கவிதை – 3
“ஓகே அக்னி, எங்களுக்கு உன் விருப்பம் தான் முக்கியம். நாங்க பேசிப்போம்…” என்றதும் தந்தையிடம் தலையசைத்துவிட்டு எழுந்து சென்ற மகனை கவலையுடன் பார்த்தார் சந்திரிகா.
“என்னம்மா?…” என மனைவியிடம் கேட்க,
“இந்த முடிவால குடும்பத்துக்குள்ள எதுவும் பிரச்சனை வருமோன்னு இருக்கு. ஏற்கனவே சுரேனுக்கு பிடிக்கலை. சுபாவும் எதுவும் சொல்லலைனாலும் என்னவோ மனசுக்குள்ள நெருடலாவே இருக்குங்க. வரப்போற பொண்ணு இங்க சந்தோஷமா இருக்கனும். போராட கூடாது. ஆனா…”
“நீ என்னம்மா சொல்ல வர? இங்க நாம இருக்கறோம். அக்னி இருக்கான். அந்த பொண்ணுக்கு என்ன போராட்டம் இருக்க போகுது?…” என கேட்க சந்திரிகாவுக்கு சொல்ல தெரியவில்லை.
“பார்த்துக்கலாம். அதுவும் ஒரே மருமக, நாம இருக்கும் போது அந்த பொண்ணை கஷ்டப்படுத்த விட்டுடுவோமா? சுரேன் கோபம் ஏன்னு நமக்கு தெரியுமே? விடு…” என மனைவியை சமாதானம் செய்தார் பன்னீர்செல்வம்.
வெளியே வந்த அக்னிசெல்வன் நேராக தனதறைக்கு செல்லாமல் மீண்டும் அலுவலக அறைக்குள் செல்ல அவனை பின்தொடர்ந்து வந்தான் சுரேன்.
“இன்னும் உனக்கு என்ன?” என்பதை போல அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் கையில் இருந்த கோப்பில் கவனம் செலுத்த எரிச்சலானது சுரேனுக்கு.
எப்பவும் அக்னி அப்படித்தான் என உடன் வளரும் பொழுதே தெரிந்திருந்தவனுக்கு இது என்னவோ அவமதிப்பு போல புதிதாய் தோன்றியது.
“அக்னி, நான் வந்து நிக்கறேன்…”
“ஹ்ம்ம், பார்த்துட்டேன்…” என்றான் நிமிர்ந்து பார்க்காமல்.
“ப்ச், அப்ப உன் முடிவு மாறாதா?…” என மீண்டும் கேட்க அவனை நிமிர்ந்து பார்த்தவனின் பார்வையிலும் அக்னியின் ஜுவாலை தான்.
“ஓகே, நீ டிஸைட் பண்ணிட்ட. இதை கன்பார்ம் பண்ணிக்க தான் வந்தேன்…” என சொல்லிவிட்டு அங்கு நிற்க முடியாமல் சென்றதும் யோசனையுடன் அமர்ந்திருந்த அக்னி மீண்டும் வேலையில் ஆழ நேராக தன் தாயிடம் சென்றான் சுரேன்.
“அம்மா, என்னம்மா இது நீங்களும் எதுவும் பேசாம இருக்கீங்க?…” என எடுத்த எடுப்பிலேயே அவன் கோபமாக கேட்க,
“சுரேன், இன்னும் நீ இந்த விஷயத்தை விடலையா? இது அக்னி முடிவு. தலையிட நமக்கு உரிமை இல்லை…” சந்திரிகாவின் சகோதரி சுபா சொல்லவும் சுரேனின் தந்தை அடைக்கலம் கூட ஆமோதித்தார் அதை.
“அவமானப்பட்டு நிக்கறது நான். அது புரியலையா உங்களுக்கு?…” என்றான் முகம் சிவக்க.
