலம்?…” கனகா கேட்க,
“ஒரு பொண்ணுக்கு புருஷன் மட்டும் தான் எதிர்காலம்ன்னு உங்களுக்கு யார் சொன்னா? இதோ உங்க சின்ன பொண்ணு. இவ தான் என்னோட எதிர்காலம்ன்னு மனசார நான் சொல்லனும். என் அன்பு அவளை சொல்ல வைக்கனும். ஆனா ராகா சொல்லுவாங்களா?…”
“அதுக்காக வாழாவெட்டியா என் பொண்ணு…”
“அத்தை ப்ளீஸ், இனி இந்த வார்த்தை பேசாதீங்க. அவங்க வாழாம என்ன பண்ண போறாங்க? கண்டிப்பா ஒரு தைரியமான பொண்ணா வாழத்தான் போறாங்க. அதுக்கு நீங்க முதல்ல உறுதுணையா இருங்க. நீங்களே அவங்களை முடக்கி போடாதீங்க…” என்றவன்,
“இனி ராகா அவங்க வாழ்க்கையை அவங்க முடிவு பண்ணட்டும். அந்த உரிமை அவங்களுக்கு இருக்கு. கல்யாணம் பண்ணி புருஷன்ற பேர்ல ஸ்ரீநிவாஸ் செஞ்சதை பெத்தவங்கன்ற பேர்ல நீங்க செய்யாதீங்க. அவங்களுக்கும் உணர்வுகள் இருக்கு…”
அக்னி பேச பேச உடைந்து அழுத ராகாவை அரவணைத்துக்கொண்டாள் கீர்த்தனா.
“ராகா குடும்பம்னு வாழ கூடாதுன்னு இதை நான் சொல்லலை. ஆனா இப்படித்தான் வாழனும்னு நீங்க கட்டாயப்படுத்தாம விடுங்க. அவங்க முடிவு பண்ணட்டும்…”
“எதையாவது செஞ்சு மாப்பிள்ளை கேட்கிறதை குடுத்துட்டா பொண்ணு சந்தோஷமா வாழ்ந்துடுவான்னு நினைக்கறீங்களே? இப்படி ஒன்னொன்னும் கேட்டு கேட்டு வாங்கி அவன் என்ன சந்தோஷமா வச்சுக்கறது? இப்படி பெத்தவங்கட்ட வாங்கி குடுத்து எந்த பொண்ணு சந்தோஷமா வாழ்வா?…”
“அம்மா, இப்பவாச்சும் உனக்கு புரிஞ்சதா ஏதாவது?…” என கீர்த்தனா கேட்க,
“கீர்த்தி அவங்க யோசிக்கட்டும், நீ எதுவும் பேசாத. நான் போய்ட்டு ஈவ்னிங் வந்து உன்னை கூட்டிட்டு போறேன். மாமா எழுந்ததும் நான் கிளம்பிட்டதா சொல்லிடு…” என சொல்லிவிட்டு அக்னி சென்றதும் அப்படியே அமர்ந்து கண்களை மூடிக்கொண்டார் கனகா.
“அக்கா நீ என்ன அப்படியே உட்கார்ந்திருக்க? வா ஏதாவது சமைக்கலாம்…” என்று கீர்த்தனா அவளையும் இழுத்துக்கொண்டு அடுக்களைக்குள் நுழைந்துகொண்டாள்.
அவளால் முடிந்தது ராகாவை கொஞ்சமேனும் இயல்பு நிலைக்கு மாற்றுவது ஒன்று தான். இயல்பாய் இருப்பதை போல இருந்தாலும் மனதிற்குள் அதற்கு மிகவும் போராடுகிறாள் என்பதை உணரமுடிந்தது கீர்த்தனாவால்.
“அக்கா இதை பார்த்துக்கோ, இப்போ வந்திடறேன்…” என்றவள் நகர்ந்து சென்று தனது மொபைலில் இருந்து சாதனாவை அழைத்தாள்.
“என்னவாம் கீர்த்திக்கு இப்போ?…” என்று எடுத்ததுமே சாதனா வழக்கம் போல பேச,
“அக்கா உடனே வீட்டுக்கு வர முடியுமா?…” என்றதும்,
“எதுவும் பிரச்சனை இல்லையே…” என்றாள் சாதனா.
“ப்ச், சண்டைன்னாதான் கூப்பிடுவேனா? இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லை. கிளம்பி வாங்க இப்போ…” என்று சொல்லிவிட்டு வைத்துவிட,
“வரவர இந்த பிள்ளைபூச்சி ரொம்பத்தான் பேசுது…” என்று அலுத்துக்கொண்டபடி வீட்டில் சொல்லிவிட்டு கிளம்பி வந்தாள் அவள்.
“வாம்மா…” என சாதனாவை பார்த்ததுமே கனகா எழுந்து வரவேற்க,
“இன்னைக்கு தான் வரேனாம்மா? நீங்க உட்காருங்க. நான் போய் அந்த வாலுங்களை பார்க்கறேன்…” என்று சிரித்துக்கொண்டே உள்ளே செல்ல மீண்டும் அமர்ந்திருந்த இடத்திலேயே அமர்ந்துகொண்டார் கனகா.
மகளின் எதிர்காலம் அவரின் இயல்புநிலையை தொலைக்க செய்தது. மனம் முழுவது ஏதோ இருள் சூழ்ந்து இருப்பதை போல அருளிழந்து கிடந்தது.
வெகு நேரம் கழித்து கடிகார சத்தத்தில் தெளிந்தவர் தங்கதுரையை எழுப்பி உணவு குடுக்கவேண்டுமே என்று வேகமாய் எழுந்து உள்ளே வர தங்கதுரை இன்னும் உறக்கத்தில் இருக்க அவரின் அருகே வினய் உறங்கிக்கொண்டு இருந்தான்.
ஒரு அரைமணிநேரம் சென்று எழுப்புவோம் என்று விட்டுவிட்டு வெளியே வந்தவர் முகத்தை கழுவ பின்னால் செல்ல அங்கே கேட்ட மூத்த மகளின் குரலில் அப்படியே நின்றார்.
“எல்லாரும் கேட்கற கேள்வி தனியா உன்னால குழந்தையை வளர்த்து தனியா நின்னுட முடியுமான்னு? அதுவும் இந்த சின்ன வயசுல தனியா இருக்கறது கஷ்டம்னு சொல்றதுக்கு பின்னால இருக்கற அந்த காரணம் வெளிப்படையா சொல்லனும்னா தேவைகளுக்கான காரணங்கள் தான் அதெல்லாம்…”
“ராகாக்கா, இவ்வளவு தின்க் பண்ணினியா நீ? ரொம்ப கஷ்ட்டபடுத்திருக்க உன்னையே….” என கீர்த்தி சொல்லவும் அவளின் கன்னத்தை லேசாய் தட்டியவள் சாதனாவை பார்த்து,
“நிஜமா தான் சொல்றேன் சாதனா, என் ரத்தமெல்லாம் என்னைக்கோ சுண்டி போச்சு. என்னை பெத்தவங்க நான் குடும்பமா இருந்தா தான் அவங்களுக்கு நிம்மதி சந்தோஷம்னு நினைக்கறதால மட்டும் தான் நானும் பொறுமையா இருந்தேன்…”
“அம்மாப்பாவோட தவிப்பை முழுசா உணர்ந்திருக்கறேன் நான். ஒரு கட்டத்துக்கு மேல அவர் மேல எனக்கு வெறுப்பு வந்துட கூடாதுன்னு எத்தனை வேண்டுதல் தெரியுமா? வலுக்கட்டாயமா அவரோட ஒவ்வொரு பேச்சுக்கும் செயலுக்கும் பாஸிட்டிவா ஒரு காரணத்தை தேடி தேடி களைச்சு போவேன்…”
“எங்க சுத்தமா வெறுத்து பிடிக்காம போய் என்னோட அம்மாப்பா தன் பொண்ணு வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேன்னு பரிதவிச்சு நின்னுடுவாங்களோன்னு நித்தமும் இல்லை இவங்க மாறிடுவாங்க. இவங்களுக்கு நிஜமா என்னை பிடிக்கும். விரும்பித்தான் இந்த கல்யாணம். நம்பிடு, நம்பிடுன்னு சொல்லிட்டே இருப்பேன் மனசுக்குள்ள. என்னைக்காவது எதிர்த்து பேச தோணும். அப்போலாம் அம்மா தடுத்துடுவாங்க…”
“இப்போவும் அம்மா எங்க நான் தனியா நின்னு கஷ்டப்படுவேனொன்னு பயந்து தான் அவரோட சேர்ந்து வாழ சொல்றாங்க. புருஷனோட வாழ்ந்தா தான் பொண்ணுக்கு மதிப்பு, பாதுகாப்புன்னு. அந்த பாதுகாப்பை அவரே அறுத்தெறிஞ்சிட்டு போய்ட்டாரு…”
“உண்மையா இப்போ தான் என் குடும்பம் பாதுகாப்பா இருக்கறதா நான் நினைக்கறேன். அவங்க அம்மா பேசினதுக்கு கூட எந்த ரியாக்ட்டும் பண்ணாம என்னை கேள்வி கேட்டார். இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு?…” ராகா மொத்தமாய் கொட்ட கொட்ட கனகாவின் மனது லேசாய் தெளிந்தது.