“இது உன் மாமனாரும், நீயுமா போட்ட திட்டம். இது முழுக்க முழுக்க உன்னோட தப்பு. அவன் எதிர்காலத்தை நிர்ணயிக்க நீ யார் சுரேன்? அதுவும் அக்னி பத்தி தெரியுமா இல்லையா? எந்த நம்பிக்கையில் நீ முடிவு செஞ்ச?…”
இப்பொழுது அடைக்கலம் கோபமாய் பேச தலையை குனிந்தபடி நின்றிருந்தான். தாயும் தந்தையும் என்றுமே தன்னை கடிந்ததில்லை. அவர்களுக்கு சுரேனும் ஒன்றுதான், அக்னியும் ஒன்றுதான். இருவரையும் ஒரே போலத்தான் பாவிப்பார்கள்.
“உன் பேச்சுக்கு நாங்களும் அன்னைக்கு ஆட போய் தான் இப்போ வரை அக்னி சரியா பேசறதில்லை. திரும்பவும் சொல்றேன், இங்க நாம அவங்களுக்கு உதவத்தான் வந்திருக்கோம். உனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து நீ இங்கயே வளர்ந்துட்டதால எல்லாத்துக்கும் நாம உரிமைப்பட்டவங்க ஆகிட முடியாது…”
“அதில்லைப்பா அப்படி சொல்ல வரலை…”
“பின்ன நீ பண்ணினதுக்கு என்ன அர்த்தம்? இப்ப வரைக்கும் இங்க உனக்கு ஒரு குறையும் இல்லாம தானே பார்த்திட்டு வராங்க…” என்ற அடைக்கலம்,
“இது நீயும் உன் மாமனாரும் போட்ட ப்ளான் தான்னு எனக்கு தெரியும் சுரேன். உனக்கு புடிச்ச லைஃபை நீ வாழ்ந்திட்டு இருக்க. அதை மட்டும் பாரு. புரியும்னு நினைக்கறேன்…” என்றவரின் குரலை மீறமுடியாமல் தலையை மட்டும் அசைத்துவிட்டு செல்ல,
“இவன் என்னங்க இப்படி இருக்கறான்?…” என கவலையுடன் பார்த்தார் சுபா.
“எல்லாம் சாதனா அப்பா பன்ற வேலை. விடு சொல்லி புரியலைன்னா பட்டு புரியட்டும்…” என்றுவிட்டார் அடைக்கலம்.
அவருக்கு நன்றாக தெரியும் யோகேஷ் சாதாரணமாக சாதனாவை தன் பையனுக்கு மணம் முடித்து வைக்கும் மனிதர் இல்லை. காதலுக்கு சரி என்று சொல்பவரும் இல்லை. இது அக்னிக்காக வலை என்று கூட சொல்லலாம். அதற்கெல்லாம் அப்பாற்ப்பட்டவன் அக்னி என்பது அவருக்கு அறிய வாய்ப்பில்லையே.
எந்த பக்கமும் தனக்கு சாதகமாக ஒரு பதிலும் வராததில் வெதும்பிய மனதுடன் தனது அறைக்குள் நுழைய அங்கே சாதனா கட்டிலில் சில புடவைகளை பரப்பி இருந்தாள்.
“தூங்க வராம அங்கயும் இங்கயும் என்ன பன்றீங்க நீங்க?…” என கேட்க,
“நீ இன்னும் படுக்காம என்ன பண்ணிட்டு இருக்க? அதுவும் பெட் ஃபுல்லா சேரீஸ்?…” என கேட்டு கையில் இருந்த வாட்சை கழற்ற,
“நாளைக்கு திருவிழாவுக்கு என்ன சேரி கட்டலாம்னு பார்த்திட்டு இருக்கேன். நீங்க செலெக்ட் செய்ங்களேன் சுரேன். சேரியை பிக்ஸ் பண்ணினாத்தான் ஜ்வெல்ஸ் செலெக்ட் பண்ண முடியும். இப்பவே எடுத்து வச்சா தான் மார்னிங் ப்ரெஷா இருக்கும்…” என சொல்லவும் அவனின் முகம் மென்மையானது.