“வினய்க்கு அப்பான்னு?…” சாதனா கேட்க,
“ஏன் நானே இல்லைன்னாலும் என்னை பெத்தவங்க, என் தங்கச்சி, நீங்க எல்லாரும் பார்த்துக்கமாட்டீங்களா? ஆனா என் பிள்ளைக்கு எல்லாமுமா நான் இருப்பேன். அவனை நான் வளர்ப்பேன். ஒரு தாய் ஆம்பிளை பிள்ளையை எப்படி வளர்க்கனுமோ அப்படி வளர்ப்பேன்….” என்று அத்தனை திடமாய் பேசினாள்.
“உன்னோட கான்பிடன்ட் எல்லாம் ஓகே தான். உன்னோட வயசை காரணமா வச்சு நிச்சயம் ஸ்ரீநிவாஸ் வேண்டாம்னா வீட்டுல இருக்கறவங்களோட அடுத்த ஆப்ஷன் உனக்கு இன்னொரு மேரேஜ் பண்ணி வைக்கிறதா தான் இருக்கும் ராகா…”
“இனி இன்னோர் கல்யாணம் செஞ்சா கூட எப்போ எந்த நிமிஷம் அவனும் பழைய வாழ்க்கையை குடுத்துடுவானோன்னு பயந்து பயந்து திரும்ப ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை தான் வாழனும் நான். எனக்கு வேண்டாம். இப்ப இருக்கற இந்த நிம்மதி, சந்தோஷம் இதுவே போதும்…”
“இவ்வளவு பேசிட்டேன். இதுக்கு மேலையும் என் முடிவான்னு கேட்டா என்ன அர்த்தம்?…” என்று சிரித்தவள்,
“ஓகே, சாப்பிடலாமா? ரொம்ப பசிக்குது. இப்ப மனசும், புத்தியும் லேசா இருக்குது…” என்று அவள் வர வேகமாய் வந்த தடம் தெரியாது உள்ளே சென்றுவிட்டார் கனகா.
ஆனால் அவர் வந்து நின்றதில் இருந்து கீர்த்தனா பார்த்துக்கொண்டு தான் இருந்தாள். இப்படியாவது ராகாவின் மனதில் உள்ளதை தாய் கேட்டுக்கொள்ளட்டுமே என்று.
மதிய உணவை அனைவருமாய் சேர்ந்து உண்டுவிட்டு அமர்ந்து பேசிக்கொண்டிருக்க கீர்த்தனா தான்,
“அம்மா, ஏதாவது ஸ்நாக்ஸ் செய்யேன். ரொம்ப நாள் ஆச்சு நீ செஞ்சு. இப்பவும் நாங்களே சமைச்சுட்டு இருக்கோம்…” என்று அவரையும் இழுக்க,
“என்ன வேணும்னு சொல்லுடாம்மா. செஞ்சிருவோம்…” என கேட்க அதில் உற்சாகத்துடன் ராகாவும் கீர்த்தனாவும் இதுவா அதுவா ஏன்று மாற்றி மாற்றி பேசிக்கொண்டு இருந்தனர்.
கனகாவிற்கு பார்க்கும் பொழுது இருவரும் திருமணத்தின் முன்பு இருந்த நிகழ்வுகள் ஞாபகம் வர கண்ணில் நீர் திரையிட்டது. உடனடியாக சமாளித்தவர் தன்னால் இனி தன் பெண்கள் கலங்க கூடாதென்ற முடிவுடன் எழுந்து,
“ரெண்டு பேரும் பேசிட்டே இருங்க. நான் போய் என்ன இருக்குன்னு பார்த்து அதை செய்யறேன். அடுத்தடுத்து என்ன வேணுமோ அப்போ பார்த்துக்கலாம்…” என எழுந்து செல்ல வினயை நடுவில் விட்டு அவர்கள் விளையாடிக்கொண்டு இருக்க மர சோபாவில் அமர்ந்து தங்கதுரை இவர்களை பார்த்தபடி கையை தட்டி பேரனுக்கு உற்சாகமூட்டிக்கொண்டு இருந்தார்.
உடல்நிலை சரியான பின்பு அவர் வந்து அந்த இடத்தில் அன்று தான் அமர்கிறார். தனிக்குடித்தனமென ஸ்ரீநிவாஸுடன் ராகா அந்த வீட்டிற்கு வந்த பின்னர் இன்றுதான் அந்த காட்சியை ராகாவாலும், கீர்த்தனாவாலும் பார்க்க முடிந்தது.
இருவருக்குமே அதில் அப்படி ஒரு நெகிழ்ச்சி. குடும்பம் பழையபடி அவ்விடத்தில் ஒன்றிணைந்தது என்று மகள்களை போல பெற்றோர்களுக்கு அதை நினைத்து மகிழ முடியவில்லை.
ஆனாலும் பெண்களுக்காக மனதின் வருத்தங்களை, கவலைகளை காட்டிக்கொள்ளாமல் இருந்தனர்.
சற்று நேரத்தில் மெதுவாய் அடுக்களைக்குள் வந்த கீர்த்தனா தாயை அணைத்தபடி நின்றவள்,
“இப்பலாம் இந்த திண்டுல என்னால உட்காரவே முடியலைம்மா…” என சிணுங்கிக்கொண்டு பேச,
“போதும், போதும் நீ உட்கார்ந்தது. இப்ப நீ போ. நான் இந்த வடையை போட்டுட்டு வரேன்…” என அவசரத்திற்கு வெங்காயத்தை, முட்டைகோசை அரிந்து மாவில் கலக்கி வடையாய் தட்டிக்கொண்டு இருந்தார்.
“உனக்கு இப்போ ராகா என்ன நினைக்கிறான்னு புரிஞ்சிடுச்சாம்மா?…” என கீர்த்தனா மெல்லிய குரலில் கேட்க,
“கீர்த்தி…” என மகளை திரும்பி பார்த்தார்.
“நீ ஒட்டுக்கேட்டதை நான் பார்த்துட்டேன்…” என்று கண்சிமிட்டி சொல்ல கனகாவிற்கு அழுகை முட்டியது.
“என் பொண்ணை நானே கஷ்டப்படுத்திட்டேன்…” என்று விசும்ப,
“அடடா அழாதம்மா. அவ வந்தா திட்ட போறா. நான் சும்மா தான் கேட்டேன்….” என்று தாயின் கண்ணீரை துடைத்தவள்,
“நீ எதையும் யோசிக்காம இரு. உடனே முடிவெடுக்கனும்னு இல்லை. நாள் போகட்டும். பார்த்துக்கலாம். இப்பவே இப்பவேன்னு நின்னு அவளை படுத்தாம இரு…”
“அவ்வளோ பெரிய மனுஷி ஆகிட்ட நீ…” என மாவுக்கையுடன் கனகா கீர்த்தனாவின் கன்னத்தை கிள்ள,
“போச்சு ஒரு வடைக்கான மாவு இப்ப என் கன்னத்துல, வர வர கஞ்சப்பிசினாரி கனகாவை காணவில்லைன்னு போஸ்ட்டர் தான் ஒட்டனும் போல?…” என்று கிண்டல் பேச,
“என்னை பார்த்தா கஞ்சபிசினாரி மாதிரியா இருக்கு?…” என கனகா முறைக்க,
“நோ நோ, கட்டுசெட்டு கனகா, சிக்கன சிந்தாமணி இப்படி பல பேர் சூட்டலாம்…” என்றப்படி வளவளத்துக்கொண்டிருந்தாள் கீர்த்தனா.
பழையபடி மகளின் பேச்சில் சிரித்துக்கொண்டே அனைத்தையும் போட்டு முடித்து எடுத்துக்கொண்டு வெளியே வந்து சாப்பிட்டனர்.
தங்கதுரையை தவிர அனைவரும் வடை எடுத்துக்கொள்ள அவருக்கு பழத்தை நறுக்கி கொடுத்தாள் ராகா.
போதாததிற்கு சாதனா போன் செய்து இரண்டு மாமியார்களையும் வரவழைக்க வீடே நிறைந்து போனது.