கட்டிலில் இருந்தவற்றை எல்லாம் பார்வையால் அலசியவன் அதில் இரண்டு புடவைகளை எடுத்து மனைவிக்கு வைத்து பார்த்தான்.
“இதை கட்டு…” என ஒன்றை எடுத்து காண்பிக்க,
“வாவ் இதுக்குத்தான் சுரேன் வேணும்ன்றது. எப்பவுமே உங்களோட செலெக்ஷன் செம்ம…” என அவனின் கைகளை பிடித்துக்கொண்டு சில்லாகித்தவள்,
“இதையே பிக்ஸ் பண்ணிக்கறேன்…” என எடுத்து அதற்கு நகைகளை பார்க்க,
“உனக்கு தெரியுது என் அருமை. நல்லா செலெக்ட் பண்ணுவேன்னு. ஆனா என் அண்ணனுக்கு தெரியலையே…” என சலிக்க அவனை திரும்பி பார்த்தவள்,
“புடவையும் ப்யூச்சரும் ஒண்ணில்லை சுரேன்…”
“ப்ச், நீயுமா? சும்மா இரு நீ…” என்றான் இன்னும் சலிப்பு குறையாத குரலில்,
“ஓகே உங்களை ஒன்னு கேட்கறேன், உங்களுக்கு ஏன் என் தங்கச்சி சஹானாவை பிடிக்காம என்னை பிடிச்சது?…”
“உன் பேச்சு நான்சென்ஸ் சாதனா…” என்றான் அப்பட்டமான எரிச்சல் குரலில்.
“அதே தான் அக்னி மாமாக்கும். அவருக்கு சஹானாவை பிடிக்கலை. சஹானாவுமே இதுக்கு சம்மதிக்காதப்போ பிடிச்சு இழுத்துக்கட்ட முடிவு பன்றது பெரிய தப்பு…”
“ப்ச், லெக்சர் எடுக்காத. அந்த பொண்ணு நம்ம பேமிலிக்கு செட் ஆக மாட்டா சனா. புரியலையா உனக்கு…”
“சொல்றேன்னு தப்பா நினைச்சாலும் பரவாயில்லை. உங்களை நான் விரும்பறேன்னு சொல்லும் போது எங்கப்பாவுக்கு கூடத்தான் நீங்க எனக்கு செட் ஆகமாட்டீங்கன்னு தோணுச்சு. இப்ப நாம வாழலை. வாழறதுக்கு பிடித்தமும், விருப்பமும் போதும். வசதியும், அந்தஸ்தும் தேவை இல்லை. அப்படி பார்த்தா அவங்களும் நல்ல குடும்பம். அதுவே பெரிய அந்தஸ்து…”
“சனா…” என்று அவன் அதட்ட,
“என்னோட நேச்சர் இது, நான் மனசுக்குள்ள வச்சு பேசமாட்டேன். உண்மை தானே? இப்பவும் நம்மோட நிலைமை என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இந்த குடும்பத்துக்குள்ள உங்களோட உரிமையோட அளவு என்னன்னும் தெரியும். ஆனாலும் நான் ஹேப்பியா இருக்கேன். எனக்கு அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை…”
“சனா…”
“சுரேன், இதுல நீங்க தலையிடாம இருக்கறது நல்லது. எங்கப்பா சொன்னாருன்னு நீங்க இதை எல்லாம் செய்யனும்னு அவசியமில்லை. அப்பாவுக்கு அப்பாவா இருக்கறதை விட பிஸ்னஸ்மேனா இருக்கறது தான் புடிக்கும். ஏமாந்திடாதீங்க. எனக்கு உங்களோட சந்தோஷமா இருந்தா போதும்னு நினைக்கறேன். உங்களுக்கு அப்படி இல்லைன்னு என்னைக்கு எனக்கு தெரியுதோ…”
அவள் நிறுத்தியதன் அர்த்தம் முழுமையாக புரிந்தவனுக்குள் இருந்த காதல் ஆட்டம் கண்டது.
“நான் காதலிக்கும் போது நீங்க இப்படி இல்லையே சுரேன். இப்ப என் அப்பா பேச்சை கேட்டு நீங்க நடந்துக்கறது எனக்கு பிடிக்கலை. உங்களுக்கு தெரியுதோ என்னவோ ஆனா எனக்கு நல்லா தெரியும். அக்னி மாமாக்காக தான் நம்ம கல்யாணம் நடந்தது…”
“அப்படி இல்லை சனா…”
“இதுதான் உண்மை. உங்களையும் என்னையும் வச்சு இந்த குடும்பத்துக்குள்ள நுழைய நினைக்கறார். என் அப்பாவா இருந்தாலும் எனக்கு சரின்னு எது தோணுதோ அதைத்தான் பேசுவேன். நீங்க இந்த குடும்பத்து பையானா இல்லாம இருந்தாலோ, இல்லை இந்த வீட்டுல நீங்க இல்லாம இருந்தாலோ எங்கப்பா கண்டிப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்கமாட்டார்…”
அவள் சொல்லிய உண்மை அவனுக்கு பயங்கர கசப்பாக இருந்தது. தனக்கும் தெரிந்த உண்மை தான் என்றாலும் அதை மனைவி வாயால் கேட்கும் பொழுது தன்னை இறக்கமாய் உணர்ந்தான்.
“ஆனா நான் எந்த சூழ்நிலையிலையும் உங்களை விட்டு குடுத்திருக்கமாட்டேன். சோ நம்ம வாழ்க்கையை நாம வாழ்வோம். அக்னி மாமா அவருக்கு பிடிச்ச வாழ்க்கையை அவர் வாழட்டும்…” என சொல்ல,
“அந்த பொண்ணு…” என ஆரம்பிக்க,
“குட்நைட்…” என பேச்சை கத்தரித்தவள் அனைத்தையும் எடுத்து வைத்துவிட்டு படுத்துவிட்டாள்.
சுரேனுக்கு தான் தூக்கமே வரவில்லை. சாதனாவின் பேச்சு சரி என்று இருந்தாலும் ஏனோ தனது முக்கியத்துவம் அங்கே எதிலும் இல்லை என்பதை போலவே நினைத்தான். ஆனாலும் இனி மனைவிக்காகவேணும் இதில் தலையிடாமல் இருந்துகொள்ள முடிவெடுத்திருந்தான்.
அக்னி தன் வேலைகளை முடித்துவிட்டு மெயில்களை செக் செய்தவன் இரு கைகளையும் உயர்த்தி அலுப்பு முறித்து சட்டை பட்டன்களை கழற்றிவிட்டு தளர்வாய் கண்மூடி சாய்ந்து அமர்ந்தான்.
இனியகீர்த்தனா. அவளை நினைக்கும் பொழுதே மனதினுள் சுகமாக ராகம் போல ஒரு இதம். அவனுக்கு அது பிடித்திருந்தது. அதிலும் கோபத்துடன் தன்னை பார்க்கும் விதம். நினைக்கையில் இதழ்களில் புன்முறுவல் மலர்ந்தது.
பத்து நாட்களுக்கு முன்பு வரை அவளை பற்றிய ஒரு எண்ணம் இப்படியாக தனது மனதில் இருக்கும் என நினைத்தும் பார்த்ததில்லை அவன்.
அதற்கும் ஓர் தீர்வை கொண்டு வந்தது தான் சுரேனின் செயல். அந்தவகையில் வெகு திருப்தியே.
வீட்டில் திருமணத்திற்கு பார்க்கலாம் என்னும் பொழுதெல்லாம் போகட்டும் போகட்டும் என்று தட்டிக்கழிக்க மட்டுமே முயன்றவன் பெரிதாய் மறுக்கவில்லை.
சுரேன் காதல் என்று வந்து நின்ற பொழுது ஒரு வருடமே ஆனாலும் மூத்தவன் அக்னி இருக்க அவனுக்கு எப்படி முடிப்பது என்ற கவலையுடன் அப்பொழுதேனும் அவனுக்கு பார்க்கலாம் என்று சொல்ல,
“இப்போ தான் தேங்காய் சிரட்டைகளை வச்சு கைவினை பொருட்கள் தயாரிக்கும் வேலை ஆரம்பித்திருக்கிறேன்” என சொல்லி சுரேனுக்கு முடிக்க சொல்லிவிட கவலையை ஒதுக்கிவிட்டு சுரேனுக்கு பிரமாண்டமாய் திருமணத்தை நடத்தினார்கள்.
அதுவே சாதனாவின் தந்தை யோகேஷை இன்னும் சந்தோஷப்படுத்தியது. மகள் காதலென்று வந்து நின்றபோது முதலில் மறுத்தவர் பின் அக்னிசெல்வன் குடும்பத்தை அறிந்து உடனே சம்மதித்தார்.
கோவையில் கட்டுமானதொழிலில் பிரபலமானவர் தான் என்றாலும் நம்பர் ஒன் என்று சொல்லிவிடமுடியாது. இந்த சம்பந்தத்திற்கே அக்னிசெல்வன் குடும்பத்தின் சம்பந்தி என்ற பெயரில் திக்குமுக்காடி போனார். இதை வைத்து நிறைய பலன்கள் அவருக்கு.
தனது இளைய பெண்ணையும் கொடுத்துவிட்டால் பேர், புகழுடன் பாரம்பரியமான செல்வாக்கு மிகுந்த குடும்பத்தின் முக்கியமானவராக தொழில் வட்டாரத்தில் தான் மதிக்கப்படுவோம் என்கிற நினைப்பு. அதை வைத்து தொழிலை இன்னும் உயர்த்த பேராசை. கொஞ்சம் கொஞ்சமாக சுரேனின் மனதை மாற்ற ஆரம்பித்தார்.
வீட்டிலும் அவரின் தலையீட்டை கொஞ்சம் கொஞ்சமாக நுழைக்க நினைக்க அதற்கு முதலிலேயே முட்டுக்கட்டை போட்டுவிட்டார் அடைக்கலம். மகள் சாதனா அதற்கு ஆதரவு.
கடைசியில் சுரேனின் மூலம் வீட்டில் கொஞ்சம் கொஞ்சமாக பேச வைத்து சந்திரிகாவிடம் பேசி அவருக்கு இதில் தவறெதுவும் இருப்பதாக தெரியாததால் பன்னீர் செல்வத்திடம் சொல்ல அவரும் யோசிக்க ஆரம்பித்தார்.
திருமண வயதில் ஆண், பெண் இருக்கும் இடங்களில் இப்படி திருமணத்திற்கு கேட்பது ஒன்றும் புதிதில்லையே என நினைத்தவர் சந்திரிகாவிடம் சம்மதம் சொல்லிவிட்டார்.
ஒரு பூஜைக்கென்று யோகேஷ் பன்னீர்செல்வத்தின் மொத்த குடும்பத்தையும் அழைத்திருக்க முதலில் அது பூஜைக்கு என்று தான் நினைத்து சென்றனர். அங்கே சென்ற பின்னர் தான் சுரேனும், யோகேஷும் சேர்ந்து திருமணத்தை பற்றி நேரடியாக கேட்க சென்றவர்களுக்கோ சங்கடம்.
அடைக்கலத்தின் சம்பந்தி, எப்படி மறுத்து பேசுவது என பன்னீர்செல்வம் யோசித்து இருக்க,
“என்ன டாடி இது பூஜைக்குனு வரவழைச்சு இதை பேசனுமா?…” என கண்டனக்குரலில் சாதனா பேச,
“நீ இரும்மா, நான் பேசிக்கறேன்…” என்றார் அடைக்கலம்.
“இங்க பாருங்க சம்பந்தி, உங்க மனசுல இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு எங்களுக்கு தெரியும். இதுல மறுக்க எதுவும் இல்லைன்னாலும் எங்க வீட்டு பையன்கிட்ட இன்னும் இதை பத்தி நாங்க கலக்கலை. கலந்து பேசின பின்னால அவன் விருப்பம் பார்த்து முடிவுக்கு வருவோம்….” என்று சொல்ல அதற்குள் தனது மொபைலுடன் வேகமாய் உள்ளே சென்றுவிட்டாள் சஹானா.
அவளின் பின்னாடியே சென்ற சாதனா தங்கையை பார்க்க அவளின் முகத்தில் விருப்பமின்மை தெரிந்தது.
“எனக்காக நீ பார்க்காத சஹா. அப்பா பெரிய தர்மசங்கடத்தை குடுத்துட்டாரு என் புகுந்த வீட்டுக்கு. நீ முதல்ல அக்னிக்கு கால் பண்ணி விவரத்தை சொல்லு. அவர் பார்த்துப்பார்…” என தைரியம் கொடுத்த தனது எண்ணிலிருந்து அழைத்து கொடுக்க அவன் எடுத்ததும்,
“பூஜை முடிஞ்சு கிளம்பியாச்சா சாதனா?…” என்றான்.
“மாமா, நான் சஹானா…” என்றதும் “இவள் ஏன்?” என்பதை போல நினைத்து,
“சொல்லும்மா…” என ஒற்றை வார்த்தையில் பேச சஹானாவிற்கு அப்பொழுதே கண்முன் அவளின் எதிர்காலம் பயம்காட்டியது.
“ஒரு பெண் பேசுகிறாளே என்ற எந்த எண்ணமும் இன்றி மிஷின் மாதிரி பேசுகிறான். இவனோடு வாழ்க்கையா?” என தலையை ஒரு உலுக்கு உலுக்கியவள்,
“மாமா, இங்க ஒரு பேச்சுவார்த்தை போய்ட்டிருக்கு. அதை சொல்லத்தான்…”
“என்ன?…”
“அது வந்து மாமா…”
“எனக்கு வேலை இருக்கும்மா…” என்று அவன் பொறுமையை இழுத்துப்பிடித்த குரலில் சொல்ல,
“உங்களுக்கும் எனக்கும். ப்ச். எங்கப்பா உங்கப்பாக்கிட்ட கல்யாணத்துக்கு சம்பந்தம் பேசி கன்வின்ஸ் பண்ண பார்க்கறார். எல்லாரும் பேசிட்டு இருக்காங்க. எனக்கு இஷ்டமில்லை. நீங்க தான் பார்த்துக்கனும்…” என படபடவென சொல்லிவிட்டு போனை தன் அக்காவிடம் கொடுத்துவிட்டு தலையை பிடித்தபடி அமர்ந்துவிட்டாள்.
சேர்ந்தார் போல பத்து வார்த்தை பேசுவதற்குள் இத்தனை நடுக்கம், யோசனை. இது சரியே வராது. மிஷின் மிஷின் என்று முடிவே பண்ணிவிட்டாள். அக்காவின் திருமணத்தில் இருந்து அவனை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறாள்.
கூடுதலாய் ஒற்றை புன்னகை கூட அவனிடத்தில் இருக்காது. பின் பேச்சுக்கு எங்கே செல்வதாம்? சஹானாவின் கலகலப்பான குணத்திற்கு கொஞ்சமும் தனக்கு பொருத்தமில்லாதவன் என்று நிர்தாட்சண்யமாக மறுத்தாள். ஆளை விட்டால் போதும் என்கிற மனநிலை.
பார்க்க நன்றாக இருந்தால் போதுமா? சிரித்து பழக இனிமை வேண்டாமா? இந்தப்பாவுக்கு என்ன சொல்லி புரியவைக்க? என நொந்துகொண்டாள்.
“ஹலோ சஹானா…” என சாதனாவின் கையில் இருந்த போனில் அக்னி கத்திக்கொண்டு இருக்க,
“மாமா, நான் சாதனா…” என்றவள் அவனின் கோபத்தில் பயந்து போனாள்.